தொடரும் முன்னாள் போராளிகளின் கைது: பிரபாவும் கைது
கட்டிபுரண்டு சண்டையிட்டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? (முழு விபரம்)
வரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார்
இன்று தாயகம் திரும்புகின்றனர் தமிழகத்திலுள்ள அகதிகள்
வெள்ளை வேன் கடத்தல் வேண்டாம்' மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி
தொடரும் முன்னாள் போராளிகளின் கைது: பிரபாவும் கைது
02/05/2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பிரபா என அழைக்கப்படும் கலைநேசன் (46) இன்று காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை கைது செய்துள்ளதாக அவரது மனைவி கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் திருக்கோவில் பகுதியில் வைத்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் தலைவர்களில் ஒருவரான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் நீர்வேலி தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிரபா என அழைக்கப்படும் கலைநேசன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கட்டிபுரண்டு சண்டையிட்டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? (முழு விபரம்)
03/05/2016 முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷவின் இராணுவ
பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணியினர் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக்
கும் ஆளும் தரப்புக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் திடீரென கைகலப்பாக மாறியது.
இதன்போது ஆளும்கட்சி மற்றும், மஹிந்த ஆதரவு அணி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்ட பத்தின் மத்தியில் ஒருவரையொருவர் தாக்கியதுடன், கட்டிபுரண்டு சண்டையிட்டனர்.
இதனால் சபை அல்லோல கல்லோலமானது.
குறித்த கைகலப்பின்போது இரண்டு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்ட உறுப்பினர்களை கட்டுப்படுத்த முனைந்தனர். எனினும் இருதரப்பு உறுப்பினர்களும் கும்பலாகவே மோதியதால் எவரெவர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அவதானிக்க முடியாத நிலை காணப்பட்டது.
கைகலப்பு நிலைமையானது ஏனைய உறுப்பினர்களினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் உறுப்பினர்களின் காலணிகள் சபா மண்டபத்தில் காணப்பட்டதோடு, ஆடைகள் கலைந்த நிலையிலும் காணப்பட்டனர். அதேநேரம் சில உறுப்பினர்களின் முகப்பகுதியில் வீக்கங்களும் காணப்பட்டதோடு, ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் இரத்தம் வடிந்தவாறு நின்றதனையும் அவதானிக்க முடிந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் ஆசனங்களுக்கு அருகில் நின்றிருந்ததோடு, சிரேஷ்ட உறுப்பினர்களும் ஆசனங்களில் கூடிநின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மேதலில் ஈடுபட்ட உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ள நிலையில் ஐ.தே.க. எம்.பி.யான சஞ்சித சமரசிங்க மேலதிக சிகிச்சைகளுக்காக உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரியா தலைமையில் கூடியது. அதனை தொடர்ந்து சபாநாயகர் அறிவிப்பு மனுக்கள் சமர்ப்பிப்பு என்பன நிறைவடைந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன எம்.பி. ஆசனத்திலிருந்து எழுந்து தான் ஒருவிடயத்தை சபையின் கவனத்திக்கு கொண்டுவர விரும்புவதாக கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவத்தினர் வழங்கிய பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது என்பதை சபையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாக குறிப்பிட்டார். இத் தருணத்தில் வாய்மூலமான வினாக்களுக்கான நேரத்தில் பின்னர் குறித்த விடயம் தொடர்பான வினாவுக்கு இடமளிப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
அதனை ஏற்க மறுத்த தினேஷ் குணவர்தன, ஏற்கனவே இவ்விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும், அதன்போது சபையின் முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல வாக்குறுதியளித்ததாகவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு அவருக்கான பாதுகாப்பு உடன் வழங்கப்படுவதை (அரசாங்கம்) உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளிப்பதற்கு சபையின் முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல ஆசனத்திலிருந்து எழுந்தபோது பிரதமர் ரணில்விக்கிரம சிங்க திடீரென எழுந்து குறித்த விடயம் தொடர்பாக பதிலளிக்க முனைந்தார்.
அவருடைய பதிலை குறுகிய நேரத்தில் வழங்கிவிட்டு பாதுகாப்பு விடயம் என்பதால் அது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சரத்பொன்சேகா உரிய பதிலை வழங்குவார் எனக் கூறி அமர்ந்தார்.
அதனை தொடர்ந்து பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கு பதிலளிப்பதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணி எம்.பி.க்கள் அனைவரும் ஆசனங்களிலிருந்து எழுந்து கூடி நின்று கடுமையான தொனியில் வசனங்களை வெளியிட்டனர்.
இவ்வாறான கூச்சலுக்கு மத்தியில் அமைச்சர் சரத்பொன்சேகா தொடர்ந்தம் உரையாற்றிக் கொண்டிருந்தார். விசேடமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பாக விடயமொன்றை குறிப்பிட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ அணியை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடி கோஷமிட்டவாறு சபா மண்டபத்தின் மத்திற்கு வருகை தந்தனர். அத்தோடு நின்றுவிடாது சபாநாயகரை பார்த்து கடுமையான கோஷங்களையும், அவ் அணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எழுப்பினர்.
இச் சம்பவத்தில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, சபை முதல்வர் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் இரண்டாவது வரிசையில் உரையாற்றிக் கொண்டிருந்த அமைச்சர் சரத்பொன்சேகா ஆகியோரை சுற்றி வளைத்து நின்றனர். இத் தருணத்தில் படைக்கல சேவிதர்கள், சபாநாயகருக்கும் செங்கோலுக்கும் கடுமையான பாதுகாப்பை வழங்கினார்கள்.
இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியினர் கடுமையான கோஷங்களை எழுப்பியவாறு சபா மண்டபத்தில் தொடர்ந்தும் நின்றுகொண்டிருந்தனர். சபாநாயகர் ஆசனங்களில் அமருமாறு உத்தரவிட்டார்.
எனினும் அவர்கள் ஆசனங்களில் அதனைத்தாண்டி கோஷம் எழுப்பியவாறே இருந்தனர். நேரம் சரியாக 1.20 மணியாகும்போது பீல்ட் மார்சல், அமைச்சருமான சரத்பொன்சேகாவின் உரையை நிறுத்துமாறு சபாநாயகர் கருஜயசூரிய கூறியதோடு, ஒலிவாங்கியையும் செயலிழக்கச் செய்தார்.
எனினும் சரத்பொன்சேகா தொடர்ந்தும் உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவருடைய உரையை தொடர்வதற்கான அனுமதிதயை வழங்குமாறு பிரதமர் ரணில்விக்கிரம சிங்க, சபை முதல்வர் லக்ஷ்மன் கியெல்ல ஆகியோர் சைகையால் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அறிவித்தனர். இதனையடுத்து பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா உரையாற்றுவதற்கான மேலதிக நேரம் சபாநாயகரினால் வழங்கப்பட்டது.
இதனையடுத்து கடுமையாக விசனமடைந்த மஹிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன, மகிந்தானந்த அளுத்கமே, கெஹெலிய ரம்புக்வெல, பந்துல குணவர்தன போன்றவர்கள் சபாநாயகருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
அதன்போது அவர்களை ஆசனங்களில் சென்று அமருமாறு சபாநாயகர் கோரினார். எனினும் அவர்களை அதனை நிராகரித்து தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பிக் கொண்டேயிருந்தனர்.
இந்நிலையில் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ஆசனங்களுக்கு சென்று அமர்ந்தனர். இதன்போது சபையின் இன்றைய நாள பிரதான செயற்பாட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது என சபாநாயகர் கடுமையான தொனியில் கூறினார். இருப்பினும் சபா மண்டபத்தின் நடுவில் ஆளும் மற்றும் மஹிந்த தரப்பின் ஆதரவு உறுப்பினர்கள் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தர்க்கம் வலுவடைந்து கொண்டிருக்கையில் திடீரென ஐ.தே.க.வின் களுத்துறை மாவட்ட எம்.பி.யும், பிரதியமைச்சருமான பாலித்த தேவப்பெருமவுக்கும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ம.சு.வின் எம்.பி.யும், மஹிந்த ஆதரவு அணியின் உறுப்பினருமான பிரசன்ன ரணவீர ஆகியோருக்கிடையில் தர்க்கம் முற்றியது. இதன்போது பாலித்த தேவப்பெருமவை பிரதியமைச்சர் சுஜிவசேனசிங்க மற்றும் நலின் பண்டார ஆகியோர் தடுத்துக் கொண்டிருந்தபோது அவர்களை தள்ளிவிட்டு சபைக்கு நடுவில் சென்று பிரசன்ன ரணவீரவை மார்பில் கை வைத்து தள்ளினார். இதன்போது பிரசன்ன ரணவீர ஏதோ கூறவும் அவருடைய முகத்தில் பாலித்த தேவப்பெரும ஓங்கி குத்தினார். இதன்போது இரு அணியினரும் இருவரையும் தடுத்து நிறுத்துவதற்கு முற்பட்டுக் கொண்டிருக்கையில், ஐ.தே.க.வின் கேகாலை மாவட்ட எம்.பி.யுமான சந்தித் சமர சிங்க சரமாரியாக பிரசன்ன ரணவீர எம்.பியை தாக்கினார்.
இதனையடுத்து இருதரப்பினரும் யாரை யார் தாக்குகிறார்கள் என்றியில்லாது பரஸ்பர தாக்குதலையும் தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர். எனினும் இதற்கு மத்தியில் பிரசன்ன ரணவீர, சந்தித் சமரசிங்க ஆகியோர் சபைக்கு நடுவில் கட்டிப்புரண்டு ஒருவரையொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன்போது இருதரப்பு உறுப்பினர்களும் கால்களால் பரஸ்பர தாக்குதல்கள் மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதனால் சண்டையில் ஈடுபடுபவர்கள் யார் அதனை தடுக்க முயல்பவர்கள் யாரென அறிய முடியாத நிலை காணப்பட்டது.
சபா மண்டபத்தில் மோதல் உக்கிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் ரணில்விக்கிரம சிங்க, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கொறடாவும், ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திஸாநாயக உள்ளிட்டவர்கள் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
இருதரப்பு உறுப்பினர்களின் மோதலால் சபை யுத்த களமானது. இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் உடனடியாக வெ ளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த இருதரப்பு சிரேஷ்ட உறுப்பினர்களும் முயற்சித்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சபா மண்டபத்தில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி.யுடன் உரையாடிக் கொணடு வேடிக்கை பார்த்தவாறிருந்தார்.
இதன்போது உதயகம்மன்பில, பந்துல குணவர்தன எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் ஏதோ கூறினர். அதன்பின் சற்றுநேரத்திற்கு பின்னர் சம்பந்தன் சபையிலிருந்து வெ ளியேறியிருந்தார். ஆளும் தரப்பு அமைச்சர்களான ரிஷாத் பதியூதின், மலிக் சமரவிக்கிரம, போன்றவர்கள் மஹிந்த ஆதரவு அணியின் உறுப்பினர்களுடன பேசி அமைதியை ஏற்படுத்த முனைந்தனர்.
15 நிமிடங்களுக்கும் மேலாக அல்லோல கல்லோலப்பட்டு காணப்பட்ட சபையை 1.35 க்கு சபாநாயர் கருஜயசூரிய சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தர். பின்னர் 1.29 க்கு பின்னராக 3.00 மணிக்கு மீண்டும் கூடிய சபை இன்று புதன்கிழமை வரை ஒத்திவைப்பதாக அறிவித்த சபாநாயகர் கடுமையான கண்டனத்தையும் வெ ளியிட்டார். நன்றி வீரகேசரி
வரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார்
03/05/2016 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்திற்கு யாழில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருமான டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
கொழும்பில் இடம்பெற்ற மேதின கூட்டமொன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து பாரியளவிலான மக்கள் கலந்துக்கொண்டமை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் யாழ். மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் காணி பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிய தமிழ் மக்களை அவர்களது தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்துடன் இணைந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 பேரே இன்று இலங்கைக்கு மீளத் திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வெள்ளை வேன் கடத்தல் வேண்டாம்' மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி
06/05/2016 காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மகஜர்கள் காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தால் கையளிக்கப்பட்டன.
வெள்ளை வேன் கலாசாரத்தை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் அந்தக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளமை எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன், மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் அல்லது அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக மக்களை அச்சம் கொள்ளச் செய்யும் இந்த வெள்ளை வேன் கலாசாரம், எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. இந்தச் சட்டவிரோத கடத்தல் குறித்து விசாரணை செய்து இதற்கு பொறுப்பானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை தடுக்குமாறும் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி