மனித நேயம்


 பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.  

உள்ளமதிற் கிளர்த்தெழும்நற் குணங்கள்பல இணைந்த      
                        உயர்ந்ததனிப் பெருங்குணமே மனிதநேயம் அன்றோ? 
வள்ளுவனார்  குறள்கொண்டு மனிதநேயம் உரைத்தார்!     
        மாதவத்துத் திருமூலர் மந்திரமாய்த் தந்தார்! 
தெள்ளுதமிழ்த் திருமுறைகள் அள்ளியள்ளி முகிழ்த்தன     
            சித்தர்கள் பலர்தோன்றிச் சிறப்பாக வளர்த்தனர் 
கொள்ளைபோகா ததனைவருஞ் சந்ததியர் வளர்க்கக்    
                           குழந்தைகளை வழிநடத்தல் பெற்றோர்கடன்  அன்றோ?




ஆதரவாய் உணவூட்டி வளர்த்துவரும் வேளை    
                                அன்பதனின் இலக்கணத்தைப் பூரணமாய் விளக்கிச் 
சாதகமாய் நற்பழக்க வழக்கமெலாம் பழக்கிச்   
                    சாண்றாண்மை விஞ்சுமொரு அந்தணனாய்  
                            வளர்க்கப் பாதகமாய்ப் பிறர்மனதை வருத்திடாநற் பண்பொடு    
                            பரந்தமனப் பான்மைமிகக் கனிந்துவரும் அவரை 
    மாதவத்தால் பிறந்திட்ட மகனிவனோ வென்று    
                                    மனிதநேயம் மிக்கோனெனப் பார்ப்பவர்வாழ்த் திடுவர்!


 எரிகின்ற நெருப்பினிலே துடிப்பவரைக் கண்டால்   
                        இன்னுயிரைக் கொடுத்தந்த உயிர்தன்னைக் காக்க 
‘வரிந்துகட்டி’ச் செயலாற்றும் செயல்மனித நேயம்!   
                வலுவிழந்து கடலுக்குள் தத்தளிக்கும் உயிரை 
    கரிசனையாய்க் கரைசேர்க்கும் செயல்மனித நேயம்!  
 பாதையோர விபத்தினிலே மயக்கமுற்ற 
                பாவியைப் பரிவுடன்காப் பாற்றுமொரு செயல்மனித நேயம்!    
                                பலன்கருதாச் சேவைசெய்வோர் தெயவங்கள் அன்றோ!


ஆறறிவு பெற்றிட்ட மனிதர்கள் சிலரில்    
                                    அரியபெரும் மனிதநேயம் வற்றிவிட்ட தாலே 
                        வீறுகொண்டு விலங்குகள்போல் வெறித்தனம்மி குத்து   
                                                    வேட்டையாடி மனிதர்களைக் கொல்பவரும் உள்ளார்! 
                கூறுபோடச் சாதிமத பிரிவினையைத் தூண்டிக்      
                                                        குறிக்கோளாய்ச்; சீர்கேட்டை வளர்ப்பவரும் உள்ளார்! 
                    பேறுகளை வென்றெடுக்கப் பெரும்பாவம் செய்யும்     
                                                        பேடிகளாய்ப் பேய்களைப்போல் வாழ்பவரும் உள்ளார்!



இறைவனவன் மாந்தர்களைப் படைத்திட்ட போது    
    ஈடில்லா மனிதநேய நற்பண்பைச் சேர்த்து 
நிறைவாகக் கொடுத்திருக்கச் சிலரதற்கு மேலே   
                                நிரைநிரையாய்த் தீயகுணப் போர்வைகளைப் போர்த்துக் 
            கறையுறையாய்த்  தம்மனத்தைத் துருப்பிடிக்க வைத்துக்   
                காலமெல்லாம் புனிதமிகு மனிதநேயப் பண்பைச் 
        சிறைவைத்து வாழ்கின்றார் சிந்தையறிந் திரங்கிடாச்    
                சிந்தையராற் சமூகமைதி சிதைந்துபோகு தையா!


                    வெள்ளைஉடைப் போர்வையிலே விளங்குமதச்  சின்னம்    
                    விரைவாக வலைவிரிக்கும் ஆவியென மின்னக் 
        கள்ளமனங் கொண்டலையும் பேய்களாகி என்றும்    
                                கரங்கொடுப்போம் கவலைவிடு காசுந்தரு வோமென 
எள்ளளவும் இரக்கமின்றி ஏற்றபொய் பகன்று    
                    இதமாகக்  கவர்ச்சியொடு இனிக்கப்பேசி ஏழை 
        கொள்ளைபோக மதம்மாற்றும் கும்பலுக்கு நேயம்   
                                கொஞ்சமேனும் இல்லைக்குரு வானவர்தான் அபயம்!. 



                    கண்ணனைய உயர்சைவப் பெருமைதனை மெச்சிக்
                                      கற்றபல பிறமதத்தோர்  காதலொடு சைவத்தில்
                           உண்மைமெய்ச் சமயமெனத் தாமாகவே இணைந்தார்  
                                                     உலுத்தர்செயும் மதமாற்றம் சைவரென்றுஞ் செயவிலை!
                      பண்பினிலே மலர்ந்தசைவர் பண்ணிறைப திகங்;கள்
                                                   பாடிவென்ற சிறப்பையெலாம்; பகரத்தான் போமோ?    
    எண்ணரிய தீரச்செயல் மனிதநேயம் என்று
                                          என்றென்றும் ஓம்பிச்சிவம் வளர்த்ததிறம் அறிவீர்!


  
பரம்பொருளின் படைப்பினிலே உயர்ந்திட்ட இனமாய்ப் 
              பழந்தமிழன் பண்பாட்டில் மலர்ந்ததொரு காலம்! கரங்கூப்பிப் பெரியோரைச் சிரந்தாழ்த்தி வணங்கிக் காத்திருந்து வருவிருந்து ஓம்பிநலங் காத்து
            வரமெனவே மனிதநேயம் தம்முயிரிற் கலந்து
வாழ்ந்துயர்ந்த பெற்றியெலாம் உரைத்திட்டாற் போமோ?
             தரங்கெட்டுப் போகாது புலம்பெயரந்த நாட்டில்
தமிழினத்தின் தகைமைகளைக்; காப்பதெங்கள் கடனே!

















No comments: