வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 8 – ச. சுந்தரதாஸ்

.

லெனின் டைரக்ட் செய்த ஒரு படத்தின் பெயர் ஹித்துவத் ஹித்துவமய் (நினைத்தால் நினைத்ததுதான்) இந்தப் பெயரை தன் குணாம்சத்தின் அடிப்படையிலேயே படத்திற்கும் வைத்திருந்தார். ஏனென்றால் லெனினைப்  பொறுத்தவரை தான் நினைத்ததே செய்வார் என்பது அவருடன் பழகிய அனைவருக்கும் தெரியும்.

சிறுவயதிலிருந்தே தைரியசாலியாகவும், பிடிவாதமிக்கவருமாகவுமே லெனின் வளர்ந்தார். இதனாலேயே தன் தந்தையுடனும் முரண்பட்டு அவருடைய கட்டுப்பாடும் கண்டிப்பும் பிடிக்காமல் வீட்டை விட்டும் வெளியேறினார். இதனால் அவரது தந்தை சாள்ஸ் மொறயஸ் மிகுந்த வேதனையடைந்தார் என்பது உண்மையே!

ஆனாலும் தன் விருப்பப்படிதான் விரும்பிய துறையில் காலடி எடுத்து வைத்து அதில் பிற்காலத்தில் தடம் பதிக்கவும் செய்தார். படப்பிடிப்பின் போதும்  தான் நினைத்ததே அவர் செய்வார்.

காமினி கதாநாயகனாக நடித்த சூரயங்கெத் சூரயா படப்பிடிப்பு மருதானை பாலத்தருகே (1966ம் ஆண்டு) நடைபெற்றுக் கொண்டிருந்தது. காமினி கையில் ஒரு பெட்டியுடன் வில்லன்களின் ஆட்களிடம் இருந்து தப்பி ஒடிவந்து பாலத்தின் மேல் இருந்து குதிக்க வேண்டும். ரிஸ்க்கான காட்சி என்பதால் காமினி குதிக்க மறுத்துவிட்டார். மறுநிமிடம் லெனின் பாலத்திலிருந்து கீழே குதித்துவிட்டார். கூடியிருந்த அனைவரும் காமினி உட்பட அதிர்ந்து போய்விட்டார்கள்.

ஹித்தமித்துரா திரைப்படப் பிடிப்பு கற்பிட்டி கடற்கரையில் நடந்து கொண்டிருந்தது. காமினி உட்பட ஏனைய நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். திடிரென்று அப்பகுதியில் இரண்டு கோஷ்டிகளுக்கு நடுவே கலவரம் வெடித்தது. கையில் கம்பி, கத்தி, வாள் என்று தூக்கிக் கொண்டு மோதிக்கொண்டார்கள்.


படப்பிடிப்பில் இருந்த லெனின் இதனை பார்த்துவிட்டு உடனே கமெராவை தூக்கிக் கொண்டு கலவரத்தை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார். எல்லோரும் அவரை நிறுத்த முயன்றனர். ஆனால் லெனினோ யாரையும் சட்டை செய்யாமல் கலவரத்தை நோக்கிச் சென்று அதனை படம் பிடிக்க தொடங்கினார். கலவரம் முடிந்த பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள் லெனினைத் திட்டினார்கள். ஆனால் அவரோ அது பற்றி கவலைப் படவில்லை. 

இதுமாதிரி உண்மையான கலவரத்தை  நம்மால் படமாக்க முடியுமா இது இயற்கையாகவே அமைந்துவிட்டது. இதனை நாம் படத்திலும் பயன் படுத்திக்கொள்ளலாம் என்று அலட்சியமாக கூறிவிட்டார்.

இது போன்ற செய்கைகளினால் திரையுலகில் லெனின் ஓர் அதீத துணிச்சல்காரர் என்ற பெயர் பெற்றிருந்தார்.

லெனினுடன் நீண்ட காலம் உதவி டைரக்டராக பணியாற்றிய அன்;டன் கிறகரி சொன்னார்.

லெனின் துணிச்சலாக முடிவெடுப்பார். பல ஐடியாக்களை தன்னிடம் வைத்திருப்பார். ஆனால் வெளியே சொல்லமாட்டார். படப்பிடிப்பிற்கு வந்தவுடன் திடீரென்று காட்சிகளை விளக்குவார். தந்திரக் காட்சிகளை படமெடுப்பதிலும் அவர் வல்லவராகத் திகழ்ந்தார்.

இலங்கையில் உண்மையில் நடந்த சம்பவங்களை வைத்தே துணிந்து ஹிந்துவத் ஹிந்துவமய் படத்தை இயக்கினார். படத்தின் வெளியீட்டுமுன் அப்படத்திற்கு சிலரிடம் இருந்து எதிர்ப்பு வந்த போதும் அவர் பின் வாங்கவில்லை. விஜயகுமாரதுங்கவை, மாலினி பொன்சேகாவை, அன்டனி சி. சில்வாவை எல்லாம் இரட்டை வேடங்களில் நடிக்க வைத்தப் பெருமை லெனினுக்கு உண்டு. 1983ம் ஆண்டு இனக் கலவரத்திற்கு பிறகு பல தமிழர்கள் சிங்களத் திரையுலகிலிருந்து ஒதுங்கிய பிறகும் லெனின் யுகென் யுகயட என்ற படத்தை இயக்கி தான் ஒரு திறமைசாலி என்பதை இலங்கை சினிமா ரசிகர்களுக்கும் கலைஞர்களுக்கும் உணர்த்தினார்.
லெனினின் படங்களுக்கு வானொலியிலும் பட டீஸர்களிலும் விளம்பரங்களுக்கு குரல் கொடுத்தவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவை அறிவிப்பாளரான கருணாரட்ன அபேசேகர ஆவார். இவரே விளம்பரங்களில் வெனிங் கவ்ருத் நோமே லெனின் மொறயஸ் ( வேறுயாருமில்லை லெனின் மொறயஸ்) என்று விளம்பரம் செய்தவராவார். வேறு எந்த இயக்குனருக்கும் இந்தப் புகழ் கிடைக்கவில்லை.

கறுப்பு வெள்ளைப் படங்களையே எடுத்து வந்த லெனினிக்கு கலரில் சிங்களப் படம் ஒன்றை டைரக்ட் செய்யும் வாய்ப்பு வந்தது. வண்ணத்தில் தனது ஒளிப்பதிவு திறமையைக் காட்டலாம் என்று மகிழ்ச்சி அடைந்தார் லெனின். படத்திற்கு துன்வெனிலோகய (மூன்றாவது உலகம்) என்று பெயரிடப்பட்டது. கதாநாயகனாக சனத்குணதிலக ஒப்பந்தமானார்.

இந்தப் படத்தில் ஒரு நிர்வாண காட்சியை படமாக்க வேண்டிய தேவை இருந்தது. இதனை எவ்வாறு படமாக்குவது, படமாக்கினாலும் தணிக்கை குழுவின் கத்திரிக்கோலுக்கு இந்த காட்சி தப்புமா என்ற சந்தேகம் படக்குழுவினரிடம் காணப்பட்டது. ஆனால் லெனின் பின்வாங்கவில்லை. அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

குறிப்பிட்ட தினத்தன்று படப்பிடிப்பு ஆரம்பமானது. மேக் அப் செய்த நிலையில்  அந்த காட்சியில் நடிப்பதற்கு நடிகை செட்டிக்கு வந்தார். அவர் உடலை சுற்றி ஒரு டவல் மட்டுமே இருந்தது. கதாநாயகன் சனத், லெனின் உட்பட மேலும் மூன்று நான்கு பேர்கள் மட்டுமே செட்டில் இருந்தனர். அப்போதுதான் காட்சியை விளக்கினார் லெனின்.

செட்டின் நடுவே ஓவியம் வரையும் ஒரு போர்டு வைக்கப்பட்டது. அரங்கம் முழுவதும் விளக்கொளி வீசியது. அக்க்ஷன் என்று லெனின் கூறியதும்  நடிகை  தன் உடலை  சுற்றி இருந்த டவலை அகற்றினார். ஓவியக் கல்லூரியில் மொடலாக ஒரு பெண் நிர்வாணமாக நிற்பது போலவும் அதனை கதாநாயகன் படம் வரைவது போலவும் படமாக்கினார் லெனின். இந்தக் காட்சி படத்திற்கு தேவை என்பதாலும், ஓவியக் கல்லூரிகளில் இது சகஜம் என்பதாலும் தணிக்கை குழு இதனை வெட்டி எரியாது என்று விளக்கம் கொடுத்தார். லெனினின் ஐடியாவை பலர் பாராட்டினார்கள்.

மேலும் ஐந்தே படத்தில் குதிரைகள் ஓட்டத்தை படமாக்க 10 குதிரைகளை வாடகைக்கு அமர்த்தினார். 10 குதிரைகளைக் கொண்டு அக் காட்சி  படமானதும் தனது காமெரா நுணுக்கம் மூலம் நூறு குதிரைகளை ஓடுவதைப் போன்று படமாக்கினார். அன்றைய காலகட்டத்தில் இன்றைய டிஜிட்டல் வசதியோ கம்ப்யூட்டர் தொழில் நுட்பமோ இல்லாமல் தனது ஒளிப்பதிவு திறமையை மட்டும் கொண்டு இக் காட்சியை படமாக்கினார் லெனின். ஆனால் துரதிஷ்டமாக படத் தயாரிப்பாளர் மாரடைப்பால் காலமானதால் இந்தப் படம் வெளிவரவில்லை.
இலங்கை திரையுலகின் சூப்பர் ஸ்டாரான காமினி பொன்சேகாவும் லெனின் மொறாயஸும் இணைந்து எட்டுப் படங்கள் வரை உருவாக்கினார்கள். இவற்றில் எல்லாப் படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்தன. காமினியின் ஸ்டார் வால்யூ நட்சத்திர அந்தஸ்து லெனினின் வெற்றிக்கு பயன்பட்டது. அதே போல் லெனினின் ஒளிப்பதிவு ஆற்றலும் டைரக்ஷன் நுணுக்கமும் காமினியின் வர்த்தக ரீதியிலான உச்சத்திற்கு உறுதுணையாக இருந்தது.

இந்த நிலையில் 1977ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் தலைமையில் பதவிக்கு வந்தது. ஐதேகாவின் வெற்றிக்கு காமினியும் பிரசாரத்தில் ஈடு பட்டிருந்தார். புதிய அரசாங்கத்தின் வெற்றியில் காமினிக்கும் ஒரு பங்கு யிருந்தது. இந்த காலகட்டத்தில் லெனின் காமினியின் கூட்டில் அடுத்த படத்திற்கான தயாரிப்பு உருவானது. படத்திற்கு ஹித்தமித்திரா (உயிர் நண்பண்) என்று பெயரிடப்பட்டது.

வழக்கமான தமிழ் படத்தின் கதைத் தழுவலாக இல்லாமல் இந்தப் படத்திற்கென திரைக்கதை அமைக்கப் பட்டது. முழுப் படத்தின் படப்பிடிப்பு கிழக்கு இலங்கையில் குறிப்பாக கற்பிட்டியில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் காமினிக்கு ஜோடி கிடையாது. குணச்சித்திர வேடம் ஒன்றையே அவர் ஏற்றிருந்தார். டோனி ரணசிங்காவும், ஸ்ரீயானி அமரசேனாவும் ஜோடியாக நடித்தார்கள். அதுவரை காலமும் படத்தில் வில்லனின் அடியாளாக நடித்து வந்த அலெக்சாண்டர் பெர்னாண்டோ இப் படத்தில் பிரதான வில்லனாக தோன்றியிருந்தார். படத்தை சரத் ரூபசிங்கே தயாரித்தார்.

படத்தின் படைப்பு பிடிப்பு கற்பிட்டியில் நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஒரு நாள் ஓட்டலில் காமினி லெனின் அலெக்ஸ் எல்லோரும் மது அருந்திய வண்ணம் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சுமுகமாக இருந்த பேச்சுவார்த்தை சரக்கு உள்ளே போகத்தொடங்க சூடு பிடிக்கத்தொடங்கியது

ஒரு கட்டத்தில் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் இடையில் உண்மையிலேயே சண்டை மூண்டு விட்டது. வார்த்தைகள் கட்டு மீறி காமினி அலெக்ஸை கன்னத்தில் அறைந்து விட்டார். இது லெனினுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. அவர் உடனே காமினியை தாக்க முற்பட்டார். பக்கத்து அறையில் இருந்த சரத் ரூபசிங்கே உள்ளிட்டோர் தலையிட்டு மோதலை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். படப்பிடிப்பு முடிந்து படமுக் வெளிவந்தது. ஆனால் ஹித்த மித்திராக்களின் (உயிர் நண்பர்கள்) நட்பு அத்துடன் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் காமினி லெனினின் கூட்டில் இந்தப் படமும் வெளிவரவே இல்லை.


சுராயங்கத் சூரையா படத்தில் தொடங்கி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த காமினி லெனின் கூட்டணிக்கு ஹித்த மித்திராவுடன் மங்களம் பாடப்பட்டது. ஆனாலும் சிங்களத் திரையில் எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்கக் கூடியவர் காமினி ஒருவர்தான் என்பது லெனினின் கணிப்பு.


தொடரும்




No comments: