தமிழ் சினிமா

.
*  கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தில் அறிமுக நடிகைகள்

*பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்த ஜனாதிபதி நடிகர் தனுஷ்,நடிகை சரண்யாவுக்கும் விருதுகள் 


கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தில் அறிமுக நடிகைகள்


இளமை, இனிமை நிறைந்த காதல் கதை உள்ள 'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு 'நடிகைகள்' பட்டாளம் அறிமுகமாகிறது.

பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தவர்களை இப்படத்திற்காக இணைத்துள்ளார் டைரக்டர் வெங்கி.

படத்தின் நாயகி அதிதி புது டெல்லி மாடலிங் பெண் தொலைகாட்சி சேனலில் யோகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.



கலைகளில் ஆர்வம் கொண்டவர் 'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்' படத்தின் நாயகி பிரியங்காவாக அறிமுகமாகிறார்.

இவருடன் ஹெச்சிஎல் டெக்னாலஜியில் ஹெச் ஆர் டெபுடி மேனேஜராக பணிபுரியும் சுபாஷினி நடிக்கிறார். பல குறும்படங்களில் முக்கிய வேடங்களில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் நாயகியின் தோழி ஸ்ம்ருதியாக அறிமுகமாகிறார்.



ஃபேஷன் டிசைனர்-டான்சர் ஆர்த்தி டாண்டன் நாயகனின் தோழி ஆர்த்தியாக அறிமுகமாகிறார். விஷுவல் கம்யுனிகேசன் மாணவி பிரபல டைரக்டர் அரவிந்தராஜின் மகள் மகா கீர்த்தி நாயகனின் சிநேகிதியாக நடிக்கிறார்.

லக்ஷ்மி ப்ரியா என்பவர் இப்படத்தில் டாக்டராக நடிக்கிறார், நாயகனின் தங்கை சம்யுக்தாவாக கல்லூரி மாணவி சம்யுக்தா நடிக்கிறார்.



நாயகியின் தங்கையாக பள்ளி மாணவி திவ்யா நடிக்கிறார். ஆங்கில ஆசிரியை ஷோஃபியா டாக்டராக அறிமுகமாகிறார் என்று 'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்' படத்தில் அறிமுகமாகும் நடிகைகளை பற்றி இயக்குனர் வெங்கி தெரிவித்துள்ளார்.







நன்றி வீரகேசரி



பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்த ஜனாதிபதி நடிகர் தனுஷ்,நடிகை சரண்யாவுக்கும் விருதுகள் .


Monday, 12 September 2011

திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருதினை இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் வழங்கினார். சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷûம் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சரண்யாவும் பெற்றனர்.

58 ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை டில்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டேல் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி முன்னிலை வகித்தார். முதன் முறையாக இந்த ஆண்டுதான் தமிழ் மற்றும் மலையாள படங்கள் அதிகளவில் விருதுகளை அள்ளின.

திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான "தாதா சாகேப் பால்கே விருது' தமிழ்ப்பட உலகில் இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பிரதீபா பட்டேல் விருதை வழங்கினார்.

சினிமா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட மூத்த சினிமாக் கலைஞருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தங்கத்தாமரையும் ரூ.10 இலட்சம் ரொக்கமும் விருதும் சால்வையும் அடங்கியது இந்தப் பரிசு.

இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது 2 பேருக்கு வழங்கப்பட்டது. "ஆடுகளம்' தமிழ்ப் படத்தில் நடித்த தனுஷ், "ஆதாமிண்டே மகன் அபு' என்ற மலையாளப் படத்தில் நடித்த சலீம்குமார் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றனர்.

சிறந்த நடிகைக்கான விருது "தென்மேற்குப் பருவக்காற்று' தமிழ்ப் படத்தில் நடித்த சரண்யாவுக்கும் பாபு பாண்ட் பாஜா என்ற மராத்தி படத்தில் நடித்த மிட்டாலே ஜக்தாப் வரத்கர் என்ற நடிகைக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.

கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றார். தென் மேற்குப் பருவக்காற்று சினிமாவில் "கள்ளிக்காட்டு தாயே' என்று அவர் எழுதிய பாட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

"தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனு இராமசாமி சிறந்த தமிழ்ப் படத் தயாரிப்பாளருக்கான விருதையும் "மைனா' படத்தில் நடித்த இயக்குநரும் நடிகருமான தம்பி இராமையா சிறந்த துணை நடிகருக்கான விருதையும் நடிகை சுகுமாரி சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றனர்.

"ஆடுகளம்' தமிழ்ப்படம் மொத்தம் 6 விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகர் தனுஷ் தவிர சிறந்த இயக்குநர் (டைரக்டர் வெற்றி மாறன்), சிறந்த திரைக்கதை (டைரக்டர் வெற்றிமாறன்),சிறந்த நடன இயக்குநர் (வி.தினேஷ்குமார்),சிறந்த படத்தொகுப்பு (டி.இ.கிஷோர்),சிறப்புப் பரிசு (இலங்கை நடிகர் ஜெயபாலன்) ஆகிய விருதுகள் இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டன. அதேபோல் "ஆதாமிண்டே மகன் அபு' மலையாளப்படம் 4 விருதுகளைப் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருது (சலீம்குமார்) தவிர, சிறந்த திரைப்படம்,சிறந்த ஒளிப்பதிவாளர் (மது அம்பட்), சிறந்த இசையமைப்பாளர் (ஐசக் தாமஸ்) ஆகிய விருதுகளும் இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டன.

சிறந்த உடையலங்காரம் (ஜெயன்), சிறந்த விஷûவல் எஃபெக்ட்ஸ் (ஸ்ரீனிவாசன் மோகன்) ஆகிய விருதுகள் ரஜினி நடித்த "எந்திரன்' படத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.ஜெயனும் ஸ்ரீனிவாசனும் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

தட்ஸ்தமிழ்
நன்றி தினக்குரல்


No comments: