இலங்கைச் செய்திகள்

யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 67 பேர் வீடு திரும்பினர்

யாழ். யுவதிக்கு பிரான்ஸ் நாட்டில் உயரிய விருது

சீனா மேலும் 1.6 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அன்பளிப்பு செய்ய தீர்மானம்

30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இருமாதங்களுக்குள் ஊசி வடக்கு, கிழக்கிற்கு விசேட தடுப்பூசி வழங்கும் திட்டம்

தடுப்பூசி திட்டத்திற்கு WHO ஒத்துழைக்கும்

மஜ்மா நகர் மையவாடியில் ஆயிரத்தை கடந்த உடல்கள் நல்லடக்கம்


யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 67 பேர் வீடு திரும்பினர்

யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 67 பேர் வீடு திரும்பினர்-Quarantine Completed Foreign 67 Returnees Sent Home

- வௌிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவிப்பு

பாதுகாப்புப்‌ படைத்‌ தலைமையகம்‌ (யாழ்ப்பாணம்‌), 52ஆவது தரைப்‌ படைத்தலைமையகம்‌ மற்றும்‌ 521ஆவது காலாட்‌ படைப்பிரிவின்‌ கீழ்‌ பராமரிக்கப்பட்டு வருகின்ற வசாவிளான்‌ தனிமைப்படுத்தல்‌ மையத்தில்‌ தனிமைப்படுத்தப்பட்டிருந்த சவுதி அரேபியா, கட்டார்‌, குவைத்‌, சைப்பிரஸ். ஜோர்தான்‌ ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த 67 பேர்‌ இரண்டு வாரங்கள்‌ தனிமைப்படுத்தப்படுத்தலை நிறைவு செய்து இன்று (15) தத்தமது வீடுகளிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்‌.

யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 67 பேர் வீடு திரும்பினர்-Quarantine Completed Foreign 67 Returnees Sent Home

கதிர்காமம், காவத்தை, காலி, அம்பாறை ஆகிய பிரதேசங்களில்‌ காணப்படும்‌ தமது வீடுகளிற்கு செல்வதற்குரிய போக்குவரத்து வசதிகள்‌, சிற்றுண்டிகள்‌, மதிய உணவுப்பொதிகள்‌, குடிநீர போன்ற வசதிகளும்‌ இராணுவத்தினரால்‌ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பாதுகாப்புப்‌ படைகளின்‌ பிரதானியும்‌, இராணுவத்தளபதியும்‌ மற்றும்‌ கொவிட்‌-19 வைரஸ்‌ தடுப்பு மையத்தின்‌ பிரதானியுமான ஜெனரல்‌ ஷவேந்திர சில்வாவின்‌ எண்ணக்கருவிற்கு அமைவாகவும்‌ பாதுகாப்பு படைத்‌ தலைமையகம்‌ (யாழ்ப்பாணம்‌) கட்டளைத்‌ தளபதி மற்றும்‌ யாழ்‌.  கொவிட்-19 தடுப்பு மையத்தின்‌ இணைப்பாளருமான மேஜர்‌ ஜெனரல்‌ பியந்த பெரேராவின்‌ மேற்பார்வையின்‌ கீழும்‌ இத்தனிமைப்படுத்தல்‌ செயற்பாடானது இடம்பெற்றது.

மேலும்‌ இச்சந்தர்ப்பத்தில்‌ 521ஆவது காலாட்‌ படைப்பிரிவின்‌ படைத்தளபதி பிரிகேடியர்‌ மஹேன்‌ சல்வதுர உட்பட இராணுவ உயரதிகாரிகளால்‌ தனிமைப்படுத்தலில்‌ இருந்த அனைவருக்கும்‌ சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டிருந்தது.

பின்னர்‌ குறித்த தனிமைப்படுத்தல்‌ மையத்தில்‌ தனிமைப்பட்டு இருந்தவர்கள்‌ தமக்கு தேவையான வைத்திய உதவிகள்‌, உணவு மற்றும்‌ குடிபான வகைகள்‌, பாதுகாப்புகள்‌ மற்றும்‌ தமக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும்‌ வழங்கியமைக்காக இராணுவத்தினருக்கு மனதார நன்றி பாராட்டியிருந்தமையும்‌ குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




யாழ். யுவதிக்கு பிரான்ஸ் நாட்டில் உயரிய விருது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வி சுவஸ்திகா இந்திரஜித் பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை பெற்றுள்ளார். பாரிஸில் வசிக்கும் சுவஸ்திகா பாரி சக்லே (Paris-Saclay) பல்கலைக்கழகப் பட்டதாரியாவார். இந்நிலையில் பிரான்ஸில் உயரிய விருதினை பெற்ற இரண்டாவது தமிழ் பெண்ணாக இவர் பெயரிடப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் சுகாதார சங்கம், பிரான்ஸ் இயற்பியல் சங்கம் என்பன சிமி பிசிக்ஸ் (Chimie-Physique) என்ற அமைப்பும் இணைந்து ஒவ்வொரு வருடமும் சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான விருதினை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டுக்கான விருது, சுவஸ்திகா இந்திரஜித்துக்கு கிடைத்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.  நன்றி தினகரன் 





சீனா மேலும் 1.6 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அன்பளிப்பு செய்ய தீர்மானம்

சீனா மேலும் 1.6 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அன்பளிப்பு செய்ய தீர்மானம்-China Decided to Donates 16 Lakhs More Sinopharm COVID19 Vaccine

மேலும் 1.6 மில்லியன் டோஸ் Sinopharm தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன் உத்தியோகபூர்வ ட்விற்றர் பக்கத்தில் இடுகையொன்றை இட்டுள்ள தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் வாரங்களில் இலங்கையை வந்தடையவுள்ள இத்தடுப்பூசிகள், நாட்டின் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு உதவியாக அமையுமென சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனா சிக்கலிலிருந்த சமயத்தில் இலங்கை அரசாங்கம் செய்த உதவிகளை ஒருபோதும் மறக்கமாட்டோம் என, குறித்த ட்விற்றர் இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, Sinopharm கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள்...

இலவசமாக கிடைத்தவை

  • மார்ச் 31 - 600,000
  • மே 25 - 500,000
  • (மேலும் 1.6 மில்லியன் கிடைக்கவுள்ளன)

கொள்வனவு செய்யப்பட்டவை

  • ஜூன் 06 - ஒரு மில்லியன்
  • ஜூன் 09 - ஒரு மில்லியன்
  • ஜூலை 02 - ஒரு மில்லியன்
  • ஜூலை 04 - ஒரு மில்லியன்
  • ஜூலை 11 - 2 மில்லியன்

நன்றி தினகரன் 






30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இருமாதங்களுக்குள் ஊசி வடக்கு, கிழக்கிற்கு விசேட தடுப்பூசி வழங்கும் திட்டம்

ஜனாதிபதியுடன் அமைச்சர் நாமல் நடத்திய கலந்துரையாடலில் தீர்மானம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் கொவிட்19 தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். அதற்கமைய, வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட்19 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 





தடுப்பூசி திட்டத்திற்கு WHO ஒத்துழைக்கும்

இலங்கை பிரதிநிதி அலகா சிங் உறுதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்வைத்துள்ள கொவிட் 19 தடுப்பூசி திட்டம் நடைமுறை சாத்தியமானதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அலகா சிங் (Alaka Singh) தெரிவித்துள்ளார்.  இலங்கை அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் இலக்கை அடைவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் அலகா சிங் குறிப்பிட்டார்.

கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை கண்காணித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்திலுள்ளவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் திட்டம் விஹார மகாதேவி பூங்கா மத்திய நிலையத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. காலை 8.30-மணியிலிருந்து பிற்பகல் 4.30 மணிவரை விஹாரமகாதேவி பூங்காவில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவம் தெரிவித்தது.

மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒருவரும் இந்த மத்திய நிலையத்தில் சினோபாம் தடுப்பூசியின் முதல் டோஸை ஏற்றிக்கொள்ள முடியும்.   நன்றி தினகரன் 




மஜ்மா நகர் மையவாடியில் ஆயிரத்தை கடந்த உடல்கள் நல்லடக்கம்

மஜ்மா நகர் மையவாடியில் ஆயிரத்தை கடந்த உடல்கள் நல்லடக்கம்-More than 1000 COVID Bodies Buried in Majma Nagar-Oddamavadi

ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் இதுவரை 1,001 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின்  உடல்களை  நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் புதன்கிழமை 9 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

மையவாடியில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் இதுவரை உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இவர்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் உட்பட 946 முஸ்லிம்களின் உடல்களும், 24 இந்துக்களின் உடல்களும், 16 கிறிஸ்தவர்களின் உடல்களும், 15 பெளத்தர்களின் உடல்களும் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




No comments: