மலையக மக்கள் எழுத்தாளர் மல்லிகை சி. குமார் காலமானார். - Memon Kavi

.


மலையக மக்கள் எழுத்தாளர் மல்லிகை சி. குமார் இன்று (27.01.2020) மாலைக் காலமானார்.
கொடகே புத்தக நிறுவனம் நடத்தும் கையெழுத்துப் போட்டிக்கு (2019) அனுப்பப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் சிறந்த சிறுகதைப் பிரதியாக அவரது வேடத்தனம் சிறுகதைத் தொகுப்பு தெரிவு செய்யப்பட்டு நூலாக அச்சடிக்கப்பட்டு முடிந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 13ந்திகதி கொழும்பில் கொடகே நிறுவனத்தின ரால் நடத்தப்படும் பரிசளிப்பு விழாவில் அவருக்கான விருது வழங்கப்பட இருந்த காலகட்டதில் அவர் எம்மைப் பிரிந்து விட்டார். 

அவருடன் அந்தப் புத்தகத்திற்கான Dummy மற்றும் அட்டைப்படம் என்னால் அனுப்ப பட்ட தருணத்தில்தான அவருடன் இறுதியாக நான் பேசினேன். அந்த கையெழுத்துப் பிரதிக்கான விருதும் அப்பிரதி நூலாக வெளிவரப் போகிறது என்ற செய்தியும் அவருக்கு மகிழ்ச்சி அளித்திருந்தது என்பதை அந்த உரையாடலில் மூலம் தெரிந்து கொண்டேன்.. இன்றைய அவரது மறைவு இந்த நூலுக்காக உழைத்த நண்பர் கே. பென்னுத்துரைக்கும் அவரது உறவினர் எழுத்தாளர் மு.சிவலி்ங்கம் மற்றும் எனக்கும்பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.. அவரது படைப்பு விருது பெற்றிருப்பதும் அது நூலாக வெளிவரும் ஏற்பாடு கணிசமான அளவில் முடிந்து விட்டது என்ற ஆத்மத் திருப்தியுடன் எம்மை விட்டு அவர் பிரிந்து இருக்கிறார். மலையக இலக்கியவாதிகளில் ஒரு தொழிலாளியாக வாழ்ந்து மலையகத்தின் யதார்த்தத்தைத் தன் எழுத்துகளில் எமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்.
மல்லிகை சி. குமார் மலையக மண்ணில்
கால்பதித்த, தன்னை அம்மண்ணில்
விதைத்த, மலையக மண்ணைச் சுவாசமாய்
கொண்ட ஒரு படைப்பாளி.யாக வாழ்ந்து எம்மை விட்டுப் போய் இருக்கிறார்.
மலையக மக்கள் இலக்கியத்தின் வரலாற்றில் முன் முகமாக என்றும் அவர் வாழ்வார்..
அவரைப் பிரிந்து மாறாத் துயரத்தில் மூழ்கி இருக்கும் அவரது குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.


Nantri 
Memon Kavi 

No comments: