நினைவுகளின் சிதறல்கள் - கவிதை - செ.பாஸ்கரன்


.



மூடாத விழிகள்
உயிரற்ர ஓவியம்
பழுப்பிலையின் மஞ்சள்
தூரத்தே தெரியும் வானம்
இவையில் என் மனம் லயிக்கும்

அதிகாலை பறவைகளின் ஆரவாரம்
போர்வையின் விலகல்
மெல்லிய குளிரின் உரசல்
ஒலிக்கும் மனைவியின் பாதக்கொலுசு
சுகமான நெஞ்சின் பதிவுகள்

கொட்டும் மழையின் சந்தம்
ஊதல் காற்றின் உளறல்
சிறகுலர்த்த சிலிர்க்கும் பறவை
ஒற்றை மரத்தின் கருக்குருவி
உன்னோடு ஒட்டி நடந்த மாலைப்பொழுது
நெஞ்சைக் கிளறும் நினைவுகள்

நிலா ஒழுகும் இரவு
முற்றத்துக் கயிற்றுக் கட்டில்
அப்பாவின் சந்திரமதி புராணக் கதை
சுற்றியிருந்த உடன் பிறப்புகள்
மறக்கமுடியாது மனதில் பதிந்தவை

வாழ்வின் பயணத்தில் மாறிமாறி
வந்து போகும் நினைவுகளோடு
என் வாழ்க்கையும் பயணிக்கிறது
நினைவுகளின் சிதறல்களே
வாழ்வின் நம்பிக்கைகளாக
நாளாந்தம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

  

No comments: