இலங்கைச் செய்திகள்

 பாஸ் நடைமுறையால் மன்னார் மீனவர்களுக்கு பாதிப்பு

 துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு நீதிபதி பொலிஸாரைப் பணித்தார் : ஜம்இயத்துல் உலமா சபை

 மணியோசை வரும் முன்னே... 

 “திட்டங்கள்’ சிறப்பானவை தான் ஆனால் “தீர்வு’ தான் முடிவிலி 

நீதித்துறையை “ஏவல்’ கருவியாக்க ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது

 என்றுமே மறக்க முடியாத ஜூலை 83


பாஸ் நடைமுறையால் மன்னார் மீனவர்களுக்கு பாதிப்பு 

28/7/2012


  மன்னார் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருப்பதினால் தாம் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் அனைத்து மீன் பிடி துறைமுகங்களுக்கு அருகாமையிலும் கடற்படையினருடைய சோதனைச்சாவடிகள் காணப்படுகின்றன.






மீனவர்கள் குறித்த சோதனைச்சாவடிக்கு சென்று கடற்படையினரிடம் தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய ஆவணங்களை சமர்ப்பித்தால் கடலுக்குள் செல்லுவதற்கான பாஸை வழங்குகின்றனர். அதனைக்கொண்டே கடலுக்குள் செல்ல வேண்டும்.

கடற்படையினர் சில நேரங்களில் கடலில் மீனவர்களிடம் சோதனைகளை மேற்கொள்ளும் போது பாஸ் இல்லாது விட்டால் கடுமையாகத்தாக்குவதாகவும் அச்சுறுத்துவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாஸ் நடைமுறையினால் உரிய நேரத்திற்கு தொழிலுக்குச் சென்று கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடற்தொழிலுக்கான புதிய பாஸைப் பெற்றுக்கொள்ளுவதற்கு மீனவர்கள் ஒவ்வெருவரும் நீண்ட நாட்கள் பாதுகாப்புத்தரப்பினரைத் தேடி அலைந்து திரிவதாகத் தெரிவிக்கின்றனர்.

விண்ணப்பப்படிவம் ஒன்றில் சுமார் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் கையொப்பத்தினை பெற்ற பின்னரே புதிய பாஸ் வழங்கப்படுகின்றது. ஆனால் கடற்படையினரிடம் இருந்து தற்போது பல இடங்களில் தொழிலுக்குச்செல்லும் மீனவர்களுக்கு புதிய பாஸ் இன்னும் வரவில்லை என்றும் இதனால் பல மாதக்கணக்காக தொழிலுக்குச்செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தமது குடும்பம் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

-மன்னார் சௌத்பார் பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள் எவ்வித தங்கு தடையும் இன்றி கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்குக் கடற்படையினர் பாதுகாப்புகளை வழங்கி வருகின்றனர்.

ஆனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்,முஸ்ஸிம் மீனவர்கள் தொடர்ந்தும் பல பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி வீரகேசரி 


துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு நீதிபதி பொலிஸாரைப் பணித்தார் : ஜம்இயத்துல் உலமா சபை _
27/7/2012 


  மன்னாரில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மன்னர் நீதிபதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட உப்புக்குளம் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸாரைப் பணித்தார் என்று அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் மன்னார் மாவட்டக் கிளை குற்றம் சுமத்தியுள்ளது .

அது வெளியிட்டுள்ள அதன் ஊடக அறிக்கை ஒன்றில் நீதிமன்றிலிருந்து தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வெளியே வந்த மன்னார் நீதிபதி அவர்கள் எமது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு பொலிஸாரைப் பணித்ததன் பின்னர் மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் சில அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர் என்று தெரிவித்துள்ளது .

இது குறித்து குறித்த உலாமா சபை கடந்த 24-07-2012 திகதியிடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த எமது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்டு 23 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது மீள்குடியேற வருகின்றனர். இந்த நிலையில் எமது மக்கள் பல்தேவைப்பாடுகள் உடையவர்களாக இருந்துவருகின்றனர். குறிப்பாக கடற்றொழிலைப் பிரதான தொழிலாகக் கொண்டவர்களாக மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையிலும்,விடத்தல்தீவிலிருந்து வந்த தமிழ் கத்தோலிக்க மீனவர்களுக்கு எமது முஸ்லிம்களின் மீனவ துறையினை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தொழில் புரிவதற்கு சந்தர்ப்பம் வழங்கினோம்.

எமது முஸ்லிம்கள் மீண்டும் மீள்குடியேறும் போது இவர்கள் இவ்விடத்திலிருந்து செல்ல வேண்டும் என்று அன்று புலிகளின் மன்னார் பொறுப்பாளராக இருந்த அமுதன் என்பவரால் உடன்படிக்கையும் செய்யப்பட்டது.

இருந்த போதும் இன்று வரை இந்த விடத்தில் தீவு கத்தோலிக்க மீனவர்கள் எமது முஸ்லிம் மீனவ சமூகத்திற்கு சொந்தமான உப்புக்குளம் துறையினைக் கொடுக்காமல் இருக்கின்றனர். அரச அதிகாரிகள் உட்பட தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து இவர்களிடம் கூறியும் அது நடைபெறவில்லை;.

எமது உரிமைகள் பறிக்கப்படும் போது இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் நியாயம் கோரி பல தரப்பினரிடம் வேண்டுகோள்விடுத்த போதும் ,அது காத்திரமான பதிலை கொடுக்கவில்லை. அதனால் வேதனையடைந்த எமது மக்கள் வீதியில் இறங்கி மிகவும் அமைதியாக எவ்வித வன்முறைகளுமின்றி தமது கோரிக்கையினை முன்வைத்தனர் .இதன்போது நீதிமன்றிலிருந்து தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வெளியே வந்த மன்னார் நீதிபதி அவர்கள், எமது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு பொலிஸாரைப் பணித்ததன் பின்னர்,மக்கள் அல்லோலகல்லோலப்பட்ட நிலையில் சில அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர். இது எமது மக்களால் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டதொன்றல்ல. அப்போது நீதிமன்ற கட்டிடத்துக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிந்தது. இந்த சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தவறு செய்தவர்களுக்கு சட்டம் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாம் மாற்றுக் கருத்துடன் இல்லை.

அதே போன்று மன்னாரில் நடந்த சம்பவத்தை திரிபுபடுத்தி இந்த சம்பவத்தின் பின்னணியில் எமது வன்னி மாவட்டத்தில் வாழும், தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களுக்கு எவ்வித பேதமுமின்றி பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை சம்பந்தப்படுத்தியுள்ளதை நாம் முற்றாக மறுக்கின்றோம்.நடந்ததை சரியாக அறிந்து கொள்ளாமல் பிழையான தகவலின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படுவது எமது வடபுல முஸ்லிம்களுக்கு செய்யும் இழப்பாகும்.

சட்டத்தை மக்களுக்காக செயற்படுத்தும் சபையின் சட்டத்தரணிகள் அமைப்பு எவ்வித இனத்துக்கும், மதத்துக்கும் சொந்தமானதல்ல என்பதால், நீங்கள் நியாயத்தினையும், உண்மையின் தகவல்களின் அடிப்படையில் செயற்படுவதினாலும், ஒரு தரப்பின் கருத்துக்களுக்கு முன்னுரியைமளித்து எமது முஸ்லிம்களுக்கும், எமது மக்களினது விமோசனத்திற்கும் அயராது பாடுபடும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக எடுக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதுடன்,உண்மையினைக் கண்டறிய உங்களது உயர் சபையின் பிரதி நிதிகள் மன்னாருக்கு விஜயம் செய்து எமது மக்களிடமும் கலந்துரையாட வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இதே வேளை கொடிய யுத்தம் அகன்று பயங்கரவாதம் அழிக்கப்பட்டு இன்று இனங்களுக்கிடையில் கசப்புணர்வுகள் நீங்கிச் செல்லும் வேளையில் மீண்டும் ஒரு குழப்பத்தைத் தோற்றுவிக்க திரை மறைவில் எடுக்கப்படும் முயற்சிகளைத் தோற்கடித்து ஒரே தேசத்தின் மக்களாக நாம் அனைவரும் வாழ தங்களது சட்டத்தரணிகளின் சங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இதன் மூலம் வேண்டிக் கொள்கின்றேன்.
 
நன்றி வீரகேசரி 


 மணியோசை வரும் முன்னே...
கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்பு மனுத்தாக்கல் பூர்த்தியடைவதற்கு முன்பாகவே தேர்தல் சட்ட மீறல்கள் இடம்பெற ஆரம்பித்துவிட்டதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் குரல்கொடுக்க ஆரம்பித்து விட்டதை அவதானிக்க முடிகிறது. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே கொண்டிருக்கும் இந்த மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தை மாற்றிவிடப் போவதில்லையானாலும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்துவதற்கான களமாக அமையுமென்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தேர்தல்கள் நீதியானதாகவும் சுதந்திரமான முறையிலும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதிலேயே இதன் சாதகமான பெறுபேறு தங்கியுள்ளது.  மாகாண சபைகள் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில் அரசாங்க நியமனங்கள் எதனையும் வழங்கக்கூடாது என்ற தேர்தல் சட்ட நியதிகளையும் மீறி மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. தேர்தல் ஆணையாளரின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அவை சாடுகின்றன.
ஆளும் கட்சியானது அரச வளங்களை இத்தேர்தல்களில் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் எதிரணிக் கட்சிகளும் வலியுறுத்தலை விடுக்க ஆரம்பித்திருக்கும் அதேசமயம், இதற்கான சாத்தியப்பாட்டுக்கு கடந்த காலத்தேர்தல்களில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களை முன்னுதாரணமாகக் காட்டுகின்றன. கலைக்கப்பட்ட மாகாண சபைகளில் இடம்பெற்ற புதிய நியமனங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளைக் எடுக்க முடியாமல் தமது கரங்கள் கட்டுண்டு இருப்பது வார ஏடொன்றுக்கு தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்த கருத்திலிருந்து வெளிப்படுகிறது.
அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட்டிருந்த சுயாதீனமாகச் செயற்படும் அதிகாரம் 18 ஆவது திருத்தத்தின் மூலம் பறிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பையும் விசனத்தையும் வெளியிட்டுவருக்கின்றன. தேர்தல்கள் மக்களின் மனவிருப்பத்தை, அபிலாசைகளை சுயாதீனமாக வெளிப்படுத்துவதற்கான களமாக அமைவதை உறுதிப்படுத்த வேண்டியது ஜனநாயக அரசாங்கமொன்றிற்குரிய பண்பாகும். ஆதலால்  அரசியல் தலையீடுகளின்றி தேர்தல் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் உட்பட அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பாரிய கடமையும் பொறுப்புமாகும்.
தேர்தல் நடவடிக்கைகள் சுதந்திரமாக இடம்பெறுவதும் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். இதில் வாக்காளர்களினதும் வேட்பாளர்களினதும் கட்சிகளினதும் பேச்சு சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளடங்கியிருக்கிறது. அத்துடன் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஒன்று கூடும் சுதந்திரமும் இதன் உள்ளடக்கத்தில் ஒன்றாகும்.  அரசியல் கட்சிகள் சுயாதீனமான முறையில் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாக்காளர்கள் மத்தியில் சென்று சுயாதீனமாக வெளியிடுவதற்கும் தேர்தல் தொடர்பான செய்திகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கும் உரிமைகள் உள்ளன. அத்துடன் வன் செயல்கள், அச்சுறுத்தல்களின்றி சுயாதீனமாக வாக்களிப்பதற்கான  உரிமையும்  அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இவை யாவற்றுக்குமான ஒட்டுமொத்தப் பொறுப்பு அரசாங்கத்தையே சார்ந்ததாகும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களூடாக நீதி, சுதந்திரமான தேர்தல்களை நடத்தி வாக்காளர்கள் தமது அபிலாசைகளை வெளிப்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே யாவரினதும் எதிர்பார்ப்பாகும். ஆனால், வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பாகவே தேர்தல் சட்டவிதிகள் மீறப்படுவதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளும் வெளியாகும் செய்திகளும் ஆரோக்கியமானவையாகத் தென்படவில்லையென்பதை கவனத்திற்கு எடுத்து தேர்தல் சட்டவிதிகள் உரிய முறையில் கடைப்பிடிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நன்றி தினக்குரல்
 “திட்டங்கள்’ சிறப்பானவை தான் ஆனால் “தீர்வு’ தான் முடிவிலி
ஆட்சியில் சமபாகத்தை  தர முடியாவிடின் 5 கிராமங்களையாவது வழங்குங்கள் அதுவும் இயலாது என்றால் 5 வீடுகளையாவது தாருங்கள் என்று பாண்டவர்கள், கிருஷ்ண பரமாத்மாவை தூது அனுப்பி துரியோதனாதியர்களான கௌரவர்களுடன் கேட்ட போது , ஊசி நிலமும் தர மாட்டோம் என்று  கௌரவர்கள் உறுதியாகக் கூறி கிருஷ்ணனை திருப்பி அனுப்பி விட்டதாக இந்துக்களின் இதிகாசமான மகா பாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தங்களைத் தாமே நிர்வகிக்கக் கூடிய மாகாண சுயாட்சி உரிமையையாவது வழங்குங்கள் என்று அந்த மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்து வரும் கோரிக்கையும்   5 ஊர்களையாவது தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் உரிமையை வழங்க வேண்டுமென்ற தொனியிலேயே இருக்கின்றது. அதாவது காணி,பொலிஸ் அதிகாரம் உட்பட முக்கியமான விவகாரங்களை கொழும்பு மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்து இன நெருக்கடிக்கு தீர்வொன்றைக் காணுமாறு வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இந்தக்  கோரிக்கைகளுக்கு பிரிவினை வாதச் சாயத்தை சிறப்பான முறையில் மெருகூட்டி நிராகரிக்கும் போக்கே ஆளும் தரப்பிடம் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் ஒரு போதும் வழங்கப்பட போவதில்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
அதே சமயம்  வட மாகாண சபைக்கான தேர்தலை 2013  செப்டெம்பரிலேயே நடத்தப் போவதாகவும் அதற்கான வேலைத் திட்டங்களை படிப்படியாக மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  ஆயுள் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே மூன்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டு எதிர்வரும் செப்டெம்பரில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வட மாகாண சபைக்கு தேர்தலை நடத்துவதற்குப் புதிய வாக்காளர் இடாப்பில் தங்கியிருக்க வேண்டியிருப்பதாலேயே வடக்குத் தேர்தலுக்கு காலதாமதம் ஏற்படுகின்றது என்பது அரசாங்கத் தலைவரின் நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  இந்த காரணத்தை உடனடியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் , பாராளுமன்றத் தேர்தல் ,  உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தியிருக்கும் நிலையில் வட மாகாண சபைக்கான தேர்தலை மட்டும் நடத்துவதற்கு வாக்காளர் இடாப்பை காரணம் காட்டுவதை நகைப்புக்கிடமான விடயமென்று தமிழ்க் கூட்டமைப்பின் சிரேஷ்ட எம்.பி.க்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கும்  அதே சமயம் அங்கு தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண நிர்வாகத்தை கைப்பற்றி விடும் என்றும் அதனால் ஏற்கனவே வடக்கில் கையகப் படுத்தப்பட்டிருக்கும் தனியார் நிலங்கள் தொடர்பாக சங்கடமான நிலைமை ஏற்படும் என்பதால் வட மாகாண சபைக்கு தேர்தலை அரசு நடத்தாமல் இழுத்தடிக்கிறது என்பதும் சுரேஷின்  வாதமாக காணப்படுகிறது.
அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் என்பன ஏற்கனவே சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு 24 வருடங்கள்  முடிவடைந்த நிலையில் அவை ஒரு போதுமே அமுல்படுத்தப்படவில்லை என்பது அதாவது அவற்றை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கங்கள் மறுத்து வருகின்றன என்பது புதியதொரு விடயமல்ல.
யாவற்றுக்கும் மேலாக அரசியல்  தீர்வு விடயத்தில் இதய சுத்தியுடன் இருப்பதாக எப்போதுமே ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்கள் கூறிவருகின்ற போதிலும் அது தொடர்பாக ஆக்க பூர்வமான முயற்சிகளை முன்னெடுப்பதில்லை. அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்வதற்கு தயார் என்று அறிவித்திருந்த ஜனாதிபதி இப்போது அந்த “அப்பால் செல்வது’ என்பது பாராளுமன்றத்தில் இரண்டாவது சபையான செனட் சபையே என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த செனட் சபையானது  இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட முதலாவது அரசியல் அமைப்பில் உள்ளீர்க்கப்பட்டிருந்து பின்னர்  1972 ஆம் ஆண்டு  குடியரசு அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட போது இல்லாமல்  செய்யப்பட்ட தொன்றேயாகும்.
இந்தத் தீர்வு விடயங்கள்  யாவற்றுக்குமே சர்வதேச நிவாரணியாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவே இருப்பதாகவும் அதனூடாகவே எந்தவொரு தீர்வும் வெளிவர வேண்டும் என்றும் ஜனாதிபதியும் அரசாங்கமும் கூறிவருகின்ற போதிலும் பல தசாப்தங்களாக எத்தனையோ உடன்படிக்கைகள், ஆணைக் குழுக்கள், பாராளுமன்றக் குழுக்கள் என்பனவற்றை பார்த்து விட்டோம் எவையுமே ஆக்கபூர்வமான பெறுபேறுகளை ஏற்படுத்தியிருக்காத நிலையில் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் பெறுபேறு தொடர்பாகவும் நம்பிக்கையில்லை என்று தமிழ்க் கூட்டமைப்பு கூறிவருகிறது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களின் மைத்துனரான கிருஷ்ணரின் பாத்திரத்தை இந்தியா வகிக்கிறதா?  அல்லது தமிழகத்திலுள்ள ம.தி.மு.க. , விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க.,நாம்  தமிழர் அமைப்பு போன்றவற்றின் பார்வையிலுள்ள துரியோதனாதியர்களின் சகுனி மாமன் பாத்திரத்தை கொண்டுள்ளதா என்பது ஒரு புறமிருக்க இலங்கைத் தமிழ் மக்களின் கண்களுக்கு குறிப்பாக தமிழ்க் கூட்டமைப்பின் பார்வையில் இந்தியா இப்போதும் கிருஷ்ண பரமாத்மாவாகவே நோக்கப்படுவது வெளிப்படையானதாகும்.
2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் 6 ஆவது தடவையாக கொழும்புக்கு வருகை தந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் , ஜனாதிபதியுடனும் அவரின் இரு சகோதரர்களுடனும் நடத்திய பேச்சு வார்த்தையின் போது தரப்பட்ட உறுதி மொழிகளை விரைவில் நிறை÷வ்ற வேண்டும் என்றும் இல்லாவிடில் எம் மீது குறை சொல்லாதீர்கள் என்று கருத்துப்பட  கடும் தொனியில் கூறியிருந்ததாக தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருக்கிறார். தீர்வொன்றைக் காண்பதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்கவில்லையென அரசாங்கம் கூறி வருகின்றபோதும் இராஜதந்திர நகர்வுகளின் உள் விடயங்கள் யாவற்றையும் வெளியில் கசிய விட முடியாது என்றும் சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார். நியாய பூர்வமான தீர்வை வழங்குமாறு இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தால்  அழுத்தம் கொடுக்க முடியுமே தவிர தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சார்ந்ததாகும்.  ஆனால் அதற்கான சாதகமான சமிக்ஞைகள் எதுவும் இதுவரை அரசாங்கத்திடமிருந்து வெளி வரவில்லை என்பதே யதார்த்தம்.
நன்றி தினக்குரல்
 நீதித்துறையை “ஏவல்’ கருவியாக்க ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது
மன்னார் நீதிமன்றத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து சட்டத்தரணிகள் நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணியைப் பகிஷ்கரித்ததால் நாடளாவிய ரீதியில் நீதிச் சேவைத்துறை முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது. இந்த நீதிமன்றத் தாக்குதல் சம்பவத்தில் அரசின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் பின்னணியிலிருந்ததாக பிரதான எதிர்க்கட்சி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தது. நீதித்துறையை  அவமதிக்கும் விதத்திலான இச்சம்பவம் உண்மையிலேயே பாரதூரமானதாகும். அத்துடன் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு இது பங்கம் விளைவிக்கும் செயற்பாடாகும். மன்னார் நீதிமன்றத் தாக்குதலைக் கண்டித்து உடனடியாகவே நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மூன்று முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.  இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகை அறிக்கையை விடுப்பதெனவும் ஒருநாள் பணியாற்றுவதில்லையென்றும் அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்நகர்வை மேற்கொள்வதெனவும் அச்சங்கம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் சட்டவாக்க சபையும் (பாராளுமன்றம்) நிறைவேற்றதிகாரமும் நீதித்துறையும் பரஸ்பரம் மரியாதை செலுத்தி செயற்பட வேண்டியது அவசியம். அத்துடன் இவை மூன்றும் ஒவ்வொன்றினதும் நியாயாதிக்கத்துக்குள் சாதாரணமான முறையில் ஊடுருவல் செய்யக்கூடாது. இல்லாவிடில் “முறைமை’யே முழுமையாக ஸ்தம்பிதமடைந்துவிடும். அரசியலமைப்பு ரீதியாக வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை நீதிமன்றங்கள் கொண்டிருக்கின்றன.  இந்த அதிகாரங்கள் ஜனநாயக ரீதியான நடவடிக்கைகள் மூலம் செயற்படுவதற்கு சிறப்புவிடுபாட்டு உரிமை என்ற கவசத்தை பிரயோகிப்பது இறுதியில் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையே பாதிப்படைய வைப்பதுடன், உரிமை மீறலாகவும் அமையும் பரிமாணத்தைக் கொண்டதாகும். அரசியலமைப்பின் பிரகாரம் நீதிச் சேவைக்கும் நிறைவேற்றதிகாரத்துக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையில் அதிகாரங்கள் தெளிவான முறையில் கோடிட்டுக்காட்டப்பட்டிருக்கின்றன. இந்த எல்லைக் கோடுகளை அத்துமீறித் தாண்டும் போதே இங்கு பிரச்சினைகள் தோன்றுகின்றன.
வழக்கொன்றில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினால் பாரிய விளைவுகள் ஏற்படுமென அமைச்சர் ஒருவர் தன்னை அச்சுறுத்தியதாக மன்னார் நீதிவான் பிரதம நீதியரசரிடம் முறையிட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் ஐ.தே.க.வின் சிரேஷ்ட உபதலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவவுமான ஜோன் அமரதுங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் நீதிபதி தனது கடமையை நிறைவேற்றியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மன்னார் நீதிமன்றத்துக்கு தீ வைத்துள்ளனர். நீதித்துறையை அவமதிக்கும் இந்த அட்டூழியம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன என்ற கேள்வியையும் அமரதுங்க எம்.பி. எழுப்பியிருக்கிறார். நீதித்துறை மட்டுமன்றி சிவில் சேவை, பொலிஸ், தேர்தல் ஆணையாளர் அலுவலகம், சட்ட மா அதிபர் திணைக்களம் போன்ற அரசாங்க சேவைத்துறைகள் சுயாதீனமானவையாகச் செயற்படுவதற்கான அரசியலமைப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு எதிரணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக் குழு போன்றவற்றின் சுயாதீனத்தை அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் கபளீகரம் செய்துவிட்டது என்பது எதிரணிக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளின் விசனமும் கவலையுமாக காணப்படுகிறது. அரசாங்கத்திலிருந்தும் வேறுபட்டதாக தனியான சுயாதீன அமைப்பாக நீதித்துறை அமைந்திருக்க வேண்டும் என்பதையே அரசியலமைப்பு தொடர்பான கோட்பாடுகள் கொண்டிருக்கின்றன. அரசாங்கமொன்று சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு இந்த நீதித்துறையின் சுயாதீனம் அவசியத் தேவையாக உள்ளது. அதிகாரத்தில் எவர் இருந்தாலும் சட்டம் உறுதியான முறையிலும் பக்கச்சார்பற்ற முறையிலும் அமுல்படுத்தப்படுவதை சுயாதீனமான நீதித்துறையால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
நீதித்துறையானது சமூகத்தின் சீரான இயல்பு வாழ்வில் முக்கியமான பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. அரசாங்கமொன்று அரசியல் ரீதியாக பக்கச்சார்பாகச் செயற்படுவதாக இருந்தால் அதாவது அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டால் அரசுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நீதிமன்றங்களையே நாடுகின்றனர். இந்த நிலையில் நீதிமன்றங்களின் சுயாதீனத்தை உத்தரவாதப்படுத்துவது அரசியலமைப்பேயாகும். ஆனால், மன்னார் சம்பவத்தில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் அமைச்சர் அந்தஸ்தை கொண்ட சிறப்பு விடுபாட்டு உரிமையைப் பெற்றுள்ள ஒருவரின் செல்வாக்கு ஊடுருவும் போது இதில் பாதிக்கப்படும் சாதாரண மக்களுக்கு உள்ள உரிமைகளின் கதி தான் என்ன? என்பது முக்கியமான கேள்வியாகும். மன்னார் விடயத்தில் நீதிபதி சாதாரண அரசாங்க அதிகாரிபோன்று நோக்கப்பட்டதாகத் தென்படுகிறது.  நீதிபதிகள் சட்டத்தினதும் அதன் தராதரத்தினதும் காவலர்கள் என்பதை எப்போதும் உறுதிப்படுத்துவதே அரசாங்கமொன்றின் ஜனநாயகப் பண்பாகும். அதிகாரப் பலமுள்ள அரசியல்வாதிகள் நீதித்துறையை தமது ஏவல் கருவியாக்கிக் கொள்ள மு யற்சிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. அத்தகைய நிலைமை வியாபகம் எடுப்பது சட்ட ஆட்சி முழுமையாக சீர்குலைந்து அரச இயந்திரத்தின் செயற்பாட்டையே ஸ்தம்பிதமடைய வைத்துவிடும்.
நன்றி தினக்குரல்

 
 என்றுமே மறக்க முடியாத ஜூலை 83
ஐ.தி.சம்பந்தன்

சிங்களவர் கலவரம் செய்வது புதிய ஒரு விடயம் அன்று. அன்று ஸ்ரீ லங்கா என்ற நாடு, இலங்கை என்று அழைக்கப்பட்ட காலம் தொட்டே  சிங்களவர்களின் கலவரம் நிலை கொண்டிருந்தது கண்கூடு. ஆரம்ப காலத்தில் பௌத்த மத வளர்ச்சியில் நாட்டம் கொண்ட பௌத்த மத தீவிரவாத பிக்குமார், சிங்கள வெறியையும் பௌத்த மத மேம்பாட்டையும் வளர்க்க தம்மாலான சகல முயற்சிகளையும் எடுத்தனர்.
அன்று பௌத்த மத வரலாற்றையும் சிங்கள  இனத்தின் ஆரம்பத்தையும் மஹா நாமா என்ற பௌத்த பிக்கு பாளி மொழியில் எழுதினார். அவர் எழுதிய வரலாற்று நூலே மஹாவம்சம் என்று அழைக்கப்படுகிறது. இந் நூல் ஏழாம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டது.
புத்த பிரானின் பிறப்பு நிர்வாண நிலை பற்றி எழுதிய இந்த நூலாசிரியர் பௌத்த மதம் பரவியது பற்றி எழுதும் போது  பொய் ,புனை சுருட்டு, கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். அன்றைய காலத்தில் புத்த பிரான் மூன்று முறை இலங்கைத் தீவுக்கு வந்தார் என்றும் எழுதியுள்ளார். மூடர்களாகவும் மிலேச்சர்களாகவும் வாழ்ந்த தமிழர்களை வென்று பௌத்த மதத்தை நிலைநாட்டினர் என்றும் பெருமையுடன்  குறிப்பிட்டுள்ளதனைக் காணமுடிகிறது.
தமிழ் விரோதக் கொள்கைகளைப் பரப்பிய முதல் மனிதன் மஹா நாமாவேயாவார், இவரது மஹாவம்சமே எல்லாத் தமிழ் விரோத நடவடிக்கைகளுக்கும் ஆதார நூலாக அமைந்துள்ளது.
இந்த நாடு புத்தபிரானால் ஆசிர் வாதிக்கப்பட்ட நாடு என்ற சிந்தாந்தம் மஹாவம்சத்தில் தான் முதலில் வித்திடப்பட்டது. அதையடுத்து துட்டகைமுனுவுக்கும் எல்லாள சிங்கன் என்ற அநுராதபுரத்திலிருந்து ஆண்ட தமிழ் மன்னனுக்குமிடையில் நடைபெற்ற யுத்தம் என்றும்  வர்ணிக்கப்படுகிறது. இரண்டு மன்னர்களுக்கிடையிலான யுத்தம் இன விரோத யுத்தமாக வெற்றிகரமாக சித்திரிக்கப்படுகிறது.
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்தோன்றிய சிங்கள அரசியல் வாதிகள் இந்த இனவாத பாதையிலேயே இனக் கலவரங்களை ஏற்படுத்தி தமிழர்களை அழித் தொழிக்க முற்பட்ட வரலாறே  1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்கள்.
இதில் மிகக் கொடியது. 1983 ஜூலை இனக் கலவரம். இக் கலவரம் நடைபெற்று 29  ஆண்டுகள்  கழிந்த நிலையிலும்  அந்தக் கொடூர நிகழ்வுகள் மக்கள் மனதைவிட்டு அகலவில்லை.
தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் அழித்து திட்டமிட்ட குண்டர்களினால் ஆயுதப் படைகளின் துணையுடன் கொடூரத்தனமாக நடத்திய இனக் கலவரம். மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த நாடு  2000 இற்கும் மேற்பட்ட  தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்த தீ எரிப்பிலும் வாகனங்களில் சென்ற தமிழர்களை இனங் கண்டு அடித்துக் கொல்லுவதற்கு ஆனந்தா கல்லூரி, மாணவர்கள் ஈடுபட்டது வெளிப்படையான காட்சி.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினரை விடுதலைப் புலிகளினால் உயிர் இழக்க நேர்ந்த சம்பவத்தை காரணமாக வைத்துக் கொண்டு அரசினால் ஏற்கனவே திட்டமிட்ட இனக் கொலை அரங்கேற்றப்பட்டது. மக்கள் வதைக்க வதைக்க தீயீட்டுக் கொளுத்திய கோரக் காட்சியை நேரில் கண்டவர். ஆயிரக்கணக்கானோர். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அகதிமுகாமிலும் ஏனைய பல அகதிகள் முகாமிலும் அகதிகளாக  தஞ்சமடைந்து அவலப்பட்ட காட்சியை நேரில் பார்த்ததோடு அகதிமுகாம் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அநாகரிமான முறையில் தாக்கப்பட்டு உடைமைகளையும் உறவுகளையும் இழந்து துயரத்தோடு தஞ்சம் புகுந்திருந்த 2000 இற்கும் மேற்பட்டோரை நேரில் கலந்துரையாடி திரட்டிய தகவல்களை அகதிகளின் சோக வரலாறு என்று ஒரு நூலாகக் லண்டனில் வெளியிட்டேன். அந் நூலில் இடம்பெற்ற உண்மையான  சம்பவமே எமது மக்கள் அரசியல் தஞ்சம் கோர ஆவணமாக  அமைந்தது.
இனக் கலவரம் நடைபெற்று 25 ஆவது ஆண்டு நினைவாக நான் வெளியிட்ட ஆடூச்ஞிடு ஒதடூதூ 83  ஐணஞீடிஞுtட்ஞுtண்   ஜுலை 83 இனக் கலவரம் குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளில் 500 பக்கத்தில் வெளிவந்த நூலில் கறை படிந்த கறுப்பு ஜுலை இனக் கலவரத்தின் சோக வரலாற்றுகள் ஆதாரத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நூல் பிரித்தானியா கனடா, மலேசியா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில்  வெளியிடப்பட்டது. இலங்கையில் இந் நூல் இன்னமும் வெளியிடப்படவில்லை.  அதற்கான காரணங்களை சொல்லாமலே விளங்கிக் கொள்வீர்கள். இந்  நூலைப் படித்த பேராசிரியர் சுய. வீரபாண்டியன் வெளியிட்ட கருத்துகள்;
1956 ஆம் ஆண்டு தொடங்கியே தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை அங்கு கட்டவிழ்த்து  விடப்பட்டுள்ள தெனினும் 1983 ஆம் ஆண்டு வன்முறையோடு எதனையும் ஒப்பிட முடியாது. ஈழ மக்களுக்கு நடந்த கொடுமைகளோடு மட்டுமன்றி உலககெங்கும் நடந்த கொடுமைகளோடு கூட அதனை ஒப்பிட  இயலாது.
வெலிக்கடைச் சிறையில்  குட்டி மணிக்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதையை  நம்மால் முழுமையாகப்  படிக்க முடியவில்லை. என்னதான்  இனவெறி , மத வெறி இருந்த போதிலும் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணின் வயிற்றில் கத்தியைக் செருகும் காட்டுமிராண்டித்தனம் இன்று வரை நாம் கதைகளில் கூடப் படித்திராத நிகழ்ச்சி,கற்பனைக்கு எட்டாத அத்தனை சித்திரவதைகளும் ஈ ழ மக்களுக்கு நடந்தேறியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிவநேசச் செல்வன் முன்னாள் ஆசிரியர் தினக்குரல் . அவரது பார்வையில்;
இனவாதத்தின் கோரத் தாண்டவத்தினை இந் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காண்கிறீர்கள். ஒவ்வொரு சம்பவமும் மீண்டும் இரத்தக் கொதிப்பை ஏற்படுத்துகிறது. சில சோக நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் அசை போட்டுப் பார்க்கும் போது அவற்றை மனதில்  இருந்து அகற்றுவது கடினமான காரியம் ஆகி விடுகிறது.
ஸ்ரீ லங்கா வெலிக்கடைச் சிறைப் படுகொலையும் புத்தரின் காலடியில் வீரத் தமிழ் இளைஞர்களின்  செங்குருதி 1983  ஜுலையில் ஸ்ரீ லங்கா வில்  உள்ள வெலிக்கடைச் சிறைச் சாலையில் பூட்டப்பட்ட அறைகளில் ஈழ விடுதலைப் போராளிகள் கோழைத் தனமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிங்கள இனவாதப் படுகொலையின் மற்றொரு மைல் கல்லாகும். காட்டுமிராண்டித் தனமான இச் சம்பவம் நாகரிக  உலகில் சிங்கள மக்களுக்கு அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளது.  புத்தபெருமான் போதித்த அன்பு, கருணை, கொல்லாமைக் கோட்பாடுகளுக்கு விரோதமான இச் செயலையிட்டு ஒவ்வொரு உண்மையான பௌத்தனும் வெட்கித் தலைகுனிய வேண்டும். சிங்கள  மக்களின் எல்லா மட்டங்களிலும் தமிழர் விரோத உணர்வு எவ்வளவு தூரத்திற்கு ஊட்டப்பட்டுள்ளது என்பதை இச் சம்பவம் வெளிப்படுத்தியது.
சுமார் 29  ஆண்டுகளுக்குப் பின்னரும் இதே போன்ற கொடுர கொலை வவுனியா  சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டிருந்த தமிழர் சிறைக் கைதிக்கு ஏற்பட்டிருக்கிறது. வவுனியா , நெளுக்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன்  கொலைக்கும் குட்டி மணி போன்ற 52 தமிழ்க் கைதிகள் 1983  இல் வெலிக் கடைச் சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்டதற்கும் வித்தியாசமே கிடையாது.  சிங்கள பௌத்த இனவாத அரசின் இனக் கொலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் வெற்றி பெற்று தமிழ்ப் பிரதேசத்தில் தமிழ் பேசும் மக்களின் ஆட்சி அமைய வேண்டும். அதன் மூலம் தமிழர்களின் சுய பாதுகாப்பை பெற்று தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் கௌரவத்துடனும் சுய கௌரவத்துடனும் வாழ வழிவகுக்கும்.
நன்றி தினக்குரல்

No comments: