கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை: பிரதேச இலக்கியப்படைப்புலகில் மக்களையும் இயற்கையையும் ஆழ்ந்து நேசிக்கும் எஸ்.எல்.எம் ஹனீபா - முருகபூபதி


சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை 2011 ஜனவரி மாதம் கொழும்பில் நடத்துவதற்கு முன்பதாக 2010 டிசம்பரில் கிழக்கிலங்கையில் மாநாடு தொடர்பாக தகவல் அமர்வு நடத்துவதற்காக எமது குழுவிலிருந்த இலக்கிய நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் மற்றும் அஷ்ரப் சிகாப்தீன் ஆகியோருடன் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தேன்.
ஓட்டமாவடியில் அஷ்ரப் சிகாப்தீனின் சகோதரி வீட்டில் தங்கியிருந்தோம். அந்தக்குடும்பத்தின் தலைவர் பாடசாலை அதிபர். அத்துடன் கலை, இலக்கிய ஆர்வலர். அவரும் அவரது குடும்பத்தினரும் எம்மை நன்கு உபசரித்தனர்.
நாம் வந்திருக்கும் செய்தியறிந்த ஒருவர் திடீரென்று வந்தார். அவரை நான் அதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. அவரே அருகில் வந்து தன்னை " எஸ்.எல்.எம். ஹனீபா" என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
" யார்... மக்கத்துச்சால்வை ஹனீபாவா...?" எனக்கேட்டேன். " ஓம்" எனச்சொல்லி என்னை அணைத்துக்கொண்டார்.
1946 ஆம் ஆண்டு மீராவோடையில் கடலை நம்பிய தந்தைக்கும் மண்ணை நம்பிய தாயாருக்கும் பிறந்திருக்கும் ஹனீபாவின் எழுத்துக்களும் அவரது நேரடி உரையாடல் போன்று சுவாரஸ்யமானது.
கிட்டத்தட்ட கரிசல் இலக்கிய வேந்தர் கி. ராஜநாராயணனின் வாழ்க்கையைப்போன்றது. பந்தாக்கள், போலியான வார்த்தைப்பிரயோகங்கள் அற்ற வெகு இயல்பான மனிதர். அந்த முதல் சந்திப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்தார்.
அவரது உரையாடலிலிருந்து அவர் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை புரிந்துகொள்ளமுடியும்.  1992 இல் இவருடை மக்கத்துச்சால்வை கதைத்தொகுப்பு வெளியானது. குறிப்பிட்ட தலைப்பும் .இவரது பெயரை இலக்கிய உலகில் தக்கவைத்து,                          " மக்கத்துச்சால்வை ஹனீபா" என்று வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
அந்தத்தொகுப்பில் அவருடைய என்னுரை,  கொடியேற்றம் என்ற தலைப்பில் இவ்வாறு ஆரம்பிக்கிறது:

"அந்த நாள்கள் பற்றிய நினைவுகளும், இந்தச் சிறுகதைத் தொகுப்பு வேலைகளிலே ஈடுபட்டிருக்கும்பொழுது, ஏன் வளைய வலம் வரவேண்டும்?


இரவின் ஏதோ ஒரு வேளையில் - அதை வைகறை என்றும் சொல்ல ஒண்ணா-உம்மா எழும்பிடுவா. குப்பிலாம்பின் துணையோடு உம்மாவின் தொழில் துவங்கும்.  நித்திரையில்  ஊருறங்கும். அதனை ஒட்டில் களிமண்ணை 'தொம்' மென்று போட்டு உம்மா கலைப்பா. கொஞ்ச நேரத்தில்  ஒட்டில்  குந்திய களிமண் 'தொம்' அழகான சட்டியாக, பானையாக, குடமாக உருவெடுக்கும். அந்த  அதிசயத்தை  நாடியில் கை கொடுத்துப்  பார்த்திருப்பென்.

அதிகாலை நான்கு மணிக்கே எழும்பிவிடும் அந்தப் பழக்கம் இன்றுவரை களிமண்ணைப்போலவே என்னில் ஒட்டிக்கொண்டது

வாப்பாவும் உழைப்பாளிதான். அவரும் வெள்ளாப்பில் எழும்பிவிடுவார். ஊரிலிருந்து  ஐந்து மைல்களுக்கப்பால் கடற்கரை. அங்கேதான் வாப்பா மீன் வாங்கிவரப் போவார்

அவர் தோளில் கமுகு வைரத்தின் காத்தாடி. அதன் இரு முனைகளிலும் கயித்து உறியில் பிரம்புக் கூடைகள் தொங்கும். "கிறீச் கிறீச்' என்ற ஓசையுடன் வாப்பாவின் தோளில் கிடக்கும் காத்தாடியின் கூடைகளிரண்டும் கூத்துப் போடும்

கூடைக்குள் பொன்னிவாகை இலையை நீக்குப்பார்த்தால்....வெள்ளித் துண்டுகளாக மீன்கள் 'மினுமினு'க்கும்.

எங்கள் ஊரில், அந்தக் காலத்தில், 'அஞ்சாப்பு' வரை படித்த நான்கைந்து பேரில் வாப்பாவும் ஒருவர். அவர் எழுத்து குண்டு குண்டாக அழகாக இருக்கும். நாள் தவறாமல் பத்திரிகை வாசிப்பார். வாசலில் தெங்குகள். காற்றில் கலையும் ஓலைக் கீற்றுகளுக்கிடையில் நிலவு துண்டு துண்டாகத் தோட்டுப் பாயில் கோலம் போடும். காசீம் படைப்போர், சீறாப்புராணம், பெண்புத்திமாலை, ராஜநாயகம் என்றெல்லாம் வாப்பா  ராகமெடுத்துப் படிப்பார். வாப்பாவைச் சுற்றிப் 'பொண்டுகள்' வட்டமிட்டிருப்பர். வாப்பாவிலும் பார்க்க அதிகமாக வாசிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு. " 

இவ்வாறு தொடங்கும் ஹனிபாவின் என்னுரை,  மேலும் பின்வருமாறு தொடருகின்றது:




என்னைச்  சூழவும்  வாழுகின்ற  ஆயிரக்கணக்கான மக்கள், அறியாமையோடும்  வறுமையோடும் வானம்பார்த்த பூமியை வைத்துக்கொண்டு மாரடிக்கிறார்கள்.  இந்த மக்களை மூலதனமாகக் கொண்டு ராஜதர்மார் நடாத்துகின்ற அரசியல் புரோக்கர்கள் ஏழைகளைச் சுரண்டி வாழும் தனவந்தர்கள்.  இந்த முரண்பாடுகளின் கோட்டமோ நான் வாழும் கிராமம்.  இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலே அவலப்படும் மக்களுடைய  மானுஷகத்தினைத் தரிசிப்பது தான் என் எழுத்துப் பணி. 'சன்மார்க்கம்' கதை பிரசுரமான காலத்திலேயே சிலர் 'ஹனிபாடெ கையெ முறிச்சிப் போடணும்' என்றும் சொம்பினார்களாம். 'மருத்துவம்' கதையிலே வரும் டாக்டர் தன் வசமுள்ள 'குறடு' கொண்டு என் இரண்டு பற்களையாவது பிடுங்கிவிடவேண்டும் என்று கர்விக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'சமூகப் பிரக்ஞையுள்ள சத்தியக் கலைஞனுக்கு எழுத்து ஊழியமும் ஒரு புனித யுத்தமாக அமைந்துவிடுவது  சாத்தியமே

எழுத்தாளனுடைய வாழ்க்கை முழுத்துவம் பற்றிய தேடலே. இந்தத் தேடலிலே  வெற்றி இலேசில் வாய்த்து விடுவதில்லை. வாழ்வின் நாணயம், ரஷனையைப் பெருக்கும் வாசிப்பு, தொடர்ந்த பயிற்சி எனப் பல வந்து பொருந்தவேண்டும்

குறுக்கு வழிகளும் உண்டு. ஒரு அணியாகத் திரண்டு கொண்டு களத்தில் இறங்க வேண்டும். அப்பொழுது நாம் ஒருவரை ஒருவர் மேதாவியாக்கி, ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து. ! என்னெ சுகம். அந்த சுகம்  இந்தச் சுகமும் ஒருவகை போதைதான். போதையில் எனக்கு நம்பிக்கையில்லை

வாழ்கையை கலாபோதையுடன் பார்ப்பதெல்லாம் பாவலா. நான் கண்டவற்றையும்  கேட்டவற்றையும் கூட கதைகளாக வடிக்கத் தயங்கினேன். நான் அனுபவித்தவற்றையே எழுதுகிறேன். என் அனுபவம் சத்தியம் என்றால், என் எழுத்தும் சத்தியக் கோலம் புனையும்."

இந்த வரிகளிலிருந்து கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் பேச்சுவழக்கை நாம் அறிய முடிகிறது. அம்மக்களின் ஆத்மாவும் மண்ணின் வாசமும் ஹனீபாவின் கதைகளில் பேசும்.
கிழக்கிலங்கை வாழ் தமிழ் - முஸ்லிம் மக்களின் பேச்சுவழக்கை இலக்கியத்திற்கு வரவாக்கியவர்களில் எஸ்.எல். எம். ஹனீபா முன்னோடியாவார். யதார்த்த இலக்கியம் படைத்திருக்கும் இவர் தனிப்பட்ட மற்றும் இலக்கிய - அரசியல் பொதுவாழ்விலும் யதார்த்தவாதியே!.
யதார்த்தவாதிகளினால் - யதார்த்தவாதிகளுக்கும் பிரச்சினை - மற்றவர்களுக்கும் பிரச்சினைவரும். ஹனீபாவும் இலக்கிய உலகிலும் அரசியல் பொது வாழ்விலும் பிரச்சினைகளை சந்தித்தவர்.
பிரச்சினைகளைக்கண்டு ஓடவோ ஒதுங்கவோ மாட்டார். அவர் தொடர்பாக வெளிவந்துள்ள எதிர்வினைகளையும் வாசித்திருக்கின்றேன். எனினும் அவருடைய தொடர்பாடல் பிரதேசம், தேசம், சர்வதேசம் கடந்தது.
இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஏராளமான இலக்கிய நண்பர்களை சம்பாதித்தவர். எழுத்தாளர்கள்  எஸ்.பொன்னுத்துரை, பேராசிரியர் கா. சிவத்தம்பி, ஜெயமோகன், நடேசன், எம்.கே. முருகானந்தன் உட்பட பலர் ஹனீபா பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார்கள்.
தனக்கு கல்வி புகட்டிய ஆசான்களை மதிக்கத்தெரிந்தமையால் அவர்கள் பற்றியும் தனது மக்கத்துச்சால்வை தொகுப்பில் மறக்காமல் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:


"எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியப் பெருந்தகைகள் சாம்பல்தீவு செல்லத்துரை, பங்குடாவெளி விநாயமூர்த்தி மருதமுனை ஹபீப் முஹம்மது, கல்முனைக்குடி ஆதம்பாவா, ஓட்டமாவடி அப்துல்காதர்,
இவர்களோடு சேர்ந்து என் தாழ்விலும் வாழ்விலும் இருவர் பங்கேற்றார்கள். ஒருவர் ஆங்கில ஆசிரியர் கொழும்பு பரீத் அவர்கள்-மற்றவர் பறகஹதெனிய ஆங்கில கல்வி அதிகாரி எம்.பாளிஹு அவர்களாகும்.

இந்தத் தொகுதியை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் நான் இறங்கியபோது எனக்கருகிலிருந்து கதைகளைப் படித்து ஆலோசனைகள் வழங்கிய தமிழாசிரியர் கவிஞர் வீ..ஜுனைத்.

கடந்த காலத்தை நனவிடைதோய்ந்திருக்கும் ஹனிபா, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையடுத்து அமைந்த வடக்கு - கிழக்கு மகாண சபையிலும் அங்கம் வகித்தவர். அதன் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்  தனது சகாக்களுடன் இந்தியாவுக்கு கப்பலேறியபோது ஹனீபா, ஊரைவிட்டுச்செல்லவில்லை என்பது அதிசயம்தான்!
இயற்கையை நேசிக்கும் இயல்பும் கொண்டிருக்கும் ஹனீபா, தான் வாழ்ந்த பிரதேசத்து மக்களையும் ஆழமாக நேசிப்பவர். அதனால் அவருடைய படைப்புகளில' இயற்கையும் மக்களும் இணைந்திருக்கிறார்கள்.
-->
( தொடரும்)
































No comments: