மலையகத் தமிழ் மாணவர்களுக்கான குரலாகத் திகழ்ந்த ஆளுமை பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முருகபூபதி


இலங்கைக்கு  அறுபது சதவீதமான  அந்நிய செலாவணியை பெற்றுத்தந்த மக்கள்,  மலையகத்தில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள்தான்.

எனினும் அவர்களின் வாழ்க்கைத்தரம்,  கல்வி, தொழில் வாய்ப்பு,  பொருளாதாரம் ,  வீட்டு வசதி என்பன இன்றும்  முன்னேற்றப்பாதையில் செல்லவில்லை.

அரசுகள் பல பதவிக்கு வந்தபோதிலும்,  அம்மக்கள் தமது  நாட் சம்பளத்தை உயர்த்தக்கோரி தொடர்ந்தும் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள்.

அவர்கள் மத்தியிலிருந்து  கலை, இலக்கிய, கல்விப் பின்புலத்திலிருந்து வெளிப்பட்ட ஆளுமைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  அந்த வரிசையில்   ஒரு பேராளுமைதான்


பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள்.

டி. எஸ். சேனநாயக்கா பிரதமராகவிருந்தபோது   மலையக தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.  அதன் பின்னர்  ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் ஆயிரக்கணக்கான மலையக மக்கள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். 

இம்மக்களின் அழுகுரலை பதிவுசெய்த  படைப்பிலக்கிய நூல்தான்  மலையக முன்னணி எழுத்தாளர் மு. சிவலிங்கம் எழுதிய ஒப்பாரிக்கோச்சி  புதினம்.  

மலையக மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களின் வரிசையில் வந்திருக்கும் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் இம்மாதம் 04 ஆம் திகதி தனது 78 வயதில் மாரடைப்பு வந்து எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்.

   இலங்கையில் வாழும் நான்கு இனக்குழுக்களுள் மலையகச் சமூகமும் ஒன்று. மலையகத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் (பேராதனை, ஊவா வெல்லச, சப்பிரகமுவ ) உண்டு.  ஆனால், இங்கு மலையக மக்கள் சமூகத்தின் , வாழ்வியல், கலை, கலாசாரம் தொடர்பான கற்கை நெறிகளோ, அடையாளமோ எதுவுமில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் என்பன இலங்கைத் தமிழரின் அடையாளம் கொண்டவை. இராமநாதன்  கலை அக்கடமி, விபுலாநந்தர் இசைக் கல்லூரி என்பன அத்தகையவை. அவ்வாறே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களின் அடையாளம் உண்டு. சுருங்கக் கூறின், மலையக மக்களின் தனித்துவ அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் ( சகல இன மாணவர்களும் பயிலும் ) தேசியப் பாங்கான மலையகப் பல்கலைக்கழக கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. 


இன்று இயங்கிவரும் 16 தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் காலப்போக்கில் நிச்சயமாக புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படப் போகின்றன. அவற்றின் வளர்ச்சி நின்று விட முடியாது. புதிதாக உருவாக்கப்படும் தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றை நுவரெலியாவில் நிறுவுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.     இவ்வாறு  தொடர்ந்து எழுதியும் பேசியும்  அயராமல் குரல் எழுப்பிவந்தவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரம்.  

ஓய்வுபெற்ற தகைமைசார் பேராசிரியராக தொடர்ந்தும்  கலை, இலக்கிய, கல்வி  சார்ந்த நிகழ்வுகளிலும் சமகால மெய் நிகர் அரங்குகளிலும்  இணைந்திருந்தவர்.  

பதுளையில் 1944 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் சந்திரசேகரம் அவர்கள், பதுளை ஊவா கல்லூரியில் தனது ஆரம்பக்கல்வியையும், அதனையடுத்து யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் உயர் கல்வியையும் தொடர்ந்தார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை பூர்த்திசெய்திருக்கும் அவர், ஜப்பானிலும்   பட்டம் பெற்றவர். கொழும்பு , பேராதனை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக கடமையாற்றியிருக்கும் அவர்  இலக்கிய நிகழ்வுகள் பலவற்றுக்கும் தலைமை ஏற்று சிறப்பித்தவர்.

பத்திரிகைகள் ,  இதழ்களில் அடிக்கடி ஆக்கங்கள் எழுதிவந்திருக்கும் பேராசிரியர் சந்திரசேகரம், மலையகத்தில், மலையக மக்களின் கலாசாரத்தையும் பண்பாட்டுக்கோலங்களையும் பயிற்றுவிக்கும் தனியான பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்று தொடர்ந்தும் குரல் எழுப்பிவந்தவர்.

பன்முக ஆளுமையும் பல்துறை ஆற்றலும் நிரம்பப்பெற்ற பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு மணி விழா நடந்தபோது வெளியான சிறப்புமலரின் உள்ளடக்கம், அவரது சிறப்பியல்புகளையும் பேசுகிறது.

அவர், பின்வரும் பதவிகளிலும் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர்:

முதுநிலை விரிவுரையாளர் -  இணைப் பேராசிரியர்:    கல்விப் பீடம் கொழும்பு பல்கலைக் கழகம்.

  தேசிய கல்வி ஆணைக்குழு, ஆசிரியர் கல்விக் கான தேசிய அதிகார சபை , தேசிய கல்வி  நிறுவகப் பேரவை

ஆகியவற்றின் உறுப்பினர்.

தலைவர் :  ஜப்பானியபட்டதாரிகள் சங்கம்

தலைவர் :  கொழும்புத் தமிழ்ச் சங்கம்

தேசிய கல்வி ஆணைக் குழுவின் பொதுக் கல்விக்கான நிலையியற் குழு,  மற்றும்   தேசிய கலைத் திட்டக் குழு (தேசிய கல்வி நிறுவகம்)  பாடநூல் மதிப்பீட்டுக் குழு (கல்வி அமைச்சு) ஆகியனவற்றின் உறுப்பினர்.

இலங்கை – இந்தியர் வரலாறு, கல்வி இயல் கட்டுரைகள், புதிய நூற்றாண்டுக்கான கல்வி, கல்விச்செயற்பாட்டில் புதிய செல்நெறிகள், மலையக கல்வி சில சிந்தனைகள்  உட்பட  பல நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும்  வரவாக்கியிருப்பவர்.

மும்மொழிகளிலும் பொதுவௌியில் பேசும் ஆற்றலும் மிக்கவர். அதனால், மலையக மக்களின் தேவைகளை தமிழ்பேசத் தெரியாத சிங்கள அரசியல் தலைவர்களிடத்திலும்  அவரால் முன்வைக்க முடிந்தது.

முன்னைய நல்லிணக்க அரசின் பதவிக்காலத்தில்,  அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை கல்வியியல் சார்ந்த பல கட்டுரைகளை ஊடகங்களில் தொடர்ந்து எழுதிவந்த  அவரது கரம் ஓய்ந்துவிட்டது.

அவரது மறைவு ஈடுசெய்யப்படவேண்டிய இழப்பாகும்.

---0---

No comments: