கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை) - வித்யாசாகர்!!




 10

"என்னைப் போல் எத்தனை பேரை கொள்வீர்கள் என்றேன்” அவளும் அதிர்ச்சியுற்றாள்.

"வேறென்ன காட்டிக் கொடுக்கும் சமுகத்திற்கு மத்தியில் தானே நம் போர், பிரச்சனை, எல்லாமே...?"

"அதென்னவோ சரியாகத் தான் சொன்னீர்கள், அந்த சண்டாளன் அன்று எங்கட தலைவரை விட்டுப் போகல்லை யென்டால்; இன்று இத்தனை பெரிய அவலம் ஏது எம் மக்களுக்கு? இன்று நிகழும் இத்தனை கொடுமைகளுக்கும் அவன் செய்திட்ட துரோகம் தானே காரணமாகிறது. இப்பொழுதும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலிருந்து அவன் தானே துணைப் போகிறான்; தேசத் துரோகி யவன்"

"நீங்கள் ஏன் அப்படி நினைக்கணும், இன்னொரு மாதிரியாக அதை மாற்றி யோசித்துப் பாருங்களேன்"


"எப்படி"

"அவன் யார்?"

"யாரென்றால்?"

"அவனும் ஒருநேரம் நம் மண்ணுக்காக போராடியவன் தானே?"

"ஓம்.."

"ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளில் அவனுடைய பங்கும் தலைவருக்குத் துணையாக இருந்தது தானே?"

"அதற்காக நாட்டை கூட்டி கொடுப்பானா? பாவி..."

"அப்படி இல்லை 'திருமதி........' உங்கள் பெயரென்ன?"

"அதை நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை, விசயத்திற்கு வாருங்கள்"
"அவன் தலைவரின் முக்கிய நம்பிக்கைக்கு உரியவனாயிருந்து, அவருக்கு வலது கை போல உடனிருந்து செயல்பட்டவன் தானே?"

"கண்டிப்பாக அதை மறுப்பதற்கில்லை. அவன் பலம் மிக்கவன். நல்ல திறமைகள் பொருந்தியவன். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை, யார் யார் எங்கு நிக்குனம், எவ்வழி போயினம்; எல்லாம் அறிந்தவன் அந்த சண்டாளன் தான்"

ஒருவேளை அவரே நாளை அவர்களை திருப்பிக் கொண்டால்?

"என்ன சொல்ல வாரியள்?” அவள் சற்று சிரித்தாள்...

"ஆம்!! யார் கண்டது, தமிழன் ரத்தம் தானே? மண்ணிற்காகப் போராடியவர் தானே? சுதந்திரம் கேட்டு மக்களின் விடுதலைக்காக காடும் மேடும் அலைந்தவர் தானே?"

"எல்லாவற்றிற்கும் ஓம் என்று சொல்லலாம், கடைசியாய் என்ன சொல்லப் போறீங்க யென்டு, சொல்லி முடியுங்கள்"

"நாளை அவரே அவர்களுக்கு எதிராக நின்று அவனை உடனிருந்தே வீழ்த்தவும் வாய்ப்புள்ளது தானே???? யார் கண்டது"

"ஆ... அது நடக்கோணும். அப்படி; அவன் நல்ல தமிழன் என்றால்; அவன் குடித்த பால் ஒருத்தியோடவா இருந்தால்; அவன் அதை செய்யவேணும், அவன் செய்வான். அவன் செய்யக் கூடிய ஆள் தான். எனக்கும் சில நேரம் தோணும், இப்படிப் போயிட்டானே இந்த பாவி என்று நினைக்கையில், எப்படியாச்சும் கடைசியா வந்துவிடுவான் என்று தோணும்..”

“சரி அண்ணன் எப்படி இருக்கார்?"

"யார்?"

"நமக்கென்று வேறு எத்தனை அண்ணன்கள் இருக்கிறார்கள்"

"தலைவரையா கேட்கிறீங்க?"

"ஆம்"

"அவரை பற்றி கதைக்க வேண்டாம் விடுங்கள், எனக்கு கெட்ட கோபம் வந்துவிடும்"

"ஏன்????!!! அவர் மீதா உங்களுக்கு கோபம்!! என்னால் நம்பவே முடியலையே.."

"நம்ப மாட்டியள், வெளிய இருந்து பார்க்கிறவர்களுக்கு என்ன தெரியும்? அவர் சரியா இருந்திருந்தால் எல்லாம் சரியா இருந்திருக்கும். இன்று நிராதரவாய் நிற்கிறோமே!! இப்படிக் கள்ளத் தோணி ஏறி அலையுறோமே யார் காரணம் இதற்கெல்லாம்???
 
இதோ அந்த சிங்கள கொடும்பாவி போரில் அப்பாவி மக்களை கொன்று போட்டதில்லாமல், காலங்காலமாக நாங்கள் கோவில் போல புனிதமாக பாவித்த 'துயிலகத்தைக் கூட இடித்துத் தகர்த்துவிட்டான், இனி அவர் திரும்பி வந்து மட்டும் என்ன மிச்சம் கிடைத்துவிடும்? போனதை மீட்டுத் தர அந்த தெய்வம் வந்தாலும் நடக்காது தானே???"

அவள் கண்களில் தீ பறந்தது. உணர்ச்சிவசப் பட்டு விட்டால் என்று நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் என்னவோ சொல்ல வருகிறாள் என்பதை கவனித்து பொறுமையாக அவளருகில் சென்று -

"பக்கத்தில் இருக்கவன் பார்க்கிறான், பொறுமையா பேசுங்க" என்றேன்.

"அப்ப விடுங்க, இதலாம் ஒன்றும் கதைக்க வேண்டாம், நீங்கள் உங்க வேலையை பாருங்க"

"அச்சச்சோ ரொம்ப கோபப் படுறீங்களே, நான் அபப்டி சொல்லவில்லை. அவர் பாவம் இல்லையா? எத்தனை வருடம் இந்த மண்ணுக்காவே மக்களுக்காவே பாடுபட்டவர் தானே நம் தலைவர்???"

"பட்டார், நிறைய செய்தார், அவரை மாதிரி உலகத்தில் ஒரு தலைவனும் வர இயலாது. ஆனால் அதற்கு பலன் வந்துச்சா? புடுச்சி புடுச்சி போனியளே எம் புள்ளைய கொடு, உன் புள்ளைய குடுன்னு உருவி உருவி போனியளே, எம் புள்ளை புருசனை எல்லாம் கொடுத்தோமே; கடைசியா என்னத்தை கண்டோம்? தெருவில் அனாதையாய் மானங் கெட்டு நின்றதோடு சரி"

"வாயடைத்துப் போனேன் நான்"

"தோ, நேற்று செய்தி பார்த்தியள் தானே, அவரையும் சுட்டுவிட்டோம் இனி புலிகளே கிடையாது என்கிறான், துயிலகம் வரை அகற்றி விட்டோம் இனி தமிழர்களின் அடையாளமே கிடையாது என்கிறான் சிங்களவன், அவரோட தல மயிர கூட இவனுகளால அசைக்க இயலாது. அது எனக்குத் தெரியும். ஆனா ஒருக்கால் அவர் போயிருந்தால்!!!!???" கேள்வியின் ஊடையில் அழை வந்துவிட்டது அவளுக்கு. விம்மினாள். ஒரு கையில் கண்களை துடைத்தவாறே மற்றொரு கண்ணால் என்னை பார்த்துப் பேசினாள் -

"எங்கட தலைவர் போனால், பிறகு நாங்களும் போனோம் என்று அர்த்தம். அவர் தான் எங்களுக்கு தாய்.. தந்தை.. தெய்வம்.. எல்லாம். அவரில்லாமல் எங்களுக்கு விடியலே கிடையாது. அவரை அந்த படுங்குழியில் போன தெய்வம்தான் மேல்வந்து நின்று காக்கவேணும். நான் சத்தியம் செய்து சொல்வேன்; எங்க தலைவர் மாதிரி உலகத்துல ஒருத்தன் வரமாட்டன், எங்களை மீட்க” கண்களை துடைத்துக் கொண்டாள். அழையை நிறுத்திக் கொண்டாள். நான் அவளையே பார்த்தேன். அவளிடம் ஒரு வீராவேசம் இருந்தது. அவள் மிக தெளிவாக தன்னை வார்த்தைகளால் வெளிப்படுத்தினாள் -

"அவரை எல்லாம் யாராலும் அழிக்க முடியாது. உண்மை தான், எங்கட தலைவர் ஒரு காக்கும் சக்தி கொண்டு பிறந்தவர். எப்படி ஆண்டாருப் பாருங்க எங்க ஈழத்தை; கொஞ்ச காலம் ஆண்டாலும் அப்படித் தான் வைத்திருந்தார், தமிழீழம் உலகத்துக்கே ஒரு பாடமாக விளங்கியிருக்கும். அவர் வந்த பிறகு தான் எங்கட ஈழத்தில் நீதின்னா என்னன்னு மக்களுக்கு மீண்டும் புரியவந்தது.
 
ஒரு பொடியன் அப்போ குடிச்சானில்லை. குடிய அறவே ஒழிச்சது அவர் தான். தோ, இவனுங்களைப் போல் யாரிருப்பார்கள் உலகத்தில்; இந்த சிங்களக் கூட்டம் எம் பெண்டுகள் எல்லாம் செத்தப் பிறகு கூட பரவாயில்லையென்டு உயிர்போன பிறகும் மேல ஏறி மெறிப்பினும். சிங்கத்துக்கு பிறந்தவனுகள். ஆனால் எங்கட புலிங்க அப்படி இல்லை"

பேச்சை நிறுத்தி விட்டு என்னை கிட்ட வந்து பார்த்தாள்.

"உண்மையை தான் கதைக்குறன், பாருங்க, யாராச்சும் ஒரு சிங்களத்தியை எங்கட புலிகள் கெடுத்தாங்க, பொம்பளை மேல கைய வெச்சாங்கன்னு சொல்லச் சொல்லிடுங்களேன் பார்ப்பம். வெட்டியே போடுவார் எங்கட தலைவர். அவர் அப்படிப் பட்டவர்.

எங்களை எல்லாம் தான் பெற்ற மகளைப் போலும்; தன்னோட தங்கையை மாதிரியும் பார்த்தவர். பெண்களுக்கு ஒரு கேடென்றால் அதை ஒருக்காலும் பொருக்க மாட்டார், ஆனால் தவறை யார் செய்தாலும் தவறு தான், அவரிடத்தில் தவறுக்கு மட்டும் தண்டனை இல்லாமல் போகாது. அந்த தண்டனை மரணமாகக் கூட இருக்கும்"

அதற்குள் உணவு கொடுத்துவிட்டுப் போன பணிப்பெண் திரும்பப் பெற்றுக் கொள்ள வந்தாள். வேறேதேனும் வேண்டுமா என்று விசாரித்தாள். அவள் வேண்டாம் என்று மறுக்க நானும் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி பணிப்பெண்ணிற்கு வழிகொடுத்து அனுப்பிவிட, மீண்டும் நான் அவளை பார்த்தேன். அவளுக்கு தான் மனதிற்குள் இருப்பதை எல்லாம் யாரிடமேனும் கொட்டிவிட வேண்டும் போல் இருந்தது போலும், அவளே என் பக்கம் திரும்பி பேசினாள் -

"நான் சொன்னது விளங்கிற்று தானே?"

"ஆம், தலைவரை பற்றி சொன்னீர்கள், நீதி வழுவ மாட்டார் என்றீர்கள்"

"ஓம், நெசம் தான். அவரிடத்தில் மன்னிப்பென்பது கிடையாது. செய்யக் கூடாது யென்டு சொன்னால்; கூடாது தான். மீறி செய்தால் கழுத்தை வெட்டனுமென்டால், வெட்டணும், கண்ணை தோண்டனும்மென்டால் தொண்டனும்"

"கொடுமையா இருக்கே"

"கொடுமை இல்லை. ஒரு ஆட்டை வெட்டினால் தான் பத்து ஆட்டுக்கு பயம் வரும். அப்படி தான் திருந்துச்சி எங்கட ஆளுங்க, அதுக்கு முன்னாடி குடி கூத்து எல்லாம் ஆங்காங்கே இருந்தது தானே? யார் வந்து மாத்தினது அதை எல்லாம்? எங்கட தலைவர்!! நடுவில் சிங்களனால் சீர்கெட்டுப் போன தமிழீழத்தை பழைய மாதிரி மீட்டுத் தந்தவர் எங்கட தலைவர்"

"அவர் இப்பவும் இருக்கார் என்கிறீர்களா?”

“என்ன கேள்வி இது பச்சை புள்ளையாட்டம், அவர் இன்ன பொடியனென்டா நினைச்சியள்? அவர் எங்கட தெய்வம். தெய்வம் வீழுமா???"

"செய்தியில சொன்னாங்களே?"
 
"ஆயிரம் முறை சிங்களவன் அப்படித் தான் சொல்லிக் கொண்டு போறான், அவன் சொல்லுறதை உலகம் நம்பும், நாங்கள் நம்ப மாட்டோம். அரசு பூர்வமா பதினாறு முறை அறிவிச்சான் தானே, அதுபோல ஒன்னு இது.

அவனுக்கு வேண்டுமென்டால் அவரை பரிசோதனை செய்த டோக்டருன்ட சான்றிதழ் இருக்கும் தானே அதை சமர்ப்பிக்கச் சொல்லுங்களேன் பார்ப்பம். சும்மா அங்கனால யாரையாச்சும் புடுச்சி இது தான் புலின்னு காட்டிட்டா ஆச்சா? பூனை புலி எப்படி ஆகும் என்பது என்னட கேள்வி"

"சரி, நான் ஒன்னு கேட்டா கோபப் பட மாட்டீங்களே?"

"சும்மா கேளுங்க, நீங்க ஆம்பளை, உங்க மேல எனக்கென்ன கோபம், சும்மா கதையிங்க"

"இல்லை, அவர் பேரை சொன்னதும் இப்படி இவ்வளோ பேசிட்டீங்களே”

"ஓம்... பின்ன எங்கட மண்ணுக்கு உழைத்த எங்கட தலைவரை சொன்னா விடுவோம்னு நினச்சியலா???"

"இல்லை, அதை சொல்லவரவில்லை, ஆதலாம் சரி தான், என்னிடமே யாரேனும் வந்து அவர் இப்படி என்று குறையாகச் சொன்னாலும் நானும் அதை நம்ப மாட்டேன்தான். ஆனால் நீங்க முன்ன குறைபோல சொன்னீங்களே?” அவள் படக்கென என்னை பார்த்தாள். பயங்கர கோபக்காரியாக இருப்பாள் போலிவள்.

"என்ன சொன்னேன்"

"அவர் தான் காரணம் என்றீர்களே"

"ஆமாம், இப்பவும் தான் சொல்றன்"

"இப்படி நீங்க இந்த விமானம் ஏறி வருவதற்கும் அவர் தான் காரணமென்றீர்களே?"

"எங்க வந்து கற்பூரம் அடிச்சி சொல்ல சொன்னாலும் சொல்வேன். அவர் தான் காரணம், யார் கேட்டது எங்கட பிள்ளைங்களை ஒவ்வொன்னா புடுச்சி போயி புடுச்சி போயி விட்டுட்டு இப்படி எம் மக்களை தெருவுல நிக்கவைக்க சொல்லி?

ஒரு வயசுப் பிள்ளைய; ஒரு வாய் அண்ணந்தண்ணி குடிக்க விடாதவாக தானே நீங்க? கேட்டா, ஆர்மிய அடக்கனும்னுவிய, அது புலியால தான் முடியும்பிய, அடக்குனியளா இன்னைக்கு???

"ஆமாம், வீட்ல வந்து ஆள் கொண்டு போவாங்களா?"

"வீட்ல வந்தா? வேறென்ன கதையா கேட்கிறீங்க, சோத்துல கைய வெச்சி உட்கார்ற பிள்ளைய வந்து வா அங்கே ஆர்மி நிக்கிறான் ஆள் பத்தலைன்னு கேட்பாங்க. ரெண்டு இருந்தா ஒன்னை குடுக்கணும். மூன்று இருந்தா ரெண்டைக் கொடுக்கனும், கேட்டா நாட்டுக்கு என்பினும்.

எல்லாத்தையும் ஒன்னுஒன்னா கொடுக்கத் தானே செஞ்சோம், கடைசியா பொம்பளைய விட்டியளா? பொட்டச்சியைக் கூட 'வாடி பட்டாளத்துக்குன்னு வீட்ல இருக்குற பொண்ணுங்களை எல்லாம் கூட கூட்டி தான் போனீங்க, கடைசியா எண்ணத்தை சாதிச்சீங்க???
 
இன்னைக்கு எம் மக்கள் நிக்குதே அம்போன்னு??? தெரு தெருவா சுத்துதே?? நாடோடியா உட்கார ஒரு அடி மண்ணு தேடி அலையுதே.., அடி அடின்னு அடிக்கிறானே சிங்களவன்!!!! கேட்டீங்களா? நின்னு எதிர்க்க முடிஞ்சிதா கடைசிவரையும்? பிறகு எதுக்குயா எம் புள்ளைய எம் பொண்ணை யெல்லாம் கொடுன்னு கூட்டிகிட்டு போய் மண்ணுல புதச்சீங்க?

ஒண்ணுமே நடக்காததுக்கு எதுக்குயா எங்க வீட்டு தாலியை யெல்லாம் அறுத்தீங்க? அன்னைக்கு அதை செய்ததெல்லாம் நீங்கன்னா; இன்னைக்கு நடக்குறதுக்கு காரணம் யாரு; நாங்க இப்படி நிக்க நாடு இல்லாம அலையறதுக்கு காரணம் யாரு? தாயிழந்து தந்தை இழந்து மனைவி இழந்து அப்பா அம்மா இழந்து அண்ணன் தம்பி இழந்து குழந்தைகளை எல்லாம் இழந்து ஒத்தையா நிக்க காரணம் யாரு? அதுக்கும் நீங்க தானே காரணம்???” அவள் கேள்வியில் நெருப்பு தெறித்தது. உண்மை கேட்க கேட்க மனதைச் சுட்டது. என்னால் பேசிக் கொள்ள முடியவில்லை. கேட்க மட்டுமே நிறைய இருப்பதாய் எண்ணி அவளையே பார்த்தேன்..

11
அவளே கொஞ்சம் அவளை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சற்று நிதானித்து என்னைப் பார்த்தாள். கலங்கிய விழிகளில் கோபத்தை கடந்து உடைத்துக் கொண்டு வழிந்தது கண்ணீர் அவளுக்கு.


எனக்கு அவளைப் பார்க்கையில் மனம் எனையறியாது கலங்கித்தான் போனது. எத்தனை வலியிருக்கும் அவளுக்கு!! ஒரு நாள் குழந்தையை காணாவிட்டால் எப்படி துடித்துப் போகிறோம் நாம்? கடைக்குப் போன அம்மா திரும்பி வர தாமதமானால் வீடு எப்படி விரிச்சோடிப் போகிறது? வேலைக்குப் போன அப்பா நேரத்தில் வராவிட்டால் எப்படித் தவிக்கிறோம், பள்ளிக்குப் போன பிள்ளை எங்கோ அடிப்பட்டு ரத்தசகதியாய் வீழ்ந்துக் கிடக்கிறது என்றால் எத்தனை துடி துடித்துப் போவோம் நாமெல்லோரும்???

இவர்களெல்லாம் பின் எந்த மனநிலைக்கு உட்படுவர்களாவர்? பள்ளிக்குப் போனக் குழந்தைகளை கொத்தாக குண்டு போட்டு சிதறடித்துவிட்டான் ஆர்மி காரன், என்று கேட்ட தாய் எந்த சுவற்றில் முட்டி அழது தன் உயிரை விடுவாள்?

இருந்த ஒற்றை மகன் ஒற்றை மகள் கைசிதறி கால் சிதறி வாசலில் போடப் பட்டு வைத்தியம் பார்க்கக் கூட சூழலில்லாத தேசத்தில் அந்த தாய் எப்படி மார்பில் அடித்துக் கதறி இருப்பாள்?

கணவன் இறந்த சேதி மட்டும் கேட்டு ஓடிப் போய் 'ஐயோ என் ஐயா என்று கட்டிப் பிடித்தழ' உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கப் பெறாமல் மண்ணில் சிதைந்து ரத்தமாக கலந்துப் போன ஒரு மாவீரனின் மனைவி எந்தக் கடவுளிடம் சொல்லியழத் துணிந்திருப்பாள்?

வீடு விட்டு ஒரு நாள் பிரியலாம், ஒரு மாதம் பிரியலாம், ஒரு வருடம் கூட பிரியலாம்; அல்லது என்றேனும் திரும்பப் போய்விடுவோம் என்று எண்ணி வாழலாம், ஆனால், இனி அந்த மண்ணே எனக்கு சொந்தமில்லை எனில், நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணை விட்டேப் பிரிவதெனில் அதைவிட உலகில் கொடுமையும் வேறுண்டா?

தேள் கடிக்குமோ, பாம்பு கொத்துமோ, பேய் அண்டுமோ, பிசாசு தின்னுமோ என்ற பயமெல்லாம் அற்று; ஐயோ ஆர்மி வருவானோ!! என்னைக் கொள்வானோ!! என் பிள்ளைகள் முன்னமே வைத்து எனை சித்தரவதை செய்வானோ? மானபங்கப் படுத்துவானோ, படுக்கச் சொல்லி அடிப்பானோ? கெடுப்பானோ!! இல்லை ஒருவேளை என்னை விட்டு என் மகளையோ தங்கையையோ என்னவெல்லாம் செய்வானோ!!?????' என்று நொடிக்கு நொடி தவித்து வளர்த்த மகள் முண்டச்சியாய் நிற்கவும், முண்டமாய் கிடக்கவும்; காண எத்தனைப் பெரிய வலி வலித்திருக்கும் உயிர்வரை???

அப்படி ஒரு வலி தான் அவளுக்குள்ளும் வலித்து கண்ணீராய் வழிந்தோடியது. விருட்டென அவள் கண்களை துடைத்து அழாதே என்று சொல்ல என்னால் இயலவில்லை. அழுவதற்கென்றே பிறந்த இழி பிறப்புக்கள் நாங்கள் என்பதுபோல் துச்சமாக எனைப் பார்த்தாள் அவள்.

கண்களில் நீர் மேலும் கலங்கியது. அவளின் மன நிலை என்னையும் உடைத்துப் போட, என் கரிசனம் அவளுக்கும் புரிந்திருக்கும் போல். “என் அண்ணனென்டு எண்ணி உங்களிடமொன்று சொல்லுறன்..." ஏதோ சொல்ல வாயெடுத்து, முடியாதவளாய் மீண்டும் அழுதாள்.
 
என்னால் அவள் தலை சாய்த்து கண்ணீரை துடைக்க துணிந்துவிட முடியாமல் போனது. வேறு பக்கம் திரும்பி என் கண்களைத் துடைத்துக் கொண்டேன். அவளுக்கு என் சிவந்த கண்களின் உண்மை புரிய, சற்று அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.


“எண்ட அண்ணை போல இருக்கியள். கொஞ்சநஞ்ச அவதியல்ல நாங்கப் பட்டது. எங்கட கஷ்டம் எல்லாம் சொன்னாலும் உலகிற்கு வெறும் வார்த்தையில் புரியாது. இதலாம் ஒரு கொடூர வலி, என்ன பாவம் செய்தோமோ.........." விசும்பினாள்..

"எங்கடப் போல கஷ்டம் ஒரு மனுசனுக்கும் வரக்கூடாது. அன்றைக்கும் இன்றைக்கும் ஒரு மாற்றமும் இல்லாமல் கண்ணீருக்கு மட்டுமே அடிமையான இனமாகிப் போனோம்"

எனக்கு வேறு வழி தெரியவில்லை விருட்டென அங்கிருந்து எழுந்தேன், இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு கழிவறை நோக்கி நடந்தேன், வாய் விட்டு கத்தி கதறியழ வேண்டும் போல் இருந்தது. இம்மக்களுக்காய் என்ன செய்யப் போகிறோம்???? எதைக் கொண்டு துடைக்கப் போகிறோம் இந்தக் கண்ணீரை? யார் யார் பொருப்பிந்தக் கண்ணீருக்கெல்லாம்????

கேள்விக் கணைகள் இதயத்தை துளைத்தெடுத்தன.., கண்ணாடியில் தலை முட்டி அழ வேண்டும் போலிருந்தது. எல்லாம் உணர்வுகளையும் மொத்தமாகச் சேர்த்து 'அழுதுவிடக் கூடாதெனும் வீம்பின் உச்சத்தில்' வெறும் கோபமாக அடக்கிக் கொண்டேன். இந்தக் கோபம் எனக்குள் ஒரு ஆயுதமாக பிறப்பெடுக்கும் என்றொரு நம்பிக்கை இருந்தது. இப்பொழுதே இந்த விமானத்தை கைகொண்டு உடைத்து தகர்த்து விட்டு நேரே இலங்கை சென்று என் மக்களுக்கான நீதி கேட்டு; என் மண்ணை என் மக்களிடம் பிடுங்கிக் கொடுக்கவேண்டும் எனும் அசூர துணிச்சல் உள்ளெழுந்தது.

ஒருவேளை அவர்களுக்கு எம் நியாயம் இனியும் புரியாதெனில் உலக கண்களில் கைவிட்டு இமைகிழித்து பாரென்று 'எம் ஒட்டுமொத்த இழப்பையும் காட்டிவிடத் துடிக்கும் ஓர் உணர்வினை உள்ளடக்கி வைத்துக் கொண்டு தண்ணீரெடுத்து முகத்தில் அடித்து அடித்துக் கழுவினேன். அதற்குள் யாரோ ஒருவர் வந்து கழிவறை கதவு தட்ட - கதவை திறந்தேன் அவள் கதவிற்கு வெளியே நின்றிருந்தாள்!! கண்கள் தீயென சிவந்திருந்தது!!

12
"ஏன் நான் உங்களை தொல்லை செய்கிறேனா?"


"ச்ச ச்ச.. போயிட்டு வாங்க, நான் அங்கிருக்கிறேன் பேசுவோம்" கழிவறை கதவு மூடிவிட்டு வெளியே வந்தேன்.

அவள் முகத்தை சோகமாக வைத்தவாறு என் பின்னே வந்து "நான் உங்களை காணோமே என்றுதான் வந்தேன், வாருங்கள் போவோம்" என்று சொல்லிவிட்டு என்னுடனே வந்து பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

ஓரிரு நிமிடம் மௌனமாக அமர்ந்திருந்தோம், ஜன்னல் பக்கம் தெரிந்த வெண்பஞ்சு போன்ற மேகங்களையும், எதிரே விமானத்தினுள் இருக்கும் தொலைகாட்சி மற்றும் ஆங்காங்கே விமானத்தினுள் எழுதப் பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்களையுமெல்லாம் பார்த்துக் கொண்டே அவள் பக்கம் திரும்பினேன் -

"ஏன்.. கழிவறைக்குள் சென்று அழுதீர்களா?" என்றாள்

"அழக் கூடாதென்று முடிவெடுத்து வந்தேன்" என்றேன்

"அதானே பார்த்தேன், தமிழகத்தில் உள்ளவர்கள் எங்களுக்காக அழுதிருந்தால் எங்களின் கண்ணீர்தான் என்றோ துடைக்கப் பட்டிருக்குமே...?"

"பார்த்தீர்களா, இது தான்.., இதுதான் நம் பெரிய குறையே!! நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு. தமிழகத்தை நீங்கள் மேம்போக்காக பார்க்கிறீர்கள். தமிழகம் பலமடங்கு பெரிய மாநிலம். தனி நாட்டுத் தகுதியுள்ள ஓர் மக்கள் சக்தியும் பரப்பளவும் கொண்ட மண் அது. உலக தமிழர்களின் தாய்நிலம், ஆனால் நல்ல அரசியல் வாதிகளை தேடியே தன் தனித் தன்மையினை இழந்துக் கொண்டுள்ளது என்பது தான் வருத்தத்திற்குரிய நிலை.

அப்படியே மீறி உள்ளிருக்கும் அரசியல் வாதிகளே துணிந்து போராட வெளிவந்தாலும்; இந்தியா எனும் ஓர் வட்டத்தால் அவர்கள் முடக்கப் பட்டு விடுகிறார்கள். இந்தியா என்று எடுத்துக் கொண்டால் அது பலதரப்பட்ட ஒருதலைப்பட்ச மனநிலையையும், சுய விருவெறுப்புகள் சார்ந்த கோபத்தையும், பாரபட்சம் பார்த்து பிறரை ஒதுக்கி தன்னை வளர்த்துக் கொள்ள முனையும் அரசியல்வாதிகள் மற்றும் அண்டை மாநிலத்தினரைப் பெற்ற கொடிய வட்டமாகவே உள்ளது. மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தும் என்னால் கொடுக்க முடியாதென்று குடிக்கும் தண்ணீரை கூட தன் பக்கமே அணைக் கட்டி மடக்கிக் கொள்ளும் அற்ப பதர்களுக்கு மத்தியில் ஆளுமொரு வாழுமொரு நிலை தமிழகம் சார்ந்த நிலை.

தமிழர்கள் இப்படி முழு ஆதரவில்லா ஓர் நிலையில் ஆதரவினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய, போராடிப் பெறவேண்டிய அரசியல் தலைவர்களோ சுயநலப் புழுக்களாகவும், தூக்கிவீசப் பட்ட தன்பங்கிற்கான உடமைகளை தூக்கிக்கொண்டும் திரியும் சுயனலமிகளாகவோ இருக்க, இவர்களை நம்பியே தன் உரிமையினை தொலைக்கும் ஒற்றைத் தவறில்; தமிழக மக்களின் பார்வையிலிருந்து முழுதாக அறியப் படாமல் அந்நேரம் மறைக்கப் பட்டுவிட்டது, போர் மற்றும் இழப்பு சார்ந்த செய்திகள் எல்லாம்.

ஏதோ சண்டை என்று அறிந்தவர்களால்; ஏன் சண்டை எதற்கு சண்டை, யாருக்கு இழப்பு, என்ன செய்யவேண்டும் எனும் அடுத்தடுத்த நடவடிக்கைகளையோ தீர்வுகளையோ எடுக்கக் இயலாமல் போனதற்கு; தேவையான விழிப்புணர்வினை ஊடகங்கள் ஏற்படுத்தாமையும், அதற்கு பின்னால் நின்று தக்க பலம் சேர்க்காத அரசியல் தரப்பும் தானே அன்றி ஒட்டுமொத்த மக்களும் அல்லவே அல்ல. அம்மக்கள் இன்றும் ஈழத்து போராட்டங்களை எண்ணி ரத்தம் கொதித்தே திரிகிறது. ஆயினும் -

இப்பொழுதெல்லாம் பாருங்கள்; தமிழருக்கு மத்தியில் வேறு 'தமிழக தமிழர், 'இலங்கை தமிழர், 'மலேசிய தமிழர் என்று பகுதிவாரிய பிரிந்துக் கிடப்பதன்றி அந்தப் பிரிவுணர்வு வேறு வந்துவிடுகிறது. தமிழருக்குள்ளே; தமிழராக மட்டும் நாம் ஒருங்கிணைந்து நில்லாமல்; நமக்குள்ளேயே நாம் குறை சொல்லித் திரிந்து நம் முதுகிலேயே நாம் இட்டுக் கொண்ட பிரிவினை கோடுகள் தான் இன்றும் நம்மை வெவ்வேறு பக்கமாக திருப்பி வைத்துள்ளது என்றேஎண்ணுகிறேன் நான். இதலாம் கடந்து -

'தன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லையே எனும் வேட்கையில்; என் மக்களுக்காக எதையுமே செய்திட முடியாதவனாக உள்ளேனே எனும் வருத்தத்தில் 'ஒரு வார்த்தை எதிர்த்துக் கேட்கக் கூட நான் வக்கற்று போனேனே இம்மண்ணில் எனும் வேதனையில், இனி நான் வாழ்ந்து ஆகப் போவதென்ன என்ற ஒரு விரக்தியில், ஈழ விடுதலைக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டு இறந்து போனால் நாலுபேருக்கு அதுவேனும் ஒரு விழிப்பினை ஏற்படுத்தாதா என்று' தன் உயிரை மட்டுமே விட முடிந்த ஒரு சகோதரன் கூட அதே ஈழத்து மக்களால் அவதூறாக விமர்சிக்கவும் ஏளனமாகப் பேசவும் படுகிறான்.

இருந்தும், அதையும் கூட அவர்கள் வஞ்சிக்கப் பட்டவர்கள், வலியில் பேசுகிறார்கள் என்று சொல்லி, தன்னால் இயன்றதை இனியேனும் செய்வோம் என தமிழ் உணர்வும் இன உணர்வும் நாளுக்குநாள் பெருகி, ஈழம் எம் விடிவு; ஈழம் மட்டுமே எம் லட்சியமென்று தமிழகத்தின் எத்தனையோ தெருக்கள் முழங்கவும், அரசுக்கு எதிராக கூட கொடிபிடித்து பல இளைஞர்கள் ஈழ மக்களின் விடிவிற்கென திரியவும் ஆரம்பித்து விட்டனர். சிறைசென்று போராடவும் துணிந்துவிட்டனர்.

ஓட்டுப் போட செல்கையில் கூட, என் மக்களை காக்காத அரசு ஓர் அரசா? எத்தனை இந்த தமிழகத்திற்கு செய்தாலென்ன அங்கே ஈழத்தில் எம் உறவுகள் கூண்டோடு சுட்டு வீழ்த்தப் பட்டபோது ஏனென்றுக் கேட்க திராணியற்றும், உடன் நின்று உதவும் வேற்று மாநிலத்தவரோடு கைகோர்த்தும் நிற்கும் அரசெல்லாம் எப்படி எங்களின் அரசாகும் என்று கேட்கும் ஒரு எழுச்சிமிகு இளைஞர்களாக இன்றைய சாமானிய இளைஞர்கள் கூட புறப்பட்டு விட்டார்கள்"

"பார்த்தீர்களா, உங்களுக்கே, உங்களின்ட தமிழகத்தை பற்றி ஒரு வார்த்தை சொன்னதும் இத்தனை பேசி, சிபாரிசு செய்து 'மெச்சிக் கொள்ளும் மனநிலை தான் இருக்கின்றது"

"இல்லை; இது மெச்சுதல் பார்வை இல்லை சகோதரி, எனை நம்புங்கள், இது ஒரு சிநேகமான தன்னிலை விளக்கம். நமக்குள் இருக்கும் பிரிவினை கோடுகளை அகற்றிக் கொள்ள சொல்ல முயற்சிக்கும் விளக்க உணர்வு. காரணம் அவன் அப்படி.., அவன் அப்படியென்று ஒருவர் சொல்வதால் அது நூறு பேருக்கு வலிக்கிறது. அப்படி ஒருவனால் நூறு பேரை குறை சொல்லி சொல்லி தான் நாம் மெல்ல மெல்ல நமக்குள் பெருத்த பிரிவினையினை வளர்த்துக் கொண்டோம்.

ஒவ்வொருமுறை இதுபோன்ற தமிழகத்தை பற்றிய இழிவான சொற்களை வாதங்களை கேட்கையில் படிக்கையில் என்று திருந்துமோ இந்த மக்களெனும் வருத்தமே வரும். வெறுமனே நாலுபேரை கூட்டி ஒருவரை இழிவு படுத்துவதென்பது அத்தனைப் பெரிய கடினமான செயலல்ல. அதனால் இழப்பு என்பது நம்மினதிற்குள் தான் அன்றி வேறில்லை சகோதரி"

"நீங்கள் சொல்வது சரி தான் நமக்குள் வேறு பாடு கூடாது, ஆனால் இது ஒரு பழிச் சொல் கிடையாது, இது எங்கட மக்களின்ட கோபம். அடிப் பட்டு அடிப்பட்டு துடித்தவருக்கு 'பக்கத்தில் நிற்கும் சகோதர உறவுகள் கூட இப்படி மௌனமாக இருந்து பாதாகம் விளைவித்ததே எனும் வலி; அங்கே வெடிகுண்டு வெடிக்கும் சப்தமும் குழந்தைகள் அலறும் சப்தமும் கேட்க, இங்கே தீபாவளிப் பட்டாசு வெடித்து குதூகளித்துக் கொண்டிருந்ததை தூரமாய் நின்று அறிந்ததன் பேரில் எழுந்த அதொரு ஆதங்கம் அண்ணை"

"மறுக்கவில்லை, அங்கே உயிர்விட்டு துடிக்கும் மக்களை மறந்து 'மானாட மயிலாட' பார்க்கும் இழிவுச் செயலென்பது கேவலம் தான், அதற்காக அவர்கள் விழிப்புற்று விடுதலை உணர்வினை தலையில் ஏந்தி, உயிர்விட்டு அலையும் நேரம், நூறுபேரையும் கோழை என்பதோ, ஏளனத்திற்குள்ளாக்கிச் சிரிப்பதோ எட்டு கோடி மக்களையும் அவமதிப்பாகாதா?"

"ஹ்ஹா... பெரிய எட்டுகோடி, எங்கட உயிர்பிரிகையில் இல்லாத எட்டுக் கோடி; செத்துப் பிணமான பின் மேல்விழுந்து அழதென்ன பலன்? அல்லது எரித்துக் கொண்டு தன்னை மாய்த்துக் கொள்வதில் தான் இனி நடக்கப் போவதென்ன?"

"அதை மறுப்பதற்கில்லை, ஈழம் என்றாலே தெரியாத 'இலங்கை என்று மட்டுமே தெரியும் வரலாறு படித்து வளரும் மக்களுக்கு ஈழத்தின் போர் குறித்த விவரம் கூட தெரியாமல், தன் இன உணர்வுகளைக் கூட பிறர் வந்து புதுப்பிக்கும் அவசியம் என்பது காலமாற்றத்தின் கொடுமையோ அல்லது அரசியல் துரோகத்தின் கேடோ அன்றி வேறில்லை.

என்றாலும், இனியேனும் நாம் சேர்ந்து நிற்போம், நமக்கு மத்தியில் இருக்கும் பழிச் சொல் திரைகளை கிழித்தெறிவோம், பல கைத் தட்டும் ஓசை இதுவென்று உலகிற்கு தமிழர் ஒற்றுமை மூலம் காட்டுவோம் சகோதரி. எனை போன்ற அல்ல; எனை விடவும் மிக நல்ல நல்ல இளைஞர்கள் திறமை வாய்ந்த இளைய சமுதாயம் என்ன செய்வதென்று வழி தெரியாமல் ஈழக் கனவு சுமந்து திரிகிறார்கள் தமிழகத்தில். அவர்களை எல்லாம் சகோதரத்துவமாய் ஒன்றிணைப்போம்.

நெற்கட்டு சுமந்துப் போனாலும் பிரித்துப் பார்க்கையில் நான்கு புற்களின் துண்டுகள் இல்லாமல் இல்லையே; அதுபோல் எண்ணி அக்கறை இல்லா மனிதர் ஓரிருவரை விடுத்து லட்சியத்தோடு கைகோர்க்கும் நிறைய பேரைக் கொண்டு நம் கனவினை வெல்வோம் சகோதரி"

"ஏதோ சொல்கிறீர்கள், உங்கடை பேச்சை கேட்கையில் ஒரு தார்மீக நம்பிக்கை உள்ளே ஊறித் தான் போகிறது. பார்ப்பம், நல்லது நடந்தால் யாரு மறுப்பினும். எல்லாம் ஒரு மண்ணின் மைந்தர்கள் தானே.."

"அதுதான் சகோதரி, குறையில்லா இடமில்லை, அதை நிறையாக்கிக் கொள்பவன் தானே வெற்றியாளன். இப்போதெல்லாம் பார்த்தால் நம் புலிகளை கூட ஏசுகின்றன நம் மக்கள், எப்படித் தான் அவர்களுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை"

"ஏதோ, என்னை வம்பிற்கிழுக்கும் எண்ணமென்டு நினைக்குறன்"

"இல்லை இல்லை சகோதரி"

"எனக்கு நீங்கள் கதைப்பதைப் பார்த்தால் அப்படித் தான் விளங்குகிறது"

"நீங்கள் சொல்வது வேறு, உங்களுக்கான ஆதங்கம் வேறு, ஆனால்; வேறுசிலர் தரக் குறைவாக கூட பேசுகிறார்களே புலிகளைப் பற்றி, நமக்கென உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொரு மாவீரர்களும் நமக்கென மண்ணில் புதைந்த விதைகள் என்றல்லவா பூஜிக்க வேண்டும் நாம்? அவர்களெல்லாம் சொட்டு சொட்டாக தன் உயிரை ரத்தமாகவும் புரட்சியாகவும் சிந்தி கனவுகளுக்கிடையே வீழ்ந்தவர்கள் இல்லையா?"

"ஆம், சரியாக சொன்னீர்கள், அதுமட்டுமல்லாது என்னையும் புரிந்துக் கொண்டீர்கள். நான் கூறியது, கவலைப் பட்டதென்பதெல்லாம் வெறும் என் கோபத்தினைக் கொண்டு மட்டுமல்ல. என்னைப் போல் நொடிக்குநொடி தனிமையினாலும், தனியா விடுதலை தாகத்தாலும் எண்ணி எண்ணி நினைவுகளால் மடிந்துக் கொண்டிருக்கும் எண்ணற்றோர் கொண்டுள்ள கேள்விகளின் வெப்பமது.

ஆனால், உண்மையில் புலிகள் புலிகள் என்று புலிகளை குறை சொல்லியும் பயனில்லை. அன்று அவர்கள் இறங்கி களத்தில் நிற்காவிட்டால். என்றோ எங்களை தொலைத்திருப்பான் சிங்களவன்.

நாங்கள் எல்லாம் அப்போ சிறு கண்ணிகள். எனக்கு நான்கு சகோதரிமார்கள் இருந்தனர், அந்த நாளோடு என்னையும் சேர்த்து அஞ்சிப் பெண்டுகளையும் கரை சேர்க்க எண்ட அப்பன் பட்ட பாடு, ஒ.. சொல்லி மாளாது. இந்த சிங்கள நாய்கள் இரவானால் வரும் பகலில் கூட அரிப்பெடுத்தால் நிற்காது"

"வீட்டுக் குள்ளேயே வருவாங்களா?"

"குளிகிறன்னு தெரிந்தால் கூட விடமாட்டினும், எல்லாருக்கும் முன்னமை வைத்தே எல்லாம் நடக்கும். இதுபோல் வெளியில் தெரியாமல் கூட எத்தனையோ கதைகள் நடந்ததுண்டு. நிறைய பேர் சொல்ல பயந்து சொல்ல மாட்டினும். உயிருக்கும், உயிரை விட மானத்திற்கும் பயந்து பயந்தே மடிந்த குடும்பங்களும் பயித்தியமாகிப் போனவர்களும் கூட எண்ணற்றபேர் உண்டு.

ஆனால், இதை எல்லாம் ஏனென்டு கூட கேட்க இயலாது, கேட்டால் சுட்டுட்டு போய் கொண்டே இருப்பான். தெருவில் ஆர்மி வரான் என்றாலே அடி வயறு கலங்கும் எங்களுக்கெல்லாம். உயிர்போனால் கூட பரவாயில்லை. மானம் போகும் என்று முன்னமே தெரிந்தால் அதை விடக் கொடுமை வேறில்லை அண்ணை. அதை எல்லாம் அனுபவித்த பாவிகள் நாங்கள்.

சொன்னா நம்ப மாட்டியல், சின்ன சின்ன குழந்தையை கண்டால் கூட இந்த நாய்கள் விடுவதில்லை. செட்டிய கழட்டிட்டு பார்ப்பானுகள், ஆணா பொண்ணா என்று. பொண்ணுன்னா போகட்டுமென்டு விட்டுப்போவினும், ஆணென்றால் அங்கடையே வேடிவைத்துக் கொள்ளுவினும்.

"குழந்தைக்கா?????????!!!"

"ஓம்...."

"குழந்தைக்கு பாம் வைப்பானுங்களா?"

"ஓம் அண்ணை, கழற்றிட்டு பார்ப்பானுகள், பொண்ணா இருந்தா களத்துக்கு வாராதுன்னு விடுவினும், ஆணென்றால் புலியாகி விடுமாம் வளர்ந்தால். அப்படியே அதுக்கு பாம் வைத்து கண்ணெதிரே சாகடிப்பானுகள்"

"ச்ச நம்பவே முடியலையே?"

"இதுக்கே திகச்சிட்டா? இவனுங்க செய்ததை எல்லாம் கேட்டா உலகம் மன்னிக்காது. இதுக்கெல்லாம் கடவுள் ஒரு நாள் கூலி கொடுக்காம விடம்மாட்டான். பச்சமண்ணு னு கூட பார்க்காம சுட்டுப் போடுற பசங்க தானே இவனுங்க. நினைச்சா வயிறு எரியுது, என் கண்ணு முன்னாடியே சென்ஜானுங்களே”

"என்ன செஞ்சாங்க?"

"என் கூட எங்கட ஊர்ல இருந்தே வந்தவ ஒருத்தி, அழகுன்னா அப்படி ஒரு அழகு எதிரிக்கு கூட துரோகம் நினைக்காதவ அவ. அவளையும் விட்டு வைக்கவில்லை அந்த ஆர்மிக் காரர்கள். சொன்னால் வெட்கக் கேடு இந்த ஆர்மி காரனுண்ட செயலெல்லாம்"

"என்ன செய்தார்கள் என்று சொல்லுங்களேன் சகோதரி, அவர்களின் இழிசெயலை உலகிற்கு தெரிவிப்போம், நியாயத்தை உலக தமிழர்கள் எடுக்கட்டும்"

"வேறென்ன, நம்மட விடுதலைப் புலிகள், நம் வீடு தோரும் வந்து நீ வா நீ வா என்டு கொண்டுபோய்க் கொண்டே இருந்தால் கடைசியாக யார்தான் போறது? ஒருகட்டத்தில் எல்லோருமேப் போனோம். விடுதலை ஒன்னு தான் குறி என்று மொத்த தமிழரும் ஆனோம். அந்த நிலையிலும் எண்ட அப்பன் மானம் ரோசம் குடும்பம்னு பார்த்துத் தான் எங்க அஞ்சு பேரையும் வளர்துச்சு. அதே எங்கட வளர்ப்பு போலவே வளர்ந்தவள் தான் அவளும். பேரு மலர்விழி.

சாந்திரம் ஆறு மணி ஆகும்னாலே எங்கட அப்பன் எங்களை அஞ்சு போரையும் காட்டுக்கு கூட்டி போய்விடும். பகலென்றாலும் பேசலாம் கத்தலாம் யாரையேனும் அழைக்கவேனும் செய்யலாம். இரவில் யாரை அழைப்பது என்ன செய்வது, நேரா வீட்டில் வந்து யாரை பிடிக்குதோ கொண்டு போறது, எங்காச்சும் வெச்சு கொன்னுட்டு வேலையை முடிச்சிட்டு தூக்கிப் போட்டுவிடுவது. மறுநாள் எங்கேனும் பிணம கிடக்கும்.

கேட்டா, புலிகள் எதிர்க்க வந்தார்கள் சுட்டோம்னு செய்தி போடுறது. அதுக்கு பயந்துக் கொண்டு எங்கட அப்பன் எங்களை இரவானால் காட்டுக்கு கொண்டுபோய் விட்டுவிடும். பாவம் அந்த கிழவன், தன்னோட வயசான காலத்துல எப்படி எல்லாம் கஷ்டப் பட்டுது. நாங்க அஞ்சு பேரும் குமரியாயிட்டோம். அதுல நாங்க மூத்தவ மூணு பேரும் மாப்பிள்ளை பார்க்க இருந்தோம். அதுக்கு பயந்தே அந்த கிழம் திரியும்.

எங்களை கொண்டு வந்து காட்டுல பதுக்கி வெச்சிட்டு சோறு கொண்டார போகும். திரும்பி வரும் வரை எங்களுக்கு சோறு வருமா அப்பா வருவாரான்னு நிலை இருக்காது. சிலநேரம் உயிர் போனா போகுதுன்னு துணிந்துவிடத் தோணும். ஆனால் எங்கட அண்ணனுங்கள் விடமாட்டார்கள். நாங்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள். நாமெல்லாம் கெளரவமா வாழ்ந்த குடும்பம். நமக்கு ஆர்மியை எதிர்த்தெல்லாம் ஒன்டும் செய்ய இயலாதுன்னு சொல்லி அடக்கிடுவானுகள்.

ஒரு பக்கம் புலிகள்னு பயம் வரும், ஒரு பக்கம் சிங்களனுக்கும் பயப்படனும்"

"புலிகளுக்கு ஏன் பயப்படனும்?"

"ஒரு பயந்த்-தே(ன்), அவுங்களும் மனுசாலு தானே? போராட பொருள் என்ன வானத்திலிருந்தா வரும்? எங்களிடம் இருந்து கேட்பாங்க, கொஞ்சம் மனசு வந்து கொடுப்போம் கொஞ்சம் மறைச்சி வைப்போம். மறச்சோம்னு தெரிஞ்சா அவர்களுக்கு கோபம் வரும்.

அதும், அதுகள பார்க்கவே கண்ணு தாங்காது, புலிகள் என்டால் என்ன கிழமெண்டா நினைச்சியள், எல்லாம் வாலிபக் குமாரர்கள், படிக்கும் வயதில் துப்பாக்கித் தூக்கப் பணிக்கப் பட்டவர்கள். பாவம், இளசுகளா வரும் சிலநேரம், அக்கா கொஞ்ச சோறு போடுங்கக்கான்னு வந்து நிக்கும், வயிறு பத்தி எரியும். இப்படி திரியுதுகளே ன்னு மனசு தவிச்சி போகும். அதுகளுக்காகவாவது உயிரை விட்டுத் தொலைப்போம் போ'ன்னு இருக்கும்.

வாங்கடி செல்லங்களான்னு சோற போட்டாலும் திங்கும், கஞ்சிய ஊத்தினாலும் குடிக்கும்க பாவம். இது வேணும் அது வேணும்னு கரைசல் எல்லாம் கிடையாது. இருக்கறத தின்னுப்புட்டு போவுங்க பாவம். அபப்டியெல்லாம் கஷ்டப் பட்டு, அங்க இங்க பயந்து எங்கட அப்பன் ராத்திரிக்கு ஆனா சோறு கொண்டு வரும். அதை வேற எவனா பார்த்தா எங்க போற யாருக்கு சோறு கொண்டு போறன்னு அதை அங்கனையே சுட்டு போட்டாலும் கேட்க கேள்வியில்லை.

அப்படி காட்டுக்குள்ளையும் வீட்டிற்குள்ளேயும்னு பொத்தி பொத்தி வெச்சி தான் எங்களை எங்க அப்பன்மாறுங்க எல்லாம் வளர்த்தாங்க, இந்த ஆர்மிக்கு பயந்து. அப்படி எங்க கூடவே இருந்து பக்கத்து வீட்டுல வளர்ந்தவ தான் அவ, மலர்விழி.

என்ன செவேல் னு இருப்பா தெரியுமா? நல்ல ஆம்படையான் கிடைச்சான் அவளுக்கு, அவரும் ஒரு கட்டத்துல புலிகள் கூட சேர்ந்து போராட காலத்துக்குப் போயிட்டாரு. அந்த நேரம் பார்த்து இவ கற்பமாயிட்டா, போர் உக்குரத்துல இருக்கு. திடீர்னு ஓர் நாள் ஆர்மி காரனுக ஊர் உள்ள புகுந்துட்டாங்கன்னு தெரியவர; புள்ளைய காப்பாத்தனுமேன்னு எங்க எங்கயோ ஓடினாள், ஓடி ஓடி அளந்ஜால் பாவம், அவளையாச்சும் விட்டானுன்களா? தேடி பிடுச்சி கொண்டானுங்க பாருங்க, பாவிங்க..."

"கொன்னுட்டாங்களா?!!!!"

"அதை ஏன் கேட்குறீங்க. அவளை ஒரு கற்பவதின்னு கூட பார்க்காம கொன்னு கர்ப்பழுச்சி அவ வயித்த கீறி அவ வயித்துல வளர்ற குழந்தையை எடுத்து சுட்டுப் போட்டாங்களாம். கேட்டால் தமிழனோட சிசு வயித்துல கூட வளரக் கூடாதுன்னு சொல்லிப் போனாங்க படுபாவிங்க"

அவள் சொல்லி நிறுத்தினாள். எனக்கு மனசையே யாரோ போட்டு பிசைந்தாற்போல இருந்தது. "உண்மையாவா சொல்லுறீங்க?"

"என்னை யென்ன வேலை கெட்டவன்னு நினைச்சியிலா, மரத் தமிழச்சி நானு, என் நாக்குல பொய் வராது” நாக்கை வெளியே நீட்டிக் காட்டினாள்.

"இல்லை இல்லை நான் உங்களை சந்தேகமா கேட்கலை. இந்தளவுக்கு செய்ய முடியுமான்னு தான்...” முடிக்காமல் இழுத்தேன்.

"இதை விட எல்லாம் செய்தவர்கள் சிங்களவர்கள். எங்கட கதை கேட்டால் செத்தப் பொணம் கூட எழுந்து உட்கார்ந்துக் கொள்ளும். நானெல்லாம் பொருத்து பொருத்துப் பார்த்து வேற வழில்லாம துப்பாக்கி தூகியவள் தான்.

இவனுங்களை ஏழேழு ஜென்மத்துக்கும் நாங்க மன்னிக்க மாட்டோம். அணு அணுவா எங்களை சாகடிச்ச இவனுங்களும் அணு அணுவா சாகணும். அப்பாவி மக்கள் மீது எங்கள் கோபமில்லை. அது சிங்களமாவே இருந்தாலும் ஆவிகளும் பெண்டும் குழந்தைகளும் தானே. அவிகளை ஒன்டும் செய்யக் கூடாது, ஆனால் இந்த ஆமிக் காரர்களுக்கு புரியவேண்டும். வெடித்தால் எப்படி வலிக்கும், வெட்டினால் எப்படி வலிக்கும், சுட்டால் எப்படி வலிக்கும் என்று புரியவேண்டும்.

இன்னும் என்ன எல்லாம் செய்வானுங்கன்னு கேட்டால் செய்ய இனி ஒன்டுமே யில்லை என்று சொல்லும் அளவுக்கு செய்து விட்டார்கள். முற்றுமாய் நாங்கள் வாழ்ந்த அடையாளத்தையே எங்கு மாற்றிவிட்டார்கள். எங்களை கொண்டுபோய் காட்டில் விடுவினும். காட்டில் வசித்த சிங்களமாரை நாங்கள் நாகரீகமாய் வசித்த ஊரில் குடிவைக்கிறானுகள். இவனுகளை எல்லாம் யார் தட்டிக் கேட்பது. எங்களுக்கெண்டு இருந்த ஒற்றை தலைவரும் எங்கிருக்கிறார் எப்போது வருவார் என்று தெரியாது. ஆனால், கண்டிப்பாக வருவார் என்று நம்பிக்கை மட்டுமே இன்றும் எங்களை உயிராக வைத்திருக்கிறது.

இன்றில்லை என்றாலும், ஒர்தினம் நாங்கள் வெல்வோம். எங்கட ரத்தத்திற்கு அந்த மண்ணு பதில் சொல்லியே ஆகவேண்டும். எங்கட உயிர் விட்டு ஊறிய மண்ணில் ஓர்நாள் எங்கட கொடி பறக்கும்!!!!!!!!!!!!!எங்கள் எதிரிகள் எங்கட கண்நீருக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்"

நரம்பு புடைத்து ஒரு வெறி தலைக்கேறி வீரதீரத்தோடு அமர்ந்துக் கொண்டது எனக்கு. அந்த எரியும் கரை தீயினை கண்ணில் புதைத்துக் கொண்டு - அவர் சொல்வதையே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் தலையாட்ட தலையாட்ட என் புரிதல் அற்று ஆர்வம அவளுக்கு நம்பிக்கையை கொடுத்தது.

"பிறகு ஏன் இப்படி பட்டவர்களை எல்லாம் விட்டுவிட்டு இப்படி விமானம் ஏறி எங்கோ போகிறேனேன்னு உங்களுக்குத் தோணும், ஆனால்..."

அவள் வேறேன்னவோ சொல்ல வந்தாள், அதற்குள் ஒளிப் பெருக்கியில் ஆங்கிலத்தில் அறிவிப்பு வர அதை நோக்கி கவனித்தோம். விமானம் கீழ் சாய்ந்து இறங்குவது போல் அங்குமிங்குமாய் ஆடியது. சற்று நேரத்தில் விமானம் செல்லும் வழியினிடையே ஓரிடத்தில் தரை இறங்க உள்ளதாகவும். அங்கு ஒரு மணிநேரம் நின்று ஆளெடுத்துப் போகுமென்றும், அறிவிப்புச் சொல்ல, விமாணப் பணிப்பெண் வந்து எல்லோரையும் நேராக அமரும் படியும். கச்சை பட்டி அணியவும் சொல்லிப் போனாள்.

இருவரும் நேராக அமர்ந்து சற்று அமைதியானோம். உள்ளுக்குள் அவள் சொன்னது சொல்ல வந்தது எல்லாமே எண்ணி ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. இருக்கையில் பின்சாய்ந்து கண்களை மூடிக் கொண்டேன். விமானம் மெல்ல தரையிறங்கியது.

தொடரும்..

No comments: