கணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.

.
முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய இதழின் நிறுவனருமான கஸ்தூரிரங்கன் 04/05/11 காலமானார். அவருக்கு வயது 78. சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் குடியிருப்பில் வசித்துவந்த அவர், சிறிதுகாலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.


முதுபெரும் பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கஸ்தூரிரங்கன் இன்று சென்னை கொட்டிவாக்கத்தில் காலமானார்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் டெல்லி நிருபராக 20 ஆண்டுகள் பணியாற்றிய அவர், டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965 ல் கணையாழி இதழை தொடங்கினார். கணையாழியில் அரசியலை முதன்மைப்படுத்திய கட்டுரைகள் உலக நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர் கட்டுரைகள். அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியன கணையாழியில் வெளியாகியது. கணையாழியை தனது உயிர் மூச்சாக நினைத்து நடத்தி வந்தார்.



பின்னர் 1992 வாக்கில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இனைந்து பணியாற்றினார். அப்போதுதான் அவருக்கு தினமணியின் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. இரண்டு ஆண்டுகள் அவர் தினமணியின் ஆசிரியராக இருந்து முத்திரையைப் பதித்தார். அதுவே அவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை பத்திரிகை உலகில் பெற்றுதந்தது எனலாம்.

சிற்றிதழ்களின் வாழ்வுக்காலம் குறுகியது எனும் நியதியைத் தகர்த்துப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கணையாழியை நடத்திய பெருமை கி. கஸ்தூரிரங்கனுக்கு உண்டு. இதோ இப்போதும் கூட.... நின்று போன கணையாழியை உயிர்பித்தப் பின்னரே தனது மூச்சை நிறுத்தி உள்ளார் கஸ்தூரிரங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

கஸ்தூரிரங்கனைப்  பற்றி ஜெயமோகன் தனது அஞ்சலியில் கூறுவதாவது

டில்லியில் அறுபதுகளில் கஸ்தூரிரங்கனை மையமாகக் கொண்டு ஒரு அறிவுஜீவிக்குழு உருவானது. க.நா.சுப்ரமணியம், ஆதவன், தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ்.ஜெகன்னாதன் போன்றவர்கள். இவர்களின் முயற்சியால் சென்னையில் இருந்து கணையாழி தொடங்கப்பட்டது.முதலில் அதை ஓர் அரசியல் விமர்சன இதழாகவே நடத்திவந்தார்கள். ஆரம்பத்தில் தி.ஜானகிராமன் ஆசிரியராக இருந்தார். பின்பு அசோகமித்திரன் அதன் பொறுப்பாசிரியராக ஆனார். மெல்லமெல்ல கணையாழி இலக்கிய இதழாக பரிணாமம் கொண்டது.நன்றி தமிழன் வீதி

ஆனந்தவிகடன், கல்கி சலித்துப்போய் இன்னும் தீவிரமான இலக்கியத்தை தேடும் வாசகர்களுக்குரிய பாதையாக இருந்தது கணையாழி. தொடர்ச்சியாக பல வருடங்கள் வெளிவந்த சிற்றிதழ் இதுவே. ஆதவனின் என் பெயர் ராமசேஷன், காகிதமலர்கள், ஜானகிராமனின் நளபாகம் போன்ற குறிப்பிடத்தக்கபல ஆக்கங்கள் அதில் வெளியாகின.

தமிழின் அனேகமாக எல்லா முக்கியமான எழுத்தாளர்களும் கணையாழி வழியாகவே அறியப்பட்டார்கள்.ஸ்ரீரங்கம் எஸ் ஆர் என்ற பேரில் சுஜாதா எழுத ஆரம்பித்தது கணையாழியில்தான். நான் கணையாழியில் பல கதைகளை எழுதியிருக்கிறேன். கணையாழி நடத்திய தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல்போட்டியில் வெளியானவைதான் டார்த்தீனியம், கிளிக்காலம், அம்மன் மரம், பூமியின் முத்திரைகள் போன்ற கதைகள். எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, பாவண்ணன், சுப்ரபாரதிமணியன் போன்ற பல முக்கியமான எழுத்தாளர்கள் கணையாழியில் எழுதி அறியப்பட்டவர்கள்.

கணையாழி ஒரு இலக்கிய இயக்கம் என்றால் மிகையல்ல. அடிப்படையில் காந்திய நோக்குள்ளவரான கஸ்தூரிரங்கனின் பொதுநல விருப்பும் தீவிரமும் அர்ப்பணிப்புமே கணையாழியை எதிர்மறைச்சூழல்களில் அத்தனை பொருளிழப்புகள் இருந்தும் பிடிவாதமாக இவ்வளவுநாள் நீடிக்கச்செய்தது. தமிழுக்கு கணையாழி மூலம் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது . பின்னர் ஸ்வச்சித் என்ற காந்திய அமைப்பை தொடங்கி சமூகசேவை ஆற்றினார்.

கஸ்தூரிரங்கன் கவிஞரும்கூட. சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழில் கவிதைகள் எழுதியிருக்கிறார். செல்லப்பா தொகுத்து வெளிவந்த புதுக்குரல்கள் என்ற தொகுதி தமிழ்ப்புதுக்கவிதையின் முதல் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது. அதில் கஸ்தூரிரங்கனின் கவிதைகள் உள்ளன. மென்மையான அங்கதம் கொண்ட கவிதைகள் அவை.

நான் அடிக்கடி நினைவுகூரும், மேற்கோள்காட்டும் அவரது கவிதை

கடவுளும் கவர்மெண்டும் ஒன்று

அதைத் தூற்றாதே; பழி சேரும்

உனக்கு. அதற்கு

ஆயிரம் கண்கள்: காதுகள்.

ஆனால் குறையென்றால்

பார்க்காது கேட்காது

கை நீளும்; பதினாயிரம்

கேட்கும், பிடுங்கும்.

தவமிருந்தால்

கொடுக்கும்.

கவர்மெண்ட் பெரும் கடவுள்

அதைப் பழிக்காதே

பழித்தால்

வருவது

இன்னும்

அதிகம்

கவர்ன்மெட்தான்.


நன்றி ஜெயமோகன்  



1 comment:

திருநந்தகுமார் said...

செய்தியைப் பிரசுரம் செய்த தமிழ் முரசுக்கு நன்றி.
கணையாளியை அறிந்தவர்களுக்கு இது ஒரு பெரிய இழப்புத் தான். கணையாளியின் கடைசிப் பக்கங்களை முன்னர் வாசித்த ஞாபகம் உண்டு. நண்பர்கள் வட்டத்தில் அது பேசப்பட்டபோது, அதனை வாசிக்கும் நாட்டம் வந்தது. சிட்னி தமிழ் அறிவகத்தில் சுஜாதாவின் ‘கணையாளியின் கடைசிப் பக்கங்கள்’ ( அல்லது அது போன்ற ஒரு நூல்) இருப்பதாக ஒரு நினைவு. கஸ்தூரிரங்கனின் முயற்சி இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஓர் உத்வேகமாக இருந்தது என்பதில் ஐயமில்லை.
அவர் தொண்டால் அவர் தமிழ் இலக்கிய உலகில் தனியிடத்திலுள்ளார். மறைந்தும் மறையாத மாணிக்கம் கஸ்தூரி ரங்கன்.