இலங்கைச் செய்திகள்


சிறில் ரமபோஷா யாழ். விஜயம்

எமக்கு எது­வுமே வேண்டாம்; பிள்­ளை­களை மட்டும் எம்­மிடம் ஒப்­ப­டைத்தால் போதும்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை

போரின் இறுதி நாட்களில் ஷெல், துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன

'அரசாங்கமோ, இராணுவமோ மனித நேயமுள்ளவர்களாக இருந்தால் எனது கணவரை உயிருடன் தர வேண்டும்"

அளுத்கமவில் இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை

எழுத்துப் பிழையுடன் வீதியின் பெயர்ப்பலகை

மலையகத்தில் சீரற்ற காலநிலை

எந்தவொரு வழியிலும் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயார்

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு தொடர்பில் அமெரிக்கா கவலை

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் ஆஸி. குடிவரவு அமைச்சர் விசனம்

ஆஸி.யினால் கைது செய்யப்பட்ட 41 பேரே கடந்த 7ஆம் திகதி விடுவிக்கப்பட்டவர்கள் - அநுரவின் கேள்விக்கு நியோமல் பதில்
==================================================================




சிறில் ரமபோஷா யாழ். விஜயம்

08/07/2014   யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோஷாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர்.
தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு   வருகைதந்தனர்.
இதன்போது உலங்குவானூர்திகளில் வருகைதந்த சிறில் ரமபோசா தலைமையிலான குழுவினர் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகைதந்த சமயம் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர்  பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ரமபோஷா வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி  உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடலை நடாத்தவுள்ளார்.
இதனிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தற்போதைய நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
நேற்று இலங்கைக்கு வருகைதந்த ரமபோஷா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்து.
இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி











எமக்கு எது­வுமே வேண்டாம்; பிள்­ளை­களை மட்டும் எம்­மிடம் ஒப்­ப­டைத்தால் போதும்

08/07/2014   புது­மாத்­தளன் பகு­தியில் யுத்தம் இடம்­பெற்றுக்கொண்­டி­ருந்­த­ போது ஷெல் தாக்­கு­தலில் தனது 5 பிள்­ளைகள் கொல்­லப்­பட்­டுள்ள­தா­கவும், அதே தாக்கு­தலில் படு­கா­ய­ம­டைந்த
கண­வரை மாத்­தளன் பாட­சா­லையில் இயங்கிய வைத்­தி­ய­சா­லையில் தவறவிட்­டதா­கவும் முல்­லைத்­தீவில் பெண்­ணொ­ரு­வர் நேற்று ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ய­மளித்தார்.
இதே­வேளை எங்க­ளுக்கு எது­வுமே வேண்டாம். எங்­க­ளு­டைய பிள்­ளை­களை மட்டும் திரும்ப எங்­க­ளிடம் ஒப்­ப­டை­யுங்கள் என ஆணைக்­கு­ழு­விடம் உருக்­க­மாக மன்­றா­டிய தாயார் ஒருவர் தாம் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பின்னர் சுமார் 4 தினங்­க­ளாக சீரான குடிநீர் கிடைக்­காத நிலையில் உண­வுகள் எது­வு­மின்றி பசி­யுடன் வாடி­ய­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.
கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மைய ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோரைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் நேற்று முல்­லைத்­தீவு கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லக மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.
இந்த அமர்­வு­களில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­காக நேற்­றைய தினம் 60 பேருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.
இந்த விசா­ர­ணையில் புது­மாத்­தளன் பகு­தி­யைச்­சேர்ந்த பாபு காளி­யம்மா என்ற பெண் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
நாம் கடந்த 2009 ஆம் ஆண்டு நாலாம் மாதம் புது­மாத்­தளன் பகு­தியில் வசித்­த­பொ­ழுது ஷெல் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி பாதிக்­கப்­பட்டோம். இந்த ஷெல் தாக்­கு­தலில் நான் எனது 5 பிள்­ளை­களைப் பறி­கொ­டுத்­துள்ளேன். இதே ஷெல் தாக்­கு­தலில் கண­வரும் படு­கா­ய­ம­டைந்தார். படு­கா­ய­ம­டைந்­த­வரை நாம் மாத்­தளன் பாட­சா­லையில் இயங்­கிய வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு சென்றோம். நாங்கள் செல்­கின்­ற­போது அந்த வைத்­தி­ய­சா­லையில் பிணக்­கு­வி­யல்­களும் இரத்­த­மு­மாக காணப்­பட்­டது.
இந்த நிலையில் நாம் படு­கா­ய­ம­டைந்த கண­வரை அங்கு ஷெல் தாக்­கு­தலின் அகோ­ரத்­தினால் கைவி­ட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. எனக்கு எட்டுப் பிள்­ளைகள் பிறந்­தார்கள். நான் ஐவரை ஒரே ஷெல்லில் பறி­கொ­டுத்­துள்ளேன். எனவே எனது கண­வரை என்­னிடம் மீண்டும் ஒப்­ப­டை­யுங்கள் என ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் மன்­றாட்­ட­மாக தனது கோரிக்கை முன்­வைத்தார்.
நேற்றை அமர்வில் வற்­றாப்­ப­ளையைச் சேர்ந்த வேலா­யுதம் இரத்­தி­னம்மா என்ற பெண் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
நான் எனது மக­ளான ஜெய்­பி­ரியா என்­ப­வரை கடந்த 3.5.2009அன்று முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் தவ­ற­விட்­டுள்ளேன். இதேபோல் எனது மக­னையும் ஷெல் தாக்­கு­தலில் பறி­கொ­டுத்­துள்ளேன். எனக்கு எனது பிள்­ளை­களைத் தவிர எது­வுமே பெரி­தாகத் தெரி­ய­வில்லை. என்­னு­டைய பிள்­ளையை என்­னிடம் மீண்டும் ஒப்­ப­டை­யுங்கள் என்றார்.
இதே­வேளை அம்­ப­ல­வன்­பொக்­க­னையைச் சேர்ந்த திரு­மதி யோக­ராஜா சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
கடந்த 8.4.2009 அன்று அம்­ப­ல­வன்­பொக்­கனைப் பகு­தியில் பிரி­யந்தன் என்ற எனது மகனை யுத்­தத்­தினால் தொலைத்­து­விட்டேன். அதன்­பின்னர் நாம் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்தோம். இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த அன்­றி­லி­ருந்து சுமார் நான்கு நாட்­க­ளாக எமக்கு உண­வுகள் கிடைக்­க­வில்லை. குடி­நீரும் கிடைக்­க­வில்லை. இதனால் நாம் மிகவும் பாதிப்­ப­டைந்­தி­ருந்தோம். எனக்கு எந்­த­வொரு உத­வியும் வேண்டாம். எனது பிள்­ளையைக் கண்டு பிடித்துக் கொடுங்கள் என்றார்.
இறுதி யுத்­தத்தில் பாதிப்­ப­டைந்த செல்லன் கந்­த­சாமி என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
எனது மனை­வி­யான விக்­னேஸ்­வரி முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் கடந்த 2009.5.14 அன்று குண்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்தார். அவரைக் காப்­பாற்றும் நோக்­குடன் நாங்கள் 2009.5.17 அன்று அவ­ரையும் தூக்கிக் கொண்டு வட்­டு­வாகல் பகு­தியை நோக்கி நடந்து சென்றோம். அப்­பொ­ழுது அங்கே இரா­ணு­வத்­தினர் எம்மை இடை மறித்­தனர். எனது மனை­வியை தாங்கள் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வ­தா­கவும் எம்மை பிரி­தொரு வாக­னத்தில் ஏறிச் செல்­லு­மாறும் இரா­ணுவம் எனக்குத் தெரி­வித்­தது. ஆனால் நான் எனது மனை­வி­யுடன் வைத்­தி­ய­சா­லைக்குச் செல்­வ­தற்கு முயற்­சித்தேன். அப்­பொ­ழுது இரா­ணு­வத்­தினர் எனக்கு தடியால் அடித்துத் துரத்­தினர்.
அன்­றி­லி­ருந்து எனது மனை­வியைக் காண­வில்லை. இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்ள நான் தற்­பொ­ழுது மிகவும் பாதிப்­ப­டைந்­துள்ளேன். எனவே எனது மனை­வியை மீட்­டுத்­தா­ருங்கள் என்றார்.
இதேபோல் கொக்­குத்­தொ­டு­வாயைச் சேர்ந்த தாயார் ஒருவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
மகிந்தன் என்ற தனது மகன் விடு­தலைப் புலி­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றி­ய­தா­கவும் அவர்­களின் கட்­ட­ளைக்­க­மைய மண­லாறு பகு­தியில் வேவு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தனது மகன் சென்­ற­தா­கவும் அவரை அன்­றி­லி­ருந்து காண­வில்லை எனவும் தெரி­வித்தார்.
தன்­னு­டைய மகன் உயி­ருடன் இருந்தால் அவரை மீட்டுத் தரு­மாறும் ஆணைக்­கு­ழு­விடம் கோரினார்.
இதே­வேளை நேற்றுச் சாட்­சி­ய­ம­ளித்­த­வர்­களில் பலர் தங்­க­ளு­டைய குழந்­தை­களை விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டுப் பகு­தியில் வைத்து தொலைத்து விட்­ட­தாகத் தெரி­வித்­தனர்.
இவர்­களில் சிலர் விடு­தலைப் புலிகள் வீட்­டுக்­கொ­ரு­வரைப் போராட வேண்டும் என அழைத்­த­பொ­ழுது தாம் தமது பிள்­ளை­களை ஒப்­ப­டைத்­தா­கவும் தெரி­வித்­தனர். இவ்­வாறு உற­வுகள் தெரி­வித்த பொழுது ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரிகள் விடு­தலைப் புலிகள் படைக்கு ஆட்­களைச் சேர்த்­த­பொ­ழுது பணம் ஏதா­வது வழங்­கி­னார்­களா என்ற வினா­வையும் எழுப்­பி­யி­ருந்­தனர்.
இவேளை தாயார் ஒருவர் தனது மகனை மீட்டுத் தரு­மாறு சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
கடந்த 2009.03.15 ஆம் திகதி வலை­ஞர்­ம­டத்தில் இருந்த போது கடைக்கு போவ­தாக கூறி வீட்டை விட்டுச் சென்­றவர் பிறகு என்ன நடந்­தது என்று எனக்கு தெரி­யாது ஆனால் வீட்­டுக்கு திரும்பி வர­வில்லை. இறு­திக்­கட்டம் வரை மகன் வருவான் வருவான் என்று பார்த்து கொண்டு இருந்தேன்.
நாங்கள் இருந்த பகுதியில் நாலாபக்கத்தில் இருந்தும் ஷெல் விழுந்து கொண்டே இருந்து.மகனை பார்த்தும் மகன் வரவில்லை. கடைசியாக தான் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் சென்றேன். அப்போது எனக்கும் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.
இன்னும் எனது மகன் குறித்து எதுவும் தெரியாது. நான் தனிய இருப்பதால் அரசாங்க உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. எந்த வாழ்வாதாரத்திட்டம் என்றாலும் தனியாட்களுக்கு இல்லை என்று கூறுகிறார்கள். நான் இப்போது கூலி வேலை செய்து தான் வாழ்க்கை நடாத்துகின்றேன். வேறு யாரும் எனக்கு உதவி இல்லை.
எனவே எனது மகனை மீட்டுத் தாருங்கள் என்றார்.
நன்றி வீரகேசரி 









இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை

07/07/2014  இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவதனை தடை செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிறிஸ்மஸ் தீவு பகுதியை 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் சென்றடைந்திருந்தனர்.
சிட்னி உயர் நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போது உயர் நீதிமன்ற  நீதவான்  சுசான் கிரினானன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களில் 45 பேரின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஏனைய 105 புகலிடக் கோரிக்கையாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
இந்த இடைக்கால தடையுத்தரவு நாளை மாலை 4.00 மணி வரையில் மட்டுமே அமுலில் இருக்கும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நாளைய தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடு என்ற ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர்களை ஆபத்தில் விடக் கூடாது எனவும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
நன்றி வீரகேசரி 









போரின் இறுதி நாட்களில் ஷெல், துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன

07/07/2014   போரின் இறுதி நாட்களில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நாம் வந்த பின்னர் கூட இராணுவத்தினரின்  ஷெல் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருந்தன. 
பல ஆயிரக்கணக்கானவர்களின் சடலங்களைக் கடந்தே இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்றோம். 
சொல்லொணாத்துன்ப துயரங்களை அனுபவித்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று அவர்களிடம் எமது பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு இன்றும் அவர்களை தேடி அலைகின்றோம் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் தமது ஆதங்கங்களை கண்ணீருடன் கொட்டித் தீர்த்ததோடு இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை கண்ணால் கண்ட சாட்சியாக பதிவு செய்துள்ளனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 மே 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்குப் பகுதியில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் விசாரணைகள் அதன் தலைவர் மக்வேல் பராக்கிரம பரணஹம தலை மையில் ஆணையாளர்களான மனோராமநாதன், சுரண்யா வித்யவத்னே ஆகியோரின் முன்னிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நேற்றுக்காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை இடம்பெற்றது.
நேற்று 61 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டடிருந்த போதும் 29 பேரே விசாரணைக்கு சமுகமளித்திருந்தனர்.
புதிதாகப் பதிவு
இதேவேளை 85 பேர் நேற்று புதிதாக பதிவினை மேற்கொண்டிருந்தனர் என்று ஆணையாளர்கள் தெரிவித்தனர். 
அதுமட்டுமன்றி புதிதாக பதிவு செய்தவர்கள் மற்றும் நேற்றைய தினமும் நேற்று முன்தினமும் விசாரணைக்கு சமுகமளிக்காதவர்களுக்கு எப்போது விசாரணை என்பதை கொழும்புக்குச் சென்றுதான் முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றும் நேற்றுமுன்தினமும் இடம்பெற்ற ஆணைக் குழுவினரின் விசாரணைக்கு மொத்தமாக 122 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 56 பேர் மட்டுமே விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்திருந்தனர்.
தொடர் அச்சுறுத்தல்
மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்கவிடாது காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு ரி.ஐ.டியினர் மற்றும் புலனாய்வுத்துறையினர், இனம்தெரியாத நபர்களினால் விடுக்கப்பட்டு வந்த தொடர் அச்சுறுத்தலே இதற்கு காரணமாக அமைந்திருந்தது எனச் சந்தேகம் வெளி யிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்தவர்களில் சிலர் இரா ணுவத்தினருக்கு எதிராக துணிந்து தமது சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இராணுவம் மீது குற்றச்சாட்டு
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சாட்சியப்பதிவின்போது சமுகமளித்த 25 பேரில் சுமார் 18 பேர்வரை இராணுவத்தினர் மீது நேரடியாக குற்றம் சாட்டிருந்தனர்.
ஏனையோர்களில் சிலர் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தனது சாட்சியங்களில் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றையதினம் இரண்டாம் நாள் விசாரணை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது சமுகமளித்த 29 சாட்சிகளில் 15 இற்கும் மேற்பட்ட சாட்சியங்கள் இராணுவத்தினர் மீதும் 8 இற்கும் மேற்பட்ட சாட்சியங்களின் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் ஏனையவையாரால் தமது உறவினர்கள் காணாமற் போனவர்கள் என்றும் தெரியாது என்றும் சாட்சியமளித்திருந்தனர்.
தனது தம்பியையும் அக்காவின் மகளையும்  காணவில்லை என்று சாட்சியமளித்த அன்ரன் வினோத் மேரி கொன்ரா என்பவர் தெரிவிக்கையில்,  கடந்த 2009-ம் ஆண்டு சித்திரை மாதம் 23-ம் திகதி வளைஞர்மடம் பகுதியில் இராணுவத்தினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் நாம் செல்லும்போது இரணைப் பாலைப்பகுதியில் எனது தம்பியான ரவியும் அக்காவின் மகளான சுரே ந்திரனும் தவறப்பட்டுவிட்டனர்.
இரணைப்பாலையில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நாம் செல்லும் வழியில் வீதியோரங்கள் எல்லாம் பலரது சடலங்களைக் காணக்கூடியதாகயிருந்தது. ஆனால் எனது தம்பியினதும் அக்காவின் மகனின் சடலத்தையும் யாரும் காணவில்லை.
இதேவேளை இராணுவக்கட்டுப்பாட்டுக்கள் நாம் வந்தபோது இராணுவத்தினரின் பதிவில் அவர்கள் எமக்கு முன்பே உட்சென்று விட்டனர் என்பதை அறியமுடிந்தது.
அன்றியிருந்து பல முகாம்களிலும் வேறுபல இடங்களிலும் அவர்கள் இருவரையும் தேடிச்தேடி அலுத்து விட்டேன் என்றார் கண்ணீர் விட்டபடி.
தாக்குதலின் மத்தியில் சரணடைந்தனர்
செல்வம் நகுலேஸ்வரி என்பவர் சாட்சியமளிக்கையில், எனது மகன் பிரதீபன் (வயது 19) 2009 .03. 25 ஆம் திகதி அம்பலவன் பொக்கணைப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.
இராணுவத்தினரின் பகுதியிலிருந்து ஷெல் தாக்குதல் மழை போல் பொழிந்து கொண்டிருந்த நிலையில் எனது மகன் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார் என்றார்.
க.ஆறுமுகம் என்ற வயோதிபர் சாட்சியமளிக்கையில், எனது மகனான பிரசாத் 2009.01.19 ஆம் திகதி காணாமற்போயிருந்தார் அவர் எங்கு போனார் என்று தெரியாது.
ஒரே ஷெல்லடி. அடிக்கடி ரவுண்டப் நாங்கள் எங்கபோய் தேடுவது என்று தெரியாமல் நாங்கள் எல்லாரிடமும் சென்று கேட்டும் விட்டோம். 
எல்லா இடமும் தேடியும் விட்டம். இப்ப உங்களிடமும் வந்திருக்கின்றோம் எந்தப்பதிலும் நீங்களும் தரவில்லை என்று சாட்சியமளித்த போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர், நீங்கள் உங்கட பிள்ளையை தேடவில்லையா என்று கேள்வி எழுப்பினர். 
இதற்குப் பதிலளித்த அவர் எங்க போய் நான் தேடுவது எல்லாம்  அவர்கள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தார்களே ஷெல்ல டியில் பலர் இறந்து கொண்டு இருக்கும் போது நான் எங்கு போய் தேடுவது என்று ஆணைக்குழுவினடம் பதில் கேள்வியெழுப்பினர்.
இவ்வாறு பலர் நேற்று இடம் பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது சாட் சியமளித்திருந்தனர். 
அதேவேளை இறுதிப் போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கில் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் தாம் வந்த பிற்பாடும் ஷெல் தாக்குதல்களும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் தொடர்ந்த வண்ணமேயிருந்தன.
இதில் பல ஆயிரக்கணக்காணவர்கள் உயிரிழந்தனர். இவர்களின் சடலங்களை கடந்தே நாம் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றோம் என்று சாட்சியமளித்த போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர், யார் பகுதியிலிருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது என்று சாட்சியங்களிடம் கேள்வி எழுப்பினர். 
இதற்கு பதிலளித்த காணாமற் போனவர்களின் உறவினர்கள் இராணுவத்தினரின் பகுதிக்குள் இருந்தே ஷெல்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சியை  ஏற்படுத்தும் வகையில் இறுதிப் போரில் நடந்த கொடூரங்க ளையும் உயிர் பலியையும் விபரித்தனர்.
பலர் குடும்பங்களுடன் ஷெல் தாக்குதலில் உடல் சிதறிப் பலியானதாகவும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தனர்.
நன்றி வீரகேசரி










'அரசாங்கமோ, இராணுவமோ மனித நேயமுள்ளவர்களாக இருந்தால் எனது கணவரை உயிருடன் தர வேண்டும்"

07/07/2014   எனது கணவர் காணாமல்போகவில்லை நான்தான் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். மனிதநேயமுள்ள அரசாங்கமாகயிருந்தால் மனித நேயமுள்ளவர்களாக இராணு வத்தினர் இருந்தால் பொறுப்புடன் பெற்றுக்கொண்ட எனது கணவரை உயிருடன் திரு ப்பித் தர வேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று சாட்சியமளித்தார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 - மே - 18 ஆம் திகதிவரையான காலப் பகுதியில் வடக்குக் கிழக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் விசாரணைகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.
இந்த விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்திருந்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். 
விசாரணையின் ஆரம்பத்தில் ஆணைக்குழுவினரால் யார் காணாமற்போயுள்ளார் என்று கேள்வியெழுப்பப்பட்டது. 
இதன்போது குறுக்கிட்ட குறித்த பெண் எனது கணவர் காணாமல் போகவில்லை அவரை இராணுவத்தினரிடம் நானே ஒப்படைத்தேன் என்றார்.
தொடர்ந்து சாட்சியமளித்த குறித்த பெண் எனது கணவரான வசந்தனை கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 17-ம் திகதி வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணு வத்தினரிடம் ஒப்படைத்திருந்தேன்.
அப்போது மதியம் 1.30 மணியிருக்கும் எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் போது அவருக்கு 35 வயது என்றார் ஜெயீனா என்ற இளம் குடும்பபெண்.
ஏன் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தீர்கள் என்று ஆணைக்குழுவினர் மறுபடியும்; கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அந்தப் பெண், போராளிகள் தாமாக முன் வந்து சரணடையுமாறு இராணுவத்தினர் பகிரங்கமாக ஒலி பெருக்கிகளில் அறிவித்துக் கொண்டு இருந்தனர். இதன் காரணமாக எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன் என்றார்.
இதன்போது உங்கள் கணவர் போராளியா என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்ப ஆம் என்று பதிலளித்தார் அந்தப் பெண்.
அதேவேளை 5 வருடங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தார். பின்னர் அவர்களிடமிருந்து பிரிந்து வந்து எம்முடம் சேர்ந்து விட்டார் என்றும் இராணுவத்திடம் சரணடையும் போது விடுதலைப்புலிகளுடன் அவருக்கு எந்தவிதத் தொடர்வும் இல்லை என்றார்.
இதன்போது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் விடுதலைப்புலிகள் குடும்பங்களுடன் இணைந்து இராணுவத்தினரிடம் சரணடைந்தனரா? என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.
ஆம், என் கணவர் மட்டும் அல்லாது பலர் அவ்வாறு குடும்பங்களுடன் இறுதிக் கட்டத்தில் இணைந்து விட்டனர் என்றார் அந்தப் பெண்.
மேலும் தனது சாட்சியத்தை தொடர்ந்த அந்தப்பெண் இராணுவத்தினரிடம் கையளித்த (ஒப்படைத்த) எனது கணவரை பொறுப்புள்ள, மனிதாபிமான அரசாங்கம் என்றால், மனிதாபிமானமுள்ள இராணுவத்தினர் என்றால் உயிருடன் நான் கையளித்த எனது கணவரை உயிருடன் என்னிடம் மீண்டும் தர வேண்டும்.
எனது கணவரை இராணுவத்தினரிடம் நான் ஒப்படைத்தபோது எங்களையும் அவருடன் கூட்டிச் செல்லுமாறு நான் கேட்டேன். ஆனால் இராணுவத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
விசாரணையின் பின்னர் விட்டுவிடுவதாகவும் கூறிச் சென்றனர். எனது கணவரை இராணுவத்தினர் தனது பேருந்தில் கொண்டு செல்லும் போது அந்தப் பேருந்துக்குள் பலர் இருப்பதை என் கண்களால் கண்டேன்.
இவ்வாறு அந்தப் பெண் கூறிய போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர் யாரிடம் உங்கள் கணவரை ஒப்படைத்தீர்கள் என்று அடையாளம் காட்டமுடியுமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், இராணுவச் சீருடையில் நின்றவர்களிடம் தான் எனது கணவரைநான் ஒப்படைத்தேன். 
ஆனால் யார் என்று என்னால் அடையாளம் காட்ட முடியாது. அதேவேளை பெயர் மற்றும் அவர்களின் பதவி நிலைகளை அறியக் கூடிய நிலையில் இராணுவத்தினர் இல்லை என்றார்.
இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் இராணுவத்தினர் உள்ளனரா? உங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா? என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்ப, எனக்கு அம்மா, அப்பாதான் பாதுகாப்பு இராணுவத்தினரின் பாது காப்பை நான் எதிர்பார்க்கவில்லை என்று சட்டென்று பதிலளித்தார். 
நன்றி வீரகேசரி











அளுத்கமவில் இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை

09/07/2014   

அளுத்கம முஸ்லிம் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அளுத்கம பகுதியில் இராணுவ முகாமொன்றை அமைக்க உள்ளதாக இராணுவ ஊடக பணிப்பாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அண்மையில் அளுத்கம பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றமையால் பல சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன.  குறிப்பாக வீடுகள் மற்றும் கடைகள் சேதமாக்கப்பட்டன. இப்பகுதிகளில் புனரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த புனரமைப்பு பணிகளுக்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது. எனவே மக்களி;ன் கோரிக்கை இணங்க நாம் அங்கு இராணுவ முகாமொன்றை அமைக்க உள்ளோம். நாட்டின் பாதுகாப்பு  கருதி பல நிரந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. எனினும் இங்கு அமைக்கப்படும் இராணுவ முகாம் தற்காலிகமானதே என்றார்.
நன்றி வீரகேசரி








எழுத்துப் பிழையுடன் வீதியின் பெயர்ப்பலகை

09/07/2014   கிளிநொச்சி  பிரதேச சபையினால் அறிவியல் நகரில் அமைக்கப்பட்டுள்ள  யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் வீதிக்கான பெயர் பலகை எழுத்துப்பிழையுடன் காட்சியளிக்கின்றது.
வீதிப்பெயர்ப் பலகையில் 'பல்கலைக்கழக வீதி" என பொறிக்கப்பட வேண்டியது 'பல்லைக்கழக வீதி" என எழுத்துப் பிழையுடன் பொறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உரியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. 
 நன்றி வீரகேசரி







மலையகத்தில் சீரற்ற காலநிலை

10/07/2014   மலையகத்தில்  காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால்  இன்று காலை 8 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பாரிய மரத்தின் கிளை ஒன்று  முறிந்து விழுந்ததினால் அவ்வீதியினுடான  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மரத்தை வெட்டி அகற்ற தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
எனினும் மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன்  இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர்  டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
 நன்றி வீரகேசரி









எந்தவொரு வழியிலும் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயார்

10/07/2014  யுத்­தத்­துக்கு பின்­ன­ரான நிலை­மையில் இலங்­கைக்கு எந்­த­வொரு வழி­யிலும் முடி­யு­மா­ன­வரை உத­வு­வ­தற்கு அவுஸ்­தி­ரே­லியா தயா­ராக இருப்­ப­தாக இலங்­கைக்கு வருகை தந்­துள்ள ஆஸி.யின் குடி­வ­ரவு மற்றும் எல்லைப் பாது­காப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.
இலங்­கைக்கு வருகை தந்­துள்ள ஆஸி.யின் குடி­வ­ரவு மற்றும் எல்லைப் பாது­காப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் நேற்று கொழும்பு துறை­மு­கத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார்.
அவுஸ்­தி­ரே­லி­யா­வினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு ரோந்து பட­கு­களின் செயற்­பா­டு­க­ளையும் இதன்­போது ஜனா­தி­பதி ஆரம்­பித்து வைத்தார்.
சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­களை தடுப்­ப­தற்கு இலங்­கையும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் இணைந்து கூட்­டாக செயற்­ப­டு­வ­தா­கவும் அந்த கூட்டு செயற்­பாடு தொடர்­வது அவ­சியம் என்றும் ஆஸி. அமைச்சர் இதன்­போது வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
சந்­திப்பில் தொடர்ந்து கருத்து வெளி­யிட்ட ஸ்கொட் மொரிஸன்:
''பொரு­ளா­தார அபி­வி­ருத்தி செயற்­பாட்டில் இலங்கை அடைந்­துள்ள மட்டம் குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த விட­யத்­தி­லான முன்­னேற்றம் தெரி­கின்­றது. மேலும் வடக்கில் தேர்தல் நடத்­தப்­பட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்க நட­வ­டிக்­கை­யாகும்.
அர­சியல் செயற்­பா­டு­களை பொறுத்­த­மட்டில் உள்­நாட்டில் இருந்து வரு­வதே சிறப்­பாக இருக்கும்.
அந்­த­வ­கையில் யுத்­தத்­துக்கு பின்­ன­ரான நிலை­மையில் இலங்­கைக்கு எந்­த­வொரு வழி­யிலும் உத­வு­வ­தற்கு அவுஸ்­தி­ரே­லியா தயா­ராக இருக்­கின்­றது'' என்று குறிப்­பிட்­டுள்ளார்.முதற் தட­வை­யாக
கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து அதி­வேக பாதையில் பய­ணித்த அனு­பவம் குறித்து குறிப்­பிட்ட ஆஸி. அமைச்சர் மொரிஸன் சுற்­று­லாத்­துறை வளர்ச்­சிக்கு முறை­யான உட்­கட்­ட­
மைப்பு வசதி முக்­கி­ய­மா­ன­தாகும் என்றும் குறிப்­பிட்டார்.
இதே­வேளை சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இரண்டு ரோந்து பட­கு­களை வழங்­கி­ய­மைக்கு நன்றி தெரி­வித்­த­துடன் சர்­வ­தேச மேடை­களில் வழங்­கி­வரும் ஆத­ர­வுக்கும் நன்றி தெரி­வித்தார்.
துறை­முகம் மற்றும் நெடுஞ்­சா­லைகள் பிரதி அமைச்சர் ரோஹித்த அபே­கு­ண­வ­ரத்­தன, ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க, பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனுக்கா செனவிரட்ன, கூட்டுப் படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, இராணு
வத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி வீரகேசரி











பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு தொடர்பில் அமெரிக்கா கவலை

10/07/2014  இலங்­கையில் அரச சார்­பற்ற அமைப்­புக்­களும் சிவில் சமூக நிறு­வ­னங்­களும் தமது ஊடக செயற்­பா­டு­க­ளையும் நட­வ­டிக்­கை­க­ளையும் நிறுத்­த­வேண்டும் என இலங்கை பாது­காப்பு அமைச்சு விடுத்­துள்ள உத்­த­ரவு தொடர்பில் அமெ­ரிக்கா கவ­லை­ய­டை­வ­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.
இது தொடர்பில் அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் பேச்­சாளர் ஜேன் சாகி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
இலங்­கையில் அரச சார்­பற்ற அமைப்­புக்­களும் சிவில் சமூக நிறு­வ­னங்­களும் தமது ஊடக செயற்­பா­டு­க­ளையும் நட­வ­டிக்­கை­க­ளையும் நிறுத்­த­வேண்டும் என இலங்கை பாது­காப்பு அமைச்சு விடுத்­துள்ள உத்­த­ரவு குறித்து அமெ­ரிக்கா கவ­லை­ய­டை­கின்­றது.
இந்த உத்­த­ர­வா­னது பேச்சுச் சுதந்­திரம் மற்றும் ஒன்று கூடு­வ­தற்­கான சுதந்­திரம் உள்­ள­டங்­க­லான இலங்­கையின் நீண்­ட­கால ஜன­நா­யக விழு­மி­யங்­களை வலி­தற்­ற­தாக்­கு­வ­தாக அமைந்­துள்­ளது.
இலங்­கையின் ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்­காக அளப்­ப­ரிய பங்­கினை அளிக்கும் சிவில் சமூக நிறு­வ­ன­ங்­களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.
நன்றி வீரகேசரி










நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் ஆஸி. குடிவரவு அமைச்சர் விசனம்

10/07/2014 அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­களால் நடுக்­க­டலில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய நட­வ­டிக்­கையின் பிர­காரம் தாம் தாய்­நாட்­டுக்கு பல­வந்­த­மாக திருப்பி அனுப்­பப்­ப­டு­கையில் அந்த அதி­கா­ரி­களால் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தப்­பட்டு முறை­யற்ற விதத்தில் நடத்­தப்­பட்­ட­தாக இலங்கை குடி­யேற்­ற­வா­சிகள் தெரி­வித்­தி­ருந்த குற்­றச்­சாட்டு தொடர்பில் அவுஸ்­தி­ரே­லிய குடி­வ­ரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் புதன்­கி­ழமை சினத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.
அவுஸ்­தி­ரே­லி­யாவை சென்­ற­டை­வ­தற்­கான பயண முயற்­சியின் பெறு­பே­றாக 41 இலங்­கை­யர்­களைக் கொண்ட குழு தாய்­நாட்­டுக்கு திருப்பி அனுப்­பப்­ப­டு­கையில் அவர்கள் முறை­யற்ற விதத்தில் நடத்­தப்­பட்­ட­தாக தான் நினைக்­க­வில்­லை­யென அவர் கூறினார்.
அந்த குற்­றச்­சாட்­டுக்கள் கோப­மூட்­டு­வ­தற்­கான செயற்­பாடு என்­பதை நான் கண்­ட­றிந்­துள்­ள­துடன் அவற்றை நான் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்றேன் என ஸ்கொட் மொரிஸன் தெரி­வித்தார்.
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் ஆட்­க­டத்­தலை தடுப்­ப­தற்கு இலங்­கைக்கு இரு பட­குகள் அவுஸ்­தி­ரே­லி­யா­வி­னாலும் நன்­கொ­டை­யாக வழங்­கப்­ப­டு­வது தொடர்­பான வைப­வத்தில் பங்­கேற்ற பின்னர் கொழும்பு துறை­மு­கத்தின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
முந்­திய அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­திற்கு கொழும்பில் இருந்து வழங்­கப்­பட்ட உறு­திப்­பா­டுகள் அடிப்­ப­டையில் எமக்கு தாய்­நாடு திரும்பும் குடி­யேற்­ற­வா­சிகள் துப்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள் என்ற கவலை கிடை­யாது என ஸ்கொட் மொரிஸன் மேலும் கூறினார். தமது படகு திரும்­பப்­பட்­டப்பின் தாம் நடுக்­க­டலில் அவுஸ்­தி­ரே­லியா அதி­கா­ரி­களால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் குறைந்­த­ளவு உணவே தமக்கு வழங்­கப்­பட்­ட­தா­கவும் அந்த அதி­கா­ரிகள் தம்மை நாய்­களை விடவும் மோச­மான முறையில் நடத்­தி­ய­தா­கவும் சில குடி­யேற்­ற­வா­சிகள் செவ்­வாய்க்­கி­ழமை உரிமை கோரி­யி­ருந்­தனர்.
அந்த குடி­யேற்­ற­வா­சி­களில் சிலர் தாம் வேலைக்காக நியூஸிலாந்திற்கு செல்வதற்கு முயற்சித்ததாகவும் தாம் சுங்க உத்தியோகத்தர்களால் இன ரீதியாக துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டு பழைய உணவு வழங்கப்பட்டு முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
4 பெண்கள், 9 சிறு­வர்­களை உள்­ள­டக்­கிய மேற்­படி குடி­யேற்­ற­வா­சிகள் குழு கடந்த திங்­கட்­கி­ழமை நாடு திரும்­பி­யி­ருந்­தது. அந்தக் குழு­வினர் சட்­ட­வி­ரோ­த­மாக நாட்டை விட்டு வெளி­யே­றிய குற்­றச்­சாட்டில் செவ்­வாய்­கி­ழமை நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்­டனர்.
இதன்­போது சிறு­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்ட போதும் ஏனை­ய­வர்கள் ஆகக் கூடி­யது இரு­வ­ருட சிறைத்­தண்­ட­னைக்­கு­ரி­ய­தான குடி­வ­ரவு சட்­டத்தை மீறிய ஆரம்­பக்­கட்ட குற்­றச்­சாட்டை எதிர் கொண்­டுள்­ளனர்.
இந்தக் குழு­வினர் ஒரு தசாப்­த­கால பிர­வி­னை­வா­தப்போர் 2009 இல் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து துன்­பத்­துக்­குள்­ளாகி வந்­த­வர்­களை உள்­ள­டக்­கிய சிறு­பான்மை தமி­ழர்­களை விடவும் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்­களே அதி­க­ளவில் உள்­ளனர்.
இந்த குடி­யேற்­ற­வா­சிகள் கைய­ளிக்­கப்­பட்ட விவ­கா­ரத்தால் அவுஸ்­தி­ரே­லி­யர்­களும் கண்­ட­னத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளது.
குடி­யேற்­ற­வா­சி­களின் அகதி அந்­தஸ்து தொடர்­பான பர­சீ­லனை கப்­பலில் வைத்து மேற்­கொள்­ளப்­ப­டு­வது சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் சரி­யான ஒன்­றல்ல என நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.
இந்­நி­லையில் சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்­பான அவுஸ்­தி­ரே­லி­யாவின் கொள்ளை வெற்­றி­க­ர­மா­ன­தாக உள்­ள­தா­கவும் கடந்த சுமார் 7 மாதங்­க­ளாக அவுஸ்­தி­ரே­லி­யாவை ஆட்­க­டத்­தலில் ஈடு­படும் பட­குகள் எதுவும் வந்­த­டை­ய­வில்லை எனவும் ஸ்கொட் மொரிஸன் தெரி­வித்தார்.
இதற்கு முன் அபா­ய­க­ர­மான படகுப் பய­ணங்­களை மேற்­கொண்ட சமயம் சுமார் 1200 புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் கடலில் மூழ்கி இருந்­துள்­ள­தாக தெரி­வித்த அவர் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக பிர­வே­சிக்கும் முயற்­சி­க­ளுக்கு எதி­ராக எச்­ச­ரிக்கை விடுத்தார்.
பட­கு­கொன்­றுக்­கான பய­ணச்­சீட்டை வாங்­கு­வது தண்­ணீரில் சமா­தி­ய­டைய வழி­வ­குக்கும் என ஸ்கொட் மொரிஸன் கூறினார்.
கடலில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஏனைய 153 இலங்­கை­யர்கள் தொடர்­பான விமர்­ச­னத்­துக்கு மறுப்புத் தெரி­வித்த அவர் , அவர்கள் தொடர்­பான விவ­காரம் நீதி­மன்­றங்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார்.
இந்த 153 அக­திகள் விவ­கா­ரத்தால் அவுஸ்­தி­ரே­லிய குடி­வ­ரவு கொள்­கை­க­ளா­னது அந்நாட்டு உயர்நீதிமன்ற நடவடிக்கையால் கடும் அழுத்தத்தை எதிர் கொண்டுள்ளது.
இந்த 153 பேரும் தற்போது அவுஸ்திரேலிய சுங்கப் படகொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவது சட்ட விரோதமானது என சட்டத்தரணிகள் விவாதித்து வருகின்றனர்.
நன்றி வீரகேசரி











ஆஸி.யினால் கைது செய்யப்பட்ட 41 பேரே கடந்த 7ஆம் திகதி விடுவிக்கப்பட்டவர்கள் - அநுரவின் கேள்விக்கு நியோமல் பதில்

09/07/2014  ஜூன் மாதத்தின் இறுதியில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட சட்ட விரோத குடியேற்றவாசிகள் 41 பேரே கடந்த 7ஆம் திகதி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆட்கடத்தல்களை முறியடிப்பதாக இலங்கை அரசும் ஒருமித்து செயற்பட்டு வருகின்றன என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அமர்வின் போது ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23இன் கீழ் இரண்டில் எழுதப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாதக கேள்வியெழுப்பிய அநுர குமார எம்.பி.
சட்ட விரோத குடியேற்றவாசிகளுடன் இலங்கையிலிருந்து சென்ற இரு படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் விபத்தின் இறுதியில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் சட்ட விரோத குடியேற்றவாசிகள் என்ற பெயரில் மேற்படி இரு படகுகளுடன் குடியேற்றவாசிகளும் அவுஸ்திரேலியாவினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனாலும் அவுஸ்திரேலியாவோ இந்த இரு கருத்துகள் குறித்தும் எதுவும் கூறவில்லை. 
இது இவ்வாறிருக்க கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற 41 பேர் கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பை அண்டிய கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரிடம் சரணடைந்தனர். மேற்படி குடியேற்றவாசிகளாகச் சென்றோரின் கைது  மற்றும் விடுதலை ஆகிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவும் இல்லை. மேலும் ஊடகங்களில் வெளி வந்த தகவல்களின்படி அவுஸ்திரேலியாவில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் முன்னர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுவோரின் நிலைமை குறித்து நிச்சயமில்லா தன்மை ஒன்று காணப்படுகின்றது எனக்க கூறினார்.
இதன்போது பதிலளித்த பிரதியமைச்சர் நியோமல் பெரேரா கூறுகையில்,
இலங்கையரை ஏற்றிச் சென்ற படகொன்று கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் இலங்கைக்கு அவுஸ்திரேலியா அறிவித்திருந்தது. படகில் இருந்தவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்றாவது நாடொன்றின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசினால் தகவல் திரட்ட முடியாது.  எனினும், கடந்த 7ஆம் திகதி விடுவிக்கப்பட்டவர்களே சட்டவிரோத குடியேற்றவாசிகளென கைது செய்யப்பட்டவர்களாவர். மேற்படி கைது மற்றும் விடுதலை தொடர்பான தகவல்கள் மட்டுமே இலங்கை அரசிடம் இருக்கின்றன. 
மேலும், குடியேற்றவாசிகள் கடத்தல்களுக்கு எதிரான சட்ட ரீதியான ஒத்துழைப்புகள் தொடர்பில் 2009, நவம்பர், 9ஆம் திகதி இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு  உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆட்டத்தில் மற்றும் நாடு கடந்த குற்றச் செயல்கள் பற்றிய கூட்டு செயற்பாட்டுக்குழு ஒன்றும் கடித பரிமாற்றங்கள் ஊடாக இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல்களை முறியடிப்பது தொடர்பான விடயங்கள் பற்றி இரு தரப்புக்குமிடையில் வருடாந்த சந்திப்புகளும் இடம்பெற்று வருகின்றன. 
 நன்றி வீரகேசரி




No comments: