தேர்தல் ! - எம் . ஜெயராமசர்மா ...


image1.JPG

                பாலாறும் தேனாறும்
                   பாய்ந்தோடும் ஊரெல்லாம்
                பலருக்கும் இலவசங்கள்
                     பக்குவமாய் கிடைத்துவிடும்
                வேலையற்ற அனைவருக்கும்
                      விரைவில் வேலைகொடுத்திடுவோம்
                வாக்களித்துத் தேர்தலிலே
                        வாகைசூட வைத்திடுங்கள் !

              ஆட்சிதனில் அமர்ந்தவுடன்
                      அனைவரையும் அணைத்திடுவோம்
              அக்கிரமங்கள் அனைத்தையுமே
                      அடியோடு அழித்திடுவோம்
               போக்குக்காட்டிப் பொய்யுரைக்கும்
                      பொறுப்பற்ற தலைமைகளை
               தேர்தல்தனில் வென்றபின்னர்
                       திசைதெறிக்க ஓடவைப்போம் ! 

             காவல்த்துறை நீதித்துறை
                  கசடனைத்தும் களைந்தெறிவோம்
            கற்பழிப்பு வழிப்பறிக்கு 
                   காட்டமாட்டோம் கருணையினை 
             போதைவகைப் பாவனையை 
                   பொங்கிநின்று பொசுக்கிடுவோம்
            காதலுடன் வாக்களித்து
                  தேர்தல்வெல்லச் செய்திடுங்கள் !



            இப்படிப் பலவற்றை
                 ஏறும்மேடை பலவற்றில்
           செப்பமாய் உரைத்தபடி
                 சிறப்பாக வணங்கிநிற்பார்
          வாக்குப்பெற்று தேர்தல்வென்று
                வசதியுடன் வந்தபின்னர்
          வாக்களித்த மக்களெலாம்
              மண்டியிட்டு வணங்கிநிற்பார் ! 
            


            

                       


No comments: