ATBC யின் கலைை ஒலி மாலை 2017 ஒரு பார்வை .--பாஸ்கரன்

.


நேற்றைய தினம் 22 ஜூலை மாதம் Blacktown Bowman Hall இல் இடம்பெற்றது  ATBC வானொலியின் 15ம் ஆண்டு நிறைவை கொண்டாடிய நிகழ்வு . உலகெங்கும் சிதறிக்கிடக்கும் இலங்கைத் தமிழ் பாடகர்களை ஒன்றிணைத்து இந்திய , உள்ளூர்  இசைக்  கலைஞர்கள் இணைந்து இசை வழங்க மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்துடன் இடம்பெற்றது கலை ஒலி மாலை 2017. எண்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்களை கொண்டு இயங்கும் சமூக வானொலி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளதை திரண்டிருந்த மக்கள் கூட்டமே எடுத்துக் காட்டியது.

நிறை குடம் குத்துவிளக்கு கொண்டு அலங்கரிக்கப் பட்ட  மண்டபத்தில் குறிப்பிட்ட நேரமான 5.45 மணிக்கு ATBC வானொலியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜெயசந்திராவும், இளைய சமூகத்தில் ஒருவரான வேந்தன் பிரபாகரனும் இணைந்து நிகழ்சசியை ஆரம்ப அறிவித்தலோடு தொடக்கி வைத்தார்கள் .





எமது பண்பாட்டின்படி  குத்துவிளகேற்றி , தமிழ் வாழ்த்து , தேசிய கீதம் , ATBC கீதம் ஆகியவை பாடிய பின்பு இசை நிகழ்வு ஆரம்பமானது. திரை சற்றே விலக இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த பிரபல இசை அமைப்பாளர் சதீஸ் வர்சனின் தலைமையில் ஆரம்ப இசை மிக அற்புதமாக வழங்கப் பட்டது. பல வாத்தியங்களின் இசையும் ஜதியும் பின்னிப் பிணைந்து இசை வெள்ளத்தில் மக்களை நனைவித்ததும் கரகோஷம் அதற்கு மேலாக எழுந்து ஒய்ந்தது.

ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப் படும் ரகுநாதன் அவர்களை ATBC யின் அறிவிப்பாளர் செ.பாஸ்கரன் அழைத்து அறிமுகம் செய்ய பலத்த கரகோசத்திற்கு மத்தியில் சௌந்தரராஜன் அவர்கள் பாடிய மணி முடி ஓராறு மலர்விழி ஈராறு என்ற பாடலை கணீரென்ற குரலில் பாடி பக்தி பரவசத்தை பரவ விட்டார் என்றால் மிகையாகாது.

அதை அடுத்து இலங்கையில்  குளோபல் சுப்பர் சிங்கர் பட்டத்தை தட்டிக்கொண்ட இளம் இசைக் குயில் பிரவீனா விக்னேஸ்வரன் ATBC யின் அறிவிப்பாளர் சாரங்கா அழைக்க  பிரவீனா விக்னேஸ்வரன் தன்  இனிமையான குரலில் பொன்வானம் பன்னீர் தூவுது என்று பாடலைப் பாட கரகோசத்தை தூவி மகிழ்ந்தனர்.



அடுத்தபாடலை ஜெர்மனியில் இருந்து வருகை தந்திருந்த விஜே தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் பாடகர் நிருஜன் செகசோதிஜை  ATBC யின் அறிவிப்பாளர் சங்கீதா அழைக்க சங்கீத ஜாதி முல்லை பாடலை கணீர் என்ற குரலில் நிரூஜன் பாடியதும் சபையே அதிர கரகோஷம் எழுந்தது. என்ன குரல் இனிமை.

கனடாவில் இருந்து வருகை தந்திருந்த விஜே தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் பாடகி விடை கொடுஎங்கள்  நாடே புகழ் ஜெசிகா ஜூட் தனது இனிமையான குரலில் நாளை இந்த வேளை பார்த்து என்ற பாடலை பாடி அசத்தி விட்டார்.

இத்தனை பாடகர்களா என்று பிரமித்திருந்த சபையினருக்கு   ஜனனி ஜனனி என்ற பாடல் கேட்கத்தொடங்கியது ஆனால் இளையராஜாவைக் காணவில்லை  keeboard இன் பின்னால் இருந்து இசை அமைப்பாளர் சதீஸ் வர்சனே அந்த பாடலை பாடி அசத்தி விட்டார்.


தொடர்ந்து பாடல்கள் எந்த இடையூறும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது.
இடையில் செல்லையா கேதீசன் அவர்களின் வரவேற்புரையும் , தொடர்ந்து முதலமைச்சரின் வாழ்த்து செய்தியை பாராளுமன்ற உறுப்பினர் . Mark Taylor
வழங்கினார்.

தொடர்ந்து பாடல்கள் இனிமையாக ஒலித்துக்  கொண்டிருந்தது. ஒன்மேல ஒரு கண்ணு, சிநேகிதனே சிநேகிதனே , சின்னம் சிறிய வண்ணப் பறவை , நான் தேடும் செவ்வந்தி பூவிது , உள்ளத்தில் நல்ல உள்ளம் , கண்ணா காட்டு போதும் ( இந்த பாடலை பிரவீனா பாடியபோது ஒலிவாங்கி சரியாக ஒலிக்காத காரணத்தால் மீண்டும் அந்த பாடல் பாடப் பட்டது அந்த கண்ணை பார்ப்பதற்காகவே பாடப்பட்டது போல் எனக்கு தோன்றியது ) , அடி ஆத்தாடி , தெய்வம் தந்த வீடு , பாட்டும் நானே , தென்றல் வந்து தீண்டும் போது, எங்கே நிம்மதி , விடைகொடு எங்கள் நாடே , வராக நதிக்கரை ஓரம் நிலாது வானத்து மேலே , அடி என்னடி ராக்கம்மா வுடன் இன்னும் சில .

 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிகழ்வு இடைவேளைக்காக நிறுத்தப் பட்டது . மிக அருமையாக ஒலியை வழங்கிக் கொண்டிருந்த ஒலியமைப்பில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இடை வேளை வழங்கி ஒலி சீரமைக்கப் பட்டது அதன் பின் எந்த இடைஞ்சலும் இல்லாமல் நிகழ்வு தொடர்ந்தது பாராட்டுக்குரியது.



தொடர்ந்து பல பாடல்களை கேட்ட பின்பு கலைஞர் கள் கௌரவிக்கப் பட்டார்கள் கௌரவிப்பு நிகழ்வை திரு சிவசம்பு பிரபாகரன் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் இசை அமைப்பாளர் சதீஸ் வர்சனின் 11 வயது மகனைப் பற்றி பேசப்பட்டது . 11 வயதில் இத்தனை திறமைகளா . தபேலா வாசிக்கிறார் , Drum வாசிக்கிறார் Keyboard வாசிக்கிறார். தனி Drum கச்சேரியே நடத்தி சபையோரின் பாரட்டுக்களை அமோகமாக பெற்றுக் கொண்டார் .


இறுதி பாடல் என்னடி ராக்கம்மா என்று திரு ரகுநாதனை செ.பாஸ்கரன் அழைக்க திரு ரகுநாதனும் நிருஜனும் இணைந்து பாட மேடையில் நின்ற அத்தனை பாடகர்கள் இணைந்து கொள்ள சபையினரும் சேர்த்து கொள்ள நிறைவுப் பாடல் மண்டபத்தையே அதிர வைத்து விட்டது .

ஒரு அற்புதமான இசை நிகழ்ச்சி பார்த்து ரசித்ததாகவும் நீண்ட இடை வெளிக்குப் பின்பு இப்படி ஒரு இசை நிகழ்வு நான்கு மணித்தியாலங்கள் 37 பாடல்கள் என்ன பிரம்மாண்டம் " Mega Musikal Night" என்ற பேருக்கேற்ற இரவாக அமைந்தது.  ATBC யின் அறிவிப்பாளர்களான T.பிரபாகரன் , விஜயரத்தினம், கேமா, பிரின்ஸ், உஷா ஜவாகர் , சோனா பிரின்ஸ் , கிருஷ்ணா மற்றும் ஜெயச்சந்திரா ஆகியோர் பாடல்களை அறிவித்தார்கள் .
இனிமையான அருமையனா இசை நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

குறையே இல்லையா என்ற கேள்வி நீங்கள் கேட்பது புரிகிறது  ஏன் இல்லை .
மண்டபம் நிறைந்து கொண்டே இருக்க ஜெயதேவன் குழுவினர் கதிரைகளை மேலதிகமாக போட்டுக் கொண்டே இருந்தார்கள்.  இடைவேளையின் போது வரிசையில் உணவுக்காக நின்று கொண்டிருந்தார்கள் உணவுப் பண்டம் முடிந்து விட்டதாக அறிவித்து கொண்டும் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டும் இருந்தார்கள் இது இனிமேல் நடவாது பார்த்துக் கொள்ளவேண்டும் .



பாடகர்களை பார்க்க முடியாமல் Lesar lights மக்கள் முகங்களை நோக்கி
சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. இதைத் தவிர்த்திருக்க வேண்டும் .
மேடையில் புகை கக்கும் இயந்திரம் நுளம்பிற்கு புகை அடிப்பதுபோல் ஆரம்பத்தில் புகை கக்கிக் கொண்டே இருந்தது பாடகர்களின் தொண்டையை பதம் பார்த்ததாக கேள்வி. இசை நிகழ்வுக்கு ஏன் இந்த புகையும் ஒளி விளையாட்டும் என்று பலரின் கேள்வி .
சில அறிவிப்பாளர்கள் கூறியது தெளிவாக கேட்கவில்லை என்று சிலர் கூறிக் கொண்டார்கள்.
இப்படி சில குறைகள் இருக்கத்தான் இருந்தது. எல்லாவற்றையும் மீறி ஒரு அருமையான இசை நிகழ்வை தந்த ATBC யினருக்கு பாராட்டுக்கள்.

நான் குறிப்பிட மறந்த விடயங்கள் இருந்தால் "Comment இல் பதிவு செய்யுங்கள்.






























No comments: