யாழ் உலா

.
 நாகலிங்கபூ சுப்பிரமணியம் பூங்கா
யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்க போன கதை- கானா பிரபா 


நாகலிங்கபூ சுப்பிரமணியம் பூங்கா
அண்மையில் யாழ் சென்ற போது சுப்பிரமணியம் பூங்காவிற்கும் செல்ல முடிந்தது.



இந்த வரண்ட பூமியில் இந்த அழகான செழிப்பான பூங்காவா என மூக்கில் விரலை வைக்க வைத்தது அது.
மிக அற்புதமாகப் பராமரிப்புச் செய்கிறார்கள்.







அங்கு ஒரு மூலையில் இந்த மரம் பூ விரித்து சுகந்த மணம் வீச கம்பீரமாக நிற்கிறது. எனது சிறு வயது வியாபாரிமூலை வீட்டில் நான் நீர் ஊற்றி வளர்த்தது இது போன்றதொன்று பெருமரமாக வளர்ந்து நின்றது.

ஆயினும் அது பூத்து மணங்கமழ முன்னர் நாங்கள் குடும்பமாக கொழும்பிற்கு எனது மருத்துவப் படிப்பிற்காக செல்ல நேர்ந்தது.

 பி்ன்னொரு நாளில் வீடு திரும்பிய போது மரம் நின்ற சுவட்டையே காணவில்லை. ஆழ் மனத்தில் ரணவடுவாக இருந்த வலி தீரும் வண்ணம் சில படங்களைக் கிளிக் பண்ணிக் கொண்டேன்

இது நாகலிங்க மரம் (Couroupita guianensis) அல்லது நாகலிங்கப்பூ மரம் என அழைக்கப்படுகிறது. தென்னமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.


நாகலிங்கப்பூ மரம்


இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது பிங்க் நிற இதழ்கள் விரியும்.

உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக காட்சியளிக்கும்..



நாகலிங்கப்பூ


மொட்டுக்கள் காயாகும் போது பெரிய உருண்டை போல் இருக்கிறது. சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது.


சுப்பிரமணியம் பூங்காவின் சிமெந்து இருக்கை பின்புலத்தில்

அம் மரம் பற்றி விக்கிபீடியாவில் மேலும் அறியுங்கள்

nanri :suvaithacinema.blogspot.com

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்க போன கதை 
                                                                                           கானா பிரபா 
                                    


எனது யாழ்ப்பாணப் பயணத்தில் திருத்தலங்களைத் தரிசிக்கும் நிகழ்ச்சி நிரலின் படி அன்றொரு நாள் லுமாலாக் குதிரையின் மீதேறி நான் சென்றது தியேட்டர் வலம். காங்கேசன் துறை வீதியில் முதலில் சந்தித்தது மனோகரா தியேட்டரை. அங்கு களவாணி படம் ஓடிக்கொண்டிருந்தது, ஏற்கனவே களவாணியை சிட்னியில் தரிசித்ததால் மனோகராவுக்குள் நுழையாமல் அடுத்ததாக சாந்தித் தியேட்டர் பக்கம் போவோம் என்று ஆஸ்பத்திரி வீதிக்குக் குறுக்கால் போகும் குச்சொழுங்கைக்குள் சைக்கிளை விட்டேன். முன்னர் அந்த மூத்திர நாத்தம் பிடிச்ச ஓடைக்குள் தான் ஹரன் தியேட்டர் இருந்ததாகச் சொல்லுவினம். ஹரன் தியேட்டரை நான் தரிசிக்கும் முன்னரேயே அது போர்ச் சூழலில் செத்து விட்டது. குச்சொழுங்கையின் அரைப்பங்கை நிரப்பிய நாற்றம் பிடித்த குப்பை மேடுகளைக் கடந்தால் அந்தா தெரியுது சாந்தி இல்லையில்லை நாதன்ஸ் இல்லையில்லை செல்லா சினிமா. என்ன குழம்பி விட்டீர்களா, ஒரு காலத்தில் சாந்தி ஆக இருந்து பின்னர் நாதன்ஸ் ஆகி இப்போது இந்தத் தியேட்டர் செல்லா சினிமா.

கருணாஸ் நடித்த அம்பா சமுத்திரம் அம்பானி படம் ஓடிக்கொண்டிருப்பதாக வெளியில் இருந்த கட் அவுட் சொல்லியது. என்ன கொடுமை ஐயா கருணாஸ் ஹீரோவா நடித்த படமெல்லாம் தியேட்டருக்குப் போய்ப் பார்க்கும் அளவுக்கு யாழ்ப்பாணச் சனம் மீது ஒரு கலாச்சார வன்முறை கட்டவிழ்த்து விடுவதைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா என்று மனதுக்குள் வெதும்பினேன். இந்த மனுசன் இதுக்குத் தான் இலங்கைக்கு விடாப்பிடியா வரவேணும் எண்டு கஷ்டப்பட்டவர் போல.

வின்சர் தியேட்டர் பக்கம் ஒரு மினி சினிமா
தற்போதைய வின்சர் தியேட்டர்
ராணி தியேட்டர் சயிக்கிள் பார்க்காக இருந்து இப்ப அதுவும் இல்லாமல் பூட்டிக் கிடக்க, லிடோ இருந்த சுவடே இல்லாமல் கட்டிட வளாகம் தோன்றி மறைக்க வெலிங்டன் தியேட்டர் வெறுங்காணிக்குள் கறள் பிடிச்ச இரும்புச் சாமான்களோடு நிரம்பியிருக்க, வின்சர் தியேட்டர் கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியமாக மாற, சிறீதர் தியேட்டர் ஈ..பி.டி.பி முகாம் ஆகிப் போனது.

அடுத்து எஞ்சிருயிருப்பது ராஜா தியேட்டர் தான். அந்தப்பக்கமாக லுமாலா பாய்ந்தது. "தில்லாலங்கடி" ஓடிக்கொண்டிருந்தது. சரி உள்ளே போய்ப் பார்ப்போமே என்று ராஜாவுக்குள் நுழைந்து சைக்கிள் பார்க்கில் லுமாலாவை ஓரங்கட்டி நிறுத்தினேன்.






ராஜா தியேட்டருக்குள் சுவரில் மாட்டியிருந்த படங்களைக் கமராவால் சுட்டேன்.

"அண்ணை! றிக்கற் எவ்வளவு" - இது நான்
"பல்கனி 200 ரூபா, சுப்பர் பல்கனி 240 ரூபா" என்றார் றிக்கற் விற்பவர். (ஏன் நான் கலரியில் இருக்க மாட்டேனோ?)
"சுப்பர் பல்கனி ஒரு ரிக்கற் தாங்கோ" ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் சுப்பர் பல்கனி என்றால் என்னவென்றே தெரியாமல் றிக்கற் வாங்கியாச்சு.

"மேல போங்கோ அண்ணை"

"டிங்கரிங்க ரிங் ஆ டிங்கரிங்க ரிங்" தில்லாலங்கடி பாட்டைப் பாடிக் கொண்டே இன்னொருபக்கம் படம் பார்க்க வந்த பெண் சிரசுகளைச் சைற் கொண்டே சொல்லுறார் அந்த ரிக்கற் கிழிக்கிற பெடியன்.

பல்கனிக்கும் மேலாக இன்னொரு வாசல் "சுப்பர் பல்கனி"க்கு. எட்டிப்பார்த்தால் சோடி சோடியாய் நாலு சோடி காதலர் குடி கொண்டிருக்கினம். நானோ தன்னந்தனியன் "அடக்கோதாரி இதுக்குப் பெயரா சுப்பர் பல்கனி, நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா" என்று மனதுக்குள் கறுவியவாறே மீண்டும் றிங்க றிங்க றிங் பெடியனிடம் வந்து,
"தம்பி! நான் சுப்பர் பல்கனிக்கு ரிக்கற் எடுத்தனான், ஆனா பல்கனியிலேயே இருந்து கொள்ளுறன்"
"சரியண்ணை" என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் அவன்.

முன்னர் 2006 இல் மெர்குரி பூக்கள் படம் பார்க்க வந்த போது படம் தொடங்கி ஒவ்வொரு 5, 10 நிமிஷத்துக்கு இடைவேளை வரும், பின்னை என்ன அப்போதிருந்த மின்சார நிலைமை அப்படி, ஆனா இந்த முறை அப்படியில்லை ஒரேயொரு இடைவேளை தான். முந்தின தியேட்டர் ஸ்கீரினில் ஒட்டுப் போட்டுப் பிச்சைக்காரனின் சட்டை மாதிரி இருக்கும் இப்ப நல்ல வெண்திரையில்.



2006 இல் பார்த்த ராஜா தியேட்டர் இதுதான், ஒருத்தர் ஹாயா காலைத் தூக்கி சீற்றுக்கு மேலை வச்சிருக்கிறார் பாருங்கோ

பள்ளி விடுமுறை என்பதால் சின்னனுகள் தாய் தேப்பனோட வந்து தில்லாலங்கடியில் கும்மி இருந்தனர். வடிவேலுவுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு ரசிகர் சங்கமே இருக்குப் போல.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தனியே தன்னந்தனியே படம் பார்த்து முடித்து வெளியே வந்தேன்.

பின்னேரம் மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போகிறேன். அங்கே நின்ற ஒரு பெடியன்
"அண்ணை என்ன உங்களைக் காலமை தியேட்டர் பக்கம் கண்டது போல இருக்கு"

யாழ்ப்பாணம் மாறவில்லை ;)


இந்த அனுபவத்தைச் சொல்லும் போது மார்ச் 15, 2006 இல் என் பதிவாகத் தந்த "சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்கள்" என்ற பதிவையும் இரைமீட்டி இங்கு பார்க்கிறேன்.

நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமாபரடைசோ” (Cinema Paradiso).
இத்தாலி நாட்டுத் திரைப்படமான இப்படம் இத்தாலிய மொழியில் Nuovo Cinema Paradiso ஆக 1989 ஆம் ஆண்டில் வெளியானது. இதன் இயக்குனர் Giuseppe Tornatore. 1990 ஆம் ஆண்டு சிறந்த வேற்றுமொழியில் வெளிவந்த படமாக ஒஸ்கார் விருதும், 11 ஒஸ்கார் விருதுப் பரிந்துரைகளுக்கும் அதே ஆண்டு தெரிவானது.தவிர ஜப்பானிய அக்கடமி விருது, கேன்ஸ் திரைப்படவிருது. ஐரோப்பியத்திரைப்பட விருது உட்படப் பல தொகை விருதுகளை அள்ளிக் குவித்தது இப்படம். பொதுவாகவே இப்படியான விருதை அள்ளிக் குவிக்கும் படங்கள் முழுமையான ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெறுவது கடினம். ஆனால் இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இன்னொருமுறை பார்க்கத்தூண்டுவதும் அப்படி மீண்டும் பார்க்கும் போதும் முதல் முறை பார்க்கும் போது கிடைக்கும் அதே அனுபவத்தை ஏற்படுத்துவதும் தான் இப்பட இயக்குனருக்குக் கிடைக்கும் பெரிய விருது.

கதை இதுதான், ஒரு பிரபல சினிமா இயக்குனராக ரோம் நகரில் இருக்கும் சல்வடோர் (Salvatore) தான் முப்பது வருடங்களுக்கு முன் தான் வாழ்ந்த இத்தாலிக்கிராமமான சிசிலி(Sicily)யில் சிறு பையனாக இருந்தபோது தன் நண்பனாக வழிகாட்டியாக இருந்தவரின் மரணச் செய்தி கிடைக்கின்றது. முப்பது வருடமாகத் தன் சொந்தக்கிராமத்தையே எட்டிப்பார்க்காத அவர் இந்த மரணச்சடங்கிற்காகச் செல்ல முடிவெடுக்கின்றார். தொடர்ந்துவரும் அவரின் நினைவுச் சுழல்கள் முப்பது வருடங்கள் பின்னோக்கியதாகப் பயணிகின்றது.இத்தாலிய நாட்டின் நவீனம் புகாத ஒருகிராமம் அது. அங்கே உள்ள "சினிமா பரடைசோ" என்ற ஒரேயொரு தியேட்டர் தான் அவ்வூர் மக்களுக்கு இருக்கும் ஒரே களியாட்டக்களம். ஆடலும் பாடலும் சேட்டைகளும் சில்மிஷங்களுமாகப் படங்களைப் பார்த்து இரசிப்பதற்கும், தங்கள் கனவு நாயகர்கள் திரையில் தோன்றும் போது ஆரவாரிப்பதுக்குமான நிலைக்களன் தான் அந்தத் தியேட்டர்.
அந்த ஊரில் தன் தந்தையைப் போரில் பறிகொடுத்துவிட்டு இளம் தாயுடனும் தன் தங்கையுடனும் இருப்பவன் டோட்டொ என்ற சிறுவன். தன்னுடைய சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களுடன் வளர்கிறான் டோட்டோ. தாய்க்குத் தெரியாமல் கள்ளமாகத் தியேட்டரில் படம் பார்ப்பதும், திருட்டு தம் அடிப்பதும், ஏன் அந்தத் தியேட்டரே அவன் உலகமாகவும் எண்ணிக்கொள்கின்றான். சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டரில் படம் போடுபவராக (projectionist) இருப்பவர் அல்பிரடோ என்ற முதியவர்.
டோட்டோ தன் குறும்புத்தனங்களையும் படம் பார்க்கும் அவாவயும் தியேட்டருக்குள் மட்டும் நிறுத்திக்கொள்வதில்லை. நேராகப் படம் போடும் அறைக்குள் நுளைவதும் அல்பிரடோவின் ஏச்சுக்களை வாங்கிகட்டுவதும், 
படக்காட்சி பொருந்திய துண்டுகளை அடம்பிடித்து வாங்குவதும் அவன் வழக்கம். தன் பிள்ளை ஒரேயடியாக இப்படியாகத் தியேட்டரில் இருப்பதற்கு அல்பிரடோ தான் காரணம் என்று நினைத்து அவரைக் காணும் போது தன் வயிற்றெரிச்சலைக் கொட்டுவாள் டோட்டோவின் தாய்.
இதனால் மனவருத்தமடையும் அல்பிரடோ, டோட்டோ தன் தியேட்டருக்கு வரும் போதெல்லாம் அவனைத் துரத்துவார். ஆனால் அவனோ இவருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவது போலவும், பரீட்சையில் கேள்விகளுக்குப் பதில் சொல்லி உதவியும் ( அல்பிரடோ தான் வயதாகியும் படிக்க ஆசைப்படுபவர்) தான் நினைப்பதைச் சாதித்துவிடுவான்.
இப்படித் தியேட்டரே தன் உலகமாக இருக்கும் டோட்டோ ஒருமுறை தியேட்டரில் ஏற்படும் தீவிபத்தில் அல்பிரடோவை காப்பற்றுகின்றான். அந்தவிபத்தில் இருந்து அல்பிரடோ இயங்கமுடியாது போனதும் டோட்டோ படம் போடுபவராக (projectionist)த் தேர்ந்தெடுக்கப்படுகின்றான். அல்பிரடோவே இவனின் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் மாறுகின்றார். மிகச்சிறுவயதிலேயே ஆக அமரும் டோட்டோ தன் வாலிபப் பருவத்தைத் தொட்டதும் ஒரு இளம் பெண்ணின் காதலில் வீழ்கின்றான். அந்தக் காதலிலிலும் தடைகள் வருகின்றன. கடமையா? காதலா? என்ற நிலை வரும் போது அவனின் வழிகாட்டி அல்பிரடோ சொல்கின்றார். " நீ இந்த ஊரில் இனி இருக்ககூடாது, திரும்பிப்பார்க்காது முன்னேறிக்கொண்டே போ".
டோட்டோ ரோம் நகருக்குப் பயணமாகின்றான். சல்வடோர் என்ற பிரபல இயக்குனராக மாறுகின்றான். முப்பது வருடங்கள் கழித்துத் தன் வழிகாட்டி அல்பிரடோவின் மரணச்சடங்கிற்கு வருகின்றான்.
சிறுவன் டோட்டோவின் குறும்புச் செயல்கள், அவன் இளைஞனாகும் போது வரும் காதல் உணர்வுகள், முப்பது வருடங்களுக்குப் பின் தன் கிராமத்திற்கு வரும் போது எழும் ஏக்கங்கள் எல்லாமே நம் ஈழத்து, இந்திய சமூகத்திலும் பொருந்திவரக்கூடிய நிகழ்வுகள். சிறுவனாக Salvator Cascio நடித்திருக்கும் தன் பங்கைத் திறம்படவே செய்திருக்கின்றான்.
தன் கிராமத்தின் அடையாளமாக இருந்த சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டர் காலமாற்றத்தில் உருக்குலைந்து போயிருப்பதைக் கண்டு வெம்புவதும், தன் பழைய காதலியைத் தேடியலைவதும், முன்பு கமராவில் எடுத்த அவளின் காட்சிகளைத் திரும்பப்போட்டுப் பார்ப்பதுமாக இருப்பதுமாக நிறைவான ஒரு பாத்திரத்தில் Jacques Perrin நடித்திருக்கிறார்.
அந்த ஊரில் வரும் முக்கிய கதைமாந்தர்கள், குறிப்பாக முத்தக் காட்சிகளையே தணிக்கை செய்து படம் பார்க்கவைக்கும் பாதிரியார், ஊர்ச் சதுக்கத்தில் நின்று ஆட்களை விரட்டும் பைத்தியக்காரன், படம் போடுபவராக (projectionist) வந்து நிறைவான நடிப்பை வழங்கியிருக்கும் Philippe Noiret என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
டோட்டோவின் வழிகாட்டியாக வரும் அல்பிரடோ சொல்லும் ஒரு பொய்யால் தான் இப்படி முன்னேறியிருக்கிறேன் என்று முப்பது வருடங்கள் கழித்து அவனுக்குத் தெரியவரும் போது எமக்கும் அது சுவாரிஸ்யமான எதிர்பாராத காட்சியாக இருக்கின்றது. அது என்ன என்பதைப் படத்தைப் பார்க்காதவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி நான் சொல்லாத நல்ல நிறைவான காட்சிகள் ஏராளம்.
எல்லா மனிதருமே சராசரி வாழ்வியலோடு ஓடிக்கொண்டு போகும் போது தம்வாழ்க்கைப் பாதையில் மாறுபட்ட அனுபவங்களோ அல்லது நிகழ்வுகளோ வந்து சந்திக்கின்றன. நின்று நிதானித்து அந்த அனுபவங்களை உள்வாங்கி நடப்பவர்கள் தம் சராசரி வாழ்விலிருந்து விலகி முன்னேற்றப்பாதையில் செல்லத்தலைப்படுகின்றார்கள், அதோடு தமக்குரிய வழிகாட்டியையும் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றார்கள். முன்னேறிய மனிதர்கள் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்படியான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. இப்படத்தைப் பார்க்கும் போதும் அதே உணர்வுதான் எனக்கு எற்பட்டது. வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் தான் எமது நீண்ட வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கின்றன.


என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.
என் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது. இப்பவும் நினைவிருக்கு, கோபாலபிள்ளை மாமாவின்ர சைக்கிள் வெள்ளிக்கிழமை பின்னேரம் சித்தப்பாவீட்டிலை நிண்டா அதின்ர அர்த்தம் எங்கட சித்தப்பாவும், கோபாலபிள்ளை மாமாவும் ரீகல் தியேட்டருக்கு இங்கிலீஷ் படம் பார்க்கப்போட்டார்கள் எண்டு. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில இதை அவர்கள் ஒரு வாடிக்கையா வச்சிருந்தினம். எண்பதுகளின்ர இறுதியிலயே போரால அந்தத் ரீகல் தியேட்டர் அழிஞ்சு போச்சுது. யாழ்ப்பாணம் கோட்டை ராணுவமுகாமுக்குப் பக்கத்தில அது இருந்தது தான் காரணம்.

படம் பார்க்கிறதில விண்ணர் விஷ்ணு அண்ணா தான். அப்போது அவருக்கு பதினேழு பதினெட்டுவயசு அப்பிடித்தான் இருக்கும், கமல் ரஜனி காலத்து மனுஷனுக்கு மாறாக எம்.ஜி.ஆர் படங்கள் எண்டால் தான் உயிர். டீவி, வீடியோ பெரிசா வராத காலம் அது. அவர் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் படங்களைப் பார்த்துவிட்டு வரும் வரைக்கும் அவையின்ர முற்றத்தில நான் நிற்பன். அவரின்ர ஏஷியாச்சைக்கிளைக் கண்டதும் தான் தாமதம் துள்ளிக்குதித்து சைக்கிள் முன் பாறிலை ஏறி "படக் கதை சொல்லுங்கோ விஷ்ணு அண்ணா" எண்டு ஆவலா நான் அவரின்ர வாயைப் பார்ப்பேன். ரவுணில இருந்து சைக்கிளில வந்த களைப்பைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு படக்கதை சொல்ல ஆரம்பிப்பார்.
தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றால் எழுத்தோட்டத்திற்கு (titles) முதல் வரும் தேவர் பிலிம்ஸ் யானையின் பிளிறலையும் செய்து விட்டு " டண்டான் டாங், டண்டான் டாங்" என்று சங்கர் கணேஷின்ர இசையமைப்பையும் செய்துகொண்டே கதை சொல்ல ஆரம்பிப்பார். நான் ஆவெண்டு வாயைப் பிளந்த வண்ணம் அவர் சொல்லும் கதையக்கேட்டுக்கொண்டே இருப்பன்.
அவர் இன்னொரு விளையாட்டையும் செய்வார், இணுவில் காலிங்கன் தியேட்டர் பக்கம் போய் அறுந்து போய் எறிப்பட்டிருக்கும் படச்சுருள்களை எடுதுது வந்து கையால இயக்கக்கூடிய ஒரு மரப்பலகை மெஷினைச் செய்து பூதக்கண்ணாடி பொருத்தி அந்தப் படச்சுருளை இணைத்து விடுவார். எங்கள மாதிரிச் சின்னப் பெடியளைக் கொண்டு போய் ஒரு அறைக்குள் கொண்டுபோய் இருத்திவிட்டு அறைச்சுவரில வெள்ளை வேட்டியைக் கட்டிவிட்டு அறையை இருட்டாக்கி விடுவார். பிறகு அந்த மெஷினுக்கு ஒராள் டோச்லைற் அடிக்க இவர் லாவகமா அந்தப் படச்சுருள் வளையத்தைச் சுற்றுவார். சுவரில இருக்கிற வெள்ளை வேட்டியில படச்சுருள் ஓடும். சப்பாணி கட்டிக்கொண்டு திரையைப் பார்க்கும் நாங்கள் " உங்க பாரடா சிவாஜி கதைக்கிறான், ஆனா வடிவாக் கேட்குதில்லை" என்போம். அந்தச் சத்தம் எமது யாழ்ப்பாணத்துத் தோமஸ் அல்வா எடிசன் விஷ்ணு அண்ணரின் அந்தச் சினிமா மெஷின் எழுப்பும் ஈனஒலி எண்டது இப்பதான் விளங்குது.

ரமணா அண்ணாவும் சளைத்தவரில்லை. சினிமாப் போட்டி வைக்கிறேன் பேர்வழி எண்டு, ஒரு கொப்பியில சினிமாப் படம் ஒண்டின்ர முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதிவிட்டு இடையில இருக்கிற எழுத்துக்களின்ர எண்ணிக்கைக்கு ஏற்பப் புள்ளட்டி போடுவார். நாங்கள் என்ன படம் அது எண்டு கண்டுபிடிக்கவேணும். ( உதாரணம்: அன்பே சிவம் எண்டால் அXX XXம்). கனகாலமாக் அவர் எழுதி நாங்கள் கண்டுபிடிக்காத படம் " புதுச்செருப்புக் கடிக்கும்".


நீயா படம் வின்ஸர் தியேட்டரில முந்தி ஓடேக்க நான், சித்தியாக்களோட போனனான். இந்தப்படம் " வயது வந்தவர்களுக்கு மட்டும்" (பாம்புக் காட்சி உள்ளதால்) நான் சின்னப் பெடியன் எண்டு உள்ள போகவிடயில்ல. பிறகு ஒரு மாதிரி படம் பார்த்தோம், இல்லாவிட்டால் நான் தனியே வெளியே நிண்டிருக்க வேணும்.

தொண்ணூறாம் ஆண்டு நான் ஓ எல் படிக்கேக்க கூட்டளிமார் குமரேந்திரனும், ராஜசேகரும் களவா பள்ளிக்கூடக் கிறவுண்ட் மதில் பாய்ஞ்சு போய் மனோகராத்தியேட்டரில "அக்னி நட்சத்திரம்" படம் பார்த்துவிட்டு வந்து கிறவுண்டுக்குள்ள நிண்டு அந்தப் படத்தில நீச்சல் உடையில வந்த நிரோஷாவைப் பற்றிக் கதைச்சது ஞாபகம் இருக்கு.

பிறகு ஓ எல் எக்ஸாம் எடுத்துவிட்டு ராஜாத் தியேட்டரில " ராஜாதி ராஜா"வும், லிடோவில " பூப்ப்பூவாப் பூத்திருக்கு" படமும், வெலிங்டனில "வருஷம் 16 " படமும் பார்த்து எங்கட ஆசையை நிறைவேற்றிக்கொண்டோம், பரமகதி அடைந்தோம்.
வருஷம் 16 படம் இறுதிக்காட்சியில நாயகி குஷ்பு சாவதைக் கண்டு, கூடவே வந்த நண்பன் காந்தன் மூட்டைப் பூச்சியையும் பொருட்படுத்தாது அதிர்ச்சியில் கதிரையை விட்டு எழும்பவேயில்லை. பின்னால இருந்த தாய்க்குலங்கள் விசும்பி அழுவதும் கேட்டது.
ராஜாதி ராஜா படம் பார்த்து விட்டு வரேக்க மீண்டும் யுத்தம் ஆரம்பமாகி கோட்டைப்பக்கம் பங்கர் வெட்ட இளைஞர்கள் அப்படியே அழைத்துபோனார்கள்.
வருஷம் 16 படத்தைத் திரும்பவும் பார்ப்பமெண்டால் அடுத்த படமாக சம்சாரம் அது மின்சாரம் போடுவதற்கு வெலிங்டன் தியேட்டரில் நோட்டீஸ் ஒட்டிகொண்டிருந்தினம். ஆனால் போர் தொடங்கி மின்சாரம் போய், வெலிங்டன் தியேட்டரில "சம்சாரம் அது மின்சாரம்" ஒரு காட்சி கூட ஓடவில்லை.
யுத்தகாலங்களில மின்சாரமும் இல்லை. யாழ்ப்பாணம் சிறீதர் தியேட்டரைத் திருத்தி விடுதலைப் புலிகள் ஜெனறேற்றர் மூலம் போர் சம்பந்தப்பட்ட ஆங்கிலப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து போட்டார்கள். என்.ஜி ஆரின் படங்களும் வருவதுண்டு. அப்பிடி " மதுரை வீரன்" என்ற படத்தைப் போய்ப் பார்த்தேன்.
யாழ்ப்பாணத்தின் அழகான பெரிய தியேட்டர் வின்ஸர் தியேட்டர் 87 இல இந்தியன் ஆமி வந்த போதே இயக்கத்தை நிறுத்தியிருந்தது. கடைசியாக " இது நம்ம ஆளு" படம் அதில வந்தது.

போனவருஷம் ஊருக்குப் போனபோது பார்த்தேன்.
சிறீதர் தியேட்டர் ஈபிடீபி கட்சியின் அலுவலகமாக மண்மூட்டை அரணுடன் இருக்குது. முந்தி அகதி முகாமா இருந்த காலிங்கன் தியேட்டரும், 
களஞ்சியமாக இருந்த மனோகராத் தியேட்டரும் வெள்ளையடிக்கப்பட்டுப் படம் போடுகினம்(புகைப்படம் பக்கத்தில்). ராஜாத்தியேட்டரும் மீண்டும் உயிர்த்திருக்கிறது. வின்ஸர் தியேட்டர் இப்ப கூட்டுறவுப் பண்டகசாலைக் களஞ்சியமாக இருக்குது. சாந்தித்தியேட்டர் இப்ப நாதன்ஸ் தியேட்டரா மாறியிருக்குது. வெலிங்டன் தியேட்டர் வெல்டிங் பட்டறை போல உருக்குலைந்து அதியுயர் இராணுவக் கட்டுப்பாட்டு முள்வேலிக்குள் சிறைப்பட்டிருக்கின்றது. லிடோ சினிமா தான் தியேட்டராகவே இருந்ததில்லை என்பதுபோல அமைதியாக நிற்கின்றது.ராணித்தியேட்டர் இப்ப சைக்கிள் பார்க்.
ரீகல் தியேட்டர் இருபது வருஷத்துக்கு முந்திப் போட்ட இங்கிலீஸ் படத்தின்ர சாயம் போன போஸ்டரோட, புதர் மண்டிய காட்டுக்குள்ள இருக்குது.

3 comments:

kirrukan said...

ஊர் வலம் போகாமல் தியட்டர் வலம் போய் இருக்கிறீர்கள் ,தியட்டர் வலம் பழைய நினவுகளை கிளறுகிறது.....

Kalai said...

ஊரில பிரச்சனை என்று படகுகளில் அகதிகள் இங்கு வருகிறார்கள். ஆனால் நீங்கள் சிட்னியில இருந்து போய் தில்லாலங்க்கடி படத்தை யாழில் பார்த்து விட்டு பதிவு எழுதினால் அவுஸ்திரெலியா அரசு படகுகளில் வருபவர்களுக்கு ஊரில பிரச்சனையில்லை என்று தானே நினைக்கும்???.

கானா பிரபா said...

இந்த நாட்டு அரசு என் தில்லாலங்கடி பட விமர்சனம் படிச்சுத் தான் குடியுரிமை வழங்கும் முடிவை எடுக்கிறதா சபாஷ்  அவுசி அரச எம்பிக்கள் நம் நாட்டுக்குச் சென்று திரும்பிய விஷயம் கேள்விப்பட்டீர்களோ என்னவோ