பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு
இந்தோனேசிய மரணதண்டனை கைதி அன்ட்றூ சானை திருமணம் செய்த பெண் மதபோதகராக சேவையாற்றிய இளவரசி
மத்தியதரைக் கடலில் தீப்பற்றி எரிந்த படகு
பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு
வில்லியம் -கேட் தம்பதியருக்கு பெண் குழந்தை
28/04/2015 நேபாளத்தை கடந்த சனிக்கிழமை தாக்கிய 7.8 ரிச்டர் அளவான பாரிய பூகம்பத்தில் சிக்கி பலியானோர் தொகை 4000 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 7,000 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
அயல் நாடான இந்தியாவில் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தப் பூமியதிர்ச்சியானது 20 அணுகுண்டுகள் ஒரே சமயத்தில் வெடிக்கும் போது வெளிப்படும் சக்தியை ஒத்த சக்தியைக் கொணடுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பூமியதிர்ச்சியால் தரைமட்டாகியுள்ள கட்டட இடிபாடுகளின் கீழ் புதையுண்டவர்களை மீட்கும் பணி தொடர்கின்ற நிலையில், மேலும் பல சடலங்கள் மீட்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து காணாமல் போன நிலையிலேயே உள்ளனர்.அந்நாட்டில் கடந்த சனிக்கிழமை தாக்கிய பூகம்பத்தைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை 6.7 ரிச்டர் அளவு கொண்ட பூமியதிர்ச்சி தாக்கியிருந்தது.
இந்நிலையில் .அந்த பிந்திய பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து அன்றைய இரவு 5.4 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சியொன்று அந்தப் பிராந்தியத்தை தாக்கியுள்ளது.இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை காலை பல பகுதிகளில் மீண்டும் பல பூமியதிர்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
சனிக்கிழமையிலிருந்து இதுவரை மேற்படி பிராந்தியத்தில் 55 தடவைகள் பூமியதிர்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொதுப் பணிப்பாளரான ரத்தோர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பூமியதிர்ச்சிகள் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து இரு நாட்களாக திறந்தவெளியில் கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர்.
அத்துடன் அந்தப் பிராந்தியத்தை மீளவும் பாரிய பூகம்பம் தாக்கலாம் என்ற பீதி காரணமாக மக்கள் இரவு நேரங்களில் தூக்கத்தை மறந்து தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூமியதிர்ச்சியையடுத்து நேபாளம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரவு நேரங்களை இருளில் கழிக்க வேண்டிய அவல நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் அந்நாட்டில் கையடக்கத் தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன் பூமியதிர்ச்சியால் எவரெஸ்ட் மலைப் பிராந்தியத்தில் இடம்பெற்ற பனிப்பாறை சரிவுகளில் சிக்கி வெளியேற முடியாதுள்ள மலை ஏறும் வீரர்களை மீட்கும் நடவடிக்கையில் உலங்குவானூர்திகள் ஈடுபட்டுள்ளன.
அந்த மலைப்ப பிராந்தியத்தில் சுமார் 150 மலை ஏறும் வீரர்கள் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. எனினும் அவர்கள் எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
மேற்படி எவரெஸ்ட் பிராந்தியத்தில் பூமியதிர்ச்சியின் போது இடம்பெற்ற பனிப்பாறைச் சரிவுகளில் சிக்கி குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேபாளத்திலுள்ள வெளிநாட்டவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறும் முகமாக அந்நாட்டின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான திரிபுவன் விமானநிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அளவுக்கதிகமான பயணிகளை சமாளிக்க விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு சிறுவர்கள், பெண்கள், வ.யோதிபர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பூமியதிர்ச்சியில் உயிரிழந்த நூற்றுக்கணக்கானோரது சடலங்கள் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளன. நன்றி வீரகேசரி
இந்தோனேசிய மரணதண்டனை கைதி அன்ட்றூ சானை திருமணம் செய்த பெண் மதபோதகராக சேவையாற்றிய இளவரசி
30/04/2015 இந்தோனேசியாவில் போதைவஸ்து கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்குள்ளான 8 கைதிகளில் ஒருவரான அன்ட்றூ சானை மேற்படி தண்டனை நிறைவேற்றத்திற்கு முன் சிறைச்சாலையில் வைத்து திருமணம் செய்ததன் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட பெப்யன்தி ஹெரவிலா என்ற பெண் இந்தோனேசிய ஜாவா பிராந்திய இளவரசிகளில் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பெபி என அழைக்கப்படும் அவர் கடந்த திங்கட்கிழமை அன்ட்றூ சானை சிறைச்சாலையில் வைத்து திருமணம் செய்திருந்தார்.மத்திய ஜாவாவிலுள்ள யொக்யகர்த்தாவைச் சேர்ந்த அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த தாயொருவருக்கு பிறந்தவராவார்.
சுமார் 5 வருட காலம் மதபோதகர் ஒருவராக சிங்கப்பூரில் சேவையாற்றிய அவர் பின்னர் தாய்நாடு திரு ம்பி மேலும் 5வருடங்க ளுக்கு தனது சேவையைத் தொடர்ந்துள் ளார்.
அவர் பாலி மற்றும் ஜகர்த்தாவில் கிறிஸ்தவ அமைப்பொன் றின் உறுப்பின ராக சேவையாற்றினார்.
இந்நிலையில் அவர் 2012 ஆம் ஆண்டு பாலியிலுள்ள கெரோபோகன் சிறைச்சாலையில் மத போதனைகளை மேற்கொண்ட போது அன்ட்றூ சானை முதன்முதலாக சந்தித்தார்.இதன் போது அன்ட்றூ சான், “நீ உனது ஆத்ம நண்பரைத் தேடி இங்கே வந்தாயா?” என வேடிக்கையாக பெபியி டம் வினவியதாக அன்ட்றூ சானுடன் சிறைவாசம் அனுபவித்த பிறிதொரு சிறைக்கைதியான மத்தியுஸ் ஆரிப் மர்ட்ஜஜயா தெரிவித்தார்.
அந்த சிறைச்சாலையிலிருந்த அனைத்து சிறைக்கைதிகளிடமும் பரிவு காட்டும் ஒருவராக விளங்கிய பெபி, அன்ட்றூ சானிடம் தனி அக்கறையை காண்பித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் அன்ட்றூ சான் பெபியை திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை அவரிடம் வெளியிட்டுள்ளார்.
அன்ட்றூ சான் எந்நேரமும் மரணதண்டனை நிறைவேற்றத்துக்குள்ளாகக் கூடிய கைதி என்பதை தெளிவாக அறிந்திருந்த போதும் பெபி உடனடியாக அவரது காதலை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து அந்த சிறைச்சாலைக்கு முறையாக விஜயம் செய்த பெபியின் மத போதனைகளை ஆர்வத்துடன் செவிமடுப்பதில் அன்ட்றூ சான் ஈடுபட்டு வந்துள்ளார்.அன்ட்றூ சான் விடுதலையாவாரானால் இருவரும் இணைந்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்து பிள்ளை களை பெற்றுக்கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக மத்தியுஸ் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
மத்தியதரைக் கடலில் தீப்பற்றி எரிந்த படகு
30/04/2015 மத்தியதரைக் கடல் தீவான மல்லோர்காவிலிருந்து ஸ்பெயினின் வலென்சியா துறைமுகத்தை நோக்கி 150 பயணிகளுடன் சென்ற படகொன்று தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு எற்பட்டது.
எனினும் படகிலிருந்த அனைவரும் அவசர சேவைப் பிரிவினரால் கப்பல்கள் மற்றும் உயிர்காப்பு படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த தீ அனர்த்தத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை. நன்றி வீரகேசரி
வில்லியம் -கேட் தம்பதியருக்கு பெண் குழந்தை
02/05/2015 பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் சீமாட்டி சற்று முன்னர் பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இளவரசர் கேட் மிடில்டன் தம்பதியருக்கு தற்போது பிறந்துள்ள பெண் குழந்தை இரண்டாவது குழந்தையாகும்.
லண்டனிலுள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இங்கிலாந்து நேரப்படி காலை 08.34 மணிக்கு குறித்த பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்ததுள்ளது.
குழந்தை பிறக்கும்போது இளவரசர் வில்லியம் அருகில் இருந்தார். தாயும் சேயும் நலமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது. பிறந்துள்ள பெண் குழந்தை சுமார் நான்கு கிலோ எடையுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை பிரிட்டிஷ் அரசி, அவரது கணவர் எடின்பரோ கோமகன், இளவரசர் வில்லியமின் தந்தையும் வேல்ஸ் இளவரசருமான சார்ள்ஸ் அவரது மனைவி கார்ண்வால் சீமாட்டி, இளவரசர் ஹரி மற்றும் இரு குடும்பத்தினதும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வில்லியம்ஸ்-கேட் மிடில்டன் தம்பதியனரின் முதல் குழந்தையான இளவரசர் ஜோர்ஜ் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment