இலங்கைச் செய்திகள்

உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு

பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது

இலங்கையில் மலிஜ் அப்துல்லா என்ற பெயரில் பல்கலைக்கழகம் உருவாக இடமளிக்க மாட்டோம்: பொதுபலசேனா

விமலும் சம்பிக்கவும் இணைந்து 13 ஆவது திருத்தம் தொடர்பில் சிங்கள மக்களை முட்டால்களாக்க பார்க்கின்றனர் : ஐ.தே.க.

வட மாகாணசபை தேர்தலின் மூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் இலங்கையின் பாசாங்கை ஏற்க முடியாது - இந்தியா தெரிவிப்பு

 புத்தர் சிலை விவகாரம்; மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

 கசினோ அல்லது மாடு வெட்டப்படுவது போன்ற விடயங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமல்ல: எல்லே குணவங்ச தேரர் 
  
இரணைமடு விமான  ஓடுதளம் சனியன்று திறப்பு

 வீட்டுக்கு எதிரான பந்தயம்

கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயத்தை அகற்றும் உத்தரவு அதிர்ச்சியளிக்கின்றது -டி.எம். சுவாமிநாதன் எம்.பி.

கிளிநொச்சி-இரணைமடு விமான ஓடுதளம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
===============================================================
உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு


11/06/2013        13வது அரசியல் அமைப்புத் திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையில் ஒருதலைப்பட்ச மீறல் இடம்பெறுவதாக கூறி, அது குறித்து இந்திய பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் கலந்துரையாட உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு, இந்திய அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்புக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அடுத்த சில தினங்களில் புதுடெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளனர். கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சலமான் குர்ஷித், நிதியமைச்சர் பா. சிதம்பரம் ஆகியோரை சந்தித்தித்து, இலங்கை பிரச்சினனை தொடர்பாக தீர்மானகரமான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

இந்திய இலங்கை உடன்படிக்கையுடன் தொடர்புடைய அதிகாரங்களின் மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி தொடர்பில் ராஜதந்திர மட்டத்தில் பேச்சுக்களை நடத்துவதற்காக இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிப்பது குறித்து இந்திய கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்தன.  நன்றி வீரகேசரி 



     பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது

11/06/2013 மேல்மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ்குணவர்த்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டிய முஸ்லிம் வர்த்தகரின் கொலைச் சம்பவம் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுப்பிரிவின் அலுவலகத்திற்கு நேற்று வரவழைக்கப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன காலை முதல் மாலை 6 மணிவரையில் நீண்டநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மேலும் வர்த்தகரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப-பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே நேற்றைய தினம் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது             நன்றி வீரகேசர

இலங்கையில் மலிஜ் அப்துல்லா என்ற பெயரில் பல்கலைக்கழகம் உருவாக இடமளிக்க மாட்டோம்: பொதுபலசேனா


10/06/2013      இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை.


இந்நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற போதும் தனியாக ஒரு இனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் எந்தவொரு நிறுவனத்தையும் எமது அமைப்பு ஏற்றுக் கொள்ளாது என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனாவின் கிழக்கின் முதலாவது மாவட்ட மாநாடு நேற்று அம்பாறை நகரில் அம்பாறை பிரிவேனாவின் தலைவர் கிரிந்திவெல சோமரத்ன தேரர் தலைமையில் நடைபெற்றது. இம் மநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய் காத்தான்குடியிலுள்ள ஹிஸ்புல்லா அரங்கில் முஸ்லீம்களுக்கான பல்கலைக்கழகம் உருவாகுவதற்கான சகல ஒப்பந்த நடவடிக்கைகளும் சவூதி அரேபியாவின் உதவியுடன் கைச்சாத்திட உள்ளமை நன்கு அறிந்த விடயமே இதற்காக நாப்பது ஏக்கர் காணிகள் ஒதுக்கப்பட்டு அப்புதிய பல்கலைக்கழகத்திற்கான பெயர் சவூதி அரேபியாவின் மன்னனின் மகனுடைய பெயர் அப்துல் மலிஜ் எனவும் வைக்கப்பட வேண்டும் என்ற நிலையிலேயே இப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட இருக்கின்றது. இதிலே விஹாமி என்ற இஸ்லாமிய சட்ட அம்சங்களைக் கொண்ட பாடத்திட்டம் உள்வாங்கப்படவுள்ளது இவற்றை தடைசெய்வதற்கு அரசு முன்வர வேண்டும்.

எமது பெளத்த கலாசாரம் கொண்ட நாட்டினை ஐரோப்பிய இனத்தவர்கள் சுமார் 500 வருடங்கள் தமது ஆட்சிக்குட்படுத்திய போதும் கண்டி இராச்சிய காலத்திலே கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்ட றொபட் நொக்ஸ் என்பவர் சிறையிலிருந்து கொண்டே இலங்கையின் வரலாறு என்ற நூலை எழுதினார். அதிலே கண்டியிலிருந்து திருகோணமலை வரையிலான பகுதியிலே 96 சிங்கள கிராமங்கள் இருந்ததாக எழுதி உள்ளார். அவைகள் இன்று எங்கே அக்கிராமங்களுக்கு என்ன நடந்தது.

கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில் 600 பொலிஸார் கொல்லப்பட்டனர். அறந்தலாவையில் பிக்குகள் அறுக்கப்பட்டனர். ஆனால் அந்த நிலை இன்று இல்லை பொதுபலசேனா அமைப்பு கிழக்கிற்கு வரவுள்ளது என்ற செய்தி கேட்டு அக்கறைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்தனர் இன்று நடைபெறும் மாநாட்டைக் கூட அம்பாறையில் நடத்தக் கூடாது என்று ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் எழுதி நேரில் சென்று கொடுத்துள்ளார்கள்.

ஆனால் இந்த அமைப்பு ஒரு போது இனங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படுத்தும் அமைப்பாக செயற்படமாட்டாது நேற்று முன்தினம் கூட காலி பலபிட்டிய பிதேச கடல் கொந்தளிப்பினால் காணாமல் போன மீனவர்களை தேடி மீட்கும் பணியை செய்தவர்கள் முஸ்லிம்களே அண்மையில் அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று மதஸ்தலங்கள் டோஷர் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டன. இவ்றைப் பல இடங்களில் கூறியும் எமக்குப் பலன் கிடைக்கவில்லை ஆட்சியாளர்கள் கண் திறந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார். நிகழ்வில் இன்றும் பல பிரமுகர்கள் உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.          
நன்றி வீரகேசரி



விமலும் சம்பிக்கவும் இணைந்து 13 ஆவது திருத்தம் தொடர்பில் சிங்கள மக்களை முட்டால்களாக்க பார்க்கின்றனர் : ஐ.தே.க.



11/06/2013      13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் விமல் வீரவன்சவும் சம்பிக்க ரணவக்கவும் இணைந்து பொரும்பான்மை சிங்கள மக்களை முட்டால்களாக்க பார்க்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கு பல காரணங்களை பலர் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் சிங்கள மக்கள் மத்தியில் 13 ஆவது திருத்தத்திற்கு எதிரான கருத்துக்களை திணிக்கின்றனர்.

மக்கள் மத்தியல் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அதைப்பற்றி அவர்கள் வாய்திறப்பதைக் காணவில்லை. கசினோ நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோ, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்றவற்றிற்கு எதிராகவோ குரல் கொடுக்கவில்லை.


இந்நிலையில் அவர்களின் செயற்பாட்டிற்கு அரசாங்கம் தலைசாய்த்து 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு யோசனையை முன்வைத்துள்ளது.


இதேவேளை 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்குமானால் ஐக்கிய தேசியக் கட்சி அது குறித்து தனது அபிப்பிராயத்தை வெளியிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி


வட மாகாணசபை தேர்தலின் மூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் இலங்கையின் பாசாங்கை ஏற்க முடியாது - இந்தியா தெரிவிப்பு


 
13/06/2013 இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தை சீராக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் வருத்தம் அடைந்துள்ளதாக ‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது கொழும்பு அரசாங்கம் மேற்கொண்டு வரும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தங்கள், வினைத்திறன் அற்றதாக அமையும் என்று குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இவ்வாறு 13ஆவது திருத்தச் சட்டத்தில் சீர்த்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்கவிருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு அரசாங்கம் ஒரு பக்கம் வடக்கில் தேர்தலை நடத்துவதுபோல பாசாங்கு செய்து, சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்துகின்ற அதேநேரம், மாகாண சபைகளின் அதிகாரங்களையும் கைப்பற்றிக்கொள்ள இரகசிய நடவடிக்கை மேற்கொள்கிறது.
இதனை எந்த வகையிலும் இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்றும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன்குர்ஸித், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் தொடர்புகொண்டு, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இந்து இலங்கை உடன்படிக்கையின் கீழ் அமைந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை எந்த மாற்றங்களுக்கும் உட்படுத்தப்பட கூடாது என்று சல்மான் குர்சித் வலியுறுத்தியதாகவும், த இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 


  புத்தர் சிலை விவகாரம்; மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

14/06/2013 மட்டக்களப்பு பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை நிறுவும் விவகாரத்தை மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இது விடயமாக செவ்வாய்க்கிழமை எழுத்து மூலமான முறைப்பாடொன்றை மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தன்னிடம் கையளித்துள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இ.மனோகரன் தெரிவித்தார்.
இதனிடையே இந்த விவகாரம் ஏற்கனவே மட்டக்களப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டு வரப்பட்டு குறித்த இடத்தில் புத்தர் சிலை நிறுவுவது பொதுத்தொல்லையையும் சமூக அமைதிக்குப் பங்கத்தையும் ஏற்படுத்தும் என பொலிஸார் தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டதன் பேரில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு தடை விதித்து அது தொடர்பான வேலைகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி






























































































கசினோ அல்லது மாடு வெட்டப்படுவது போன்ற விடயங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமல்ல: எல்லே குணவங்ச தேரர்


13/06/2013     கசினோ அல்லது மாடு வெட்டப்படுவது போன்ற விடயங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமல்ல, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து கொள்வது மிகவும் முக்கியமானது எனவும்  நாட்டு மக்கள் பிறக்க உள்ள பிள்ளைகள் மீது பாசம் இருந்தால், முதலில் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினை கசினோ, மாடு அறுப்பது, மதுபானம் அல்ல எனவும் வெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தை எப்படி பாதுகாத்து கொள்வது என்ற சவாலே முக்கிய பிரச்சினையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கசினோ, பிரச்சினை, மாடு அறுக்கும் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வரும் பிரச்சினைகள், எனினும் முதலில் அரசியல் பிரச்சினையை தீர்ப்போம். இதன் பின்னர் இரண்டு மற்றும் மூன்றாவது பிரச்சினைக்கு செல்வோம்.
மாநாயக்க தேரர் கசினோவுக்கு முதல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்ட போராட்டத்தில் இறங்க வேண்டும். இது இலங்கை மீது சுமத்தப்பட்ட பாரிய பாவ கர்மமாகும்.
கசினோவை நானும் எதிர்க்கின்றேன். கசினோ பிரச்சினையை எந்த சந்தர்ப்பத்திலும் தீர்த்து கொள்ள முடியும். ஆனால் தாய் நாடு கையை விட்டு சென்று விட்டால்தான் பிரச்சினை. அடுத்த சில மாதங்களில் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை நீக்காமல் வட மாகாண சபை தேர்தலை நடத்துவது ஆபத்தானது எனவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி



 
இரணைமடு விமான  ஓடுதளம் சனியன்று திறப்பு

Iranaimadu14/06/2013  கிளிநொச்சி, இரணைமடுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளம் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஓடுதளம் சனிக்கிழமை 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இந்த ஓடுதளம் திறந்துவைக்கப்படவுள்ளது.

இலங்கை விமான படை வரலாற்றில் முதன்முறையாக விமான படையினரின் சக்தியை பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த ஓடுதளம் நிர்மாணிக்க்பட்டுள்ளது என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.

ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கின்றது. இதற்கான திட்டம், பொறியியல், நிரமாணம், உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பன விமான படையினருடையது என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

அதேபோல இலங்கை விமானப்படையிடம் இருக்கின்ற மிக பெரிய விமானமான சீ-130 விமானத்தையும் இந்த ஓடுதளத்தில் ஏற்றியிறக்க கூடியவகையில் நிரமாணிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, இரணைமடு ஓடு தளத்திற்கு இரண்டு வழிகளில் வருகைதரலாம் என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.

மாங்குளம், அம்பாகாமம் ஓலுமடு ஊடாக வருகைதரலாம். அப்படியின்றேல், கிளிநொச்சி,வடக்கச்சி, ராமநாதபுரம் மற்றும் கல்மடுவூடாக வருகைதரலாம்.

இலங்கை விமானப்படை வரலாற்றில் வரலாறு படைத்துள்ள இந்த இரணை மடு ஓடுதளத்துடன் மன்னார், வவுனியா,பலாலி உட்பட வடக்கில் நான்கு ஓடுதளங்கள் இருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிளிநொச்சி, இரணைமடு ஓடுதளம் மீட்கப்பட்டதையடுத்து விமான தலைமையகத்தின் அனுமதியுடன் 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 21 ஆம் திகதி 20 விமான படையினரின் திட்டத்துடன் மறுநாள் 22 ஆம் திகதி இரணைமடு விமானப்படை முகாம் அமைக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் தடவையாக விமானப்படையின் கொடி இரணைமடு விமாப்படை முகாமில் ஏற்றப்பட்டது. அந்த வைபவத்தில் அதிகாரிகள் மூவர் உட்பட 12 பேர் கலந்துக்கொண்டனர்.

2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 03 ஆம் திகதி இரணைமடு விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகின அதன் நிர்மானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஓடுதளம் திறந்து வைக்கப்படும் என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.

நன்றி தேனீ

வீட்டுக்கு எதிரான பந்தயம்

-தயான் ஜயதிலகா

13வது திருத்தத்தை பாதுகாக்கத் தவறியதில் ரி.என்.ஏக்கு உள்ள பங்கும் குறைவானதல்ல, அதற்கு கட்டுப்படாமல் இருந்ததுடன், அதற்கு அப்பால் செல்லக்கூடிய வகையில் சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த சிக்கலான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்தது, மற்றும் பெரும்பாலும் அதைத்தாண்டிய சொல்லாட்சியின் பக்கம் நகர்ந்தது (சாத்தியமான அரசியல் புரட்சி பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை வழங்கியது) போன்றவை அது இழைத்துள்ள தவறுகளாகும்.

13plusசிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் என்ற வகையில், அல்லது இன்னமும் துல்லியமாகச் சொல்வதானால் சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதிகள் ஆகியோர்கள் டெல்பி கோவில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களான “அளவுக்கதிகமாக எதுவுமில்லை” என்கிற வாசகங்களுக்கான நல்ல காரணங்கள் உள்ளன என்பதை இறுதியில் கற்றுக்கொள்வார்கள், அதேவேளை புத்தர் தனது நடுப்பாதை தத்துவங்களிலும் மற்றும் தங்க மனிதரான அறிஞர் அரிஸ்டாட்டிலும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.

பொதுநலவாய உச்சிமாநாட்டுக்கு ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் உள்ளதுக்கு முன்பே அரசாங்கம் சில நசுக்கல் முயற்சிகளில் இறங்கியிருந்தது. முதலாவது 13வது திருத்தத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது, மற்றது ஊடகங்களை அடக்கி வைப்பது என்பதாகும்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெறும்போது தண்டனை விலக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த நகர்வுகள் பொதுநலவாயத்தில் ஒரு பலகீனத்தை எதிரொலிக்கலாம், இது ஆசியான் நாடுகளால் தங்கள் ஆட்சி நடைமுறைகளில் மாற்றங்களை செய்ய இயலவில்லை என்கிற கடின முரண்பாட்டை ஏற்படுத்துவதுடன் மியான்மாருக்கு தலைமைப்பதவியை ஒப்படைப்பதற்கான விலையை செலுத்தக்கூடியதாகவும் இருக்கிறது என்றாகிவிடும்.

அதன் கருத்து பொதுநலவாயம் கொழும்பு அல்லது அம்பாந்தோட்டையை புறக்கணிக்க வேண்டும் என்பதில்லை. பொதுநலவாயத்தின் தரங்கள் மற்றும் விதிமுறைகள் என்பன  இணக்கப்பாடு மற்றும் நம்பகத்தன்மை கொண்டனவாகவும் ஸ்ரீலங்கா உச்சிமாநாட்டின் தலைமைப் பணிப் பொறுப்பினை ஏற்று நிர்வகிப்பதற்கு முன்னதாகவே சரிபார்க்கப்படவும் வேண்டும். இதில் விசேடமாக ஊடகங்களின் சுதந்திரம், மதச் சிறுபான்மையினரை உபசரித்தல், யுத்தத்தின் பின்னான அரசியல் நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் சட்ட ஆட்சி என்பனவற்றை பின்பற்றுதல் என்பன அடங்கும்.

எதிர்கட்சிகள், மாறுபட்ட கருத்துள்ள புத்திஜீவிகள் 13ம் திருத்தத்தின்மீது மேற்கொள்ளப்படும் நகர்வுகளின் பரிமாணத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். மாகாணங்கள் இணைய முடியாதபடி ஒழுங்கு படுத்துதல், எனது கருத்தின்படி குறைகாணமுடியாத ஒன்றாகவே உள்ளது, ஏனெனில் உச்ச நீதிமன்றம் மாகாணங்களை பிரித்ததோடு, அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைக்கு ஏற்றபடி மட்டுமல்லாது  சட்டத்திற்கு உட்பட்ட ஓரளவு அரசியல் அந்தஸ்தினை அதற்கு வழங்கியுள்ளது.

எப்படியாயினும் வடக்கு மற்றும் கிழக்கினை இணைப்பது 1986ன் நடுப்பகுதியில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் மாநாட்டின் (ஐதேக மற்றும் ஜனநாயக இடதுசாரி) முற்போக்கான கருத்தொருமிப்பின் ஒரு பகுதியாக இருக்கவில்லை, மற்றும் 13வது திருத்தத்தின் பிரதான ஆதரவாளர்களாக இருந்தவர்களாலும், முக்கியமாக ஜே.ஆர். ஜெயவர்தனா மற்றும் விஜய குமாரதுங்க என்பவர்களால் அது விமர்சனத்துக்கு உள்ளாகியது.

இதில் ஆபத்தானது என்னவென்றால் புதிய சட்ட விதிப்படி, மாகாணசபைகளுக்கு பரவலாக்கப் பட்டுள்ள அல்லது பகிரப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் நடவடிக்கைகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சட்டவாக்கத்துக்கும் எல்லா சபைகளும் இசைவு தெரிவிக்கவேண்டும் என்பதற்கு மாறாக பெரும்பான்மையான சபைகள் ஆதரவு தெரிவித்தால் போதுமானது என்றுள்ளதுதான்.

இது பழைய பனிப்போர் காலத்தில் வந்த சொற்றொடர் போல, சூழ்ச்சியான தந்திரங்கள் மூலம் அதிகாரப்பரவலாக்கத்தை விலக்கி விடுவதாகும், இது குறிப்பிடுவது திட்டமிட்ட முறையில் ஜனநாயக அதிகாரத்தை கூறு போடுவதை - அதாவது ஒரே அடியில் வெட்டுவதற்கு மாறாக ஆயிரம் வெட்டுக்ளை ஏற்படுத்தி அதைச் சாகடிப்பதை.

மிகவும் முக்கியமாக அது தனிப்பட்ட முறையில் தமிழர்களை மட்டும் பாதிக்காது, ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க, அல்லது ஜேவிபி ஆகிய எந்தவொரு ஜனநாயக எதிர்க்கட்சியும், எதிர்காலத்தில்; எப்போதாவது ஒரு மாகாணசபை நிருவாகத்துக்கு தெரிவு செய்யப்பட்டால் அதற்கு இந்த சட்டமூலம் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும், அதேவேளை தற்சமயம் பெரும்பாலான மாகாணசபைகள் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் நிருவாகத்திலேயே உள்ளன.

உண்மையில் ஊடகங்களுக்கும் மற்றும் மாகாணசபைகளுக்கும் எதிரான இந்த நகர்வுகள் ஐ.தே.க மற்றும் ரி.என்.ஏ விட்ட தவறுகள் காரணமாகவே மேற்கொள்ளப்படுவதற்கு சாத்தியமாகியுள்ளன. மிகவும் மோசமான காலங்களிலும் மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க, மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தனா போன்றோரின் கடினமான நிருவாகங்களுக்கும் எதிராக அந்த நாளில் இருந்த பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் வெறும் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை களத்தில் கொண்டிருந்த சமயத்தில்கூட, ஜே.ஆர். பிரேமதாஸ, மற்றும் அனுர பண்டாரநாயக்கா போன்றவர்களின் தலைமையின் கீழ் சுறுசுறுப்பான பல்வேறுவகையான எதிர்ப்புகளை மேற்கொண்டிருந்தன.

ஆட்சியின் தேரோட்டத்தை தடுப்பதில் அவர்கள் தோல்வியுற்றிருந்தாலும்கூட அப்போதிருந்த மோசமான அரசாங்கங்களுக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் மௌனமாக இருந்ததில்லை, மற்றும் உயர் அரசியல் மற்றும் சமூக விலையை  கொடுக்க தவறியதுமில்லை. ஐ.தே.க பாராளுமன்ற அங்கத்தவர்கள் தங்களது தற்போதைய தலைவரை தக்க வைத்துக் கொண்டு , அவரது தலைமையின்கீழ் இருப்பதையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்,

தற்போதைய ஆட்சியினர் ஊடகங்களையும் மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தையும் கொலை செய்ய மேற்கொள்ளும்  முயற்சியில் அரசியல் ரீதியாகவும் மற்றும் தர்க்கரீதியாகவும் இவர்களுக்கும் பங்குண்டு. ஐதேக தலைவருடைய திறமையும் உணர்ச்சியும் மிக்க தந்தையார், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக அச்சுறுத்தலை எதிர்கொண்டபோது,  உலகளாவிய வலைப்பின்னல்களுக்கு உட்படாமல் ஊடகங்கள் பலம் குன்றியிருந்த காலத்தில்கூட, மின்னல் வேகத்தில் திறமையாக பிரச்சாரம் மேற்கொண்டு சூழ்ச்சிகளை முறியடித்தார்.

13வது திருத்தத்தை பாதுகாக்கத் தவறியதில் ரி.என்.ஏக்கு உள்ள பங்கும் குறைவானதல்ல, அதற்கு கட்டுப்படாமல் இருந்ததுடன், அதற்கு அப்பால் செல்லக்கூடிய வகையில் சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த சிக்கலான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்தது, மற்றும் பெரும்பாலும் அதைத்தாண்டிய சொல்லாட்சியின் பக்கம் நகர்ந்தது (சாத்தியமான அரசியல் புரட்சி பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை வழங்கியது) போன்றவை அது இழைத்துள்ள தவறுகளாகும்.

தமிழ் தேசியவாதம் முன்னால் உள்ள வேளையில் சாதாரணமாக அதிலிருந்து வெளியேற ரி.என்.ஏ உட்பட யாராலும் முடியாது. அது தொடர்ந்து எல்.ரீ.ரீ.ஈ மீது பந்தயம் வைக்கும்போது அது வீட்டுக்கு எதிராகவும் பந்தயம் வைத்து தோற்றுப்போனது. அதற்காக அது செலுத்தவேண்டிய விலைதான் தற்பொழுது நடைபெறும் அதிகாரப் பரவலாக்கத்தின் மீதான குறைப்பு.

இதே உண்மைதான் வடக்கில் உள்ள இராணுவ பிரசன்னம் பற்றிய கேள்விக்கான பதிலிலும் உள்ளது. அதேவேளை எங்கள் இராணுவத்தின் பங்களிப்பு மற்றும் இராணுவ தடத்தின் குறைப்பு  என்பனவற்றிற்கு ஒரு மீள்மதிப்பாய்வு தேவை என்பதையும் நான் நிச்சயமாக வலியுறுத்துகிறேன்,

எனது வரலாறு மற்றும் உளவியல் யதார்த்த உணர்வுகள் முன்னைய காலங்களையும், அதற்கு முற்திய காலங்களிலும் ஒரு இராணுவம் நீண்ட காலமாக கடுமையாகப் போரிட்டு ஒரு பிரதேசத்துக்கு விடுதலை அளிப்பதற்காக அல்லது அதைக் கைப்பற்றுவதற்காக அளவுக்கதிகமாக இரத்தம் சிந்தியதும் எனது நினைவுக்கு வருகிறது,

அது தனது இரத்தத்தையும் எலும்புகளையும் அந்த மண்ணுக்கு உரமாக்கியுள்ளபோது, குறைந்த பட்சம் அசலாக அங்கு வாழந்த மக்களில் பெரும்பகுதியினர் எதிரிகளுக்கு ஆதரவு வழங்கியோ அல்லது அவர்களை தீவிரமாகவோ எதிர்க்காதபோது, தாங்கள் கைப்பற்றிய பிரதேசத்தின்மீது சட்டப+ர்வமான ஒரு தார்மீக உரிமை தங்களுக்கு இருப்பதாக அது கருதுகிறது.

ஒருவர் எழுச்சியை ஒரு விளையாட்டாக விளையாடக்கூடாது என மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ்  எச்சரித்துள்ளனர். உண்மையில் புலிகளும் அவர்களது பலமான ஆதரவு வலையமைப்பும் ஒரு விளையாட்டை நடத்தவில்லை, ஆனால் அதில் தெளிவாக இருப்பது, தோல்வியின் விலை மிக அதிகம், மற்றும் நீங்கள் ஆரம்பித்த புள்ளிக்கு கீழே உங்கள் பாதையை நீங்கள் சுருட்டிக் கொள்ளலாம். ஆகவே 75 விகிதமான மக்கள் தொகையை இழுக்கக்கூடிய பலமுள்ள ஒரு எதிரியுடன் போராடி வெற்றி பெறலாம் என ஒருபோதும் நம்பிக்கை கொள்ளலாகாது.

அப்படிச செய்யும் ஒருவர்மீது  உங்கள் பந்தயம் முழுவதையும் பணயம் வைக்கவும்கூடாது, எப்படியோ தமிழ் தேசியம் அதனைச் செய்துவிட்டது. எப்போதும் அப்படியான ஒன்றின் கீழிருந்து வெளியேற வேண்டும் மற்றும் அப்படியான வெறிபிடித்த சாகசக்காரர்களுக்கும் மற்றும் உங்களுக்கும் இடையே ஒரு தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும், இதைத்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன ஒரு முன்னணிக் கண்டனவடிவில் இப்போதும் செய்யவேண்டிய தேவையாக உள்ளது.

ரி.என்.ஏ ஆனது எல்.எல்.ஆர்.சி அறிக்கையின் சகல விடயங்களைப்பற்றியும் ஆராயும், 100க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட ஆவணத்தின் 70க்கும் மேற்பட்ட பக்கங்களில் அதைப்பற்றி விமர்சிக்கும் ஒரு எழுத்தாளராக இருக்குமாயின் நிச்சயமாக  அதன் சொந்த அரசியல் கட்சியின் அநேக தலைவர்களை புலிகள் கொலை செய்ததைப்பற்றி எழுதுவதற்கு மேலும் சில பக்கங்களை அதனால் ஒதுக்கியிருக்க முடியும்.

இதன்படி ரி.என்.ஏ யினால் தனக்கு முன்னால் மேஜைமேல் வைக்கப்பட்ட தீர்வுகளில் தான் உறுதிப்படுத்தவும் மற்றும் ஆதரவு தெரிவிக்கவும் தவறிய திட்டங்களுக்கு திரும்பவும் செல்லமுடியும் என எதிர்பார்க்க முடியாது. புலிகளின் பயங்கரவாதத்தின்போது அவர்களை கண்டிக்கத் தவறிய அவர்களின் அலட்சியத்தையும் அதுவும் இப்போதுகூட புலிகளின் பயங்கரவாதத்தை கண்டிக்கத் தவறும் அவர்களின் போக்கையும் நாட்டின் ஏனைய பகுதியினர் ஒதுக்கித் தள்ளி விடுவார்கள் என ரி.என்.ஏயினால் எதிர்பார்க்கவும் முடியாது,

அல்லாமலும் போர் இப்போது முடிந்துவிட்டது என்பதன் அடிப்படையில் போருக்கு முன்பிருந்த நிலைக்கு வடக்கு திரும்பும் என அவர்களால் எதிர்பார்க்க முடியுமா, ஏனெனில் ஒரு யுத்தமானது ஒருவரின் இழப்பைத் தவிர,அநேகமாக வேறு எதனாலும் செய்யமுடியாத அளவிற்கு விடயங்களை முற்றாக மாற்றி அமைக்கும். ஒருபக்கம் தோல்வி அடைந்ததும,; அதாவது 1987ல்(ஒப்பந்தம்), 1990 (பிரேமதாஸாவுடனான பேச்சுக்கள்), 1995(சி.பி.கே) அல்லது 2005ல் யுத்தம் செய்வது நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழ் தேசியவாதிகள் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் அல்லது அந்தப் பக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தமிழ் தேசியவாதம் மற்றும் சர்வதேச சமூகம் என்பன கௌதமாலா மற்றும் ஆர்ஜன்ரீனா என்பனவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும், அங்கு றியொஸ் மொண்ட் மற்றும் ஜோர்ஜ் விடேலா என்பவர்கள் ஆயுள்பரியந்தம் சிறை வைக்கப்பட்டார்கள். நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உண்மையில் அணுகத்தக்கவையே, ஆனால் உள்நாட்டு நடவடிக்கைகள் மற்றும் இயக்கவியல் என்பனவற்றின் விளைவுகளை பொறுத்து மாத்திரமே அது நடைபெறலாம், அதற்கு பல தசாப்தங்கள் எடுக்கும் ,மற்றும்ஆயுதப்படைகள் ஒரு நிறுவனமாக அமைவதற்கு சமூகத்தின் ஒப்புதலை சம்பாதிக்க வேண்டும்.

ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சரியான பகுப்பாய்வு அவசியப்படுகிறது. ஆட்சியின் கண்களுக்கு உள்ளுர் மற்றும் உலகளாவிய அளவில் இடம்பெறும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் என்பன இசைவான சதிவலையின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படும். ஆட்சி பற்றிய விமர்சனங்களுக்கு, இந்த முறை ராஜபக்ஸக்களால் அந்த நிறுவனங்கள் வேறுபாடுகள்; மற்றும் இணக்கமான அரசியல் சதி முயற்சிகள் என்பனவற்றுக்கு சற்றும் குறைவற்றதாகவே நோக்கப்படும்.

ஒரு சதி முயற்சிக் கொள்கை மற்றொன்றுக்கு தகுதியானதாகிறது, மற்றும் ஒரு வகையான அரசியல் அறிவுப்பிறழ்ச்சி மற்றொன்றின் பிரதிவிம்பமாகிறது. இரு முகாம்களிலும்  முரண்பாடுகளின் அங்கீகாரத்துக்கு குறைவு நிலவுகிறது. யதார்த்தத்தை பகுப்பாய்வு செய்யும் இயங்கியல் பகுப்பாய்வு முற்றாகக் காணப்படவில்லை. அதேவேளை காள் கௌற்ஸ்க்கி  ஒருங்கிணைந்த  தீவிர ஏகாதிபத்தியம் பற்றி பேசுகிறார், லெனின் பற்றிப் பேசும்போது. உள்ளக ஏகாதிபத்திய முரண்பாடுகளை ஆழமாக புரிந்து கொள்ளக்கூடியதாகவும் மற்றும் அதன்படி மாற்றங்களை வகுக்ககூடியதாகவும் உள்ளது. இதேபோல நிக்கொஸ் பவுலன்ட்டாஸ் வெளித்தோற்றத்தில் ஒற்றை மற்றும்  சர்வாதிகார அமைப்புகளை தடை செய்யக்கூடியதான, ஆழத்திலுள்ள முரண்பாடுகள் மற்றும் கோஷ்டி மோதல்கள், கொள்கை வேறுபாடுகள் என்பனவற்றை இதனூடாகக் காண்கிறார்.

அரசாங்கங்கள் மற்றும் ஆட்சிகள் தாங்கள் முன்னணி நிலைகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் கோட்டை கொத்தளங்களைவிட  போட்டியிடத்தக்க நிலப்பகுதியாக இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். மற்றெந்த  புத்திஜீவிகளைக் காட்டிலும் அவரது பணி  போர்த்துக்கல், ஸ்பெயின், மற்றும் கிறீசிலிருந்து பிலிப்பைன்ஸ் வரை, சோவியத் ஒன்றியத்திலிருந்து இந்தோனசியவரையும் மற்றும் அநேக லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இருந்த அசைந்து கொடுக்காத சர்வாதிகார அமைப்புகளை திறந்துவிட அல்லது ஒதுக்கித் தள்ளக்கூடிய பாரிய ஜனநாயக அலைகளை கணிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் அறிவார்ந்த உதவி புரிந்தது.

செய்யப்படும் அல்லது செய்ய முயற்சிக்கும் வழிகளினால் ஸ்ரீலங்காவின் ஆட்சி சுத்திகரிக்கப்படப் போவதில்லை. அமெரிக்காவை தளமாக கொண்ட ஒரு பரப்புரைக் குழவினால் அமைதிக்கான தமிழர்கள் என்கிற தலைப்பில் ஸ்ரீலங்கா பற்றி மிகவும் கடினமாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்று  சிஎன்என் னின் பரீத் சக்கிரியாவின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் றைஸ் வரப்போகிறார், அதேவேளை தாராண்மைவாத தலையீடுகளுக்காக சிலுவைப்போர் நடத்தும் சமந்தா பவர் ஸ்ரீலங்கா மீது போதிய அக்கறை எடுத்து ஒரு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ள இவர்தான் ஐநா பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம் பெறப்போகிறார். அடுத்த வருடம் இந்தியாவில் பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. தமிழ் தேசியவாதிகள் செய்ததைபோல, சிங்கள தேசியவாதிகளும் வீட்டுக்கு எதிராக பந்தயம் வைக்கிறார்கள், அது வெள்ளை மாளிகையா அல்லது ராஷ்டிரபதிபவனா என்பது தெரியவில்லை.

வெளியக யதார்த்தங்கள் ஒடுங்கும் வரைக்கும் உள்ளக முரண்பாடுகள், முறிவுப் புள்ளிகள் உருகும் வரைக்கும் அளவுக்கு மீறி உறுதியாக்கப்பட்டவையாகவே தோன்றும் எனினும்  விளையாட்டின் முடிவில் பிரச்சினையானது, ஒரு தேர்தல் நிறுவனத்திலேயே தங்கியுள்ளது . அப்போது கடைசி வரி “ அது ஒரு முட்டாள்தனமான தேர்தல்” என்றுதான் இருக்கும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் 
நன்றி தேனீ







கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயத்தை அகற்றும் உத்தரவு அதிர்ச்சியளிக்கின்றது -டி.எம். சுவாமிநாதன் எம்.பி.



14/06/2013    கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டமை பேரதிர்ச்சி தரும் விடயமாகும் என்று கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் முகாமைத்துவ தர்ம கர்த்தாவும் எம்.பி.யுமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஓர் ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் அத்திபாரம் இடப்படும். இதற்கு பிள்ளையார், வைரவர் வழிபாடு செய்யப்படுகிறது. ஆலயம் அமைக்கப்பட்டதன் பின்னர் சிவாகம முறைக்கமைய விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்று பூசைகள் ஆரம்பமாகின்றன.

பூசைகள் நடைபெறும் ஆலயங்களில் திருத்தங்கள் அல்லது வேறு காரணங்களுக்காக ஆலயத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாயின் ஆகம முறைக்கு அமைய விக்கிரங்கள் பாலஸ்தாபனம் செய்யப்பட்ட பால ஆலயத்தில் (சிறு ஆலயம்) வைக்கப்பட்டு பூசைகள் செய்வதே முறையானது. நாம் விரும்பும் வேளையில் உடனே விக்கிரகத்தை எடுப்பது தேவ குற்றம் தேவ சாபம் ஏற்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக பூசை நடைபெற்று வரும் தொழிலாளர்களுக்கே அமைக்கப்பட்ட தேனி பூமாரி அம்மன் ஆலயத்தை உடனே அப்புறப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளமையைக் கேள்வியுற்று அதிர்ச்சியும் கவலையும் கொண்டேன்.

நகர அபிவிருத்தி அதிகார சபையில் உள்ளவர்கள் எம்மைப் போல் மனிதர்கள் அவர்களுக்கும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அந்த வழிபாட்டுத் தலங்களை உடனே எடு எனக் கூற முடியுமா? கடவுள் இல்லையா? இந்துக்கோவில் என்பதால் உடனே எடு எனக் கூறுவது இந்து தர்மத்திற்கு முரணானது. ஏனைய மதங்களுக்கும் அப்படியே நகர அபிவிருத்தி புணர்நிர்மானம் எம் எல்லோருக்கும் தேவையே நாம் எல்லோருமே கொழும்பு நகர வாசிகளே. ஆனால் வணக்கத் தலங்கள் உடனே அப்புறப்படுத்து எனக் கூற முடியாது. 1930 ஆம் ஆண்டு முதல் பூஜிக்கப்பட்ட புனித பூமி காலா காலத்திற்கு அமைய மாற்றங்கள் ஏற்படலாம். அதற்கும் விதி பிரமாணங்கள் உண்டு. எனவே ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அப்புறப்படுத்தப்படுவதாயின் சிவாகம முறைக்கமைய கீழ்வரும் முறைகளை அனுசரிக்க வேண்டும்.

1.புதிய ஆலயம் அமைக்க உகந்த உரிய இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.

2.அதிலே ஆலய அமைப்பு முறைகளுக்கு அமைய ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.

3.தற்பொழுது உள்ள ஆலயம் பாலஸ்தாபனஞ் செய்யப்பட்டு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்.

4.புதிய ஆலயம் அமைக்கப்பட்ட பின்னர் பால விக்கிரங்கள் ஆகம முறைகளுக்கு அமைய பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹாகும்பாபிஷேகம் செய்து வழிபடுவதே சிவாகம முறையாகும்.

இஃது எல்லா ஆலயங்களுக்கும் பொருத்தமானது நினைத்த உடனே இந்த பொம்மை (விக்கிரம்) எடுக்கப்படல் வேண்டும் என எந்த மனிதனாலும் கூற முடியாது. நாம் தேவ ஆசியை வேண்டி வழிபடுபவர்கள் எமது பரம்பரை வளர வேண்டுமென வழிபாடுகளை மேற்கொண்டு வருபவர்கள் எமக்குத் தேவசாபம் வேண்டவே வேண்டாம் எல்லோரும் வாழ வேண்டும் நாட்டு மக்கள் அனைவரும் அருள் பெற்ற நல்ல வாழ்வை பெற வேண்டும் என்பதையே நாம் கூறுகின்றோம்.

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முகாமைத் தர்மகர்த்தாவும் நாட்டுச் சுதந்திரத்திற்குத் தம்மையே அர்ப்பணித்த சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் உறவினரும் ஆகிய நான் கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயம் உரிய முறையில் அமைக்கப்படல் வேண்டும் என அறிவுரை கூறுகின்றேன்.

 

 

 

 

கிளிநொச்சி-இரணைமடு விமான ஓடுதளம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு


16/06/2013 கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு விமான ஒடுதளத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இரணைமடுப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இவ் விமான ஓடுதளம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
மாங்குளம், அம்பகாமம் ஓலுமடு ஊடாக அல்லது கிளிநொச்சி, வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய இடங்களின் ஊடாக இரண்டு வழிகளிலும் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் இவ்வோடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் உடனிருந்தனர்.

 நன்றி வீரகேசரி