மெல்பனில் பாரதி பள்ளியின் மற்றும் ஒரு புதிய வளாகம் உதயம் - ரஸஞானி









மெல்பன் பாரதி பள்ளியின் மற்றும் ஒரு மைல்கல்
சவுத்மொராங் பிரதேசத்தில் புதிய வளாகம் ஆரம்பம்
                                                                               ரஸஞானி
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்!" என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் அவுஸ்திரேலியா மெல்பனில் 1994 ஆம் ஆண்டு உதயமாகியது  பாரதி பள்ளி.  1987 இற்குப்பின்னர் அவுஸ்திரேலியாவிற்குப்புலம் பெயர்ந்த  கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தனின் முயற்சியினால் இங்கு தொடங்கப்பட்ட மெல்பன் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட "பெற்றோர் பிள்ளைகள் உறவு" என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட முழுநாள் கருத்தரங்கின் பெறுபேறுதான் பாரதி பள்ளியின் தோற்றம்.
வெள்ளிவிழாக்காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பாரதி பள்ளியின் வளர்ச்சியில் தொடர்ச்சியாக ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்த மெல்பன் வாழ் தமிழ் அன்பர்கள், தமிழ் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்கும் மற்றும் ஒரு நற்செய்தியை பாரதி பள்ளி நிருவாகத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கியிருக்கிறார்கள்.
மலர்ந்துள்ள புதிய ஆண்டு முதல் மற்றும் ஒரு பாரதி பள்ளி வளாகத்தை சவுத்மொராங் (South Morang) என்னுமிடத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள்.  
கடந்த  7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதிய வளாகத்தின் தொடக்கவிழா சிறப்பாக நடந்தது. பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுடன் புதிய மாணவர்களான குழந்தைகளும் பங்கேற்று விழாவை களைகட்டச்செய்தனர்.
தொடக்கவிழாவை  City of Whittle sea  பிரதேச துணைமேயர் செல்வி எமிலியா ஸ்டெர்ஜோவா அவர்களும், சவுத்மொராங் கனிஷ்ட பாடசாலை அதிபர் திரு. பில் பனஸ் அவர்களும் மங்கல விளக்கேற்றித் தொடக்கிவைத்தனர்.
               பாரதி பள்ளியின் வளாகங்கள் மெல்பனில் East Bur wood ,  Dandenong     ,  Clayton , Reservoir, Berwick, Dandenong North ஆகிய பிரதேசங்களில் இயங்கிவருகின்றன. மெல்பனில் சவுத்மொராங் பிரதேசத்திலும் மற்றும் அதனைச்சூழ்ந்துள்ள எப்பிங், வொலார்ட், மேர்ண்டா, டோரின், மில்பார்க், லேலோர் முதலான பிரதேசங்களிலும் குடியேறி வசிக்கத்தொடங்கியிருக்கும் தமிழ்க்குடும்பங்களின் பிள்ளைகளின் நலன் கருதி புதிதாக இங்கும் ஒரு வளாகம் தொடங்கப்பட்டுள்ளது.
"வாழ்க வாழ்க பாரதி பள்ளி என்றும் வாழ்க வாழ்கவே " எனத்தொடங்கும் பாடசாலைக்கீதத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பாரதி பள்ளியின் வளர்ச்சியை தொடர்ந்து அவதானித்து வருகின்றமையால், அதன் தொடர்ச்சியில் கடந்து  சென்ற மைல் கற்களும் நினைவுக்கு வருகின்றன.





தொடக்கத்தில் பாரதி பள்ளியில் கற்ற மாணவர்களில் சிலர்  பின்னாளில்  பல்கலைக்கழகம் பிரவேசித்து,  தாம் கற்ற பாரதி பள்ளிக்கே வந்து ஆசிரியப்பணியாற்றியிருக்கின்றனர். 24 வருடங்களுக்கு முன்னர் குழந்தைகளாக இங்கு வந்து கற்ற மாணவர்கள்,  காலப்போக்கில் திருமணமாகி தமது குழந்தைகளையும் அழைத்து வந்து  பாரதி பள்ளியில் தமிழ் கற்பிப்பதற்கு இணைத்திருக்கின்றனர்.
அந்தவகையில் பாரதி பள்ளியின் சேவை அஞ்சல் ஓட்டத்திற்கு ஒப்பானதாக திகழ்கிறது.
புதிய வளாகத்தின் தொடக்கவிழாவை இணை அதிபர் திரு. சிவகரன் வரவேற்புரையுடன் ஆரம்பித்துவைத்தார். அவர் புதிய வளாகத்தின் தேவை குறித்து உரையாற்றினார். Reservoir வளாக அதிபர் திரு. ஜெயராஜா, பாரதி பள்ளியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக்குறிப்பிடும்போது,  இதனை ஆரம்பித்து  திறம்பட நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஸ்தாபகர் மாவை நித்தியானந்தன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்களையும் நினைவுபடுத்தினார்.
ஆசிரியை திருமதி அனுஜா பிரதீபனின் உரையைத்தொடர்ந்து  பாரதி பள்ளி மாணவி செல்வி சக்தி தயாபரனின் வரவேற்பு நடனம் நடந்தது. பிரதம விருந்தினர்  பிரதேச துணைமேயர் செல்வி எமிலியா ஸ்டெர்ஜோவா அவர்கள், " வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்?" என்று தமிழில் பேசி அனைவரையும் குதூகலப்படுத்தி உற்சாகமூட்டினார். அத்தோடு தாய்மொழியைக் கற்பதன் முக்கியத்துவத்தையும்  அதைக்கற்பதன் பிற்பாடு கிடைக்கின்ற திருப்தி உணர்வையும் எடுத்துரைத்து,   தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  
மாணவர்களினால் தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டபோது பாரதியின் வேடத்தில் ஒரு மாணவர் தோன்றி பாடலிசையில் இணைந்துகொண்டார்.
சவுத்மொராங் கனிஷ்ட பாடசாலை அதிபர் திரு. பில் பனஸ், "பாரதி பள்ளி தங்கள் பிரதேசத்தில் தோன்றியிருப்பதன் மூலம் பல்லின கலாசார சக வாழ்வுக்கு மேலும் வலுச்சேர்த்திருப்பதாகவும், ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியை உலகில் எந்தப்பாகத்திற்கு சென்றாலும் மறந்துவிடலாகாது என்பதற்கு பாரதி பள்ளியின் மற்றும் ஒரு புதிய வளாகம் சிறந்த உதாரணம்" என்றார்.
அன்றைய தினம் இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய மாணவர்களுடன் பாரதி பள்ளியின் மற்றும் ஒரு புதிய வளாகம் தனது கல்விச்சேவையை குறிப்பாக தமிழ்ப்பணியை  ஆரம்பித்திருக்கிறது. இது ஏழாவது வளாகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
---0---

-->



No comments: