அரனார் தொண்டராய் அருகி லிருந்தார்
அவரின் மனத்தில் காமம் எழுந்தது
காமனை எரித்தவர் சாபம் கொடுத்தார்
அரனின் தொண்டர் அவனியில் பிறந்தார்
அவரின் மனத்தில் காமம் எழுந்தது
காமனை எரித்தவர் சாபம் கொடுத்தார்
அரனின் தொண்டர் அவனியில் பிறந்தார்
புவனியில் பிறவென அரனார் மொழிந்தார்
தொண்டர் திகைத்து தாழினை பணிந்தார்
கவலை விட்டிடு காப்பேன் என்றார்
புவனியில் தொண்டர் பயணந் தொடர்ந்தார்
அந்தண குலத்தில் பிறந்தார் அடியார்
அழகாய் இருந்ததால் சுந்தரர் ஆனார்
அழகுக் குழந்தையை அரசன் கண்டான்
அரசன் மனையில் சுந்தரர் வளர்ந்தார்
அணிமணி புனைந்து அவரும் இருந்தார்
ஆலால சுந்தரர் அரண்மனை வாழ்வு
ஆனந்தக் கடலாய் ஆகியே விரிந்தது
திருமண வயதினை எட்டினார் சுந்தரர்
மணவினை ஆற்றிட பெற்றோர் விரும்பினர்
மங்கல நாளினில் மணமகன் மணமகள்
வந்திடும் வேளை சங்கடம் வந்தது
எந்தையாம் ஈசன் சுந்தரர் தமிழை
தந்திரம் செய்து கேட்டிட வந்தார்
கிழவனாய் வந்தார் யாவரும் கேட்டிடச்
மணமகன் சுந்தரன் அடிமையே என்றார்
அடிமை என்றதும் அனைவரும் திகைத்தனர்
மணமகன் சுந்தரர் வெகுண்டுமே எழுந்தார்
பித்தா என்று கிழவனைத் திட்டினார்
வந்தவர் யாவரும் கிழவரைப் பார்த்தனர்
அடிமை இவனே ஆதாரம் உண்டு
கிழவர் ஓலையைக் காட்டினார் சபையிலே
யாவரும் மெளனம் ஆகியே நின்றனர்
கிழவர் பின்னே மணமகன் சென்றனன்
ஆலயம் ஒன்றனுள் கிழவர் புகுந்தார்
அனைவரும் காணவே அரனார் தோன்றினார்
சுந்தரர் அழுதார் தொழுதார் அரனை
பாடிடு என்று பரமன் பணித்தார்
எப்படிப் பாடுவேன் என்றார் சுந்தரர்
திட்டிய வார்த்தையை முதலாய் கொள்ளு
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
முத்தாய் தமிழில் முகிழ்த்துமே வந்தது
சிவனார் மகிழ்ந்தார் சேவித்தார் சுந்தரர்
தலமெலாம் சென்றார் தமிழமு தீந்தார்
சைவம் தளைக்க தத்துவம் சிறக்க
சுந்தர் செந்தமிழ் சுவையுடன் எழுந்தது
சுந்தரர் பக்தி தோழமைப் பக்தி
செந்தமிழ் அடியார் போற்றிடும் பக்தி
அந்தமில் அன்பில் விளைந்த நல்பக்தி
ஆண்டவன் அருகினில் அணைந்திடும் பக்தி
பூதலம் பிறந்த காதல் பெண்களை
கைத்தலம் பற்றிட வைத்த நல்பக்தி
காதல் தூதாய் கறைக்கண்டன் சென்றிட
கட்டளை இட்ட கனிவுடைப் பக்தி
பக்திச் சுவையினைப் பருகப் பருக
சேக்கிழார் காப்பியம் ஆக்கியே அளித்தார்
காப்பியப் பொருளைக் கொடுத்தவர் சுந்தரர்
காலம் முழுதும் நினைக்கிறார் யாவரும்
சுந்தரர் பாடல்கள் சுவையுடைப் பாடல்கள்
செந்துருப் பண்ணில் சிறந்திடும் பாடல்கள்
சம்பந்தர் அப்பர் தொட்டிடாப் பண்ணே
தமிழுக்கு வாய்த்திட்ட வரமான பண்ணே
ஏழாந் திருமுறை ஆகியே நின்று
எங்கள் சைவம் காத்திட வந்தது
ஆழமாங் கருத்தை அடக்கியே வைத்து
ஆலால சுந்தரர் அருந்தமிழ் ஈந்தது
வன்தொண்டர் பெயரினைப் பெற்றிட்ட போதும்
வன்மமே இல்லா மென் தொண்டராகினார்
கயிலை நாதனே கயிலை அழைத்தார்
காமம் கலைந்தது கலந்தார் சுந்தரர்
அரச வாழ்வில் வாழ்ந்தார் சுந்தரர்
ஆனால் அகத்தில் அரனே நிறைந்தார்
மண்ணக வாழ்வினைப் புண்ணிய மாக்கினார்
மாசிலா மனத்துடன் வையகம் இருந்தார்
பக்தியில் நட்பினை புகுத்திய அடியார்
பரமனைப் பற்றியே வாழ்ந்த நல்லடியார்
முத்தியைக் கூட நட்புக்கும் பகிர
சுத்தமாம் மனத்துடன் கேட்ட நல்லடியார்
மனத்தை அடக்கு மாசுகள் அகலும்
கணத்தில் கூடக் காமம் வேண்டாம்
சிவத்தை ஒதுக்கில் சிறப்பை இழப்பாய்
அகத்தில் இருத்து அரனும் அருள்வான்
No comments:
Post a Comment