அமெரிக்க தொண்டு நிறுவன பணியாளரின் படுகொலைக்கு பராக் ஒபாமா கண்டனம்
ஜெருசலேமில் யூத வழிபாட்டு ஸ்தலத்தில் தாக்குதல் : 4 பேர் பலி; 8 பேர் காயம்
கிழக்கு உக்ரேனில் வன்முறை தாக்குதல்களில் 6 படை வீரர்கள்; 3 பொலிஸார் பலி
அமெரிக்க நியூயோர்க்கில் கடும் பனிப்பொழிவு: 4 பேர் உயிரிழப்பு
=================================================================
அமெரிக்க தொண்டு நிறுவன பணியாளரின் படுகொலைக்கு பராக் ஒபாமா கண்டனம்
18/11/2014 அமெரிக்க தொண்டு நிறுவன பணியாளர் அப்துல் ரஹ்மான் காஸிக் கொல்லப்பட்டமை பிசாசுத்தனமான ஒரு நடவடிக்கை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய வேளையிலேயே பராக் ஒபாமா மேற்படி கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஐ.எஸ். போராளி குழுவானது வெட்டப்பட்ட தலையுடன் முகமூடியணிந்த நபரொருவர் காணப்படும் வீடியோ காட்சியொன்றை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அந்த வெட்டப்பட்ட தலைக்குரியவர் காஸிக் என்பதை அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.பீற்றர் காஸிக் என இயற்பெயரைக் கொண்ட அப்துல் ரஹ்மான் காஸிக் (26 வயது), கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சிரியாவில் வைத்து ஐ.எஸ்.போராளிகளால் கடத்தப்பட்டார்.
அந்நாட்டில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பயிற்சி மற்றும் மனிதாபிமான உதவிகள் என்பவற்றை வழங்கிய வேளையிலேயே அவர் கடத்தப்பட்டார்.
சிரிய மக்கள் மீதான தனது அன்பின் பெறுபேறாகவே காஸிக் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோரான எட் மற்றும் போலா தெரிவித்தனர்.
ஐ.எஸ்.போராளிகளால் கொல்லப்பட்ட ஐந்தாவது மேற்குலக பணயக்கைதியாக காஸிக் விளங்குகிறார்.இதற்கு முன் ஐ.எஸ்.போராளிகளால் பிரித்தானியர்களான அலன் ஹென்னிங், டேவிட் ஹெயின்ஸ் மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்களான ஜேம்ஸ் போலி, ஸ்டீவன் ஸொட்லொப் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த 4 படு கொலைகளையும் மேற்கொண்ட போராளி பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் என நம்பப்படுகிறது.அதே சமயம் காஸிக் படுகொலை செய்யப்பட்டதை வெளிப்படுத்தும் காட்சியை உள்ளடக்கிய பிந்திய வீடியோ காட்சியானது சிரியாவில் அலேப்போ மாகாணத்திலுள்ள தபிக் நகரில் படமாக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சியில் போராளிகள் பலரது முகங்கள் தெளிவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.போராளிகள் சிரிய இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் விமானிகள் என அடையாளம் காணப்பட்ட 18 பணயக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் காட்சியையும் மேற்படி வீடியோ காட்சியையும் உள்ளடக்கியுள்ளது.
அந்த 16 நிமிட வீடியோ காட்சியில் உரையாற்றிய முகமூடியணிந்த போராளியொருவர் பிரித்தானிய, அமெரிக்க, பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
"ரோமின் நாயான ஒபாமாவுக்கு, நாங்கள் இன்று பஷாரின் (சிரிய ஜனாதிபதி பஷார் அல் - அஸாத்தின்) படையினரை கொன்றுள்ளோம். நாளை நாம் உங்கள் படையினரை கொல்வோம்" என்று மேற்படி போராளி கூறினார்.
"இறைவனின் அனுமதியுடன் ஐ.எஸ். போராளிகள், உங்கள் கைப்பாவை டேவிட் கமெரோன் கூறியது போன்று உங்கள் மக்களை உங்கள் வீதியிலேயே கொல்வார்கள்" என அந்தப் போராளி அச்சுறுத்தல் விடுத்தார். நன்றி வீரகேசரி
ஜெருசலேமில் யூத வழிபாட்டு ஸ்தலத்தில் தாக்குதல் : 4 பேர் பலி; 8 பேர் காயம்
19/11/2014 மேற்கு ஜெருசலேமிலுள்ள யூத வழிபாட்டு ஸ்தல மொன்றில் துப்பாக்கி, கத்திகள், கோடரிகள் என்பவற்றுடன் இருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 4 இஸ்ரேலியர்கள் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு ஜெருசலேமைச் சேர்ந்த பலஸ்தீனர்களான இரு தாக்குதல்தாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜெருசலேமில் இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்குமிடையே கடும் பதற்ற நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலானது மனிதாபிமானமற்ற தீவிரவாத செயற்பாடு என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி குற்றஞ்சாட்டியுள்ளார். நன்றி வீரகேசரி
கிழக்கு உக்ரேனில் வன்முறை தாக்குதல்களில் 6 படை வீரர்கள்; 3 பொலிஸார் பலி
17/11/2014 கிழக்கு உக்ரேனில் 24 மணி நேரத்தில் 6 உக்ரேனிய படை வீரர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் மகரோவிற்கு அருகில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதுடன் ஏனைய 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் அந்த பிராந்தியத்தில் இடம்பெற்ற வேறு தாக்குதல்களில் 6 படை வீரர்கள் பலியானதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பலம் பெற்று விளங்கும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் ஒரு பொதுமகன் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி பிராந்தியத்தில் திங்கட்கிழமை புதிதாக ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரேனில் நிலவும் பதற்ற நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்கள் பிரஸல்ஸில் கூடி கலந்துரையாடவுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
கிழக்கு உக்ரேனில் கடந்த 7 மாத காலமாக இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 4,100 பேர் பலியானதுடன் சுமார் 10,000 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. நன்றி வீரகேசரி
அமெரிக்க நியூயோர்க்கில் கடும் பனிப்பொழிவு: 4 பேர் உயிரிழப்பு
20/11/2014 அமெரிக்க நியூயோர்க் மாநிலத்திலுள்ள பவலோ பிராந்தியத்தை செவ்வாய்க்கிழமை தாக்கிய கடும் பனிப்புயல் காரணமாக குறைந்தது 4 பேர் பலியாகியுள்ளனர்.
பல பிரதேசங்களில் 24 மணி நேரத்திலும் குறைந்த காலத்தில் 4 அடி முதல் 5 அடி வரையான பனிப் பொழிவு இடம்பெற்றதில், பலர் வீடுகளிலும் வாகனங்களிலும் வெளியேற முடியாது சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் 3 நாட்களில் ஒரு வருட காலத்தில் இடம்பெறும் அளவான பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது.
பனிப் பொழிவால் வீடொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதால் வாகனங்கள் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment