திரும்பிப்பார்க்கின்றேன் - இலக்கியத்தோழன் இளங்கோவன். - - முருகபூபதி

.
ஆக்க   இலக்கியத்திலும்  தமிழர்  மருத்துவத்திலும் ஈடுபட்டுழைத்த   இலக்கியத்தோழன்  இளங்கோவன்.
பாரதியின்   சேவகன்  கண்ணன்  -  டானியலின்  சேவகன் இளங்கோவன்

                                            
கவியரசு  கண்ணதாசன்  பற்றி  ஒருசமயம்  கலைஞர்  கருணாநிதி கவிதை    எழுதியபொழுது "  யார்  அழைத்தாலும்  ஓடிப்போகும்  செல்லப்பிள்ளை "    என்று  வர்ணித்தார்.   எனக்கும்  இலக்கியத் தோழன் வி.ரி. இளங்கோவன்  குறித்து  நினைக்கும்தோறும்  அந்த வரிகள்   நினைவுக்கு  வருவது  தவிர்க்கமுடியாதது.
கவிஞர்கள்   இயல்பிலேயே  மென்மையானவர்கள்தான்.  அதனால்  அவ்வப்பொழுது  எவருக்கும்   செல்லப்பிள்ளையாகிவிடுவார்கள்.
இளங்கோவனை  நான்  யாழ்ப்பாணத்தில்  சந்தித்த  காலப்பகுதியில் அவர்   சீனசார்பு  கம்யூனிஸ்ட்   கட்சியின்  முகாமிலிருந்தார். கொழும்பிலிருந்த   தோழர்  சண்முகதாசன்,   யாழ்ப்பாணத்திலிருந்த  மூத்த   எழுத்தாளர்  கே. டானியல்  மற்றும்  கட்சித்தோழர்  இக்பால் ஆகியோருடன்  மிக  நெருக்கமான  தோழமையுடன் இயங்கிக்கொண்டிருந்தார்.
இத்தனைக்கும்  இவர்  ஆயுர்வேதம்  படித்தவர்.   அத்துடன் பிலிப்பைன்ஸில்   நடந்த  ஆயுர்வேத  வைத்தியர்களின்  மாநாட்டிலும் கலந்துகொண்டவர்.   இயற்கை   வைத்தியத்துறையில்  பல நூல்களையும்   எழுதியிருந்தவர்.   மூலிகைகள்  பற்றிய நுண்ணறிவு கொண்டிருந்தவர்.





அத்துடன்  சிறுகதை,  கவிதை,  கட்டுரை,  பத்தி  எழுத்துக்கள், விமர்சனங்கள்   எழுதியவர்.  கட்சியின்  தொண்டனாகவே தோழர்களுடன்  ஊர்சுற்றி  பணியாற்றியவர்.  தனக்கென  ஒரு கிளினிக்கை   அவர்   யாழ்ப்பாணத்தில்   தொடங்கியிருந்தாலும் பெரும்பாலன  நேரங்களில்  அவர்  நோயாளருடன்  நேரத்தை செலவிடவில்லை.   அவரது  வாழ்க்கை   கட்சி  சார்ந்த தோழர்களுடனும்    இலக்கியவாதிகளுடனுமே   நகர்ந்தது.
இளங்கோவன்  கலை,  இலக்கியக் குடும்பத்திலிருந்து  வந்தவர். அவருடைய  அண்ணன்  மூத்த  எழுத்தாளர்  நாவேந்தன்.   துரைசிங்கம்   மற்றும்  ஒரு  எழுத்தாளர்.  சட்டத்தரணி   தமிழ்மாறன் அரசியல்  ஆய்வாளர்.    இளங்கோவனின்  மனைவி  பத்மா  சிறுவர் இலக்கியம்  படைப்பவர்.  பல  நூல்களை   எழுதியிருப்பவர். இளங்கோவனின்   புதல்வி  ஓவியா  திரைப்படத்துறையில்  ஒரு எடிட்டர்.
1983  ஆம்  ஆண்டு  தொடக்கத்தில்  எமது  முற்போக்கு  எழுத்தாளர் சங்கம்   நாடாளாவிய  ரீதியில்  பாரதி  நூற்றாண்டு  விழாவையும் பாரதி   நூல்கள்  கண்காட்சியையும்  ஈழத்து  எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது.  இக்கண்காட்சிக்குழுவில்   நான்   இருந்தேன்.  முதல்  விழா  கொழும்பில்  தொடங்கியது.
முற்போக்கு   இலக்கிய  முகாம்  இரண்டாகப் பிளவுபட்டிருந்த  காலம். டானியல்,    அவரது  மச்சான்  ரகுநாதன்,   இளங்கோவன்,  சில்லையூர் செல்வராசன்,   புதுவை   ரத்தினதுரை,  தேவி  பரமலிங்கம்,  பொன். பொன்ராசா,   நல்லை   அமிழ்தன்,   நந்தினி  சேவியர்,  டானியல் அன்ரனி,   இராஜா   தர்மராஜா  ஆகியோர்  இணைந்து திருகோணமலையில்  ஒரு  மாநாட்டை  நடத்தியிருந்த  காலம். அதற்கு   எமக்கெல்லாம்  அழைப்பு  இல்லை.
யாழ்ப்பாணத்தில்   மல்லிகை   ஆசிரியர்  இவர்கள்  மத்தியில்  மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின் யாழ். மாவட்ட   செயலாளராக  அவர்  இருந்தார்.   அந்தப்பிளவை   ஜீவா வரவேற்கவில்லை.   இலக்கியவாதிகளிடம்  கருத்துமுரண்பாடுகள் வந்தால்  - அவரவர்  தனிப்பட்ட  குடும்ப  நிகழ்வுகளுக்கும்  அழைப்பு அனுப்பத்தவறும்    கடும்போக்கும்  அப்பொழுது  நிலவியது வருத்தத்திற்குரியது.


முற்போக்கு   இலக்கிய  முகாம்  இவ்வாறு  பிளவுபட்டிருந்தாலும் அனைவருடனும்    நான்   சகஜமான உறவைப் பேணிக்கொண்டிருந்தமைக்கு  வேறு  பிரதேசத்தில்  நான்  வாழ்ந்ததும்  ஒரு  காரணம்.   அத்துடன்  தனிப்பட்ட  விருப்பு வெறுப்புக்கு    அப்பால்  இயங்கவேண்டும்  என்ற  இயல்பில் வளர்ந்துவிட்டமையினால்   இந்த  முரண்பட்ட  சக்திகளுடன்  எல்லாம்    இணைந்து  இயங்கவும்  தயாராக  இருந்தேன்.
யாழ்ப்பாணத்திலிருக்கும்   எழுத்தாளர்களின்  ஒளிப்படங்களும்  அவர்களின்   வாழ்க்கைக் குறிப்புகளும்  எமது கண்காட்சிக்குத் தேவைப்பட்டது.  ஆனால்,  எமது  சங்கத்துடன் முரண்பட்டுள்ளவர்களிடமிருந்து    எவ்வாறு  அவற்றை   வாங்குவது என்ற    கவலை  செயலாளர்  பிரேம்ஜியிடம்  நீடித்தது.
ஜீவா  தம்வசம்  இருக்கும்  படங்களைத் தருவதற்கு ஒப்புக்கொண்டார்.   ஆனால்,  மற்றவர்களிடம்  தன்னால் பெற்றுத்தரமுடியாது    என்று  ஒதுங்கிக்கொண்டார்.   குறிப்பாக  அங்கு மாஸ்கோ -  பீக்கிங்  கம்யூனிஸ்ட்  எழுத்தாளர்களிடம்  ஆரோக்கியமான  தோழமை  இருக்கவில்லை.
நான்   அந்த   சித்தாந்தக்கடலுக்கு  செல்ல நேர்ந்தது.    எனது தூண்டிலில்  முதலில்  சிக்கியவர்  நண்பர்  இளங்கோவன்.   வடபகுதி எழுத்தாளர்களின்   இந்த  புடலங்காய்  இசங்கள்  பற்றிய  கவலை எனக்கு    இருக்கவில்லை.
( இளைஞர்   இயக்கங்கள்  ஆயுதம்  ஏந்தியதும்  இசங்களும்  அங்கு மௌனித்தது  என்பது  வேறுகதை)
 நேரே   இளங்கோவனிடமே  சென்றேன்.   அவர்  என்னை   தமது மனைவியின்    கொழும்புத்துறை   இல்லத்திற்கு  அழைத்துச்சென்று உபசரித்தார்.


நாம்   நடத்தும்  பாரதி  நூற்றாண்டு  விழாவுக்கு  தமிழ்நாட்டிலிருந்து வரவிருக்கும்   எழுத்தாளர்கள்  பற்றிச் சொன்னேன்.   கண்காட்சியின் தேவைபற்றி    உணர்த்தினேன்.   இளங்கோவன்  ஊடாக  அவரது இலக்கிய      தோழர்களை   அரவணைக்க  விரும்பினேன்.   ஆனால் டானியல்    மாத்திரம்  படம்  தருவதற்கு  ஒப்புக்கொண்டார். விழாவுக்கு    வரவிருந்த  மாக்ஸீய  அறிஞர்  பேராசிரியர் இராமகிருஷ்ணன்,   முற்போக்கு  எழுத்தாளர்  சிதம்பர  ரகுநாதன், விவசாய   தொழிலாள  பாட்டாளி  மக்களின்  வாழ்வை   தொடர்ந்தும் இலக்கியமாக்கிய    ராஜம்  கிருஷ்ணன்  ஆகியோர்  பற்றி  நன்கு அறிந்தவர்   டானியல்.
வரும்    விருந்தினர்களிடம்  உள்ளுர்  பிரச்சினைகளை  காண்பித்து அவர்கள்   முகம்  கோணலாகிவிடக்கூடாது  என்ற  பெருந்தன்மை டானியலிடம்   இருந்தது.
டானியலுடன்  நீண்ட காலமாக  தோழமை   பாராட்டிய இளங்கோவனுக்கும்   அந்த  இயல்பு  இருந்தது.   அதனால்   அவர் எமக்கு   ஆதரவும்  ஒத்துழைப்பும்  வழங்கினார்.   இலங்கையில் நானும்   அவரும்  இருந்த  காலத்தில்  மட்டுமல்ல,  பிரான்ஸ_க்கு அவர்   புலம்பெயர்ந்து  சென்ற  பின்னரும்  எனது  நெருக்கமான நண்பராகவே   விளங்கினார்.
நாம்   2011  ஆம்  ஆண்டில்  பல்வேறு  வெற்று வேட்டுச்  சவால்களுக்கு    மத்தியில்  கொழும்பில்  நடத்திய  முதலாவது சர்வதேச   தமிழ்  எழுத்தாளர்  மாநாட்டிலும்  கலந்துகொண்டதுடன் தமிழ்   அபிமானியும்   சிங்கள  கனவானும்   பதிப்பாளருமான சுமணஸ்ரீ  கொடகே  ஒழுங்கு  செய்த  சந்திப்பிலும் -  பேராதனை பல்கலைக்கழகத்தில்   பேராசிரியர்  துரைமனோகரன்  ஏற்பாடு  செய்த மாணவர்களுடனான   சந்திப்பு  கலந்துரையாடலிலும் கலந்துகொண்டவர்.
இளங்கோவன்   பீக்கிங்  சார்பு  இலக்கியவாதிகளுடன்  நெருக்கமான தோழமை   கொண்டிருந்தாலும்,  இதர   எழுத்தாளர்களுடனும் நட்புறவை  பேணி  வந்தவர்.   டானியலுடன்  இவருக்கிருந்த தோழமையை   பார்த்தால் -  இவர்  அவரது  அந்தரங்கச்செயலாளர் என்றே   நாம்   மதிப்பிடமுடியும்.   இறுதியாக  டானியல்  தமிழகத்திற்கு சிகிச்சைக்கு    சென்றபொழுது  உடன்  சென்றவர்  இளங்கோவன். அத்துடன்    அவருடைய   இறுதிச்சடங்கின்  ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்தவர்.
தஞ்சாவூரில்   பல   மாக்ஸீயத்தோழர்கள்  அடக்கமான மயானத்திலேயே    டானியலுக்கு  கல்லறை   அமைத்தவர்.  தமிழகம் செல்லும்போதெல்லாம்    அந்தக்கல்லறையை   தரிசிக்கத்தவறாதவர்.
பாரதி  கண்ணனை   தனது  சேவகனாகப்பார்த்தது போல் -  டானியலுக்கு   எங்கிருந்தோ  வந்த  தோழன்  -   சேவகன் -  அவரது இறுதிப்பயணம்  வரையில்   வந்தவன்  இந்த  இளங்கோவன்.


இலங்கையிலும்   தமிழகத்திலும்  பல  படைப்பாளிகள்  தொடக்க காலத்தில்    மாக்ஸீயத்தினால்  ஆகர்சிக்கப்பட்டவர்களே.  அவர்கள் மார்க்ஸை  தமது  நம்பிக்கை    நட்சத்திரமாக  கொண்டிருந்தாலும் தங்களுக்குள்   முரண்பட்டுக்கொண்டுதானிருந்தனர்.
யேசுவும்     மார்க்ஸ_ம்   யூத  இனத்திலிருந்து  வந்தவர்கள்.  இன்று யேசுவால்    தோற்றுவிக்கப்பட்ட  மதம்  பல்வேறு பிரிவுகளாகியிருப்பது   போன்று  மாக்ஸீயவாதிகளும் பிளவுபட்டிருக்கின்றனர்.
ஜெயகாந்தனும்   மாக்ஸீயம்  பேசினார்.   எஸ். பொன்னுத்துரையும் தன்னை   மாக்ஸீயவாதி    என்றார்.   புதுவை ரத்தினதுரையும்  தாமும் அவ்வழிதான்  என்றார்.   எழுத்தாளர்கள்  மட்டுமல்ல,  இடதுசாரி அரசியல்    தலைவர்களும்   அவ்வாறு  மாக்ஸை   பின்பற்றினாலும் பிளவுபட்டுத்தான்    வாழ்ந்தார்கள்.
உலகத்தொழிலாளர்களே    ஒன்றுபடுங்கள்  என்ற  கோஷத்தின்  கீழ் உலகெங்கும்   எத்தனை   மேதின  ஊர்வலங்கள்,  கூட்டங்கள் நடக்கின்றன.    ஆனால்,  நாட்டுக்கு  நாடு   அவர்கள்  பிளவுபட்டுத்தான் மாக்ஸீயப்பண்டிதர்களாக   வாழ்கின்றனர்.
முதலாளித்துவமும்  ஏகாதிபத்தியமும்  கைகோர்த்து  வேடிக்கை பார்க்கின்றன.
நண்பர்   இளங்கோவனும்  மாக்ஸீயப்பாசறையில்தான்  வளர்ந்தார். அத்துடன்  ஆயுர்வேத  வைத்தியராகவும்  விளங்கினார்.  ஆனால் -  அவருக்கு   எஞ்சியது  இலக்கியவாதி  என்ற  அடையாளம்  மாத்திரமே.    அந்த  அடையாளத்தை   அவர்  தக்கவைத்துக்கொள்வதன் மூலம்   சாதிக்கலாம்.
இளங்கோவனின்   நூல்கள்   இந்திய  மொழிகளில்  குறிப்பாக இந்தியிலும்    வெளியாகியிருக்கிறது.   இவருடைய சிறுகதைத்தொகுதிக்கு   பேராசிரியர்  கா.  சிவத்தம்பியும்  முன்னுரை எழுதியிருக்கிறார்.
இதுவரையில்   இளங்கோவன்  இலக்கியம்,   மருத்துவம்  சார்ந்த  பல  நூல்களை   வரவாக்கியிருப்பவர்.   அத்துடன்  நில்லாமல் அவ்வப்பொழுது  இதழ்களும்  நடத்தி   நட்டப்பட்டவர்.    என்னதான் நட்டப்பட்டாலும்    அதனை   ஈடுசெய்ய  முயற்சிக்காமல்  தொடர்ந்தும் புதிய   பெயர்களில்  இதழ்களை   நடத்தத்தொடங்குவார்.
யாழ்ப்பாணத்தில்    இருந்தகாலப்பகுதியில்  அவர்  வெளியிட்ட இதழ்களைப்பாருங்கள்.
தமிழன்  ( 1969 - 70 )  வாகை  (1981 )  மூலிகை   (1985 -86)  நம்நாடு  (1989)  இதுதவிர   தமது  அண்ணன்  மூத்த  எழுத்தாளர்  நாவேந்தன்  நடத்திய   நாவேந்தன்  ( 1970 - 73 )   சங்கப்பலகை   (1998)  இவற்றில் நிருவாக  ஆசிரியர் .
இலக்கிய  ஆர்வம்தான்  இதற்கெல்லாம்  மூலதனம்.  புலம்பெயர்ந்து பிரான்ஸ_க்குச் சென்ற பின்னரும்,  தொட்டில்  பழக்கம்  சுடுகாடு மட்டும்  என்ற  முதுமொழிக்கிணங்க  அங்கு  சென்றும்  இதழ்கள் தொடங்கினார்.  சங்கப்பலகை ,   கவிதை   மஞ்சரி,  பரிசு  (சிறுவர் மஞ்சரி )  இவற்றை   1998  ஆம்  ஆண்டளவில்  நடத்தி  ஓய்ந்தாலும் நூல்களை   பதிப்பிக்கும்  முயற்சியில்  இன்றுவரையில்  அவர் ஓய்ந்துவிடவில்லை.
இந்த   இலக்கியவாதியின் -  இடதுசாரித்தோழனின்  மறுபக்கம்தான் என்னை   மிகவும்  கவர்ந்தது.  தமிழர்  மருத்துவம்  அழிந்துவிடுமா...? என்ற  கேள்வியுடன்  அவர்  எழுதியிருக்கும்  கட்டுரைத்தொகுப்பு  நூல்   தமிழ்மக்கள்  அவசியம்  படிக்கவேண்டியது.   1991  ஆம்  ஆண்டு பாரிஸ்   மாநகருக்கு  வந்ததும்,  எஸ்.கே. ராஜென்  நடத்திய தமிழமுதம்   வானொலியில்  தொடர்ச்சியாக  தமிழர்  மருத்துவம் பற்றிய   உரைச்சித்திரம்  நிகழ்த்தினார்.   எம்மவர்கள்  எதனையும் சுவாரஸ்யமாகவே   கேட்க  விரும்புவார்கள்.
அதனால்  சிறிது  நகைச்சுவையும்  சேர்த்து  பரிகாரி பரமசிவம்  என்ற   பெயரில்  அந்த  நிகழ்ச்சியை   நடத்தியிருக்கிறார். அக்கட்டுரைகளின்  தொகுப்பே  மேற்குறிப்பிட்ட  நூல்.
இன்று   புலம்பெயர்ந்த  தமிழர்கள்  வாழும்  நாடுகளில்  எம்மவர்கள் தமது   ஊர்  மரக்கறி,   கீரை வகைகளை   தேடித் தேடிச் செல்வதை அவதானித்திருப்போம்.  நான்  வாழும்  அவுஸ்திரேலியாவும்  இதற்கு விதிவிலக்கல்ல.   இங்கு  குவின்ஸ்லாந்து  மாநிலத்தில்  தமிழர்கள் முருங்கை  மரம்   பயிரிட்டு  முருங்கைக்  கீரையும்  முருங்கைக்காயும்    ஏனைய  மாநிலங்களுக்கு  ஏற்றுமதி செய்துகொண்டிருக்கின்றனர்.    எம்மவர்கள்  தேடி  தேடி வாங்குகிறார்கள்.
அத்துடன்   வாதம்  சம்பந்தமான  நோய்களை   குணப்படுத்துவதற்கு அடிக்கடி   இலங்கை   சென்று  சிங்கள  வைத்தியம்  செய்கிறார்கள்.
இளங்கோவன்   பிலிப்பைன்ஸ்  நாட்டில்  ஐ.நா.  தொண்டராக  சமூக அபிவிருத்தி - மூலிகை  மருத்துவப் பணியாற்றிவிட்டு  1984  ஆம் ஆண்டு   இலங்கை   வடபகுதி  திரும்பியபொழுது  அவரும் அவருடைய   தோழர்களும்  எதிர்பார்த்தவாறு  பல  தமிழ் இளைஞர்களிடம்  மாக்ஸீய  நூல்கள்  இருக்கவில்லை.  பதிலாக அவர்களிடம்   ஆயுதங்கள்தான்  இருந்தன.
கடைசிவரையில்   சித்தாந்தமும்  ஆயுதமும்  அங்கு இணையவேயில்லை.   ஆனால் -  இளங்கோவன்  எதிர்காலம் குறித்து   தீர்க்கமாக  சிந்தித்து  இயங்கத்தலைப்பட்டார்.  விடுதலை என்ற  பெயரில்  தொடரும்  ஆயுதப்போராட்டம்  உக்கிரமடைந்தால் தென்னிலங்கை  அரசு  நிச்சயம்  தமிழ்ப்பிரதேசங்களில் பொருளாதரத்தடை   விதிக்கும்  என்பதை  தெரிந்துவைத்திருந்தார்.
( பின்னர்  அதுதான்  நடந்தது)
இளங்கோவன்   புங்குடுதீவைச் சேர்ந்தவர்.   தமிழ்  மக்களிடத்தில் முதலில்   கிராம  சுயராச்சியம் -  பொருளாதார  வளர்ச்சி -  சிரமதானம் குறித்து   சிந்தித்து  செயற்பட்ட  வட  இலங்கை  சர்வோதயத் தொண்டர்   திருநாவுக்கரசு  என்பவருக்கு  பக்கத்துணையாக இயங்கியிருப்பவர்.   அந்த   அன்பர்  மேற்கொண்ட  பல  கிராம அபிவிருத்திப்பணிகளை   அருகிருந்து  பார்த்தவர்.
வடபகுதியிலிருந்த   ஒரு  பெரிய  இயக்கத்தின்  பிரமுகருடன் உரையாடி  தமிழ்  மக்களிடம்  தமிழர்  மருத்துவம்  பற்றிய விழிப்புணர்வை    ஏற்படுத்துவதற்கு  ஏதும்  உருப்படியான  நடவடிக்கை   மேற்கொள்ளுமாறு  கேட்டார்.
அவர் -  இவரை  யாழ்.  பல்கலைக்கழகம்  பக்கம்  சென்று அதனைப்போதிக்குமாறு   சொல்லிவிட்டு  இயக்கத்திற்கு  ஆயுதம் சேகரிக்கும்   வேலைகளில்தான்  கவனம்  செலுத்தினார்.
தமிழர்   மருத்துவத்தை   ஏளனமாக  பார்த்த  அன்றைய  பல்கலைக்கழக  சமூகம்  இளங்கோவனை   ஒரு  கற்கால மனிதனாகத்தான்   அன்று  பார்த்திருக்கும்.  ஆனால்,  இன்று  காலம் மாறிக்கிடக்கிறது.   மீண்டும்  வந்த  வழிக்குத்திரும்பும்  வகையில் சித்த  மருத்துவ  பீடமும்  அங்கு  உருவாகியிருக்கிறது.
எம்மவர்  மட்டுமல்ல  எல்லா   இனத்தவருமே  வெளியில் செல்லும்பொழுது   தமது  பொக்கட்டில்  அல்லது  கைப்பையில் வலிநிவாரணி   மாத்திரைகளுடன்தான்  புறப்படுகின்றனர்.   ஒரு காலத்தில்   தமிழ்ப் பிரதேசங்களில்  தேநீர்க்கடைகளில்  கொத்த மல்லித்   தேநீர்  கிடைத்ததை  இளங்கோவன்  நன்கறிந்தவர்.
எனக்கு  இன்றும்  நல்ல  நினைவு  இருக்கிறது.  பாடசாலைப்பக்கமே செல்லாத   எனது  பாட்டி  தையலம்மாவிடம்  எங்கள்  ஊர்  மக்கள் பலர்   வந்து  பாட்டிவைத்தியம்  செய்து  சுகப்பட்டனர்.
 இன்று   பாட்டிமார்  தொலைக்காட்சி  சீரியலில்  மூழ்கிவிட்டார்கள்.
வீட்டில்  பசு  தரும்  பாலையும்  கோழி  இடும்  முட்டையையும் வீட்டுத்தோட்டத்துக் கீரைவகைகளையும்  விற்றுவிட்டு  தமது குழந்தைகளுக்கு    கொக்காகோலாவும் Fast Food  உம்  வாங்கிச்சென்று    கொடுக்கும்  பெற்றவர்கள்  பற்றிய  கவலையை தமது   நூலில்  விவரிக்கின்றார்  இளங்கோவன்.
இளங்கோவன்   போன்றவர்களை  ஈழத்து  தமிழர்கள்  மட்டுமல்ல தேசியம்   பேசிய  இயக்கத்தவர்களும்  சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை  என்பதும்  காலத்தின்  துயரம்.
இனி  இந்தப்பத்தியின்  தொடக்கத்திற்கு  வருகின்றேன்.  இளங்கோவன் ஏன்   செல்லப்பிள்ளையாக  இருக்கிறார்  என்ற  வருத்தமும் எனக்கிருக்கிறது.
புலிகளின்  யாழ்.  மாவட்டத் தளபதி  கிட்டுவை   இந்து  சமுத்திரத்தில் நடுக்கடலில்  இந்திய  உளவுப்படை   சிக்கவைத்து   அழித்தபொழுது அது  சர்வதேச  கடல்  பரப்பு  என்று  வாதிட்டு  பிரான்ஸில்  நடந்த கண்டனக்கூட்ட  மேடையிலும்  இளங்கோவன்  தோன்றினார். பலகாலமாக   தமிழர்  புலம்பெயர்ந்த  நாடுகளுக்கு  வந்து வைரவரிகள்    பேசும்  -  கிளி  வீழ்ந்தாலும்  புலி   வீழாது  என்று மொக்கையாகவும்  தனக்கு  அனுமதி  தாருங்கள்  தமிழ் ஈழத்தேசியக்கீதம்  இயற்றுகின்றேன்  என்றும்  சொல்லி  கைதட்டல் வாங்கும்   வைரமுத்துவின்  மேடைகளிலும்  தோன்றிவிடுவார்.   நாளை   அய்ரோப்பாவில்   மாக்ஸீயவாதிகள்  நடத்தும்  கூட்டத்திலும் பிரசன்னமாகிவிடுவார்.
படைப்பாளிகளின்  வாழ்வு  சமரசம்  உட்பட  பல்வேறு கோலம்கொண்டுவிடுவது   தவிர்க்க முடியாததுதான்.   அதிலிருந்து தப்பித்து   தனது  சுய   அடையாளம்  பேணுவது  என்பது  சிரமமாக இருக்கலாம்.   ஆனால்  சாத்தியமானது.
கடந்த   2015  பெப்ரவரியில்  கொழும்பு  தமிழ்ச்சங்கத்தில்  நடந்த  அமரர்   துரை   விஸ்வநாதன்  நினைவு   அரங்கிற்கு  நான்  தலைமை தாங்கியபொழுது  நண்பர்  இளங்கோவனும்  அங்கு  வந்திருந்தார். உரையாடிக்கொண்டோம்.   அந்நிகழ்ச்சி  முடிந்து  இரண்டு  நாட்களில் நான்   அவுஸ்திரேலியா  திரும்பவேண்டியிருந்தமையினால்  பின்னர் சந்திக்க  முடியவில்லை.
அவர்   அந்தப்பயணத்தில்  யாழ்ப்பாணத்தில்  திடீரென்று சுகவீனமுற்றதையடுத்து   அவரது  ஊர்  நண்பனும் பல்யகாலத்தோழனுமான  முன்னாள்  பாரிஸ்  ஈழநாடு  ஆசிரியரும் தற்பொழுது   இலங்கையில்  டான்  தொலைக்காட்சியின் இயக்குநருமான  குகநாதன்  இவரை  உடனடியாக மருத்துவமனையில்   அனுமதித்து  கவனித்துள்ளார்.
குகநாதனின்  துணைவியார்  சமீபத்தில்  அவுஸ்திரேலியா வருகைதந்த   பின்னர்தான்  எனக்கு  இந்தத்தகவல்  தெரியும்.  உடனே பிரான்ஸ_க்கு   தொடர்புகொண்டு  கேட்டபொழுது  அவர்  அங்கு மருத்துவமனையில்  இருப்பதாக  அறிந்து  இலக்கம்பெற்று  உரையாடினேன்.
மருத்துவருக்கும்  நோய்கள்   வரலாம்.   தப்ப முடியாது.  தற்பொழுது அவர்   தேறிவருவதாக  அறிந்து  ஆறுதலடைந்தேன்.    இளங்கோவன் தமிழ்நாட்டில்   முற்போக்கு  எழுத்தாளர்கள்  அ.மார்க்ஸ்,   நாமக்கல் கு. சின்னப்பபாரதி  உட்பட  பலருடைய  அபிமானத்துக்குரிய  நண்பர். தமது  படைப்புகளுக்கு  விருதுகளும்  பரிசில்களும்  பெற்றிருப்பவர்.
இளங்கோவன்   மேலும்  பல்லாண்டு  வாழ்ந்து  தொடர்ந்தும்  தமிழர் மருத்துவத்திலும்   ஆக்க  இலக்கியத்துறையிலும்  தமது  கவனத்தை செலுத்துவதற்கு -  எனது  இந்தப்பத்தி  எழுத்துக்கள்  ஊக்க மாத்திரைகளாக   இருப்பின்  அதுவும்  எனது  மகிழ்ச்சியே.
letchumananm@gmail.com


No comments: