இலங்கைச் செய்திகள்

.

காணாமல் போனவர்கள் தொடர்பில், ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் கோட்டாபய ராஜபக்ஷ பேசியது என்ன?


இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை


காணாமல் போனவர்கள் தொடர்பில், ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் கோட்டாபய ராஜபக்ஷ பேசியது என்ன?



போனோர் தொடர்பில் தேவையான, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மூத்த அதிகாரி ஹன்னா சிங்கர் இடம் தான் கூறியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து, தாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர்க்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 17ஆம் தேதி கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து மேலதிக தெளிவை வழங்கும் பொருட்டு, ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.



காணாமல் போனவர்கள்' என பட்டியலிடப்பட்டுள்ள 20,000 பேரும் இறந்துவிட்டதாக, ஹானா சிங்கரிடம் தான் தெரிவித்ததாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தச் செய்திகள் அனைத்திலும் இறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்னதாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஹன்னா சிங்கரிடம் தான் தெரிவித்த மிக முக்கியமான விடயம், வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
" நானோ அல்லது சிங்கர் அம்மையாரோ, எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்ற எண்ணிக்கை தொடர்பாக பேசிக்கொள்ளவில்லை என்பதே உண்மை ஆகும். இந்த விடயமானது, பொதுவாகவும் மேலோட்டமாகவுமே கலந்துரையாடப்பட்டதே அல்லாமல், அது தொடர்பாக குறிப்பான விபரங்கள் எதுவும் பேசப்படவில்லை".
"மிகவும் துரதிர்ஷ்டவசமாக 20,000 க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என நான் ஒப்புக்கொண்டதாகவும், தவறாக அர்த்தப்படுத்தி அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"ஆனால், நான் அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை. எத்தனை பேர் காணாமல் போயினர் அல்லது இறந்துவிட்டனர் என்ற எண்ணிக்கை தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை".
இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு எம்மிடமிருக்கும் வேலைத்திட்டம் என்னவென சிங்கர் அம்மையார் அறிய விரும்பிய போது, பொருளாதார அபிவிருத்தி, தமிழ் மக்களையும் காவல்துறையில் சேர்ப்பது என்பவற்றுடன், காணாமல் போனோர் பிரச்சனைக்கும் தீர்வு ஒன்றை காண நான் முயற்சிக்கவிருப்பதாக அவரிடம் நான் விளக்கினேன்.
போரில் இறந்த ஏராளமானோரின் உடல்கள் மீட்கப்படவில்லை என்பதனால், காணாமல் போனவர்களின் நிலை என்னவென்று அவர்களது குடும்பத்தினர் தெரியாது இருக்கின்றனர். அதே வேளையில் - இந்தக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள், காணாமல்போன தமது அன்புக்குரியவர்கள் விடுதலைப் புலிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதன் சாட்சிகளாகவும் இருக்கின்றனர் என சிங்கர் அம்மையாருக்கு நான் விளக்கினேன்.
எனவே, தேவையான, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், காணாமல்போனோரின் குடும்பங்கள் தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான உதவிகளையும் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம் என, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர் இடம் நான் தெளிவுபடுத்தினேன்," என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
...................................................................................................................................................................................

இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை

மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்புக்கு இணங்க அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தமிழ் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை போன்று அமைந்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"அண்மையில் பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் நீதிமன்றத்தில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் 34 பேரும் அடங்குகின்றனர். அதிலும் குறிப்பாக, மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தறுத்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்" என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், இது தமிழர்களுக்கு விடுக்கின்ற எச்சரிக்கை போன்று அமைந்துள்ளது" என்றும் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் வைத்து 19 டிசம்பர் 2000ஆம் ஆண்டு ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட எட்டு தமிழர்களின் சடலங்கள், கழுத்தறுக்கப்பட்ட நிலையில், மலசலக் குழியொன்றிலிருந்து மீட்கப்பட்டன.
மேற்படி நபர்கள் கடத்தப்பட்ட மறுநாள் 20ஆம் தேதி இந்தப் படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எட்டுப் பேரில் 05 வயது சிறுவனும், பதின்ம வயதுடைய மூவரும் அடங்குவர்.


சுனில் ரத்நாயக்க
Image captionசுனில் ரத்நாயக்க

இதனையடுத்து இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டார்கள் எனும் குற்றசாட்டில் ராணுவத்தைச் சேர்ந்த ஐவர், போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் தேதி, ராணுவத்தில் சார்ஜன் தரத்திலிருந்த சுனில் ரத்நாயக்க என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சந்தேக நபர்களான ஏனைய ராணுவத்தினர் நால்வருக்கும் எதிராக, போதியளவு ஆதாரங்கள் இல்லை என்கிற காரணத்தினால், அவர்களை குறித்த வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

No comments: