இலங்கையில் பாரதி - அங்கம் 38 முருகபூபதி

-->






" கவிதை உலகளவு பரந்து பல்வேறுபட்டது.
கடவுளையும் காதலியையும் போற்றுவது மட்டும் அன்று அதன் பணி.
கட்டித்த சிந்தனை உடைய பண்டிதர்களும்
கோட்பாடுகளை விழுங்கிவிட்டு செமித்துக்கொள்ள முடியாதவர்களும்,
மோப்பதற்கும் மோந்து முணுமுணுப்பதற்குமாக
எழுதப்படுவதன்று கவிதை.
அது சாதாரண மனிதனின் பழுதுபடா உள்ளத்திற் பாயப் பிறப்பது.
ஓய்வு கடமையின் ஒரு கூறே ஆகும்.
எனது குறும்பாக்கள் முற்றும்
ஓய்வுக்குரியனவும் அன்று."
இதனை எழுதிய யாழ்ப்பாணம், அளவெட்டியில் 1927 இல் பிறந்து 1971 இல் மறைந்த "மஹாகவி" உருத்திரமூர்த்தி அவர்களும் மகாகவி பாரதியைப்போன்று அற்பாயுளில் மறைந்தவரே. அற்பாயுளில் மறைந்த பல இலக்கியவாதிகளின் மேதாவிலாசம் பிரமிக்கத்து.
இலங்கையில் மட்டுமல்ல தமிழர் வாழும் நாடுகள்தோறும் "மஹாகவி" எனச்சொன்னவுடன், " யார் மகாகவி பாரதியா..?" என்றுதான் பெரும்பான்மையானவர்கள் கேட்பார்கள். இலங்கை மகாகவி எனச்சொன்னாலும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள். எனினும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு  தமது கவிதைகள், காவியங்கள், குறும்பாக்களினால் வளம் சேர்த்திருக்கும், உருத்திரமூர்த்தி என்ற இயற்பெயர்கொண்டு எம்மவர் மத்தியின் மஹாகவியாக அறிமுகமாகியிருக்கும் அந்தக்கவியாளுமை 1966 ஆம் ஆண்டு தமது குறும்பா என்ற நூலுக்கு எழுதியிருக்கும் இரத்தினச்சுருக்கமான முன்னுரையையே மேலே கண்டீர்கள்.
இந்திய மகாகவிக்கும் இலங்கை மஹாகவிக்கும் பெயரில் ஒரு எழுத்துத்தான் வித்தியாசம் என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும்.
வள்ளி, கண்மணியாள் காதை, கோடை, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், வீடும் வெளியும், கந்தப்ப சபதம், கல்லழகி, தகனம், புதியதொரு வீடு முதலனாவை இவரது புகழ்பெற்ற படைப்புகள்.
இவருடைய நூல்களை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வரதர், எஸ்.பொன்னுத்துரை,   பேராசிரியர்  நுஃமான், சாலை இளந்திரையன் முதலானோர் பதிப்பித்துள்ளனர்.
கண்மணியாள் காதை காவியத்தை ஈழத்தின் பிரபல வில்லிசைக்கலைஞர் லடீஸ் வீரமணி வில்லுப்பாட்டாக அரங்கேற்றியிருக்கிறார். கோடை பா நாடகத்தை கலைஞர் தாஸீசியஸ் இயக்கியிருக்கிறார். மீண்டும் தொடங்கும் மிடுக்கு கவிதையைக்கொண்டே மேடை நாடகம் இயக்கியிருக்கிறார் கோகிலாமகேந்திரன்.
மஹாகவி உருத்திரமூர்த்தியிடத்திலும் பாரதியின் தாக்கம் இருந்திருக்கிறது. பாரதி குறித்து மகாகவியின் பார்வைகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிந்துகொள்வதற்கு குறிப்புகள் கிடைக்கவில்லையாயினும், ஈழத்து மஹாகவி உருத்திரமூர்த்தியையும் இந்திய மகாகவி பாரதியையும் ஒப்புநோக்கும் இயல்பு விமர்சகர்களிடமும்  இலக்கிய மேடைப்பேச்சாளர்களிடம் மேலோங்கியிருக்கிறது.
மஹாகவி உருத்திரமூர்த்தியின் பிரபல்யமான ஒரு கவிதைதான் மீண்டும் தொடங்கும் மிடுக்கு. மழையைக்காணாத ஒரு விவசாயியின் வாழ்வைச் சித்திரிக்கும் அந்தக்கவிதை,  " மப்பன்றி கால மழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது, ஏர் ஏறாது. காளை இழுக்காது, எனினும் அந்தப்பாறை பிளந்து பயன் விளைப்பான் என் ஊரான்" என ஆரம்பித்து,
" சோ" வென்று நள்ளிரவிற் கொட்டும், உடன் கூடும் கொலைக்காற்றும் தானுமாய் எட்டுத்திசையும் நடுங்க முழங்கி எழும், ஆட்டத்து மங்கையர் போல் அங்கு மொய்த்து நின்ற பயிர் பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விடவே கொள்ளைபோல் வந்து கொடுமை விளைவித்து வெள்ளம் வயலை விழுங்கிற்று....
பின்னர் அது வற்றியதும், ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி பற்றி, அதோ பார், பழையபடி கிண்டுகிறான், சேர்த்தவற்றை முற்றும் சிதற வைக்கும் வானத்தைப்பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன் வாழி, அவன் ஈண்டு முதலில் இருந்து முன்னேறுதற்கு மீண்டும் தொடங்கும் மிடுக்கு" என முடிக்கிறார்.
இந்தக்கவிதையில் அந்த கடும் உழைப்பாளியின் விந்தை மிகு தன்னம்பிக்கையை பார்க்கின்றோம்.

பாரதியின் இந்தக்கவிதையையும் பாருங்கள்:
              தேடிச் சோறு  நிதந் தின்று
             பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
              மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத்தாயோ...?'

பாரதி என்ற தனிமனிதனுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு ஒப்பானதே ஈழத்து மகாகவி படைத்திருக்கும் விவசாயியினது துயரம். ஆனாலும், மீண்டும் தொடங்கும் மிடுக்குப்போன்று மஹாகவி உருத்திரமூர்த்தி  படைத்த  விவசாயி வீழ்ந்துவிடவில்லை.  எழுந்து நிற்கின்றான்.

பாரதியின் மறவன் பாட்டிலும்  தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் காணமுடியும்.

பாரதி ரவுத்திரம் பழகு எனச்சொன்ன கவிஞர். அதாவது கோபப்படு என்றார். அவரது கொப்பளிக்கும் கோபம் உணர்ச்சிமயமானது. அதனால்தான் " தனிமனிதனொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார். ஆனால், அவருக்குப்பின்னர் வந்த எங்கள் ஈழத்து மஹாகவியிடம் அத்தகைய கோபம் நிதானமாக வெளிவருகிறது.

இயற்கையின் சீற்றத்தால் வெள்ளம் வந்து வயலை விழுங்கினாலும், அவனது உணவுக்கு ஆபத்து வந்தாலும், பாரதிக்கு வந்தகோபம் போன்று எங்கள் நாட்டின் மகாகவிக்கு சீற்றம் வரவில்லை. அந்த விவசாயி அழிப்போம் எனச்சொல்லாமல், மீண்டும் மிடுக்கோடு வயலைக்கொத்துவோம் என்கின்றான்.

பாரதியிடத்தில் அங்கத எழுத்துக்களும் பிறந்திருக்கின்றன. கேலியும் கிண்டலும் அவருக்கு எட்டயபுர அரண்மனையிலேயே சின்னஞ்சிறுவயதில் இயல்பாகவே வந்துவிட்டது.
அந்தத்தன்மையை பாரதியின் பல கவிதைகள், கட்டுரைகளிலும் காணமுடியும்.

அதுபோன்று மஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்களும் அங்கதச்சுவை நிரம்பியதுதான்.

" வண்டு வடைக்குள்ளிருந்து மேலே வந்தது,
நான் பிய்த்தபடியாலே
கண்டொரு சொல் பேசாமல்
 காற்றில் அது போயினது,
நன்றி சொல்லா தெம்மவரைப் போலே"

என்னும் குறும்பாவில், வடைக்குள் குற்றுயிராயிருந்த வண்டிற்கு விடுதலை கொடுத்தவருக்கு நன்றிகூடச்சொல்லாமல் எம்மவர் போன்று பறந்தது எனச்சொல்கிறார்.

"முத்தெடுக்க மூழ்குகிறான் சீலன்,
முன்னாலே வந்து நின்றான் காலன்.
சத்தமின்றி, வந்தவனின்
கைத்தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான். போனான் முச்சூலன்."

என்ற குறும்பாவில், எமனுக்கும் லஞ்சம்கொடுக்கத் தயங்காதவர்கள்தான் எம்மவர்கள் என்று கேலி செய்கிறார்.

பாரதியின்  எழுத்துக்களிலும்   இத்தகைய பண்புகளை காணலாம்.
" கோளுக்கு மிகவும் சமர்த்தன் - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக்கூசாச் சழக்கன்
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்"  (கண்ணன் பாட்டு)

மஹாகவி உருத்திரமூர்த்தி படைத்த முத்துக்குளிக்கும் சீலன்,   எமனுக்கு (காலனுக்கு)  லஞ்சம் கொடுத்து தப்பிக்கின்றான், ஆனால்,  மகாகவி பாரதியோ, " காலா...! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன். என்றன் காலருகே வாடா... ! சற்றே உனை மிதிக்கிறேன்...!" என்று காலனுக்குரைக்கிறார்.

பாரதி வாழ்ந்த காலத்துக்கும் மஹாகவி உருத்திரமூர்த்தி வாழ்ந்த காலத்திற்கும் இடையிலிருக்கும் சமூக வேறுபாடுகளை இவர்களின் படைப்புகளிலிருந்தும்  தெரிந்துகொள்கின்றோம்.

பாரதியின் பாஞ்சாலி சபதம் மற்றும் குயில்பாட்டு ஆகியனவற்றையும் மஹாகவி உருத்திரமூர்த்தியின்  காவியங்களுடன்  எமது விமர்சகர்கள் ஒப்புநோக்கியிருக்கின்றனர்.
பாஞ்ஞாலி சபதம் எழுதிய பாரதியார், மகா பாரதத்தில் வரும் அக்காட்சியை மீண்டும் தமது கவியாற்றலினால் நவீனமாக புனையவேண்டும் என்ற தூண்டலைவிட,  தான் வாழ்ந்த இந்திய சமுதாயத்திற்கு வலியுறுத்திச்சொல்லவேண்டிய கருத்துக்களை பகிர்வதற்கு  அதனை  ஒரு ஊடகமாகப்பயன்படுத்தினார். தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தர வேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலிலே தூண்டினாள் . . . "என்றுதான் பாஞ்சாலி சபதத்திற்கு முன்னுரை எழுதினார் பாரதியார்.
கண்மணியாள் காதையின் பின்னுரையில் மஹாகவி உருத்திரமூர்த்தி இவ்வாறு எழுதுகிறார்:
"கற்பனை கொண்டு செய்த கதை இது, இதிலே நூறு சொற்பிழை இருத்தல்கூடும். சுவை பல குறைதல் கூடும். ' அற்புதம்!' என்று சொல்லும் அளவிலா திருக்கு மேனும் 'நற்பயன் விளைத்தல் கூடும்!' என்று தான் நம்பித்தந்தேன்.  செல்லையன் என்ற இந்தச் சிறு கவிக்குரியோன் நம் மூர் எல்லையுட் பிறந்து வாழும் எவனும்போல் ஒருவன் ஆவான். புல்லல்ல, வளரவிட்டாற், புது நெல்லாய்ப் பொலிவான், அல்ல, நெல்லல்ல - நெல்லினுள்ளே நிறைகின்ற உயிரே என்க.
குறிப்பிட்ட பின்னுரையில் "நெல்லல்ல - நெல்லினுள்ளே நிறைகின்ற உயிரே என்க." என்ற இறுதிவரிகளில்தான் மஹாகவி உருத்திரமூர்த்தியின் சிந்தனை வளமும் கருத்தாழமும்  எமக்குப்புரிகிறது. பாரதியும் பாஞ்சாலி சபதம் எழுதி,  புதிய வாழ்வு தரவிரும்பினார். மஹாகவி உருத்திரமூர்த்தியும் நெல்லினுள்ளே நிறைகின்ற உயிரே என்க எனச்சொல்லி புதிய வாழ்வுதருவதற்கு தமது காவியத்தின் மூலம் முயன்றிருக்கின்றார்.
ஏற்கனவே தனித்தனி நூல்களாக வெளியான மஹாகவி உருத்திரமூர்த்தியின் காவியங்களை ஒன்றாக இணைத்து தொகுத்து பதிப்பித்திருப்பவர் பேராசிரியர் எம். ஏ. நுஃமான்.  2008 இல் தமிழ்நாடு அடையாளம் பதிப்பகம் இதனை வெளியிட்டிருக்கிறது. இதில் பின்னிணைப்புகளும் இடம்பெற்றுள்ளன. நவீன தமிழ்க் காவியங்கள்  என்ற தலைப்பில் நுஃமான் விரிவான கட்டுரையை தந்திருக்கிறார்.
" நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடியான பாரதியே இத்தகைய நவீன தமிழ்க்காவியத்தின் முன்னோடியாகவும் அமைகின்றான். 1912 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட பாரதியின் பாஞ்சாலி சபதம் , குயில்பாட்டு ஆகிய இரண்டும் இத்தகைய நவீன காவிய வடிவத்தின் முதன் முயற்சிகள் எனலாம்" என்று பதிவுசெய்துள்ளார்.
மஹாகவி உருத்திரமூர்த்தியின் கண்மணியாள்  ஓடுகின்ற இறுதிக்காட்சியில், " மாரியம்மன் வாசல் வழி வந்தாளே கண்மணியாள், ஊரின் ஒரு புறத்தே உறங்கினையோ மாரியம்மா...? நல்லான் ஓர் நல்லவளை நாடுவது நாத்திகமோ...? எல்லோரும் ஒத்த குலம் என்று சொன்னால் ஏற்காதோ...?
எடி, முத்து மாரியம்மா எடுத்தொரு சொல் சொல்லடியோ!" என்ற வரிகள் வருகின்றன.
பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் இறுதியில் பின்வரும் வரிகள் வருகின்றன: " ஓம் தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன். பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப்பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம், மேவி இரண்டுங் கலந்து - குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக்குழல் முடிப்பேன் யான்"
இவ்வாறு இந்திய மகாகவியையும் இலங்கை மஹாகவியையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்யமுடியும். இத்தகைய முயற்சிகள் இலங்கையிலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் பாரதி மற்றும் மஹாகவி உருத்திரமூர்த்தி ஆகியோரை இன்றும் சுவைத்துக்கொண்டிருக்கும் சுவைஞர்கள் மத்தியிலும்   இடம்பெறுகின்றன.
(தொடரும்)















 


என்றுதான் பாஞ்சாலி சபதத்திற்கு முன்னுரை எழுதினார் பாரதியார்.
கண்மணியாள் காதையின் பின்னுரையில் மகாகவி உருத்திரமூர்த்தி இவ்வாறு எழுதுகிறார்:
"கற்பனை கொண்டு செய்த கதை இது, இதிலே நூறு சொற்பிழை இருத்தல்கூடும். சுவை பல குறைதல் கூடும். ' அற்புதம்!' என்று சொல்லும் அளவிலா திருக்கு மேனும் 'நற்பயன் விளைத்தல் கூடும்!' என்று தான் நம்பித்தந்தேன்.  செல்லையன் என்ற இந்தச் சிறு கவிக்குரியோன் நம் மூர் எல்லையுட் பிறந்து வாழும் எவனும்போல் ஒருவன் ஆவான். புல்லல்ல, வளரவிட்டாற், புது நெல்லாய்ப் பொலிவான், அல்ல, நெல்லல்ல - நெல்லினுள்ளே நிறைகின்ற உயிரே என்க.
குறிப்பிட்ட பின்னுரையில் "நெல்லல்ல - நெல்லினுள்ளே நிறைகின்ற உயிரே என்க." என்ற இறுதிவரிகளில்தான் மகாகவி உருத்திரமூர்த்தியின் சிந்தனை வளமும் எமக்குப்புரிகிறது. பாரதியும் பாஞ்சாலி சபதம் எழுதி புதிய வாழ்வு தரவிரும்பினார். மகாகவி உருத்திரமூர்த்தியும் நெல்லினுள்ளே நிறைகின்ற உயிரே என்க எனச்சொல்லி புதிய வாழ்வுதருவதற்கு தமது காவியத்தின் மூலம் முயன்றிருக்கின்றார்.
ஏற்கனவே தனித்தனி நூல்களாக வெளியான மகாகவி உருத்திரமூர்த்தியின் காவியங்களை ஒன்றாக இணைத்து தொகுத்து பதிப்பித்திருப்பவர் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்கள். 2008 இல் தமிழ்நாடு அடையாளம் பதிப்பகம் இதனை வெளியிட்டிருக்கிறது. இதில் பின்னிணைப்புகளும் இடம்பெற்றுள்ளன. நவீன தமிழ்க் காவியங்கள்  என்ற தலைப்பில் நுஃமான் விரிவான கட்டுரையை தந்திருக்கிறார்.




















No comments: