பா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி
மீண்டும் பிரதமராகும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வாழ்த்து
வாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன?
பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே
நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் மோசமான பாலியல் ரீதியான தாக்குதல்கள்
மூடிமறைக்கும் குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் மறுப்பு!
வடகொரிய கப்பலை கைப்பற்றி வைத்துள்ளமை இருதரப்பு உறவுகளில் விரிசலை ஏற்படத்தும்:வட கொரிய தூதுவர்
"ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்"
பிரான்சில் குண்டுவெடிப்பு- 13 பேர் காயம்
மத்திய கிழக்கிற்கு படைகளை அனுப்ப அமெரிக்க முடிவு- பாரிய ஆபத்து என்கிறது ஈரான்
மோடி பிரதமராகக் கிடைக்கப்பெற்றது இந்தியர்கள் செய்த அதிர்ஷ்டம் - ட்ரம்ப்
பா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி
23/05/2019 மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது.
அதை பிரதிபலிக்கும் வகையில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி மே 19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்தன. பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான பலப்பரீட்சை நடந்தது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதிய ஜனதா அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும் காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
273 தொகுதிகளில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த 2 மாத தீவிர பிரசாரத்தைத் தொடர்ந்து 7 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தடவை தேர்தலில் இதுவரை இல்லாத சாதனையாக 67.11 சதவீதம் வாக்குகள் பதிவானது.
வாக்குப்பதிவு நிறைவு பெற்று 3 நாட்கள் இடைவெளி விட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்று காலை 8.15 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வந்தபோது பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலைப் பெற்று கருத்துக் கணிப்பை உறுதிப்படுத்தியது.
காலை 8.30 மணிக்கு அதாவது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை இருந்தது.
9 மணி அளவில் 403 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி 236 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 96 இடங்களிலும் மாநில கட்சிகள் 73 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.
10 மணி அளவில் 542 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புடன் முன்னிலைப் பெற்றது.
காங்கிரஸ் கூட்டணி சுமார் 110 இடங்களுடன் பின் தங்கி விட்டது. மாநில கட்சிகளும் சுமார் 102 தொகுதிகளுடன் தத்தளித்தப்படி இருந்தன.
காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க நேற்று மாலை வரை ரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுக்கும், மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
காங்கிரசும், மாநில கட்சிகளும் வெற்றி பெற்ற தொகுதிகளை சேர்த்தால் 212 இடங்களில்தான் முன்னிலையில் இருந்தன.
பிற்பகல் தெளிவான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் இமாலய வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.
பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகப்படியான வெற்றியை பெறும் சூழ்நிலை உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி கிடைத்து இருந்தது.
இந்த தடவை பாரதிய ஜனதா தனிப்பட்ட முறையில் 289 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணி மீண்டும் இமாலய பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தடவை அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில கருத்து கணிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறியிருந்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 51 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
421 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியாதது காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக ராகுலும், பிரியங்காவும் தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக வெறும் 6 அல்லது 7 இடங்களே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 95 முதல் 100 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.
பாரதிய ஜனதா கூட்டணி சுமார் 350 இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. இந்த மேஜிக் நம்பரை பா.ஜனதா கூட்டணி மிக எளிதாக எட்டிப்பிடித்தது.
எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
23/05/2019 இந்திய பாராளுமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான்கான் முன்னர் பிரதமர் மோடியை பற்றி தெரிவித்த ஒரு கருத்தில் சில பெரிய பதவிகளில் சிறியமனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
நமது நாட்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு திகதி குறிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் புதிதாக அமையும் ஆட்சியில் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான அமைதி பேச்சுக்கு நல்ல வாய்ப்பு அமையும் என்று கடந்த மாதம் இம்ரான் கான் தெரிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் சுமார் 350 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடியை நான் வாழ்த்துகிறேன், அமைதியும் முன்னேற்றமும் வளங்களும் நிறைந்த தெற்காசியாவை உருவாக்க அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
வாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன?
23/05/2019 இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவருக்கும் தனித்தனியே தனது நன்றிகளையும் பதில்களையும் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த இந்தியாவின் 17 ஆவது பாராளுமன்ற தேர்தலில் முன்னணி நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரும் மற்றும் அயல் நாட்டு அரசியல் தலைவர்கள் சிலரும் குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது டுவிட்டா் பக்கத்தில் தனித்தனியே நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே
24/05/2019 பிரிட்டன் பிரதமர் திரேசா மே தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது.
ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் திரேசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஆளும் பழமைவாத கட்சி உறுப்பினர்களே திரேசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்தனர்.
இதனால் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள திரேசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3 ஆம் திகதி நான்காவது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.
இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான திரேசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் அமைச்சர் ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். பிரதமர் பதவி மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து திரேசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பழமைவாத (கனசர்வேட்டிவ்) கட்சி தலைவர் பதவியை ஜூன் மாதம் 7 ஆம் திகதி இராஜினாமா செய்வதாக திரேசா மே அறிவித்துள்ளார்.
லண்டன் நகரில் டவுனிங் வீதியிலுள்ள உள்ள தனது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த திரேசா மே,
‘பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருமுறை பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எனது வாழ்நாளின் கௌரவமாக கருதுகிறேன். எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன்’ என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் மோசமான பாலியல் ரீதியான தாக்குதல்கள்
24/05/2019 நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் மோசமான பாலியல் ரீதியான தாக்குதல்கள், அத்துமீறல்கள் மற்றும் கேலிப்பேச்சுகள் இடம்பெற்று வந்துள்ளதாக புதிய சுயாதீன விசாரணையொன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் திரேவர் மெயிலார்ட் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவிக்கையில், இது சகிப்புத்தன்மை காண்பிக்க முடியாத தீவிர நிலைமையாகும் எனக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற எல்லைக்குள் பணியாற்றும் 14 பேர் தாம் அங்கு பாலியல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்த 120 பக்க விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.
அத்துடன் ஒரே மனிதரால் 3 மோசமான பாலியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
மேற்படி குற்றச்சாட்டுக்குள்ளான தனிநபர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாக தான் நம்புவதாக திரேவர் மெயிலார்ட் கூறினார்.
இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா அர்டேர்ன் இது தொடர்பில் கலந்துரையாட திரேவர் மெயிலார்ட்டுடனும் ஏனைய கட்சி உறுப்பினர்களுடனுமான கூட்டமொன்றை கூட்ட அழைப்பு விடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்கள் கௌரவத்துடன் நடத்தப்படும் இடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பாராளுமன்ற சபாநாயகரின் நோக்கமாகவுள்ளதாக அவர் குறிப் பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு நடந்த அநீதி குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வது அவர்களது சொந்த விருப்பம் என அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
மூடிமறைக்கும் குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் மறுப்பு!
24/05/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூடி மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் அதற்கு ட்ரம்ப் நேற்று முன்தினம் புதன்கிழமை மறுப்புத் தெரிவித்துள்ளார்.
நான் மூடி மறைக்கும் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை என அவர் வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.
அமெரிக்கப் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் முகமாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சக உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையிலேயே ட்ரம்பின் மேற்படி விமர்சனம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆஜராவதற்கான ஆணைகளை அலட்சி யம் செய்தமை, ஆவணங்களை நிறுத்தி வைத்தமை மற்றும் தற்போதைய மற்றும் முன்னாள் ஆலோசகர்களின் சாட்சியங்களுக்கு முட்டுக்கட்டை போட்டமை என்பனவற்றின் மூலம் ட்ரம்ப் பாராளுமன்ற விசாரணைகளுக்கு ஊறு விளைவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் நான்ஸி பெலோஸி மற்றும் செனட் சபை தலைவர் ஆகியோருடன் குறுகிய நேர சந்திப்பை மேற்கொண்டமைக்கு ஒரு சில நிமிட நேரத்திலேயே தான் எதனையும் மூடி மறைக்கும் செயற்பாட்டில் ஈடுபடவில்லை என வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக கட்சி தலைவர்களுடனான அந்த சந்திப்பின் போது ட்ரம்ப் எவருட னும் கைகுலுக்கிக் கொள்ளவோ அன்றி அமர்ந்து உரையாடவோ முயற்சிக்கவில் லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனக்கு எதிரான விசாரணைகளை ஜனநாயகக் கட்சியினர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என மட்டும் தெரிவித்து விட்டு எது தொடர்பிலும் கலந்துரையாடாது சந்திப்பு இடம்பெற்ற அறையை விட்டு ட்ரம்ப் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையின் போது ட்ரம்ப், "ஜனநாயகக் கட்சியினரால் மேற்கொள்ளப்படும் போலியான விசாரணைகளுக்கு நான் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்" என்று கூறினார். தனது அரசியல் எதிராளிகள் தனக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வர அணி திரண்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஜனநாயகக் கட்சியினர் தனக்கு எதிரான விசாரணைகளை கைவிடாத வரை தான் அவர்களுடன் அரசாங்க கொள்கைகள் குறித்து கலந்துரையாடப் போவதில்லை என அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
வடகொரிய கப்பலை கைப்பற்றி வைத்துள்ளமை இருதரப்பு உறவுகளில் விரிசலை ஏற்படத்தும்:வட கொரிய தூதுவர்
23/05/2019 அமெரிக்கா வடகொரிய சரக்குக் கப்பலை மூர்க்கத்தனமான முறையில் கைப்பற்றி வைத்துள்ளமை அமெரிக்க மற்றும் வட கொரிய உறவுகளின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என ஐக்கிய நாடுகள் சபைக்கான வட கொரிய தூதுவர் கிம் சோங் எச்சரித்துள்ளார்.

அந்த சரக்குக் கப்பலை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர் நேற்று ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் வலியுறுத்தினார்.
வட கொரியாவின் இரண்டாவது மிகப் பெரிய சரக்குக் கப்பலான வைஸ் ஹொன ஸ்ட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெருமளவு நிலக்கரியை ஏற்றிச் சென்றவேளை இந்தோனேசியாவால் முதலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்தக் கப்பல் ஐக்கிய நாடுகள் தடையை மீறி நிலக்கரியை ஏற்றிச் சென்றதால் அதனை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கா கடந்த 9 ஆம் திகதி அறிவித்திருந்தது.
வட கொரியாவுடனான உறவுகள் தொடர் பில் மென்மையான போக்கு கடைபிடிக்கப்படும் தருணத்தில் இத்தகைய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
சரக்குக் கப்பல் கைப் பற்றப்பட்டது முதற்கொண்டு அமெரிக்கா வின் ஒவ்வொரு நகர்வையும் வடகொரியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக கிம் சோங் தெரிவித்தார்.
அந்தக் கப்பலை கைப்பற்றும் நடவடி க்கை வடகொரியா மீது ஆகக் கூடிய அழுத்தத்தைப் பிரயோகித்து அந்த நாட்டை மண்டியிடச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்கா தனது மூர்க்கத்தனமான செய ற்பாடுகள் எதிர்கால முன்னேற்றத்தில் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கிம் சோங் மேலும் தெரிவித்தார். அந்த சரக்குக் கப்பலை கைப்பற்றியுள்ளமை வடகொரியா வுக்கு எதிரான அமெரிக்காவின் தீவிர விரோத மனப்பான்மையின் வெளிப்பா டொன்றாக உள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்கா சர்வதேச சட்டத்தையும் நாடுகளுக்கும் அவற்றின் உடைமைகளுக்கும் எதிராக பிற நாடுகள் சட்ட நடவடிக்கை எடுப்பதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையையும் மீறி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ கட்டரெஸ், கொரிய தீபகற்பத்திலான ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்புச் செய்யக் கூடிய அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அந்நடவடிக்கைகள் எவை என்பது தொடர்பில் வினவப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்க அவர் மறுத் துள்ளார். நன்றி வீரகேசரி
"ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்"
20/05/2019 ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அதோடு முடிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஈரானுடானான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலும் பல்வேறு பொருளாதார தடைகளை ட்ரம்ப் விதித்து வருகிறார்.
இதனால் ஈரான் - அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது.
வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா? என்ற அச்சம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும் என்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி வீரகேசரி
பிரான்சில் குண்டுவெடிப்பு- 13 பேர் காயம்
25/05/2019 பிரான்சின் லயன் நகரில் இடம்பெற்ற பார்சல் குண்டுவெடிப்பில்13 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சின் மூன்றாவது பெரிய நகரமான லயனில் மக்கள் அதிகமாக காணப்படும் வீதியொன்றில் வெதுப்பகத்திற்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது எட்டு வயது சிறுமி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நகரின் வரலாற்று பழமை வாய்ந்த விக்டர் கியுகோ வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாரிய சத்தமொன்று கேட்டது என அருகில் உள்ள ஹோட்டலொன்றின் வரவேற்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பதற்றமடைற்து ஓடுவதையும் பல அலறல்களையும் கேட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சைக்கிளில் அந்த பகுதிக்கு வரும் நபர் ஒருவர் குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து தகவல்களை கோரியுள்ளனர் நன்றி வீரகேசரி
மத்திய கிழக்கிற்கு படைகளை அனுப்ப அமெரிக்க முடிவு- பாரிய ஆபத்து என்கிறது ஈரான்
25/05/2019 மத்திய கிழக்கிற்கு 1500 படையினரையும் போர் விமானங்களையும் அனுப்ப தீர்மானித்தள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
1500 படையினரும் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளி;ல ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தற்போது மோதலில் ஈடுபடவிரும்பவில்லை என நான் கருதுகின்றேன்,அவர்கள் எங்களுடன் மோதலில் ஈடுபடவிரும்பவில்லை என நினைக்கின்றேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மத்திய கிழக்கில் பாதுகாப்பை கொண்டிருக்க விரும்புகின்றோம் சிறிய எண்ணிக்கையிலாக துருப்பினரை அனுப்ப தீர்மானித்துள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1500 படையினரில் ஏவுகணை பொறிமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களும்,வான்வெளி கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்றவர்களும் பொறியியலாளர்களும் இடம்பெறவுள்ளனர்.போர் விமானங்களையும் அமெரிக்க அனுப்பவுள்ளது
ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலா முறுகல் நிலை கடந்த மூன்று வாரங்களாக தீவிரமடைந்துள்ள நிலையிலேயே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கிற்கு மேலதிக படையினரை அனுப்பும் அமெரிக்காவின் முடிவு உலக சமாதானத்திற்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் முகமட் ஜரீவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தங்கள் மோதல் கொள்கையை நியாயப்படு;த்துவதற்காகவும் வளைகுடாவில் பதற்றத்தை உருவாக்குவதற்காகவும் ஈரானிற்கு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரசன்னம் அதிகரிப்பது மிகவும் ஆபத்தான விடயம் இது சர்வதேச அமைதி பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
மோடி பிரதமராகக் கிடைக்கப்பெற்றது இந்தியர்கள் செய்த அதிர்ஷ்டம் - ட்ரம்ப்
25/05/2019 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 'மாமனிதர்" என்றும், 'மகத்தான தலைவர்" என்றும் வர்ணித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரைப் பிரதமராகக் கொண்டிருப்பதற்கு இந்திய மக்கள் அதிஷ்டம் செய்திருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று தனது டுவிட்டர் தளப்பதிவில், மோடி பெற்றிருக்கும் பெரிய அரசியல் வெற்றி குறித்து அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததாகவும், மகத்தான தலைவரான அவர் பிரதமராகக் கிடைக்கப்பெற்றுள்ளமை இந்தியர்கள் செய்த அதிஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவை செய்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், 'சற்று முன்னர் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு எமது நாட்டின் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்தேன். அவர் ஒரு பெரிய தேர்தலுக்கு முகங்கொடுத்தார். அவர் எனது நல்லதொரு நண்பர். இந்தியாவுடன் நாம் நல்ல உறவுகளைக் கொண்டிருக்கின்றோம்" என்று கூறினார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment