இரோமை தூற்றுவது என்ன மாதிரியான மனநிலை...?

.

அது 2008 ம் ஆண்டின் பிற்பகுதி. தமிழகமே ஒரு உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தது. 'ஈழத்தில் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இருக்கிறோமே...' என்ற குற்ற உணர்ச்சியில் உழன்று தவித்தது.  அந்த சமயத்தில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஜனவரி 29, 2009 ல்,  கு. முத்துக்குமார் என்னும் 28 வயது இளைஞன், ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்தியா துணை போவதாக கண்டித்து, சென்னை சாஸ்திரி பவன் அருகே தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தன்னை மாய்த்துக் கொள்வதற்கு முன்,  தான் எழுதி இருந்த ஒரு நீண்ட கடிதத்தை, அங்கு கூடியிருந்த மக்களுக்கு நிதானமாக விநியோகித்து இருந்தார். அந்த கடிதத்தில், தன் பிணத்தை ஒரு துருப்புச் சீட்டாக ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு பயன்படுத்தச் சொல்லி இருந்தார்.



அவர் மரணமும், அவர் எழுதி இருந்த கடிதமும் அந்த சமயத்தில் சமூகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. போராட்டங்களை கூர்மைப்படுத்தியது. இளைஞர்களை அரசியல்படுத்தியது. சமூகத்தின் அனைத்து தரப்பும் வீதிக்கு வந்து போராடியது. வழக்கறிஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றார்கள்.  இளைஞர்கள் அணிதிரண்டார்கள். உண்மையான அர்ப்பணிப்புடன் போராடினார்கள். நிறைய இயக்கங்கள் முளைத்தன.

காலங்கள் கடந்தன. ஒரு மோசமான படுகொலைக்கு பின், இலங்கையில் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்தன. அப்போது போராடியவர்களில் பெரும்பாலானாவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தார்கள். ஆனால், இப்போதும் ஏதாவது சமூக நலன் சார்ந்த போராட்டங்கள் என்றால் முழுமையான ஒரு அர்ப்பணிப்புடன், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், கைகளில் தட்டிகளுடன் மூன்றாவது வரிசையில் நின்று கோஷம் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

நம்மை வீதிக்கு அழைத்து வர பிணங்கள் தேவையா...?:

அதாவது நம்மை அரசியல் படுத்த, வீதிக்கு அழைத்து வர,  அறத்தின் பக்கம் நிற்க வைக்க , நம்மை தூண்ட, அப்போது நமக்கு ஒரு பிணம் தேவைப்பட்டு இருக்கிறது. அதேபோன்ற வேறொரு பிணம் இன்றும்  தேவையாக இருக்கிறது. இன்னும் கொச்சையாக சொல்ல வேண்டுமென்றால்,  நம் கருத்தியலை  முன்னிறுத்த, நம் அரசியலை வெற்றி பெற வைக்க, நம் சித்தாந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இன்றும் நமக்கு பிணங்கள் தேவைப்படுகிறது. அதனால்தான் இரோம்,  தன்  16 ஆண்டுகால உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு, தேர்தல் பாதைக்கு திரும்புகிறேன் என்று அறிவித்தவுடன், அவரை இத்தனை காலம் ஆதரித்தவர்கள், அவரை தூற்றத் துவங்கி இருக்கிறார்கள். அவர் மீது அவதூறை பரப்பத் துவங்கி இருக்கிறார்கள்.

இரோம் சர்மிளா. அவரை அப்போது அனைவரும் கொண்டாடினார்கள். தங்கள் ஆதர்சமாக  மனதில் வரித்துக் கொண்டார்கள்.  அவரது 16 வருட உண்ணாநிலை போராட்டம் குறித்து சிலாகித்து எழுதினார்கள்; பேசினார்கள். அவரை சந்திக்க, அவருடன்  கைகுலுக்க ஏங்கினார்கள். அவர் குறித்து ஒரு சிறு செய்தி வந்தால் கூட, அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து மகிழ்ந்தார்கள். இன்று அவர்களே இரோமை தூற்றுகிறார்கள். இரோம் செய்த ஒரு பெருந்தவறாக அவர்கள் பார்ப்பது, இரோம் தன் 16 ஆண்டு கால போராட்டத்தை கைவிட்டது மட்டும்தான். 'எப்படி இரோம், தன் போராட்டத்தை கைவிடலாம்...? இரோமுக்கு தன் போராட்டத்தைவிட, தன் காதல் தான் முதன்மையாகிவிட்டது. இரோம் வழி மாறி போகிறார்' என்று தூற்றத் துவங்கிவிட்டார்கள். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இரோம் நடந்து கொள்ளவில்லை. அதனால் இத்தனை காலம் கதாநாயகியாக கொண்டாடப்பட்டவர், நாசியிலிருந்து உணவு குழாய் அகற்றப்பட்டவுடன், இப்போது சந்தேக கண்ணுடன் பார்க்கப்படுகிறார்.

இரோமை தூற்றுவது என்ன மாதிரியான மனநிலை...?:



ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அரசாங்கத்தின் மீது கோபப்படுகிறோம், அரசாங்கத்தை எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதுகிறோம்.  ரோஹித் வெமுலா தன்னை மாய்த்துக் கொண்டால், அந்த தற்கொலை அநீதியானது என அணி திரள்கிறோம். ஆனால், நாமே ஒருவர் நம்முடைய கருத்தியலுக்காக இறக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.  உண்மையில் நம்மையும் அறியாமல் நம் மனசாட்சி, அரசாங்கத்தை கேள்வி கேட்க, போராட்டத்தை கூர்மைபடுத்த யாராவது இறக்க வேண்டுமென்று விரும்புகிறதா...?

ஒரு கருத்தியலை முன்னிறுத்த, போராட்டங்களை வென்றெடுக்க ஒருவர் சாக வேண்டும் என்று நினைப்பது... எது மாதிரியான அரசியல்...? இல்லை. நாங்கள் இரோம் சாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டதைதான் எதிர்க்கிறோம் என்பது வெற்று வாதம். ஆம், ஒரு திரவ உணவை நாசியின் மூலமாக மட்டும் எடுத்துக் கொண்டு ஒருவர் எத்தனை காலம் உயிருடன் இருக்க முடியும்?

இன்று இரோம் தன் போராட்டத்தை கைவிட்டது தவறு என்பவர்கள்... எத்தனை முறை Armed Forces (Special Power) Acts சட்டத்திற்கு எதிராக தங்களால் ஆன வழிகளில் போராடி இருக்கிறார்கள்... இரோமின் கரங்களை வலுப்படுத்தி இருக்கிறார்கள்...?  இதை எதையும் செய்யாமல் அவரை தூற்ற மட்டும் செய்வது எந்த வகையில் நியாயம்.



இரோம் யார் சொல்லியும் உண்ணாவிரதத்தில் அமரவில்லை. அவர் தம் மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று நம்பினார். அதற்கு எதிராக தன் உயிரை ஆயுதமாக்கி, அரசாங்கத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப முயன்றார். அரசாங்கத்தை தன் போராட்டத்தால் நெகிழ்த்த முடியாது என்றவுடன், தன் போராட்ட வழிமுறையை மாற்றி தேர்தல் களத்தில் தீர்வை தேட முயல்கிறார்.  இதில் என்ன தவறு இருக்கிறது...?

16 ஆண்டு காலம், தன் இளமையை, தன் சந்தோஷத்தை, தன் ஆரோக்கியத்தை என அனைத்தையும்  பணயம் வைத்து போராடி இருக்கிறார். தன் தனிப்பட்ட வாழ்வை தியாகம் செய்து இருக்கிறார். அவர் மிகத் தெளிவாக கூறுகிறார், “என் போராட்டங்கள் முடியவில்லை. என் பணி முடியாமல், என் போராட்டங்களை கைவிட மாட்டேன்...” என்கிறார். ஆனால், நாம் இது எதையும் கணக்கில் கொள்ளாமல், அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டது தவறு என்று தட்டையாக விமர்சிப்பது எப்படி சரியாக இருக்கும்.

உண்மையில் நாம் கேள்வி எழுப்ப வேண்டியது இரோமை நோக்கி அல்ல... நம் மனசாட்சியை நோக்கி தான், அந்த கேள்வி, “நம் கருத்தியலை முன்னிறுத்த நாம் பிணங்களை தேடுகிறோமா...?” என்பது தான்.

nantri vikatan.com

No comments: