லண்டன் ஒலிம்பிக்: கோலாகலமாக தொடங்கியது





உலகில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. br>
பிரிட்டன் தலைநகர் லண்டனில் போட்டி நடைபெறும் இடமான ஒலிம்பிக் பார்க் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. லண்டன் நகரில் திரும்பும் திசையெல்லாம் கொடிகளும், பெரிய அளவிலான பலூன்களும் பறக்கவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

ஒலிம்பிக் போட்டியைக் காண 60,000 இற்கும் மேலானவர்கள் திரண்டிருந்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா, பிரிட்டிஷ் அதிபர், பிரதமர், ஐரோப்பாவைச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர், லண்டன் நகர மேயர் போரிஸ் ஜான்ஸன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். br>
உலகம் முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர். மொத்தம் 17 நாள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 204 நாடுகளைச் சேர்ந்த 10,000 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.


21 வயதான ரிபெக்கா சிம்ஸன் என்ற இளம் மங்கையின் நடனம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே பல்வேறு நாட்டின் தலைவர்கள், வீரர், வீராங்கனைகள்,ரசிகர்கள் ஆகியோர் லண்டன் நகரை வந்தடைந்தனர். இவர்களின் வருகையால் லண்டன் நகரே ஸ்தம்பித்தது.

முன்னதாக கிரேக்கத்தில் இருந்து தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் லண்டனை சுற்றி வந்த பின்னர், தேம்ஸ் நதி வழியாக போட்டி நடைபெறும் ஒலிம்பிக் பார்க் மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைத்த உடனேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வாணவேடிக்கை நடைபெற்றது. தரையிலிருந்து விண்ணில் சென்று வெடித்துச் சிதறிய பட்டாசுகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக சீனாவின் லியாங் நகரில் இருந்து ரூ.1.75 கோடி செலவில் பட்டாசுகள் வரவழைக்கப்பட்டிருந்தன.

ஒலிம்பிக் போட்டியைக் காண ரசிகர்கள், தங்கள் நண்பர்கள் உறவினர்கள் சகிதம் லண்டன் மாநகர வீதிகளில் உற்சாக வலம் வந்தனர்.

போட்டிக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், லண்டனில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொலிஸார் மைதானத்திலும், மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குவிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு ரசிகரும் கடும் சோதனைக்குப் பின்னரே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.br>
br> மைதானத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏவுகணைகளை தயார் நிலையில் நிறுத்தி இராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வான்வழி, நீர்வழியாக தாக்குதல் நடத்தினால் அதைச் சமாளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

தேம்ஸ் நதியிலும் பாதுகாப்புக்காக கடற்படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல்லாயிரக்கணக்கான பொலிஸாரும், இராணுவ வீரர்களும் நகர் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.



நன்றி வீரகேசரி இணையம்  28/7/2012

No comments: