உலகச் செய்திகள்


பாகிஸ்தான் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பின் ஆபத்தான குட்டிக்கரணம் !

தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கீழடியில் மேலுமோர் ஆதாராம் 

பயங்கரம் ! துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி, 24 பேர் காயம் - டெக்சாஸில் சம்பவம்

அமெரிக்காவில் மற்றுமோர் பயங்கரம் ; 9 பேர் பலி

'வெள்ளைக்கொடியுடன் வந்து உடல்களை எடுத்துக்கொள்ளுங்கள்': பாகிஸ்தான் இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய இராணுவம்



பாகிஸ்தான் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பின் ஆபத்தான குட்டிக்கரணம் !

31/07/2019 பாகிஸ்தானுக்கு 12 கோடி 50 இலட்சம் டொலர்கள் பெறுமதியான இராணுவத் தளபாட விற்பனையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்திருக்கும் தீர்மானம் இஸ்லாமாபாத் பற்றிய அவரது கொள்கை மற்றும் எண்ணத்தில் ஏற்பட்டிருக்கும் 360 பாகை திருப்பம் மாத்திரமல்ல, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புத்தனமாக நடந்துகொள்ளும் பாக்கிஸ்தானின் பல தசாப்தகாலக் கொள்கைக்கு அமெரிக்காவின் அப்பட்டமான சரணாகதியாகவும் அமைந்திருக்கிறது.
ஜனாதிபதி ட்ரம்ப் பாக்கிஸ்தானைக் கடுமையாகக் கண்டித்து விமர்சிக்கும் ஒருவராக விளங்கி வந்திருக்கின்றார். பாக்கிஸ்தான் பொய்கூறி ஏமாற்றுவதாகவும் 2002 ஆம் ஆண்டு முதல் 3300 கோடி டொலர் நிதியுதவியைப் பெற்று வந்திருக்கின்ற போதிலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரை எதிர்த்துச் சண்டையிடும் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடத்தைப் பாக்கிஸ்தான் அளிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
கடந்த வருடம் பாக்கிஸ்தானுக்கான உதவியை ட்ரம்ப் நிர்வாகம் முடக்கியது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்காவிற்கு இஸ்லாமாபாத்திடமிருந்து கூடுதல் ஒத்துழைப்பைப் பெறுவதை நோக்காகக் கொண்டே இவ்வாறு செய்யப்பட்டது.
இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எதிராகப் பயங்கரவாதத்தை ஒரு வெளியுறவுக்கொள்கைக் கருவியாகப் பயன்படுத்துவதிலிருந்து தூர விலகுவதற்கு உருப்படியான காரியம் எதனையும் பாக்கிஸ்தான் செய்யாதிருக்கும் நிலையில் அந்நாட்டுக்கான இராணுவ உதவியை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட அண்மைய தீர்மானம் அர்த்தமற்றதொன்றாகும்.
சர்வதேசத்திடமிருந்து தனிமைப்படும் ஆபத்தை எதிர்நோக்கிய நிலையில் இஸ்லாமாபாத் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக உலகை நம்பவைப்பதற்காக அண்மைய மாதங்களில் சில சிறிய நடவடிக்கைகளை எடுத்திருந்தது. உதாரணமாக லஷ்கர் ஈவ் தைபா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் கைதைக் கூறலாம். ஆனால் பாக்கிஸ்தான் கடந்த காலத்திலும் அவ்வாறு பல தடவை செயற்பட்டிருக்கிறது என்றாலும்ரூபவ் அவரைச் சில மாதங்களிலேயே விடுவித்து விடுகிறது.
இவையெல்லாம் மேலோட்டமானதும் அர்த்தமற்றதுமான நடவடிக்கைகள் ஆகும். இத்தகைய சூழ்நிலையில் இராணுவ உதவியைப் பாக்கிஸ்தானுக்கு மீள வழங்குகின்றமை பயங்கரவாதத்திற்கு இஸ்லாமாபாத் தொடர்ந்தும் வழங்கும் ஆதரவை வாஷிங்டன் அங்கீகரித்தது போல் அமைந்திருக்கிறது. இது பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்ற போருக்கு வாஷிங்டன் அரைமனதான ஆதரவையே வழங்குவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பாக்கிஸ்தானுக்கு இராணுவ உதவிகளை மீள வழங்கும் முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு அது தலிபானுடன் இப்போது நடத்திக்கொண்டிருக்கின்ற பேச்சுவார்த்தைகள் காரணமாக இருந்திருக்கக்கூடும். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆப்கானிஸ்தானில் நிலையான சமாதானமொன்றைத் தோற்றுவிக்கும் நோக்கத்தில் அல்லரூபவ் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறுவதற்கு உதவும் நோக்குடனேயே நடத்தப்படுகின்றன என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே.
ஜனாதிபதி ட்ரம்பைப் பொறுத்தவரை அடுத்த வருடம் நவம்பரில் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னதாக அவர் தலிபான்களுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் கரிசனையுடன் இருக்கிறார். அத்தகையதொரு உடன்பாட்டிற்கு வருவதற்குப் பாக்கிஸ்தான் தலிபான்கள் மீதான அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகின்றார். அண்மையில் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் ட்ரம்பும் புரிந்துணர்விற்கு வந்திருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா இராணுவ உதவிகளை மீண்டும் வழங்குவதற்குக் கைமாறாக அமெரிக்கர்களுடன் இணக்கப்பாடொன்றை எட்டுமாறு தலிபான்களைப் பாக்கிஸ்தான் நிர்பந்திக்கும். பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மீளச்  சரிசெய்வதில் இம்ரான்கானின் விவேகமான இராஜதந்திரம் வெற்றி கண்டிருக்கிறது.
இது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு விசனத்திற்குரிய நிலைவரமாகும். வாஷிங்டனுக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையிலான உடன்பாட்டின் கீழ் தரமுயர்த்தப்பட்ட எப் - 16 ஜெட் போர்விமானங்களைப் பாக்கிஸ்தான் பெற்றுக்கொள்ளும். பாலகோட் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகப் பாக்கிஸ்தான் அதன் எப் - 16 ஜெட் போர்விமானங்களைப் பயன்படுத்தியது. இந்தியாவைச் சாந்தப்படுத்துவதற்காக இப்போது வாஷிங்டன் பாக்கிஸ்தானிலுள்ள அமெரிக்க அதிகாரிகள் எப் - 16 ஜெட் போர்விமானங்களைப் பாக்கிஸ்தான் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் கண்காணிப்பர் என்று கூறுகிறது. இது வரவேற்கக்கூடியதே என்கிற அதேவேளை பாக்கிஸ்தானுடனான இந்தியாவின் கடந்தகால அனுபவங்களும் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவத் தளபாடங்களைப் பாக்கிஸ்தான் பயன்படுத்திய முறையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இந்தியா மிகுந்த ஜாக்கிரதையாகச் செயற்பட வேண்டியிருக்கிறது. அவசரமாகச் செய்த குட்டிக்கரணம் ஆபத்தானது என்பதை வாஷிங்டனுக்கு இந்தியா விளங்க வைக்க வேண்டும்.    நன்றி வீரகேசரி 









தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கீழடியில் மேலுமோர் ஆதாராம் 

30/07/2019 இந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைக்கிணறு ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் இந்த அகழாய்வு இடம்பெற்று வருகிறது. 
இந்நிலையில் கடந்த மாதம் 13ஆ ம் திகதி தொடங்கப்பட்ட அகழாய்வில் சுவர்,  வட்டப்பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது உறைகிணறு, தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும்  குவளை மூடி  உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன. 
உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதால் இப்பகுதியில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உறைகிணறுகள் அனைத்தும் 5 முதல் 7 அடி உயரம் வரையே இருப்பதால் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் 5 அடியிலேயே கிடைத்திருக்க  வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உறைகிணறுகளை தொழில்நுட்ப ரீதியில் அமைக்கப்பட்டு அதனை தமிழர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ஏற்கனவே நடந்த நான்கு கட்ட அகழாய்வில் மூன்று கிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நான்காவதாக உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    நன்றி வீரகேசரி 











பயங்கரம் ! துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி, 24 பேர் காயம் - டெக்சாஸில் சம்பவம்

04/08/2019 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இடம்பெற்ற பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயே நேற்று சனிக்கிழமை குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
21 வயதுடைய பற்றிக் க்ரூசியஸ் எனும் டல்லாஸ் பகுதியில் வசித்த இளைஞரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி வீரகேசரி












அமெரிக்காவில் மற்றுமோர் பயங்கரம் ; 9 பேர் பலி

04/08/2019 அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில், டேட்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் டேட்டன் பொலிஸாரால் சுட்டுக் கொல்ப்பட்டுள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் எல்பசோ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து ஒருசில மணிநேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை அந் நாட்டு பொலிஸார் எப்.பி.ஐ. (FBI)யின்  உதவியுடன் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










'வெள்ளைக்கொடியுடன் வந்து உடல்களை எடுத்துக்கொள்ளுங்கள்': பாகிஸ்தான் இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய இராணுவம்

04/08/2019 இந்தியாவுடனான மோதலின்போது கொல்லப்பட்ட பாகிஸ்தான் எல்லைக் காவல் படையான 'பார்டர் ஏக்ஷன் டீம்' படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் என்று இந்திய அரசால் கூறப்படுபவர்களின் உடல்களை எடுத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் இராணுவத்திடம் தாங்கள் கூறியுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
வெள்ளைக்கொடியுடன் வந்து ஏழு பேரின் உடல்களை, இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தான் இராணுவத்திடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்றும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ட்விட்டர் பதிவிட்டுள்ளது.
மேலும், கடந்த 36 மணி நேரத்தில் இந்திய கேரன் செக்டர் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ 'பார்டர் ஏக்ஷன் டீம்' செயல்படுத்திய முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ தரப்பில் இருந்து தங்களுக்கு செய்தி கிடைத்துள்ளதாக சனிக்கிழமை இரவு ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.
அத்தோடு,குறித்த தாக்குதலில், ஐந்து முதல் ஏழு பாகிஸ்தான் படையினர் அல்லது தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த செய்தி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.  நன்றி வீரகேசரி 





No comments: