இலங்கைச் செய்திகள்

மோடி தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி பாராட்டு; உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் போர்க்கப்பல்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர் அதானியுடன் ஜனாதிபதி சந்திப்பு

மதுரையிலிருந்து-யாழுக்கு விரைவில் விமான சேவை

யாழில் ஆரம்பிக்கப்படும் வரை ஏற்பாடு; சபையில் அமைச்சர் டிரான் அலஸ் வட பகுதி மக்களுக்கு குருநாகலில் சேவை NIC ஒரு நாள் சேவை


மோடி தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி பாராட்டு; உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பு

- விமான, கப்பல் சேவைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு

July 21, 2023 1:33 pm 

 ஜனாதிபதி ரணில் – பிரதமர் மோடி சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு
– திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்து தென்னிந்தியாவில் இருந்து எரிபொருள் குழாய்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று (21) சந்தித்தார்.

இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று (20) இந்தியா சென்ற அவர் இச்சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இதன்போது! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட இந்தியாவின் ஆச்சரியமளிக்கும் வகையிலான பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்பில் பாராட்டுகளைத தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என ஜனாதிபதி இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின், ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ள இந்தியாவிற்கான தனது முதல் விஜயத்தின் போது, அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் கடினமான காலங்களில், இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கம், இந்திய மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்தார்.

குறித்த முயற்சிகள் தொடர்பில் பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமுல்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய-இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை இங்கு வலியுறுத்தினார்.

இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமான சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இங்கு கலந்துரையாடினர்.

இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் இந்திய விஜயம், இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதையும், இலங்கை – இந்திய உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின் கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், தடையற்ற இருவழி மின்சார வர்த்தகத்தை எளிதாக்குகிறது. அத்துடன், இது பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியையையும் ஊக்குவிக்கும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், தனது இந்திய விஜயம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போட்டிமிகு உலகில் பரஸ்பர சுபீட்சத்தை நோக்கமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான புவியியல் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

தலைமன்னார் – இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மேலும் ஊக்கமளிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை உருவாக்கவும் தற்போதுள்ள வரலாற்று உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இந்தியாவும் இலங்கையும் கவனம் செலுத்தியுள்ளன. அதனை செயற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வினை மேற்கொள்வதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்திய ஊடகங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

“பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் புதுடெல்லிக்கு வருவதை கௌரவமாக கருதுகிறேன். கடந்த ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நான் இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் நிலையில், இந்த பயணம் எனக்கும், எனது அரசுக்கும் மிக முக்கியமான பயணம் என்றே கூறவேண்டும். இந்த பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும் உபசரிப்புக்களை வழங்கிய பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம்.

 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டிய ஜனாதிபதி, இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும்.

 

கடந்த வருடம் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார, சமூக, அரசியல் ரீதியிலான அசாதாரண சவால்கள் மற்றும் அந்தச் சவாலைகளை வெற்றிகொள்வதற்காக தன்னால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பிலும் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்திருந்தேன்.

 

எமது அண்மைய வரலாற்றில் மிக சவாலான காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் மனப்பூர்வமாக நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

 

இலங்கையின் அண்மைக்கால நிலைமைகளை மீளாய்வுச் செய்யும் போது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் இலங்கையர்களின் அனைத்து சமூகங்களுக்கும் பலன் கிட்டும் வகையில், நீதி, நியாயத்துடனான நிலையான, ஸ்திரமான அபிவிருத்தியை நோக்கிய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான எனது அர்ப்பணிப்புக்களை பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்துள்ளேன்.

 

இதற்கு அப்பால் சென்று இலங்கையை பாரிய பொருளாதார மறுசீரமைப்பு பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதையும், இந்த செயற்பாடுகளின் நிலையான பிரதிபலன்களை இலங்கை தற்போது அடைந்துள்ளதாகவும், நாட்டின் முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நம்பிக்கை மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளதையும் நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.

 

மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த பரந்துபட்ட யோசனை குறித்து கருத்துக்களையும் நான் அவருடன் பகிர்ந்துகொண்டேன். இந்த பணிகள் குறித்து இணக்கப்பாட்டுடன், தேசிய ஒற்றுமைக்காக பணியாற்றுமாறு நான் பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். இந்த முயற்சிகளின் போது, பிரதமர் மோடி அவர்கள், தனது ஒத்துழைப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

நாம் தற்போது எமது பொருளாதாரத்தை, நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவதும், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் மேம்படுத்தப்பட்ட முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் அவசியமான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.

 

இந்த நோக்கத்தை வெற்றிகொள்வதற்காக, பலமான பங்களிப்பை அடித்தளமாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் ஊடாக எதிர்கால இலங்கை – இந்திய பொருளாதார கூட்டிணைவுக்காக ஒருங்கிணைந்த நோக்கத்திற்காக ஒன்றுபட வேண்டும்.

 

எமது இருதரப்பு இராஜதந்திர தொடர்புகளில் 75ஆவது வருடத்தைப் பூர்த்திசெய்யும் போது, அடுத்த சில தசாப்தங்களில் எமது எதிர்கால சந்ததியினருக்காக வழங்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் மேலதிக வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான உள்ளக செயற்பாடுகள் ஊடாக மிகவும் பாதுகப்பான எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கான இயலுமை பற்றியும் ஆராய்தோம்.

 

இரு நாடுகளுக்கும் இடையில், பல தசாப்தங்கள் பழமையான நாகரிகம், கலாசார, மானிட மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் போதான உள்ளகச் செயற்பாடுகள், வாயிலாக எமது ஒன்றிணைந்த நோக்குக்கான அடித்தளம் உருவாகியுள்ளது.

 

எமது உறவுகள் என்ற நூள் வரலாற்றிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால இலக்குகளுக்கான ஆரம்பத்திற்கு நிகழ்காலமே மிகச் சிறந்த தருணமாகும்.

 

பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது. அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுகிறது. அது சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தும்.

 

தலைமன்னார் – ராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை ஆகிய பகுதிளுக்கிடையிலான படகு சேவை இரு நாடுகளுக்கான கடல்வழிப் போக்குவரத்துக்கு வலு சேர்க்கும். இலங்கை மற்றும் இந்திய உறவுகளுக்கான வேறு வழிமுறைமைகள் தொடர்பில் ஆராய்வதும் பொருளதார வளர்ச்சிக்கு மற்றுமொரு வலுவாக அமையும்.

 

புதிய மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டிய துறைகளுக்கு இருதரப்பு பொருளாதாரம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை மற்றும் – இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்ற விடயத்திற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக சேவை வழங்கல் மற்றும் தனி நபர்களை மையப்படுத்திய சேவைகளுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இலங்கை ஆர்வமாக உள்ளது.

 

இரு நாடுகளுக்கும் இடையில் மேம்படுத்தப்படும் தொடர்பாடல், சுற்றுலாத்துறை, மனிதர்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் மற்றும் கலாசார தொடர்பாடல்கள் உள்ளிட்ட துறைகளை வலுவூட்டுவதற்கான முக்கியமான விடயங்களுக்கு நாம் இணங்கியுள்ளோம். தொற்றுநோய் பரவலுக்கு பின்னராக காலப்பகுதியில், இலங்கையின் சுற்றுலாத்துறை தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்குடன் இருக்கின்ற நிலையில், இந்தியர்களின் இலங்கைக்கான சுற்றுலா மிகப்பெரிய சந்ததையாக மாறியுள்ளது. அதனால், Unified Payments Interface (UPI) முறைமையை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் முறைமையை வலுவூட்டுவதால், ஏனைய துறைகளையும் பலப்படுத்த முடியும்.

 

பசுமை பொருளாதாரத்திற்கு இலங்கையின் தேசிய முக்கியத்துவம் உலக அர்பணிப்புக்களுக்கு இணங்க வலுசக்தி பாதுகாப்பை உறுதி படுத்துவதற்காகவும், பசுமை மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுவூட்டலுக்கான இந்தியாவுடன் கைகோர்த்துக்கொள்வது பெறுமதியான வாய்ப்பு என இலங்கை கருதுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக்கான துறைசார் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் வலியுறுத்துகிறேன். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அதிக வலுவுடனான மின் பரிமாற்ற தொடர்பு கட்டமைப்பு ஒன்றை நிறுவினால் இருநாடுகளுக்கும் இடையிலான இருவழிப்பாதை மின் வர்த்தகத்திற்கான வழியை ஏற்படுத்தும்.

 

இந்தியாவின் ஒத்துழைப்போடு, திருகோணமலை இலங்கையின் வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாகவும் திருகோணமலையை மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும்.

 

பிரதமர் மோடி மற்றும் நான் நம்பிக்கை கொண்டுள்ள வகையில், இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்து இலங்கை வரையிலான பல்துறைசார் பெற்றோலிய குழாய் கட்டமைப்பொன்றை உருவாக்குவதால், இலங்கையினால் வழங்கக்கூடிய உறுதியான வலுசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதே பிரதமர் மோடியினதும் எனதும் எதிர்பார்ப்பாகும்.

 

சமூக – பொருளாதார அபிவிருத்தியின் அதிகமான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான எமது பொது முயற்சியை வெற்றிகொள்வதற்காகவும், எமது மக்களின் போஷாக்கு நிலைமையை மேம்படுத்துவதற்கான பால் உற்பத்தி மற்றும் கால்நடை துறைகளில் எமது ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்தாலோசித்தோம்.

 

கல்வித்துறையின் ஒத்துழைப்பு எமது இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சமாக காணப்படுகிறது. இந்திய உதவியுடன் இலங்கைக்குள் புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவது முக்கியமானதென நம்புகிறோம். இதனால் எமது இளைஞர், யுவதிகளில் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த முடியும் என்பதோடு அவர்களை தேசிய அபிவிருத்தி பொறிமுறைக்குள் உள்வாங்கப்படுவர்.

 

எமது இருதரப்பு தொடர்புகளை மீளாய்வுச் செய்றவதற்காகவும், உலக மற்றும் கலாசார தொடர்புகளை வலுவாக பயன்படுத்திக்கொள்ளவும் நவீன உலகத்தில் எமது எதிர்கால எதிர்பார்ப்புக்களுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்த எனது இந்திய விஜயம் வாய்ப்பளித்துள்ளது என நம்புகிறேன்.

 

இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை – இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடும் என்றும், இலங்கை அனைத்து சமூக குழுக்களினதும் நிலையான அபிவிருத்தி மற்றும் தேசிய ஒருமைப்பாடு இலங்கையின் அனைத்து சமூகத்தினர் மத்தியிலுமான நல்லிணக்கம் மற்றும் இலங்கை மக்களுக்கு சுபீட்சமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எனது நோக்கத்திற்கு உதவும் என நம்புகிறேன்.’’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நன்றி தினகரன் 






கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் போர்க்கப்பல்

-195 பேர் பணியாற்றும் கப்பல், 151 மீற். நீளமானது

July 22, 2023 6:00 am 

 

ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையணிக்குச் சொந்தமான (Japan Maritime Self-Defense Force) ‘SAMIDARE (DD-106)’ என்றழைக்கப்படும் போர்க்கப்பல் நேற்று முன்தினம் (20) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக, இலங்கை கடற்படை தெரிவித்தது.

இந்த ஜப்பானியக் கப்பலை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர். 151 மீற்றர் நீளமுள்ள இந்த போர்க்கப்பலில் 195 பேர் பணியாற்றுகின்றனர். இந்தக் கப்பல் இம்மாதம் 29ஆம் திகதியன்று நாட்டிலிருந்து புறப்படத் திட்டமிட்டுள்ளது.

இந்த விஜயத்தில் ‘SAMIDARE (DD-106)’ கப்பலின் கட்டளை அதிகாரி, தளபதி OKUMURA Kenji மற்றும் Flag Officer, ரியர் அட்மிரல் NISHIYAMA Takahiro ஆகியோர் வந்துள்ளனர்.

இந்தக் கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கிடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். கப்பல் புறப்படும் போது, கொழும்பிலிருந்து இலங்கை கடற்படைக் கப்பலுடன் புகைப்படக் காட்சியில் பங்கேற்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 







இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர் அதானியுடன் ஜனாதிபதி சந்திப்பு

- இலங்கையில் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசியதாக கௌதம் அதானி தெரிவிப்பு

July 21, 2023 11:47 am 

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று (21) காலை புதுடெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இந்தியாவுக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) இந்தியா சென்றடைந்திருந்தார்.

புதுடில்லி சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதுடில்லி விமான நிலையத்தில் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வீ. முரளிதரனினால் வரவேற்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கௌதம் அதானிக்கும் இடையே சந்திப்பொன்று புது டில்லியில் இன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தனது சமூக வலைத்தள கணக்குகளில் (Twitter, Threads) பதிவிட்டுள்ள கௌதம் அதானி, பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி, 500 மெகாவாற்று காற்றாலை திட்டம், பசுமை ஜதரசனை உற்பத்தி செய்வதற்கான எமது புதுப்பிக்கத்தகு சக்தி நிபுணத்துவத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட இலங்கையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியமை பெருமையளிக்கிறது.

 

நன்றி தினகரன் 





மதுரையிலிருந்து-யாழுக்கு விரைவில் விமான சேவை

-இந்திய ஊடகங்களில் செய்திகள்

July 21, 2023 7:20 am 

இந்தியாவின் மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமான சேவைகள் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. விமான சேவையை வாரத்துக்கு 07 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை – கொழும்புக்கிடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்புக்கு நேரடி விமான சேவையை, ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




யாழில் ஆரம்பிக்கப்படும் வரை ஏற்பாடு; சபையில் அமைச்சர் டிரான் அலஸ் வட பகுதி மக்களுக்கு குருநாகலில் சேவை NIC ஒரு நாள் சேவை

July 20, 2023 6:00 am

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவையை வடக்கில் ஆரம்பிக்கும் வரை குருநாகல் மாவட்டத்தில் வடக்கு மக்கள் தமக்கான ஒருநாள் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், வவுனியாவில் அதற்கான பௌதீக வளம் கிடையாது. எனினும், இந்த ஆண்டின் இறுதியில் குருநாகல் மாவட்டத்தில் இடம் பெறவுள்ள தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வடக்கு மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை கேள்வி நேரத்தின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு வட மாகாணத்திலிருந்து 05 வீதமானோரே வருகை தருகின்றனர். நிறைவடைந்த 06 மாத காலப்பகுதியில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவை ஊடாக அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு 1,12,596 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள். அவற்றில் 4,968 விண்ணப்பங்களே வட மாகாணத்தைச் சேர்ந்தவை.வடக்கில் வவுனியா பிரதேச செயலகத்தில் தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க அங்கு பௌதீக வளங்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், வட மாகாணத்தின் ஒரு பிரதேசத்தில் ஒருநாள் சேவை விநியோகத்தை ஆரம்பிக்க கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் குருநாகல் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை நடத்தப்பட உள்ளது. அதற்கிணங்க வட மாகாணத்தில் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் வரை வடக்கு மாகாண மக்கள் குருநாகல் மாவட்டத்துக்கு வருகை தந்து அந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

 

No comments: