ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கு 9ம் தேதி தூக்கு : வேலூர் சிறைக்கு வந்தது உத்தரவு


.
Rajiv-mordவேலூர்: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு உத்தரவு ஜனாதிபதியிடமிருந்து, வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு முறைப்படி நேற்று வந்தது. இதனால் மூவரையும், வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூக்கு தண்டனையை குறைக்க, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். கருணை மனுக்களை, ஜனாதிபதி நிராகரித்தார். மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான உத்தரவு, வேலூர் சிறைத்துறை அதிகாரிக்கு நேற்று மதியம் 2 மணிக்கு வந்தது. சிறைத்துறை துணைத் தலைவர் கோவிந்தராஜ், கருணை மனு நிராகரிப்பு உத்தரவை, முறைப்படி வேலூர் சிறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பியிடம் கொடுத்தார். பின், மூன்று பேரையும் தூக்கில் போடுவது குறித்து ஆலோசனை நடத்தினர்."முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போடப்படுவர்,'' என, வேலூர் சிறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பி கூறினார். மூன்று பேரும், வேலூர் சிறையில் இருக்கும் தூக்கு மேடையில், 10 நிமிட இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் போடப்படுவார்கள் என, சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரை தூக்கில் போடுவது குறித்து, 30 பக்க அறிக்கையை வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் தயாரித்து, சென்னையில் உள்ள சிறைத்துறை தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூன்று பேரின் உடல் நலப் பரிசோதனை அறிக்கையை, தினம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நேற்று முதல் மூவரையும் சந்திக்கும் நபர்கள் குறித்தும், அவர்கள் எவ்வளவு நேரம் இருந்தனர், என்ன பேசினர் என்பது குறித்த விவரங்களும் உடனுக்குடன் தெரிவிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதால், சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூக்குக்கயிறு தயார் : வேலூர் ஆண்கள் சிறையில் தூக்கில் போடும் அறை, தூக்கில் போடும் கருவிகளை சுத்தப்படுத்தும் பணிகள் துவங்கியது. தூக்கில் போட, ஒன்பது மணிலா கயிறுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தூக்கு தண்டனை நிறைவேற்ற ஒன்பது வார்டன்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, சென்னையில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக இவர்கள் இன்று சென்னை செல்கின்றனர். மூன்று பேரின் கருணை மனுவை நிராகரித்து, ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவின் நகல், முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு முறைப்படி வழங்கப்பட்டது.

கொலையாளிகள் மனு : தூக்கு தண்டனை உறுதிபடுத்தப்பட்ட தகவல் கிடைத்த ஏழு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்துவிட வேண்டும் என்று விதி உள்ளது. இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும், நேற்று (ஆக., 26) மாலை 4 மணிக்கு, மரண தண்டனையை ரத்து செய்து தங்கள் உயிரை காப்பாற்றும்படி, தமிழக அரசுக்கு முறையீட்டு மனுக்கள் தனித்தனியாக அனுப்பி உள்ளனர். இந்த முறையீட்டு மனுக்கள், உடனடியாக பேக்ஸ் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டன. பிறகு பதிவுத் தபாலில் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டன. பின், வழக்கறிஞர் தடா சந்திரசேகரன், அவரது ஜூனியார் வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று மாலை சிறைக்கு சென்று முருகன், சாந்தன், பேரறிவாளனை சந்தித்தனர். மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களில் அவர்களிடம் தனித்தனியாக கையெழுத்து பெற்றனர்.

நன்றி தேனீ

No comments: