இலங்கை செய்திகள்





*
காதலர் தின வாழ்த்து குறுந்தகவலாக கணவனுக்கு வந்ததை அடுத்து மனைவி தற்கொலை

காதலர் தின வாழ்த்து கைத் தெலைபேசியில் குறுந்தகவலாக கணவனுக்கு வந்ததை அடுத்து மனைவி தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழப்பாணத்தைச் சேர்ந்த இத் திருமணமான பெண் கணவருடன் கொழும்பில் வசித்து வந்ததாகவும் கணவர் கொழும்பில் தனியார் கம்பனி ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் இப் பெண் காதல் செய்தே திருமணம் புரிந்தவர் ஆவர். கணவனின் கைத் தொலைபேசிக்கு காதலர் தின வாழத்து வந்ததை பார்த்த மனைவி கணவரை விளக்கம் கேட்டு சண்டை பிடித்ததாகவும் அதன் பின்னரே தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளார்கள். இது தொடர்பாக வெள்ளவத்தைப் பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
நன்றி பாடுமீன்.கொம்



மஹிந்தவுக்குக் கெட்ட காலமாம்: சோதிட சஞ்சிகை விற்பனைக்கு பொலிசார் தடை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியாக கெட்டகாலம் ஆரம்பிப்பதாக குறிப்பிட்டதால் சோதிடப் பத்திரிகையொன்றை விற்பனை செய்வதற்கு பொலிசார் தடைவிதித்துள்ள சம்பவமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் அரசியல் மேம்பாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்து என்ற வகையில் சோதிட ரீதியான எதிர்வு கூறல் ஒன்றை “ஈதலய” எனும் சோதிட சஞ்சிகை வெளியிட்டிருந்தது.

அதன் காரணமாக குறித்த புறக்கோட்டையில் அமைந்திருக்கும் சஞ்சிகையை சந்தைப்படுத்திய நிறுவனமொன்றை பொலிசார் இன்று முற்றுகையிட்டு தேடுதல் நடாத்தியுள்ளனர். குறித்த சஞ்சிகையை விற்கப் போவதில்லை என்பதாக வாக்குமூலம் ஒன்றை அளிக்குமாறு அதன் உரிமையாளரை மிரட்டியுள்ளனர். அது மாத்திரமன்றி ‘ஈதலய’ சஞ்சிகை தொடர்பாக அந்த நிறுவனத்தின் முன்னால் தொங்க விடப்பட்டிருந்த பதாதைகள், ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் என்பவற்றையும் பொலிசார் கிழித்தெறிந்துள்ளனர். சோதிட ரீதியாகக் கூட ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்கள் வெளிவரக் கூடாது என்பதற்காக அரசாங்கம் பொலிசாரை ஏவி விட்டு மேற்கொண்ட நடவடிக்கையாகவே இச்சம்பவம் கருதப்படுகின்றது
நன்றி பாடுமீன்.கொம்


இலங்கை உயர்ந்த பண்பாட்டை பேணிப் பாதுகாக்கும் ஒரு நாடு
பேராசிரியர் புஸ்பரட்ணம்  (நெடுந்தீவு தினகரன் நிருபர்)

தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு அதை உருவாக்கிய பெருமை பெளத்த குருமாருக்கானது என யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மரபுரிமை மையங்களின் மீள் புனரமைப்பு முகாமைத்துவம் பற்றிய பட்டறை யாழ். கிறின் கிருஸ் ஹோட்டலில் கடந்த 24ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜெகத் பாலசூரிய கலந்துகொண்ட இக் கூட்டத்தில் பேராசிரியர் புஸ்பரட்ணம் பேசும் போது:-

இலங்கை சிறிய நாடாக உயர்ந்த பண்பாட்டைப் பேணிக் காக்கும் நாடாகவும் உலகில் மதிக்கப்படுகின்றது. அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி போன்ற புராதன நகருக்குச் சென்றால் இதனைக் காணமுடியும். வட இலங்கைக்கு 3000 ஆண்டுகளுக்கு மேலான பண்பாட்டு வரலாறு இருந்தாலும் அவற்றைக் கண்டறிய சாதகமான நிலை கடந்த காலங்களில் இருக்கவில்லை.

இப்போது குடாநாட்டின் அபிவிருத்தியில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இதில் யாழ் கோட்டை புனரமைப்பும் ஒன்று. இதற்காக நெதர்லாந்து அரசுக்கு இலங்கை மக்கள் கடமைப்பட்டுள்ளனர். குடாநாட்டின் அபிவிருத்தியில் பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களைக் கண்டறிந்து பாதுகாப்பது முக்கியமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் பெறுபேறாகக் கிடைக்கும் உண்மைகள் இலங்கை மக்களிடையே சகோதரத்துவம் புரிந்துணர்வு, கலாசாரம், ஐக்கியம்இ அமைதி சமாதானம் வளர உதவும்.

இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைவிட தென்னிந்தியாவின் பண்பாட்டுச் செல்வாக்குக்கு உட்பட்ட பிராந்தியமாக வட இலங்கை உள்ளது.

கோட்டை புனரமைப்பு பயிற்சிகளின் போது அதில் கலந்துகொள்ளும் ஆய்வாளர்களுக்கு முறையான பயிற்சிகள் அவசியம். யாழ்ப்பாணம் கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய பரிமாற்றமையமாக இருந்துள்ளது.

போல் பீரிஸ் என்ற அறிஞர் அனுராதபுரத்திற்கு அடுத்து இலங்கையில் தோன்றிய புராதன நகரமாக கந்தரோடை இருந்ததென்கிறார். அங்கு இடம்பெற்ற ஆய்வுகளிலும் இது உறுதி செய்யப்பட்டது என பேராசிரியர் புஸ்பரட்ணம் கூறினார்.

நன்றி தினகரன்



இலங்கைச் சிறுவர்களும் ஊட்டச்சத்துக் குறைபாடும்


இலங்கையின் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் உள்ள 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடம் மிகமோசமான ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படுவதாக யுனிசெவ் உலக உணவுத்திட்டமும் சுகாதாரத்துறை அமைச்சும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 53 சதவீதமான சிறுவர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 48 சதவீதமான சிறுவர்களும் அம்பாறை மாவட்டத்தில் 44 சதவீதமான சிறுவர்களும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் காணப்படும் அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்குப் பிறக்கும் பெருமளவான குழந்தைகள் எடை குறைவாகவே பிறப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்று சிறுவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியவர்களாகவுள்ளனர். சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் தொழிலாளர்கள், சிறுவர் கடத்தல் என பல வழிகளிலும் சிறுவர்கள் மீதான உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றதொரு நாடாக இலங்கை மாறிவருகின்ற நிலையிலேயே தற்போது சிறுவர்களை ஊட்டச்சத்துக் குறைபாடும் மிக மோசமாகப் பாதித்துள்ளது. அதிலும் யுத்தத்தின் பிடியில் 30 வருடங்களுக்கும் மேலாக சிக்குண்டிருந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் வறுமையின் பிடிக்குள் பல தசாப்தங்களாக சிறைப்பட்டிருக்கும் மலையகப் பகுதியிலுமே ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை மிகத் தீவிரமாக கவனத்தில் எடுக்கப்படவேண்டியதொரு விடயமாக உள்ளது.

உலகில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை போன்ற நாடுகளிலேயே வாழ்கின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்கு யுத்தத்தின் மீதே குற்றம் சாட்டப்படுகின்றது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்கு யுத்தம் ஒருவகையில் காரணமாக இருந்தாலும் இலங்கையின் மத்திய மாகாணமான மலையகப் பகுதிகளில் சிறுவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படுவதற்கு எந்தவகையிலும் யுத்தத்தைக் காரணம் காட்டமுடியாது. அரசு மற்றும் சிறுவர் அதிகார சபைகளின் அக்கறையின்மை, பாரபட்சமான செயற்பாடுகளே மலையகப் பகுதி சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படக் காரணமாக உள்ளமை ஒன்றும் ரகசியமான விடயமல்ல.

இலங்கையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் தமது அமைச்சு தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் உள்ள 5 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு பாலர் பாடசாலைகளில் வாரத்திற்கு மூன்று தடவைகள் பால் வழங்கவுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார். பிரதி அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒன்றும் புதிய விடயமல்ல. சிறுவர்களுக்கு ஒரு கப் பால் வழங்கும் திட்டம் மகிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டு அது தொடர்பில் பாரிய பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு தாய்மார்களின் ஆதரவை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டது. ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ஒரு சில இடங்களில் மட்டும் குறிப்பிட்டதொரு காலத்துக்கு சிறுவர்களுக்கான ஒரு கப் பால் திட்டம் அமுல்படுத்தப்பட்ட போதும் அது பின்னர் தேர்தல் கால வாக்குறுதி போலவே காணாமல் போய்விட்டது.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என நாம் கூறிக் கொண்டிருக்கின்ற போதும் அதற்கேற்ற வகையில் நாம் சிறுவர்களின் நலனோம்புகைகளில் அக்கறை செலுத்துகின்றோமா என்று பார்த்தால் கவலைக்குரிய பதிலே கிடைக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகின்றன. அவர்கள் உடல், உள ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். வீதியோரப் பிச்சைக்காரர்களில் சிறுவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையே காணப்படுகின்றது. இலங்கையில் இலவசக்கல்வி அமுல்படுத்தப்படுகின்ற போதும் பாடசாலைகளைவிட்டு இடைவிலகும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. இவை அனைத்துக்கும் மூலகாரணமாக பசி, வறுமை உள்ளன. எனவே சிறுவர் நலனோம்புகை தொடர்பில் அரசு தனிக்கவனம் செலுத்தி விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வாரத்திற்கு 3 தடவை மட்டும் பால் கொடுப்பதால் சிறுவர்களின் ஊட்டச்சத்து அதிகரித்து விடும் என கருதுவது புத்திசாலித்தனமானதல்ல. சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான பின்னணிக் காரணிகளைக் கண்டுபிடித்து அவற்றை களை எடுப்பதன் மூலமே இலங்கையில் ஆரோக்கியமான சிறுவர் சமூகத்தை உருவாக்க முடியும்.

நன்றி தினக்குரல்







No comments: