அகத்தில் வைத்துப் பூசிப்போம் - ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )

.

        பெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து
        நற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து
        சுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து
        வெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார்   !

        தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
        தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்
        ஊணுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்
        தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !

       பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது
       கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள் 
       பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்
       துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

       உச்சிமுகந்திடுவாள் ஊரார் கண்படா  வண்ணம் 
       குட்டியாப் பொட்டுவைப்பாள் குளிவிழும் அக்கன்னமதில்
       கட்டியணைத் தணைத்து கற்கண்டே  எனவிழித்து
       தொட்டிலே இட்டபடி தூங்கத்தமிழ் பாடிநிற்பாள் !

      ஏங்கித்  தவிக்கும்தாய்  இதையெல்லாம் எண்ணுகின்றாள்
      எதையுமே மனங்கொள்ளா இருக்கின்றான் அவர்பிள்ளை 
      தூங்காமல் கண்விழித்த தூயவளைப் பாராமல்
      துரையாக வாழ்ந்துகொண்டு தூரவைத்தான் தாயவளை !

      தாயவளோ  காப்பகத்தில் தனையனையே நினைக்கின்றாள்
      தாய்மைநிறை அவளுள்ளம் தவியாகத் தவிக்கிறது 
      தவிப்பறியா மனத்துடனே தனயனுமே இருக்கின்றான்
      தாய்மனதை நோகடித்து தாம்வாழ்தல் முறையன்றோ !

      காப்பகத்தில் தாயைவிட்டுக் களியாட்டம் நடத்துகின்ற
      கருணையில்லா உள்ளங்களே கடவுளுமை மன்னிக்கார்
      கர்ப்பத்தில் சுமந்தவளை கண்போலக் காத்தவளை
      கவலையிலே மூழ்கவிட்டு வாழ்வதுதான் முறையாமோ !


      நோய்வந்து படுக்கையிலே நூறுமுறை கண்விழித்து
      பாய்மீதும் படுக்காமல் பஞ்சணையில் உறங்காமல்
      கண்விழிக்கும் காலம்வரை கண்ணுறங்கா இருந்தவளை
      காப்பகத்தில் விட்டுவிட்டு கண்ணுறங்க மனம்வருமா !

      பரிசுபெற வேண்டுமென்று பலகனவு கண்டவளை 
      உரிமையுடன் பாராமல் ஒதுக்கிடுதல் முறையாமோ
      கருவுற்ற நாள்முதலாய் பெற்றெடுக்கும் காலம்வரை
      எமைநினைத்து நின்றவளை ஏங்கவிடல் முறையன்றோ !

      அன்னைதனை அரவணையார் அகமகிழ வாழார்கள்
      அன்னையவள் அடிதொழுவார் அனைத்துமே பெற்றிடுவார்
      அன்னையது கண்ணீரால் அனைத்துமே அற்றுவிடும்
      அன்னையவள் தினமதனில் அவளாசி பெற்றுநிற்போம் !

      ஆர்மனதும் நோகாமல் வாழ்ந்துவந்த அன்னையவள்
      ஆருமற்ற வெறுமையிலே அழவிடுதல் முறயன்றோ 
      அன்னைதினம் கொண்டாடும் அனைவருமே கேளுங்கள்
       அன்னையது மனம்மகிழ அகத்தில்வைத்துப் பூசிப்போம் !

                      நோய்க்கு மருந்தாவாள்
                      நொடியிலவள் விருந்தளிப்பாள்
                      சேய்க்கு முகஞ்சுழியாள்
                      சிந்தனையின் வித்தாவாள்
                      ஆர்க்குமவள் உதவிடுவாள்
                      அன்புநிறை மனமுடையாள்
                      அகிலத்தில் அன்னையவள்
                       அனைவருக்கும் தெய்வமாவாள் !