அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு

.


 அவுஸ்திரேலியாவில்  பலவருடங்களாக இயங்கிவரும்  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்   ஆண்டுப்பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (26 ஆம் திகதி) சனிக்கிழமை  மெல்பனில் மல்கிரேவ் Neighborhood House  மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
சங்கத்தின் துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் , உலகெங்கும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால்  உயிரிழந்தவர்களுக்காகவும்  கடந்த  ஆண்டு இறுதியில்  மறைந்த   முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திருமதி அருண். விஜயராணியை  நினைவுகூர்ந்தும்  மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2015-2016 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதிக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சங்கத்தின் புதிய நடப்பாண்டுக்கான ( 2016 -2017) புதிய நிருவாகிகள் தெரிவு, கிடைக்கப்பெற்ற பரிந்துரைப்படிவங்களின் (Nominations) அடிப்படையில் நடைபெற்றது.




புதிய நிருவாகிகள் தெரிவு, அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர் திரு. யாழ். பாஸ்கர் முன்னிலையில் இடம்பெற்றது.
புதிய நிருவாகிகள்:
காப்பாளர்:  திரு. கலைவளன் சிசு. நாகேந்திரன்.
தலைவர்:  திரு. லெ.முருகபூபதி
துணைத்தலைவர்கள்:  திரு. சங்கர சுப்பிரமணியன், பேராசிரியர் ஆசி. கந்தராஜா.
செயலாளர்:  டொக்டர் நடேசன்.
துணைச்செயலாளர்:  திரு. ஏ.ஆர். திருச்செந்தூரன்.
நிதிச்செயலாளர்:  திரு. தெய்வீகன் பஞ்சலிங்கம்.
துணை நிதிச்செயலாளர்: திரு. எஸ். அறவேந்தன்.
இதழாசிரியர்:  திரு. ஜே.கே. ஜெயக்குமாரன்.
செயற்குழுவினர்:
திருமதி சகுந்தலா கணநாதன், கலாநிதி ஆர். ஶ்ரீகாந்தன், திருவாளர்கள் செல்வபாண்டியன், முகுந்தராஜ், சுந்தரேசன், ஜெயபிரசாத், கலாநிதி செய்யத் ஷெரிப்தீன்.
புதிய நிருவாகிகள் தெரிவையடுத்து  பின்வரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.


நூல்களுக்கு விருது வழங்குதல்
அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் எழுதும் நூல்களில் சிறந்தவற்றை தெரிவுசெய்து,  ஆண்டுதோறும் நடைபெறும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாவில் விருதும் பணப்பரிசிலும் சான்றிதழும்  வழங்குவது தொடர்பான தீர்மானம்.
நோக்கம்:
 இலங்கை, இந்தியா  மற்றும் சிங்கப்பூர், மலேசியா  ஆகிய நாடுகளில் பிறந்து அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைபெற்று வாழும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள்  எழுதும் நூல்களுக்கு,  அவர்களின் பூர்வீக நாடுகளில் அரச சார்பு அல்லது அரச சார்பற்ற அமைப்புகளின் விருதுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
இதனை கவனத்தில் கொண்டு இந்நாட்டில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களின் எழுத்துப்பணியை ஊக்குவிப்பதற்காகவும் தரமான கலை, இலக்கியங்களை இனம் காண்பதற்காகவும்  அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் விருதும் பணப்பரிசும் வழங்கி பாராட்டவேண்டும்.
இச்சங்கம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டில் தமிழ் எழுத்தாளர் விழாக்களையும், கலை இலக்கிய சந்திப்புகளையும் நூல் விமர்சன அரங்குகளையும் நடத்திவருகிறது.
அதனால் இச்சங்கத்தின் மற்றும் ஒரு ஆக்கபூர்வமான பணியாக இந்நோக்கத்தை  நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
விதிமுறைகள்:


அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் கலைஞர்களின் நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
நாவல், சிறுகதை, கவிதை, ஆய்வு, விமர்சனம், சிறுவர் இலக்கியம், நாடகம், கூத்து, ஓவியம், ஊடகம், பயண இலக்கியம்  முதலான துறைகளில் எழுதப்படும் நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
2017 ஆம் ஆண்டு முதல் இந்த விருதும் பரிசும் வழங்கும் நோக்கம் நடைமுறைக்கு வரும்.
2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் வெளியான நூல்களை தெரிவுக்கு ஏற்றுக்கொள்தல்.
பரிந்துரைக்குழு:
சங்கத்தில்  அங்கம் வகிக்காத கலை, இலக்கியத்தில் தேர்ந்த ரசனையுள்ள மூன்று அன்பர்கள் வருடாந்தம் பரிந்துரைக்குழுவுக்கு தெரிவுசெய்யப்படுவர்.
சங்கத்தினால்  பரிந்துரைக்குழு  ஒவ்வொரு  ஆண்டும் புதிதாக தெரிவுசெய்யப்படும்.
நூல்களை அனுப்பும் எழுத்தாளர்களின் கவனத்திற்கு:
நூல்களை அனுப்பும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மூன்று பிரதிகளை சங்கத்தின் தபால் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
சங்கத்தின் தபால் முகவரி:
ATLAS, P.O. Box - 620, Preston, Victoria 3072
குறிப்பிட்ட தீர்மானம் குறித்து மேலும் ஆராய்ந்து இனிவரும் செயற்குழுக்கூட்டத்தில் முழுமைப்படுத்தப்படும் என்று முடிவாகியது.
எதிர்வரும் 2017 மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் தினவிழாவும், மே மாதம் தமிழ் எழுத்தாளர் விழாவும் நடத்துவது எனவும் முடிவாகியது.
தேநீர் விருந்துடன் கூட்டம் இனிது நிறைவடைந்தது.
---0---



No comments: