இரவு ஒன்பது மணியாகியும் மெல்பேர்ணில் சூரியன் மறையவில்லை. சண்முகமும் வசந்தியும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, ஈசன் தமக்காக ஒதுக்கியிருந்த மேல்மாடி அறைக்குச் சென்றார்கள்.
ஈசனும் சண்முகமும் ஆத்மநண்பர்கள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக - ஒரே அறையில் இருந்தவர்கள்.
"மங்காவுக்கு ரெலிபோன் செய்து பாப்போமா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். கட்டிலின் மறு கரையில் இருந்த வசந்தி அவரைப் பார்த்து முகத்தைச் சுழித்தாள்.
"உங்களுக்கென்ன விசரா… இதுக்குத்தானா இவ்வளவு செலவழிச்சு லண்டனிலை இருந்து ஒஸ்ரேலியா வந்தனியள்? முதலிலை ஈசனின்ரை மகளின்ரை திருமணத்தைப் பாப்பம்."
"ஓம். ஓம். நீர் சொல்லுறதும் சரிதான். இப்ப மங்காவுக்கு ரெலிபோன் செய்தால், அவள் எங்களை விடமாட்டாள். வந்து தன்னோடை நிக்கச் சொல்லி நாண்டு கொண்டு நிப்பாள்."
வசந்தி சிங்கம் போல கர்ச்சித்தாலும், சமயங்களில் அவள் சொல்வதில் ஒரு நியாயத்தன்மை இருப்பதை உணர்ந்தார் சண்முகம்.
பிரயாணக் களைப்பு. நேர வித்தியாசம். வசந்தி படுத்ததும் உறங்கிவிட்டாள். சண்முகத்திற்கு உறக்கம் வரவில்லை. அருகே இருந்த நிலாமுற்றத்தில் நடை போட்டார். வெப்பம் கலந்த காற்று உடலை வருடிச் சென்றது.
திட்டமிட்டு
அமைக்கப்பட்டிருந்த 'சிட்னம்' கிராமம் கண் முன் விரிகிறது. அனேகமாக எல்லா
வீடுகளுமே காணியின் அகலப்பாட்டைத் தொட்டு நின்றன. வீதியில் இருந்து காணிகள் சற்றே
உயர்ந்திருந்தன. தூரத்தே 'சைலோ' போன்ற மூன்று உருளைகள் பழுப்பு நிறத்தில்
குத்திட்டு நின்றன. அருகே விமானநிலையம் இருந்தபடியால் அடிக்கடி விமானங்கள் எழுந்து
மிதந்தன.
முன் வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி குப்பை வண்டிலை வளவிற்குள்ளிருந்து வீதிக்கு இழுத்து வந்து கொண்டிருந்தாள். வண்டில் அவளைத் துரத்திக் கொண்டு சரிவு வழியே வந்தது. அந்தப் பெண் வீதியின் இருமருங்கையும் மிரண்டு பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் புகுந்தாள். அவளின் தோற்றமும் மிரட்சியும் அச்சொட்டாக மங்காவைப் போலவே இருந்தது. சண்முகம் ஆடிப் போய்விட்டார். கால ஓட்டத்தில் முதுமையடைந்து அல்லல்பட்டு களைத்துவிட்ட அவர், அருகேயிருந்த தூணைப் பிடித்துக் கொண்டார்.
மங்கா அவர்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத பாத்திரம்.
எண்பதுகளில் பலாலியில் இருந்த இராணுவம் தமது எல்லைகளை விஸ்தரித்து, அயல்கிராமங்களில் அட்டகாசம் புரிந்தது. மக்கள் வாழ்விடங்களை விட்டு சிதறி ஓடினார்கள். அப்பொழுது சண்முகமும் வசந்தியும் தெல்லிப்பழையில் இருந்தார்கள். ஒருநாள் இரவு ஒன்பது மணியிருக்கும். வசந்தியின் பெற்றோர்கள் வீட்டின் கதவைத் தட்டினார்கள். அவர்களின் பின்னாலே ஒரு பெண்ணும், அவளை ஒட்டியபடி இரண்டு சின்னஞ்சிறுசுகளும் நின்றார்கள். இவர்களின் வீட்டின் பின்னாலே ஒரு மண்குடிசை இருந்தது. அதிலே அவர்களைக் குடியிருத்தும் நோக்கம். சண்முகத்திற்கு சீதனமாகக் கிடைத்த வீடு. மறுப்பதற்கில்லை. ஓமென்று சொல்லிவிட்டார்.
மங்காவும் அவளது தம்பியும் வந்தது அப்படித்தான். அப்போது மங்கா பத்தாம் வகுப்பும், தம்பி மணிவண்ணன் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். பாடசாலை விட்ட பின்பும், சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் மங்கா அவர்களுடைய பிள்ளை அபியைத் தூக்கிக் கொண்டு திரிவாள். அவளின் பின்னாலே மணிவண்ணன் - தானும் அபியைத் தூக்க வேண்டும் என்று கெஞ்சியபடி அலைவான். அபிக்கு சாப்பாடு தீத்துவதும் விளையாட்டுக் காட்டுவதும் அவர்கள் இருவரும்தான். அபி நாள் முழுக்க அவர்களுடனேயே இருப்பாள். இரவில் பாடம் கேட்டுப் படிக்க மங்காவும் மணிவண்ணனும் வீட்டிற்கு வருவார்கள். கணிதமும் விஞ்ஞானமும் சொல்லிக் குடுப்பார் சண்முகம்.
பன்னிரண்டாம் வகுப்புப் பரீட்சை முடித்த கையுடன் மங்காவிற்கு திருமணம் நடந்தது. இவர்கள்தான் அவளுக்கு 'தெத்தம்' பண்ணிக் குடுத்தார்கள். தொண்ணூற்றைந்தாம் ஆண்டளவில், வீட்டை மங்காவின் பொறுப்பில் கொடுத்துவிட்டு, நாட்டை விட்டுப் பிரிந்து சண்முகம் குடும்பத்தினர் லண்டன் புறப்பட்டார்கள். இரண்டாயிரமாம் ஆண்டளவில் எல்லாருமே யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்ந்தார்கள்.
இதையெல்லாம் ஆர் எதிர்பார்த்தார்கள்? எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே வாழ்க்கை! அதன்பிறகு யார் யார் எங்கிருக்கின்றார்கள் என்பதையே கண்டு கொள்ள முடியவில்லை.
மங்காவின் இந்த ரெலிபோன் நம்பர்கூட, எதிர்பாராமல் கடைசி நேரத்தில்தான் சண்முகத்தின் கைக்குக் கிட்டியது. அவுஸ்திரேலியாவிற்கு வந்து, மங்காவுடன் தொடர்பு கொண்டு அவளிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என விரும்பினார் சண்முகம்.
வசந்திக்கு
இதிலெல்லாம் உடன்பாடில்லை. பாத்த மாத்திரத்தில் மனிசரை மட்டுக்கட்டி விடுவாள்.
அவளின் உச்சஸ்தாயி சண்முகத்தின் நெஞ்சுக்குழிக்குள் நின்று பயம் காட்டினாலும்,
மனம் கேட்டால்தானே! மங்காவிற்கு ஒருமுறை ரெலிபோன் செய்து பார்க்கலாம் என்ற
தோரணையில், மங்காவின் ரெலிபோன் நம்பர் எழுதிய துண்டைத் தூக்கிக் கொண்டு ஹோலிற்குள்
இறங்கினார். ஒஃபிஸ் றூம் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. உள்ளே ஈசன் எதையோ எழுதிக்
கொண்டிருந்தான். கடைசி நேர ஆரவாரத்தில் இருந்த அவனிடம் அந்த நம்பரைக் குடுத்து
ரெலிபோன் செய்து பார்த்தார். ரெலிபோன் அடித்தது. ஆனால் ஒருவரும் எடுக்கவில்லை.
• நாலு நாட்கள் கடந்து விட்டன. காலை, மதியம், இரவு என்று - ஒரு நாளைக்கு மூன்றுவேளைப்படி மங்காவிற்கு ரெலிபோன் எடுத்துப் பார்த்துவிட்டார் சண்முகம். ரெலிபோன் அடிக்கின்றது. ஆனால் ஒருவரும் எடுப்பதாக இல்லை. அதிசயமாக இன்று வெள்ளி இரவு அவர்களின் 'ஆன்சர்போன்' வேலை செய்தது. தான் வந்து நிற்பதையும் ஈசனின் ரெலிபோன் நம்பரையும் அதில் பதிவு செய்தார் சண்முகம்.
சற்று நேரத்தில் மங்கா கதைத்தாள். அதே கணீரென்ற குரல். சண்முகத்தின் குரலைக் கேட்டதும் துள்ளிக் குதித்தாள். எல்லாரையும் பார்க்கவேண்டும் என்று துடியாய் துடித்தாள். நிமிஷத்திற்கு நிமிஷம் 'சண்முகம் அண்ணை, வசந்தி அக்கா' என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
"நானும் வசந்தியும்தான் வந்திருக்கிறோம். மகள் வரவில்லை. அவள் கலியாணம் செய்து இப்ப அமெரிக்காவிலை இருக்கிறாள். உமக்கு மூண்டு பிள்ளையள் எண்டு அறிஞ்சன். உங்களை ஒருக்கா வந்து பாக்க வேணும்."
"அண்ணை. நாங்கள்தான் உங்களை வந்து பாக்க வேணும். அதுதான் முறை. அதுக்குப் பிறகுதான் நீங்கள் எங்கடை வீட்டுக்கு வரவேணும். இவருக்கு எங்கை நேரம். ஒரே வேலை வேலையெண்டு அலைஞ்சு திரியிறார்."
"மங்கா! உங்களுக்குக் கஸ்டம் எண்டா நாங்கள் வாறம்."
"இல்லை... இல்லை. சற்றடே அல்லது சண்டே வந்து உங்களை நாங்கள் கூட்டி வரப்போறம்."
"திங்கள் இரவு நாங்கள் லண்டன் திரும்பிறம் பிள்ளை. சண்டே மத்தியானம் லஞ் ஒண்டு இருக்குது. அதாலை சண்டே சரிவராது."
"அப்ப சற்றடே காலமை வாறம். அவரிட்டையும் ஒருக்கா கேட்டிட்டு போன் பண்ணுறன்."
அதன் பிறகு ரெலிபோன் வரவில்லை. சனி வந்தது. சனி இரவும் வந்தது. சண்முகத்தின் நடவடிக்கைகளை வசந்தி கணக்கெடுக்கவில்லை. திரும்பவும் ரெலிபோன் செய்தார் சண்முகம். 'ஆன்சர்போன்'. ஐந்து நிடத்தில் மங்கா திருப்பி எடுத்தாள். மங்கா மான் குட்டி போல என்றார் சண்முகம்.
"மான்குட்டி
என்ன ஆன்சர்போனைப் போட்டிட்டு பக்கத்திலையே இருக்குது போல" வசந்தி
சமசியப்பட்டாள்.
"இன்னும் அவர் வரேல்லை. பாத்துக் கொண்டிருக்கிறன்" கவலையுடன் சொன்னாள் மங்கா.
"நாளைக்கு மத்தியானத்துக்கு முதல் வர வசதியெண்டா வாங்கோவன்."
"நாளைக்கு எங்கடை மூத்தமகள் ஸ்கொலசிப் எக்ஷாம் எடுக்க இருக்கிறாள். சரியான பிஷி. எக்ஷாம் நடக்கிற ஹோலுக்குப் போகவே ரூ அவேர்ஸ் எடுக்கும். அதுதான் யோசிக்கிறன். உங்களை சந்திக்கேலாமல் போயிடுமோ எண்டு கவலையா இருக்கு. உங்களுக்கொரு 'லஞ்' தருவோமெண்டு இண்டைக்கு ஆயத்தமாக இருந்தன். இந்த மனிசன் எங்கையோ போய் இன்னமும் வரேல்லை."
• ஞாயிறு மதியம் சந்திராவின் வீட்டிற்குச் சாப்பிடச் சென்றார்கள். சந்திரா சண்முகத்திற்கு தூரத்து உறவினள். கலியாணவீட்டின்போது சந்திராவை சந்தித்திருந்தார். சந்திராவின் கணவர் ஜெகன் மிகவும் பண்பானவர். அதிர்ந்து கதைக்க மாட்டார். 'ஊர்ச் சமையல்' சாப்பிட்டது போல இருந்தது.
"உங்கடை ஊர்ப் பிள்ளையெண்டுதான் நினைக்கிறன் - இஞ்சை எங்களுக்குக் கிட்ட இருக்கிறாள். உங்களுக்குத் தெரியுமா சண்முகம்?" சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சந்திரா கேட்டாள்.
"மங்காதானே! இவருக்கு மூச்சு விட மறந்தாலும் மங்காவை மறக்க மாட்டாரே!" என்றாள் வசந்தி.
"அவள் இதிலை இருந்து இரண்டாவது றோட்டிலை இருக்கிறாள். பெரிய வீடு ஒண்டு கட்டியிருக்கிறாள். இந்த ஏரியாவுக்குள்ளை நல்ல வடிவான வீடு அதுவாத்தானிருக்கும்" சந்திரா சொல்லிக் கொண்டிருக்கும்போது ஜெகன் கொடுப்பிற்குள் சிரித்தார்.
"முந்தி ஓலைக்குடிசையிலை இருந்து கஸ்டப்பட்டதுகள்" வசந்தி முணுமுணுத்தாள்.
"இஞ்சாருங்கோ! உவையளுக்கு ஒருக்கா மங்காவின்ரை வீட்டைக் காட்டுங்கோ."
"மங்காவை இண்டைக்கு வீட்டிலை நிக்கமாட்டினம் எண்டு நினைக்கிறன்" சண்முகம் சொல்ல "பரவாயில்லை, வெளியிலை நிண்டு பாத்திட்டு வாங்கோ" என்றாள் சந்திரா.
தேநீர் குடித்த பின்னர், ஜெகன் அவர்களைத் தனது காரினில் ஏற்றிக் கொண்டார். ஊரைச் சுற்றிக் கொண்டே மங்காவின் வீட்டிற்கு முன்னால் கார் நின்றது.
மாடமாளிகையைப் போன்று நிலத்துள்ளிருந்து குத்திட்டு எழுந்து நின்றது மங்காவின் வீடு. மாலைச் சூரிய ஒளியில் தகதகவென பளிங்குமாளிகை போலக் காட்சி கொடுத்தது. இந்தப் பெரிய கண்டத்திலை இப்படிப்பட்டதொரு மாடமாளிகையைக் கட்டியதையிட்டு சண்முகத்தின் மனம் பெருமகிழ்வு கொள்கிறது. வீட்டிற்குள்ளிருந்து ஒரு பொம்மைக்கார் வெளியே வந்தது. கையில் 'றிமோற் கொன்ரோல்' ஒன்றினால் துரத்திக் கொண்டு ஒரு பையன் உள்ளிருந்து வெளியே ஓடி வந்தான். மங்காவின் கடைசி என்றார் ஜெகன்.
"தம்பி, அம்மா அப்பாவை நிக்கினமா?"
"அம்மா! ஜெகன் அங்கிள் யாரையோ கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்." திரும்பவும் பொம்மைக்காரைத் துரத்திக் கொண்டு வீட்டுக்குள்ளே ஓடினான் அந்தச் சிறுவன்.
மங்காவின் கணவர் கதவைத் திறந்தார். திடுக்கிட்டுப் போனார்.
"வாருங்கோ... மங்கா நீங்கள் வந்திருக்கிறதாகச் சொன்னவா. எங்கை நேரம்? ஒரே பிஷி. இதிலை உள்ளுக்கை வந்து இருங்கோ. மங்கா 'பாத் றூமிலை’ நிக்கிறா. சொல்லிப் போட்டு வாறன்."
ஹோலிற்குள் ஒரு பெண் இருந்து ரி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். அளவுக்கு மீறிய செல்வச் செழிப்பு உள்ளே தெரிந்தது. ஒரு அரண்மனை கொள்ளுகிற மரத்தளபாடங்களால் வீடு மூச்சிரைத்து நின்றது. எங்கடை நாட்டிலை பணம் ஒரு பிரச்சினை. இஞ்சை பணத்தாலைதான் பிரச்சினை என்பதை வீடு காட்டியது.
"இவ மங்காவின்ரை மூத்த மகள்" அறிமுகம் செய்தார் ஜெகன்.
"பிள்ளை, உமக்கிண்டைக்கு 'ஸ்கொலசிப் ரெஸ்ற்' இல்லையா?" வசந்தி அவளைத் துருவினாள்.
"நோ அன்ரி!"
"வேறை யாருக்கேன்... தம்பி தங்கைச்சிக்கெண்டு இருக்குதா பிள்ளை?"
"நோ அன்ரி. ருடே இஸ் சண்டே"
"ருடே இஸ் சண்டேயாம். பெரிய உண்மையைக் கண்டு பிடிச்சிருக்கிறாள் இந்தப் பிள்ளை" சண்முகத்தைப் பார்த்து முணுமுணுத்தாள் வசந்தி. மங்கா தலையைக் குனிந்தபடி உள்ளிருந்து வந்தாள். அவளிற்கு இவர்களாகவே அங்கு போனது பிடிக்கவில்லை. முகம் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தது.
"நீங்களே வந்திட்டியள். நாங்கள் பின்னேரம் மட்டிலை உங்களிட்டை வருவோம் எண்டிருந்தனாங்கள். ஒரே வேலை. பிள்ளைகளுக்குப் படிப்பு. ஞாயிற்றுக்கிழமையிலைதான் நாங்கள் ஒண்டா இருந்து 'ஃபமிலியா' சாப்பிட்டு 'என்யொய்' பண்ணிறனாங்கள்."
'ஃபமிலியா' சாப்பிட்டு 'என்யொய்' பண்ணிறனாங்கள்!' சண்முகத்தின் உச்சந்தலையில் அது அடித்தது. மங்கா - அவள் முந்திய மங்கா அல்ல என்பதைக் கண்டு கொண்டார் சண்முகம்.
"நீங்கள் லஞ் முடிச்சிட்டியளோ? இல்லைத்தானே! நீங்கள் லஞ் எடுங்கோ. நாங்களும் பிஷிதான். பிறகு வசதி வந்தா வாறம். எல்லாரையும் பாத்திட்டோம்தானே!" வசந்தி முந்திக் கொண்டாள். சண்முகம் அவர்களின் ஃபமிலிக்குள் இல்லாத போது எப்படி அவரால் பேச முடியும்? மங்கா இன்னமும் தனது குடும்பத்தினுள் ஒருத்தியாகத்தான் இருக்கின்றாள் என்ற அவரது நினைப்பில் மண் விழுந்த பொழுது - அவர் ஊமையாகிப் போனார்.
"இல்லை... இல்லை... ரீ எண்டாலும் குடிச்சிட்டுப் போங்கோ!"
ஒரு வாய் சாப்பிடச் சொல்லி கேட்க மாட்டாளா? எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு கேள்வி! கடைசி அபியைப் பற்றியாவது?
வாழ்க்கை
வசதிகள் எல்லாம் விரிந்து கொண்டு போகிற இந்த இயந்திர உலகத்தில் - சொந்தம்,
சுற்றம், நட்பு எல்லாவற்றையும் இழந்து நிற்பதைப் போன்ற ஒரு உணர்வில், சண்முகத்தின்
குமுறல் பெருமூச்சாகிறது.
"அப்பிடியெண்டாப் பிள்ளை கொஞ்சம் தண்ணீர் தாரும். குடிச்சிட்டுப் போவம்" இதையும் வசந்திதான் சொல்கின்றாள்.
தண்ணீர் வந்தது. குடித்தார்கள். வசந்தி தனது கைகளில் கொஞ்சம் நீரைத் தெளித்து பத்தோடு பதினொன்றாக கையையும் கழுவிக் கொண்டாள்.
மங்காவின் வீட்டுத் தொலைபேசி அடித்தது.
"அப்பா... ரெலிபோன். எடுக்கவா? விடவா?" கோட்லஸ்போன் ஒன்றைத் தூக்கிக் கொண்டு மகன் வந்தான்.
"நம்பரைப் பாரும் மங்கா!" என்றார் கணவர்.
"புது நம்பராக் கிடக்கு" தலையைச் சொறிந்தாள் மங்கா.
"அப்ப எடுக்காதையும்" உரப்பாகச் சொன்னார் கணவர்.
தெரியாத நம்பரில் இருந்து நாலைந்து நாளாக - அந்த 'கோலர் டிஸ்பிளே போனுக்கு' அடிச்சு அடிச்சு களைச்சுப் போனேனே! சன்முகத்தின் மனம் அழுதது.
"எழும்புங்கோ! எழும்புங்கோ!!" வசந்தி துரிதப்படுத்தினாள்.
சண்முகம் மங்காவை 'தங்கைச்சி' என்று கூப்பிடுவார். சிலவேளைகளில் பாசம் பொங்கினால் 'பிள்ளை' என்பார். ஏனோ வாய் தவறி, "மங்கா நாங்கள் போட்டு வாறம்" என்றார்.
"மங்கா மங்கா எண்டு இந்த மனிசன் ஒரு கிழமையாக் கிடந்து தவிச்சுது. அதுவும் இப்ப முடிஞ்சுது" காருக்குள் வசந்தி புறுபுறுத்தபடியே வந்தாள்.
"ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. மங்காவுக்கு இப்ப ஏதோ கஸ்டகாலம். பாத்தனீர்தானே! மங்கா எவ்வளவு சுறுசுறுப்பெண்டு. மங்கா ஒரு மான்குட்டி போல…" சமாதானம் சொன்னார் சண்முகம்.
"இந்த மனிசனைத் திருத்தேலாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிறவிக்குணம்" என்றாள் வசந்தி.
No comments:
Post a Comment