அனைவருமே காத்திடுவோம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ... அவுஸ்திரேலியா


image1.jpeg                இந்திய சுதந்திரத்தைப் பெற்றெடுக்க எத்தனையோபேர்
                இன்னுயிரை மாய்த்ததை எண்ணியே பார்க்கவேணும் 
                தம்முயிரை மாய்த்தவர்கள் தமையெண்ணி வாழாமல்
                தம்நாட்டில் வாழ்வோரை தனையெண்ணி அர்ப்பணித்தார் !

                அர்ப்பணித்தார் அனைவருமே அவ்வுலகில் இருக்கின்றார்
                அர்ப்பணித்த அவர்வாழ்வு அர்த்தமுடன் இருக்கிறதா 
                என்றெண்ணி நாமெல்லோம் எம்மனதை கேட்டுவிடின்
                நின்றுழைத்தார் உழைப்பதனை நிர்மூலம் ஆக்குவமா ! 

                சாதிமதம் பாராமல் சமத்துவத்தை பேணுதற்கு
                சோதனைகள் பலகண்டு சோர்வின்றி பாடுபட்டார் 
                வேதனையால் பெற்றெடுத்த வெற்றியெனும் சுதந்திரத்தை 
                பாதுகாக்க முனையாமால் பரிகசிக்க வைக்கலாமா  ! 

               மூலைக்கு ஒருசாதி முளைவிட்டு எழுகிறது
               முக்கியமாம் விடயங்கள் முடங்கியே கிடக்கிறது
               ஆதிக்க வெறியோங்கி அரசியலில் அமர்கிறது 
               அவர்களது தியாகத்தின்  அர்த்தமெல்லாம் அழிகிறதே  !

               பாரதத்தை தாயெனவே மதித்துநிற்கும் திருநாட்டில் 
               பாதகங்கள் அரங்கேறி பாரினையே குலுக்கிறது 
               நீதியினை வேண்டிநின்றால் நெஞ்சினிலே குத்தும்நிலை
               பாரதத்தில் பரவிடுதல் பார்ப்பதற்குப் பொறுக்கவில்லை !


               ஊழலற்ற சமூதாயம் உருவாகப் பலபெரியோர்
               உதித்துநின்ற பாரதத்தில் ஊழல்காற்றே அடிக்கிறது 
               வாழவெண்ணும் மக்களுக்கு வாழ்வளிக்க மகான்கள்பலர்
               பாரதத்தில் பிறந்தாலே பாரதத்தாய் மகிழ்வடைவாள் !

               கொடியேற்றி உரையாற்றி கொள்கைபல சொன்னாலும்
               கொடுமையெனும் அரக்ககுணம் கொன்றொழிக்கப் பட்டிடுமா 
               அடிமையினை அகற்றுதற்கு அரும்பாடு பட்டதனால் 
               அமிர்தமெனக் கிடைத்ததைநாம் அனைவருமே காத்திடுவோம் ! 
               

           


              
               
















No comments: