அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா 2016

.


அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா 2016 அண்மையில் (21 - 23 /10),
கோலாகலமாக சிட்னியில் அரங்கேறியிருந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இலங்கையிலிருந்து புகழ்பூத்த பேச்சாளர் கம்பவாரிதி இ. ஜெயராஜ், கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், கவிஞர் வாசுதேவா மற்றும்,
தமிழ்நாட்டிலிருந்து புலவர் இரெ. சண்முகவடிவேல், பேராசிரியர் வி. அசோக்குமரன், அவுஸ்திரேலியத் தமிழறிஞர்கள்,
இளைஞர்கள், கவிஞர்களென பலரும் பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து சிறப்புச் செய்திருந்தனர்.
புதிதாய் மலர்ந்த "கம்பன் சிறுவர் அரங்கம்" மற்றும் "கலை தெரி அரங்கம்" என்பன மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பட்டி மண்டபமும் வழக்காடு மன்றமும் மண்டபம் நிறைந்த தமிழ் நெஞ்சங்களுடன்
இலக்கியச் சுவையும் ஜனரஞ்சகமும் நிறைந்த நிகழ்வுகளாக அமைந்திருந்தன.



இளைஞர்கள் பங்கேற்ற இளையோர் அரங்கம் மற்றும் சுழலும் சொற்போர்,
செம்மையான பேச்சாற்றல் மிக்கவர்களை இனம்காட்டிப் பெருமை சேர்த்திருந்தது - எனத்  தமிழார்வலர் பலரும்,
தம் கருத்துக்களைக் கழகத்தாருடன் பகிர்ந்து கொண்டார்கள்.

தம் பார்வையில், கம்பன் விழா எவ்வாறு அமைந்திருந்தது என்று தமிழ் உவகையர் இவ்வாறு கூறியிருந்தனர்:


"கம்பன் கழகத்தின் பத்தாவது ஆண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  உங்களுக்கும் மற்றும் கம்பன் குடும்பத்தினருக்குன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இராமாயணத்தின் கதாபாத்திரத்திரங்களை சிறுவர்கள் மிகத்திறமையாக நடித்திருந்தனர்.
நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியோர், அறிவிப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் விழாவை மெருகேற்றும் வகையில் தம் பணிகளை சிறப்பாகச் செய்தனர்.
எல்லா மதங்களையும் மதித்துப் பல தடவைகள் கம்பவாரிதி அவர்கள் உரைத்த கருத்துக்களையும் ஆன்மீக சிந்தனைகளையும் ரசித்தேன்.
நகைச்சுவைப் புலவர் சண்முகவடிவேல் அவர்களின் பேச்சை இன்னும் கேட்கலாம் என்று ஆசை.  பேச்சாளர்களும் விழாவில் கலந்து கொண்ட பெரியோர்களும் ஒருவரை ஒருவர் மதித்து வணங்கிய பண்பு மனதைத்தொட்டது.

விழாவில் நான் முழமையாக கலந்து கொள்ள முடியவில்லை. இளையோர் அரங்கம் சிறப்பாக நடைபெற்றதாக அறிந்தேன். இளையோர் பம்பரம்போல் சுழன்று விழாவில் ஆற்றிய பங்கு என்னை வியக்க வைத்தது.
அனைவருக்கும் மீண்டும் என் பாராட்டுக்கள்!"

திருமதி பேர்ணடீன் றதி.

<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>

"சிட்னி கம்பன் விழா 2016
கடந்த வார இறுதியில் ( 21, 22, 23ம் திகதிகள்) நடந்தேறியது கம்பன் விழா.
வெள்ளி மாலையில் தொடங்கிய அவ் விழா சனி ஞாயிறு இரு அமர்வுகளாக காலை 9.30 மணியில் இருந்து 1.30 மணி வரையும்
பின்னர் மாலை அமர்வுகள் 4.30 இலிருந்து இரவு பத்து மணி வரையும் நடந்தேறியது. மதிய உணவு இலவசம் என்பது ஒரு கொசுறுச் செய்தி.

தமிழுக்கு விழா
தமிழ் இலக்கியத்துக்கு விழா
இலக்கியம் தந்த கம்பனுக்கு விழா!
நிஜமாகவே நெஞ்சுக்குள் பெய்தது ஒரு மாமழை! நீருக்குள் மூழ்கியது தாமரை!!
கம்பராமாயண உவமை ஒன்று இப்படி பேசுவதாக தமிழகப் பேச்சாளர் ஒருவர் பாடினார்.
அது, ஆந்திராவில் பரந்து விரிந்து ஓடுகிற கோதாவரி நதி பற்றியது. கூடவே அது கவிதையின் வண்ணத்துக்கும் பொருந்திப் போகிற கம்ப வரி. சிலேடை வரி. அது இது தான்.



’’புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து, புலத்திற்றாகி
  அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி
  சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
  சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’

இங்கும் ஓடியது ஒரு தமிழ் நதி, கோதாவரி போல.....

கரை புரண்ட படி.....

தமிழக, இலங்கை, அயல் மாநிலம் போன்ற இடங்களில் இருந்து மட்டுமன்றி உள்ளூர் பேச்சாளர்களோடு இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தம் ஆற்றல்களைக் காட்டியதும் பத்தாவது ஆண்டு விழா என்பதும் கூடுதல் சிறப்பு.

இந்த கம்பன் விழாவுக்கும் ஏனைய தமிழ் விழாக்களுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறு பாடு உண்டு. கம்பன் விழா ஒரு பண்பாட்டை சுமந்து நிற்கும். அதன் அலங்காரங்களில் இருந்து தொடங்கும் அது. மண்டபத்துக்கு போகும் பாதைகள் எங்கும் தமிழ் புத்தக வரிசைகள், கோலங்கள், குத்துவிளக்கு நிறைகுடம் கூடவே இளந்தமிழ் பெண்கள் திருநீறு சந்தனம் குங்குமம் பன்னீரோடும் பண்பாடு சார்ந்த உடைகளோடும் வரவேற்க காத்து நிற்பர். கூடவே ஓருருவர் அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்த புன்னகையோடு காத்து நிற்பர்.


மேடை பூக்களாலும் தோரணங்களாலும் பதாகைகளாலும் வண்ண விளக்குகளாலும்  பாவை விளக்குகள் ஆளுயரக் குத்து விளக்குகள் பித்தளைப் பூத்தாங்கிகள், குடைகள் சிம்மாசனங்களாலும் தனியழகு பெறும். மிகுந்த சிரத்தையோடு அதனைக் கவனித்த முறை கவனத்தை அள்ளும். அருகாக இராமா சீதா கல்யாண சமேத பெரும் படம் ஒன்று அதற்கான இடத்தில் அதற்கான மரியாதைகளோடு வீற்றிருக்க முன்னாலே பித்தளை விக்கிரகமாக கம்பர் ஏடோடும் எழுத்தாணியோடும் அமர்ந்திருப்பார். அவ்விடத்தை வியாபித்தும் மங்கல கர அணிகலன்கள்உ..

இவைகள் ஒரு விதமாக பார்வையாளர்களை வசீகரப்படுத்தி கொண்டாட்ட உணர்வினையும் குதூகல மன நிலையையும் கொண்டுவரவல்லவை. ஏதோ இது நம்ம வீட்டுக் கல்யாணம் என்ற மன உணர்வை இவை கொண்டு வந்து விடுகிறது.

எனக்கிந்த புற அழகு சார்ந்த விடயங்களில் அத்தனை ஈடு பாடு இல்லாத போதும் - அநாவசிய ஆடம்பரத்துக்கு அளிக்கப் படும் செல்வம் - அது விரயக்கணக்கில் வைக்கப்பட வேண்டியது - என்று நான் நினைக்கின்ற போதும் அது கவனத்தை ஈர்த்து அந் நிகழ்வின் பால் ஒன்ற பாதை வகுக்கிறது  என்ற உண்மை  உறைக்கவே செய்தது.
கூடுதல் நிறைவாக ஒலி ஒளி அமைப்புகள்.....
பார்த்துப் பார்த்து; திட்டமிட்டு திட்டமிட்டு கூட்டு முயற்சியின் ஒட்டு மொத்த வெற்றி இவ்விழா!


இவை புறவயப்பட்ட தென்றால் அங்கு ஒட்டுமொத்தமாக நிலவுகின்ற ‘வாசம்’ என்று ஒன்றுண்டு. அது பேச்சில் நடத்தையில்  துலங்கும் ‘பண்பாட்டு வாசம்’. அனைத்துக் கம்பன் கழகத்தாரிடமும் ஒன்று போலவே  இருக்கும் பணிவு, அன்பு, புன்னகை, அடக்கம், உபசரிப்பு, ஒத்துழைப்பு, நட்பியல்பு கூடவே அவற்றுக்கு ஈடாக ராஜ கம்பீரத்தோடு துலங்கும் ஆற்றலும் பேச்சு வன்மையும்.
கம்பனில் இருந்து கம்பவாரிதியை பிரிக்க முடியாது. சிட்னி என்றால் ஜெயராமில் இருந்து கம்பனைத் தனியே பிரிக்க இயலாது. Cumber land ( கம்பன் நிலம்) என்ற பிரதேசத்தில்  jeyram ( ஜெய (வெற்றி) ராமன்) வாழுதலும் விழா எடுத்தலும் எத்தனை பொருத்தம் பாருங்கள்!

இந்த ஜெயராம் பற்றி கொஞ்சமாய் ஏனும் ஏதும் சொல்லாமல் அப்பால் நகருத்தல் எனக்கு நான் செய்யும் அதர்மமாகும். அவர் கானக நடுவே அடர் வானில் தெரியும் ஒரு வடதுருவ நட்சத்திரம். ஒரு புலர் காலைப் பொழுதுக்கான அறிகுறி என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இவ்வாறான அபிப்பிராயம் நிலை பெற சில காரணங்கள் உண்டு.

1. அவரிடம் இருக்கும் அர்ப்பணிப்பும் தாய்மை உணர்வும்.
2. அவரிடம் இருக்கும் ஒரு விதமான துறவு நிலை
3. கூடவே அவரோடு இருக்கும் எளிமை அன்பு பணிவு அடக்கம் முதலான அணிகள். தள்ளியே நிற்கும் தன்மை. மற்றவர்களுக்கு இடம் கொடுத்து ஒதுங்கி நிற்கும் குணம்.
4. இலக்கியம்,கலைகள், பண்பாடு இவற்றின் பால் அவருக்கு இருக்கும் அபரித்தமான நம்பிக்கை உறுதிப்பாடு மற்றும் அவற்றை அடுத்த சந்ததிக்கு கொடுக்கும் நாட்டம்.
5. பெறுமதி மிக்க தன் நேரத்தை அமைதியான முறையில் சமூகத்துக்குக் கொடுக்கும் உயர்ந்த உள்ளம்.


அவரின் செயற்பாடுகளை யாரும் சொல்லி நான் அறிகிற பொழுதுகளில் கடவுள் சிலரை சிலவற்றுக்காகப் படைக்கிறாரோ அதற்காகவே அவர்களை தயார் படுத்துகிறாரோ என்று தோன்றும். இவர் அதற்கு முழுதாகப் பொருந்திப் போகிறார்....

பெற்றுக் கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் திளைத்து மகிழவும் பல பல விடயங்கள் இருந்தன. இருந்த போதும் இரண்டரை நாட்களை முழுதாக எனக்கு ஒதுக்க இயலாது போயிற்று. அதனால் இந் நிகழ்வு பற்றிய முழுமையான பார்வையை - அபிப்பிராயத்தைத் தருதல் என்பதும் இயலாததாயிற்று. அதனால் ஒரு நினைவுக்காக குறிப்புகளாக மட்டும் சில;

கிட்டியவை:
1.இயற்கலை; பேச்சு வன்மை- குறிப்பாக ஈழத்துப் பேச்சாளர்கள், தமிழகப் பேச்சாளர்கள், அவுஸ்திரேலியப் பேச்சாளர்கள், இரண்டாம் தலைமுறைப் பேச்சாளர்கள் என பல அணிகள்!
இந்த 4 வகைப்பட்ட பேச்சாளர்களிடமும் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் சில விடயங்கள் இருந்தன. ஈழத்தில் இருந்து வந்த பேச்சாளர்களிடம் பேச்சு வன்மையோடு சிறந்த பேச்சுக்கான தயாரிப்பும் இருந்தது. தமிழகப் பேச்சாளர்களிடம்  நகைச்சுவையும் பொருள் வளமும் கலந்த ஓர் இயல்பான பேச்சு வழக்கு இருந்தது. அவுஸ்திரேலியப் பேச்சாளர்களிடம் பேச்சில் ஒரு வித தீவிரப் போக்கு; வாதத்திறன் காணப்பட்டது. இரண்டாம் தலைமுறைப்பேச்சாளர்களிடம் மிகுந்த திட்டமிட்ட வரையறைக்குள் நிற்கும் குணாம்சம் மிகுந்த சரளமான தமிழ் வீச்சோடு கூடிய அழகோடியது.


கூடவே இவற்றோடெல்லாம் சமூகப் பிரச்சினைகள், நடைமுறை அரசியல், சமூக வாழ்வு, குடும்ப வாழ்வு என சிலேடையாக தொட்டுச் சென்ற விடயங்கள் பேச்சோடு கிடைத்த ஓர் ஏலக்காய் வாசனை.

2. முதன் முதலாக கலை தெரி அரங்கம்: இது 10வது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வு. இயல் இசை நாடகம் மூன்றையும் ஒன்றாக்கி ஒரு மேடையில் இரண்டாம் தலைமுறை படைத்தளித்த ஒரு கூட்டு வெளிப்பாடு.( அந்த ராமநாடக கீர்த்தனைக்கு  நிறைந்த மக்கள் கூட்டம், முடிவில் மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செய்தார்கள்).

3. சமூகத்துக்கு நாட்டுக்குச்சேவையாற்றிய பெரியோர்கள் மதிக்கப் பட்டமை; கெளரவிக்கப் பட்டமை. அந்த கெளரவத்தை அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளால் கையளித்தமை.(அவர்கள் கூட சொல்லி வைத்தது மாதிரி தமிழ் பண்பாட்டு உடையணிந்து வந்திருந்தார்கள்.)





4. மூன்றாம் தலைமுறையையும் உள்வாங்கி அவர்கள் வயது, பருவம் தன்மைகளுக்கேற்ப வழங்கப் பட்ட மேடை. (சிறு பிள்ளைகள் இராமாயண கதாபாத்திரங்களைப் போல உடை அணிந்து தம் குண இயல்பைக் குறிப்பிட்டு சபையோரிடம் தான் யார் எனக் கேட்டார்கள்)

5.ஒட்டு மொத்தமான நேர முகாமைத்துவம், தொண்டர் படையின் பொறுப்பான செயற்பாடுகள். ( உதாரணத்திற்கு ஒன்று,. கடைசி நாள், கடைசி நிகழ்வு; வழக்காடு மன்றம் .’ குற்றக் கூண்டில் சீதை’ என்பது தலைப்பு. கைத் தொலைபேசியில் அதனை ஒலிப்பதிவு செய்ததால் சொல்கிறேன். நிகழ்வு சரியாக 2 மணி நேரம் 3 நிமிடங்களில் முடிந்தது. மணிக்கூடு எதனையும் பார்க்காமல்; யாருக்கும் நேர சமிக்ஞைகள் வழங்காமல்; கம்பவாரிதி அந்த சாதனையைச் செய்திருந்தார்! )


கிட்ட வேண்டியவை:

1. சம பந்தி வாய்ப்பு; முதலாவது தொடக்க நிகழ்வாக அமைந்தது கவியரங்கம். ஒரு பெண் கவிஞர் கூடவா இருக்கவில்லை? வண்ணங்களைப் பற்றிய கவி அரங்கில் ஏன் இப்படி ஒரு தனி வண்ணம்?

2. கூடுதல் அலங்காரம்; நெருக்கடியாகப் பூக்கள். உதாரணமாக கலை தெரி அரங்க நிகழ்வில் ஆடல் பாடல் வாத்தியம் எல்லாம் ஒரு மேடையில் கூடவே பூக்கள் பாவைகளும் சற்றே நெருக்கடியாக....

3. வெளியே இருந்த காட்சியமைப்பு: புத்தக விற்பனை அரங்கு, கலைகாட்சிக்கு கொடுக்கப் பட்ட இடம்; -  பெரிதாக அறிவிக்கப் பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட உள்ளூர் படைப்பாளர்கள் பற்றிய விபரங்கள் படைப்புகளுக்கு வழங்கப்படவில்லை. ஒரு மூலையில் கவனிப்பாரற்று தேமே எனக் கிடந்தன அவரவர்  பெற்றெடுத்த புத்தகக் குழந்தைகள். தனிப்பட ஒருவரைத் தானும் அந்த இடத்திற்கு நிறுத்தப்படாமை சற்றே உறுத்திற்று.


4. தேடலின் தேவை: கவியரங்கு,பேச்சு, விவாத அரங்கு, வழக்காடு மன்றம்....இயற்கலையின் அழகு மிளிரும் வகைப்பாடுகள் தான். இனி இதை விட வேறு வகைப்பாடுகள் பற்றியும் யோசிக்கலாமோ எனத் தோன்றுகிறது.  தெரிந்த கதையும் அறிந்த ஊடகமும் சலிக்காமல் இருக்க ஒரு புதிய வடிவம் -  இந்தத் தேடல் - ஒரு முயற்சி - ஒரு மாற்றம் - நமக்குத் தேவை. பாற்கடலின் ஆழம் மந்திரமலைக்குத் தெரியும். சுழியோடிகளுக்கு முத்தெடுக்கவா தெரியாது?

பார்வையாளர்கள் சிந்திக்க வேண்டிய விஷயமும் ஒன்றுண்டு. மண்டபம் நிரம்பிய பார்வையாளர்கள். இரண்டாம் மூன்றாம் வரிசைகள் சில துப்பட்டாக்களாலும் இன்ன பிற தனிப்பட்ட சாதனங்களாலும் ‘இது என் சீட்’ என்று ’குறிகளால் காட்டும் முயற்சியை’ செவ்வனே செய்திருந்தது. கூடவே அருகிருப்பவர் ஆசனத்துக்கு காவலாக...ஆனால் பாருங்கள் நிகழ்ச்சி முடியும் வரை அவைகளே நிகழ்ச்சியைப் பார்த்தன. என்னே ஒரு இங்கிதம் பாருங்கள்....



என்றாலும் இவை எல்லாவற்றையும் தாண்டி கோதாவரி ஆறெனப் பெருகியது  தமிழ் வெள்ளம். அது,

’’புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து, புலத்திற்றாகி
  அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி
  சவி உறத் தெளிந்து , தண்ணென்று, ஒழுக்கமும் தழுவிச்
  சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’

என் மனம் கரை புரண்டு செல்லச் செல்ல... நெஞ்சுக்குள் பெய்தது மாமழை.

தமிழ் பேச்சின் வீச்சால் புயலடித்து போனதொரு வனமாயும் ஆனது  உள்ளம்....

தமிழ் வாழ்க! அதன் இயல் எழில் இனிதே வாழ்க!

வேண்டும்; மீண்டும்!"


அக்ஷ்ய பாத்ரம் - மணிமேகலா.
http://akshayapaathram.blogspot.com.au/

<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>
"இவ்வாண்டு சிட்னியில் நடந்த கம்பன் விழாவைப் பற்றி நானறிந்தவர்கள் புகழ்ந்து கூறியதைக் கேட்டேன் - மிக்க மகிழ்ச்சி. கான்பெராவில் இருந்து சிட்னிக்கு அந்த வார இறுதி நாட்களில் (22-23 ஒக்டோபர்) வந்து சென்ற நாம் (நானும் என் மனைவியாரும்) இவ்விழாவிற்கு வர வேண்டும் என்று விரும்பி இருந்தோம். சிட்னி வருவது பெரும்பாலும் எமது தனிப் பட்ட அல்லது குடும்ப விடயங்களுக்காகத்தான். விழா நாட்களிலும் அவ்வாறான விடயங்களில் எமது நேரத்தைச் செலவிட நேர்ந்த படியால், எம்மால் வர இயன்றது ஞாயிறு மாலை நடந்த கலை தெரி அரங்கத்தின் ஒரு பகுதிக்கு மட்டும் தான்.  அந்த நிகழ்ச்சியை அமைதியாகவும் இதய மகிழ்வுடனும் ரசித்தோம்.  சிட்னியின் இளந் தமிழ்ப் பிள்ளைகள் அழகிய தமிழில் சொற்களைக் கோத்து கம்ப ரசத்தைச் சொரிந்தமை (வர்ஷித்தமை) எம் உள்ளங்களை அள்ளியது. இங்கு வளர்ந்த பிள்ளைகளுக்கு இத்தகு தமிழ்த் திறனா? இவர்களும் இவர்களைப் பயிற்றுவித்த - ஊக்குவித்த அனைவரும் தமிழுக்கும் மஹாகவி கம்பருக்கும் பெரும் சேவை செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சி மட்டுமே சான்றாக அமைந்தது உங்களது மற்றைய நிகழ்ச்சிகளின் தரம் எவ்வாறு இருந்திருக்கும் என நாம் உய்த்துணர.


"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என்ற கம்பன் கவிதை வரிகளை இளையவர்கள் இனிய குரலில் கண்ணியமான நகைச்சுவையும் தெளித்து நம்மை மகிழ்வித்தது அபாரம்.  "கரிய செம்மல்" என்று கம்பன் இராமனைக் குறிப்பதை நினைவு படுத்திய போது
 என்னுள் சிலிர்ப்பு ஏற்படத்தான் செய்தது. கம்பரசம் இராமனின் அழகுருவை மனதில் கொணர்ந்தது.

நிகழ்ச்சிக்குத் துணை தந்த இசையும் அருமை.  கம்பன் கழகத்தின்  இனிவரும் நிகழ்ச்சிகள் பற்றி அறிய முடிந்தால் நன்றாக இருக்கும்.

மனம் கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்கள் யாவருக்கும்  உரியதாகுக."

திரு. திருவருள் வள்ளல்
கான்பரா

அனைவருக்கும் நன்றிகள்.



கழகத்தைத் தாங்கி நிற்கும் அனுசரணையாளர், நலன் விரும்பிகள், கம்பன் குடும்பத்தார் அனைவருக்கும் எம் உளம்கனிந்த நன்றிகள்.
கடமைகள் பல விரிந்துகிடக்கின்றன என்பதை உணர்ந்து, எம் பயணத்தை இராம அயணத்தில் தொடர்கின்றோம்.

'இன்பமே எந்நாளும் துன்பமில்லை'

அன்புடன்
- அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தார் -





No comments: