மடியில் வந்திருந்தாள் வேட்கை தீராதவள் ….


.


மடியில் வந்திருந்தாள் வேட்கை தீராதவள் ….

மடியில் வந்தமர்ந்தாள்
வேட்கை தீராதவள்.
அங்கலைந்து இங்கலைந்து
சிமிட்டிச் சிறு விழிகளால்
நோட்டமிட்டு
நாசியால் மோப்பமிட்டு
ஓ குரூப்பான்
எனக்கேற்றவன் இவனேயென
ஈற்றில் முடிவெடுத்து
தாகமடக்க
தொடைமீது வந்தமர்ந்தாள்.
தவித்தேன் நான்

மோகத்தில் தவித்தவளை
ஆலிங்கனம் செய்யவும்
முத்தத்தில் மூழ்கிடவும்
கூடிக் களித்திடவும்
முடியாது தவித்தேன்.


டெங்கு வந்திடுமோ
மலேரியாவால மரிப்பனோ
யானைக் காலால்
வாழ்வு கனத்திடுமோ
மஞ்சள் காய்ச்சல் பற்றிடுமோ
ஜப்பானிய மூளைக்
காய்ச்சல் கொன்றிடுமோ?
சிந்தனைகள் தொடர்ந்தெழ
கிலேசம் மீதுறவே
அணைக்க வெழுந்த கையால்
அடித்துக் கொன்றிட்டேன்
மோகித்து வந்த நுளம்பாளை.
எம்.கே.முருகானந்தன்

Nantri:muruganandanclics.wordpress

No comments: