நல் தீபாவளி ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா



              பட்டாடை உடுத்திடுவோம்
                    பட்சணமும் உண்டிடுவோம்
               மத்தாப்புக் கொழுத்திடுவோம்
                      மனமகிழ இருந்திடுவோம்
                தப்புக்கள் தனைமறப்போம்
                        தாழ்பணிவோம் மூத்தோரை
                எப்பவுமே இறைநினைப்பை
                         இதயமதில் இருத்திடுவோம் !

               ஆடம்பரம் அனைத்தையுமே
                     அனைவருமே ஒதுக்கிடுவோம்
                ஆதரவு இல்லார்க்கு
                       அருந்துணையாய் அமைந்திடுவோம்
                தீதுடைய செயல்களைநாம்
                         தீண்டாமல் இருந்திடுவோம்
                 தீபாவளி எமக்கு
                         சிறப்பாக அமையுமன்றோ !


                 பட்டாசும் மத்தாப்பும்
                     பலபேரின் உழைப்பாகும்
                பட்டாசும் மத்தாப்பும்
                      பலவிழப்பை தந்துவிடும்
                 இட்டமுடன் வெடிக்காமல்
                         எச்சரிக்கை மனங்கொண்டால்
                  எல்லோர்க்கும் தீபாவளி
                          இங்கிதமாய் இருக்குமன்றோ !


                வியாபாரம் தனையெண்ணி
                     விதம்விதமாய் பட்சணங்கள்
                 வண்ணவண்ண நிறமூட்டி
                        வாவெனவே அழைத்துநிற்கும்
                  அவையுள்ளே பொதிந்திருக்கும்
                         ஆரோக்கியம் தனைக்கெடுக்கும்
                   அத்தனையும் தீபாவளி
                          அகமகிழ்வைக் குலைக்குமன்றோ ! 

                 வேகமாய் வாகனங்கள்
                      ஓட்டுவதைத் தவிர்த்திடுவோம்
                வேகமது கூடிவிடின்
                        விபரீதம் ஆகிவிடும்
                 தீபாவளித் தினத்தில்
                        தேடிவரும் ஆபத்தாய்
                  திசைதெறிக்க ஓடிவரும்
                        வாகனத்தைத் தவிர்திடுவோம் !

                 மதுவரக்கன் தனையெவரும்
                      மனமதிலே  நினையாமல்
                 புதுவசந்தம் வீசுதற்கு 
                        புத்துணர்வு பெற்றிடுவோம்
                 தீபாவளி நாளில்
                         திருப்பங்கள் பலவந்தால்
                 தித்திப்பு யாவருக்கும்
                        சொத்தாக இருக்குமன்றோ !

              நல்லவற்றைச் சிந்திந்தால்
                    நாளுமே தீபாவளி
              நல்லவழி நாம்நடப்பின்
                      நாட்டுக்கே தீபாவளி 
              அல்லவைகள் அகற்றிவிடின்
                     அனைவருக்கும் தீபாவளி
               அமையுடன் இறைபணிந்தால்
                     அமைந்திடும் நல்தீபாவளி !
                        
       

image1.JPG



No comments: