கென்யாவில் 70,000 சட்டவிரோத யானைத் தந்தங்கள் தீக்கிரை
16 ஆண்டுகளுக்கு பின் இமயமலை ஏறும் போது உயிரிழந்தவர்களின் சடலம் மீட்பு (வீடியோ இணைப்பு)
கென்யாவில் 70,000 சட்டவிரோத யானைத் தந்தங்கள் தீக்கிரை
02/05/2016 கென்ய அதிகாரிகள் மொத்தம் 105 தொன் நிறையுடைய 70,000 யானைத் தந்தங்களை நைரோபி தேசிய பூங்காவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
அவற்றின் பெறுமதி 68 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டில் வருடந்தோறும் தந்தங்களுக்காக வன விலங்குகளான யானைகள் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்ற நிலையில், இந்த சட்டவிரோத தந்த வர்த்தகத்தை தடுக்கும் முகமாக இந்நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி
16 ஆண்டுகளுக்கு பின் இமயமலை ஏறும் போது உயிரிழந்தவர்களின் சடலம் மீட்பு
03/05/2016 அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மலை ஏறும் வீரர் அலெக்ஸ் லோவ் 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது நெருங்கிய நண்பரான டேவிட் பிரட்ஜஸ் மற்றும் சக கூட்டாளிகளுடன் இமயமலை சிகரத்தில் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இவர்கள் சீனாவின் திபெத் பகுதியில் உள்ள ‘ஷிஷாபங்மா’ சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. அலெக்ஸ் லோவ் மற்றும் டேவிட் பிரட்ஜஸ் ஆகிய இருவரும் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்தனர். இவர்களின் உடல்களை மீட்க சக வீரர்கள் போராடி நீண்ட நாட்கள் ஆகியும் பலன் கிட்டாததால் அவர்கள் தமது முயற்சியை கைவிட்டு திரும்பினர்.
இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்து 16 ஆண்டுகள் கடந்தநிலையில் கடந்த வாரம் அலெக்ஸ் லோவ் மற்றும் டேவிட் ஆகியோரின் உடல்கள் ‘ஷிஷாபங்மா’ மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து நேபாளத்தில் வசித்து வருகின்ற அலெக்ஸ் லோவின் மனைவி ஜெனிபர் லோவுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து மீட்புபடையினர் மூலம் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.
ஜெனிபர் லோவ் தற்போது தனது புதிய கணவர் கான்ராட் ஆன்க்கருடன் இணைந்து முன்னாள் கணவர் அலெக்ஸ் லோவின் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தின் போது கான்ராட் ஆன்க்கரும், அலெக்ஸ் லோவுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால் அவர் பனிச்சரிவில் சிக்காமல் காயங்களுடன் உயிர்தப்பினார். பின்னர் இவர் 2011 ஆம் ஆண்டு ஜெனிபர் லோவை திருமணம் செய்து, அவரது 2 குழந்தைகளையும் தத்து எடுத்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி