அறுக்கப்பட்டது ஆணாதிக்கம்... த.ராம்

.
டவுளின் தேசமான கேரளத்தில் காமுகர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பது வேதனை. தன்னைப் பல ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் ஒருவருக்கு, அந்தப் பெண் கொடுத்த தண்டனை நாட்டையே உலுக்கிவிட்டது. 

அந்தச் சாமியார் பெயர், கங்கேஷ் ஆனந்த தீர்த்தபாத சுவாமி. அந்தப் பெண், 23 வயதான சட்டக்கல்லூரி மாணவி. ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அங்கிருந்து வருவோம்.

சாமியாரின் பூர்வாசிரமப் பெயர், ஸ்ரீஹரி. கேரள மாநிலம் கோலாஞ்சேரி இவரின் சொந்த ஊர். அந்த ஊரில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். டீக்கடை தொழில் கைகொடுக்காத சிலர் அரசியலுக்கு வருவதைப் பார்த்திருக்கிறோம். இவர், ஆன்மிகம் பக்கம் திரும்பினார். கொல்லம் நகருக்குச் சென்று, அங்குள்ள ஒரு சாமியாரின் சமாதியைத் தினசரி வழிபட ஆரம்பித்தார். ஆண்டுகள் கடந்தன. தாடி, மீசை வளர்த்து, காவி உடை அணிந்து தன்னைச் சாமியார் போல் மாற்றிக்கொண்டார். அங்கு வந்த பக்தர்களின் பிரச்னைகளுக்கு ஆலோசனை சொல்லத் தொடங்கினார். கேரளாவில் இந்து அமைப்புகள் சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பல கோயில்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தினார். அதன்பிறகு, கொல்லம் பன்மனை ஆசிரமத்தில் இணைந்து முழுநேரச் சாமியாராக மாறினார்.



பன்மனை ஆசிரமத்தின் கிளை, திருவனந்தபுரம் அருகே பேட்டையில் உள்ளது. அங்கு கங்கேஷ் ஆனந்த சாமி பல ஆண்டுகளாகத் தங்கினார். அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று பூஜைகள் செய்வதும் இவரின் வழக்கம். பேட்டையில்தான் அந்தச் சட்டக் கல்லூரி மாணவியின் வீடும் இருக்கிறது. மாணவியின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். அந்த நோயைப் போக்க பூஜைகள் செய்வதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அவர் வீட்டுக்குப் போனார். அதன் நீட்சியாக, மாணவியின் தாய்க்கும் சாமியாருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. அப்போது மாணவியின் வயது 16. காலப்போக்கில் சாமியாரின் காமப் பார்வை மாணவியின் மீது விழத் தொடங்கியது. அந்த மாணவியின் தாய் உடந்தையாக இருக்க, மாணவியையும் பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார் சாமியார். மாதத்தில் பாதி நாள்கள் அந்த மாணவியின் வீட்டில்தான் சாமியார் இருந்துள்ளார். அந்த மாணவியின் வயது, இப்போது 23. சட்டம் படித்து வருகிறார்.

ஐந்து ஆண்டுகளாகச் சாமியாரின் கொடுமையைச் சகிக்க முடியாத மாணவி, ஓர் அதிரடி திட்டத்துக்குத் தயாரானார். கடந்த 19-ம் தேதி இரவு வழக்கம்போல் மாணவியின் வீட்டுக்கு வந்ததும், மறைத்து வைத்திருந்த கத்தியினால் சாமியாரின் பிறப்புறுப்பை ஆக்ரோஷமாக மாணவி அறுக்கத் தொடங்கினார். சாமியாரின் அலறல் சத்தம் கேட்டு மாணவியின் தாயும் பக்கத்து வீட்டுக்காரர்களும் வருவதற்குள், 90 சதவிகிதம் துண்டாக்கப்பட்டுவிட்டது. அப்போது இரவு 11.30 மணி. பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து விஷயத்தை மாணவியே சொன்னார். சாமியார், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ‘‘ஒரு சன்னியாசியான எனக்குத் தேவைப்படாத உறுப்பு என்பதால், நானாகவே வெட்டிக்கொண்டேன்’’ என்று சொல்லியிருக்கிறார் அவர். சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்கள்.  விஷயம் தெரிந்து இப்போது மீடியாக்களும் பார்வையாளர்களும் குவிய, எல்லோரையும் கோபமாகத் திட்டி, சபித்துக்கொண்டிருக்கிறார் அந்தச் சாமியார்.
தற்காப்புக்காக மாணவி இதைச் செய்ததால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மாணவியின் பெயர், புகைப்படம், அவருடைய தாயாரின் படம் ஆகியவை வெளியிடப்படவில்லை. நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கும் அந்த மாணவி, ‘‘என் அம்மாவிடம் சொல்லியும் எந்தப் பயனும் இல்லை. இந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் இப்படிச் செய்தேன்” எனக் கூறியிருக்கிறார். சாமியாரோடு, மாணவியின் தாயாரையும் போலீஸார் கைது செய்ய இருக்கிறார்கள். மாணவி, அரசு பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்.

பன்மனை ஆசிரமம், சமூகச் சீர்திருத்தவாதி சட்டாம்பி சுவாமியால் நிறுவப்பட்டது. இப்போது பிரச்னை முற்றியதும், இந்த ஆசிரம நிர்வாகிகள், ‘‘15 ஆண்டுகளுக்குமுன் கங்கேஷ் எங்கள் ஆசிரமத்தில் இருந்து வெளியே போய்விட்டார். அவருக்கும் ஆசிரமத் துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்கின்றனர்.

கேரளாவில் உள்ள பல்வேறு மகளிர் அமைப்புகள் மாணவிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றன. மாணவியின் துணிச்சலான செயலைக் கேரள முதல்வர் பினராயி விஜயனும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் பாராட்டியுள்ளனர்.

பாராட்டோடு நிறுத்திக்கொள்ளாமல் கேரளத்தைக் காமுகர்களின் தொல்லையில் இருந்து காப்பாற்றவும் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

ஆணுறுப்பு அறுக்கப்பட்டதால் ஒரு டியூப் வழியாகத்தான் சிறுநீரை வெளியேற்ற முடியும். வாழும் நாள் வரையில் இந்த நரகம் தொடரும்!

- த.ராம்

No comments: