மக்கள் விரும்பாத தீர்வை ஏற்கோம் : வலியுறுத்துகிறார் எதிர்க்கட்சித்தலைவர்
நான் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்க போவதில்லை : அமைச்சர் மனோ கணேசன்
அவுஸ்திரேலியா சுற்றுலா பெண் மீது பாலியல் சேஷ்டை
யாழ். நீதிமன்ற தாக்குதல் : மூவருக்குப் பிணை
யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு
புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு (அமைச்சர்களின் விபரம் )
மக்கள் விரும்பாத தீர்வை ஏற்கோம் : வலியுறுத்துகிறார் எதிர்க்கட்சித்தலைவர்
08/08/2015 எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதற்காக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகிடைத்து விட்டதாக யாரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் நாம் ஏற்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவராக பதவியேற்றுள்ள இரா.சம்பந்தனை பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் ஞாயிற்றுக் கிழமை மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
மக்களின் விருப்பத்துக்கு மாறாக நாம் எப்பொழுதும் நடந்துகொள்ளமாட் டோம். எமது இலக்கை நோக்கி நாம் முடியும் வரை தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்போம். எமது இலக்குக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி யென்பது எப்பொழுதும் தடையாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
எனக்குத் தரப்பட்ட எதிர்க்கட்சித் தலைமை பதவியானது எனக்குரியதல்ல, அது எமது மக்களுக்குரியதாகும், அத்துடன், அந்த பதவி எமது கட்சிக்குரியதாகும். எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்னைப் பாராளுமன்றக் குழுத்தலைவராக நியமித்ததன் காரணமாக இப்பதவி கிடைத்துள்ளது.
இப்பதவியை நான் பணிவுடனும் அடக்கத்துடனும் ஏற்றிருக்கின்றேன். அதற்காக எமது மக்களுக்கும் எம்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கின்றேன்.
பாராளுமன்ற சம்பிரதாயத்தின்படி இப்பதவி எமது கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளது. எமது கட்சிக்கு பிரதம கொரடா பதவியொன்று உண்டு. அப்பதவியை இன்னுமொரு எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கு கொடுக்கத் தீர்மானித்தோம். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இதனை செய்தோம். இந்த முடிவுக்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது பூரணமான சம்மதத்தைத் தெரிவித்திருந்தார்கள்.
இதன் நிமிர்த்தந்தான் எதிர்க்கட்சி கொரடாப்பதவி மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி பாரிய அரசியல் மாற்றமொன்று நாட்டில் ஏற்பட்டது. அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஊடாக தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் இடையில் ஒரு அரசாங்கம் ஆட்சிபுரிந்து வந்தது.
அது ஒரு அது பெரும்பான்மைப் பலமற்ற அரசாங்கமாகும். ஆகையால் அந்த அரசாங்கத்தால் முக்கியமான விடயங்களைச் செய்ய முடியவில்லை. பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் எதிர்பார்த்தது போல ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. விஷேடமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து 19ஆவது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றார்கள். இதன் மூலம் இந்த அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் ஆளும் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்புண்டு. ஏதாவதொரு விடயத்துக்கு நாம் அவர்களுடன் சேர்ந்து வாக்களித்தால் பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மை வரக்கூடும். இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டதன் முக்கியமான அடிப்படை என்னவென்றால் இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படவேண்டும் என்பதே ஆகும். அத்துடன் ஊழல் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். மனித உரிமை மதிக்கப்பட வேண்டும். சட்ட ஆட்சி இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் சட்டம் மதிக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தின் கௌரவம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவாகும். இவையெல்லாம் நல்லாட்சியின் சிறந்த அம்சங்களாகும்.
கடந்த 9 ஆண்டுகளில் மேற்படி பண்புகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. நாடு நல்லாட்சியிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றிருந்தது. இந்த குறைபாடு ஏற்பட அடிப்படைக்காரணங்கள் பல இருந்தன. சமத்துவம் இருக்கவில்லை. இதனால் நிரந்தரமான சமாதானம் ஏற்படவில்லை. சமத்துவத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்விகண்டன. இதனால் யுத்தமொன்று கூட மூண்டது. 30 வருடங்கள் அந்த யுத்தம் நீடித்தது. தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்தையும் அரசபடைகளையும் எதிர்த்து 30 வருடங்கள் போராடினார்கள். இது ஒரு சாதாரண விடயமல்ல, பெரிய சாதனை. இதையாரும் மறுக்க முடியாது.
இன்று தமிழ் மக்களுடைய பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது.பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பொறுப்புக் கூறவேண்டும் உண்மை அறியப்பட வேண்டும். நீதிவழங்கப்பட வேண்டும். பாதித்தவர்களுக்கு பரிகாரம் தேடப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் கூறுகின்றது . இவ்விதமான அழிவுகள் இந்த நாட்டில் மீண்டும் ஏற்படாமல் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்லப்போனால் இன்று காணப்படும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இதுதான் நமது குறிக்கோளாகும்.
எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற வகையில் எமது கட்சி இவ்விரண்டு விடயங்களிலும் கவனம் செலுத்தும். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் நாமும் மும்முரமாக ஈடுபடுவோம். அக்கடமையிலிருந்து விலகிச் செல்லமாட்டோம். ஏனைய விடயங்களில் நாட்டில் முன்னேற்றம் காணப்பட வேண்டுமாயின் தேசிய இனப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வு காணப்பட வேண்டும். என்ன விதமான தீர்வு தரப்பட வேண்டுமென்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருப்பது புரட்சிகரமான விடயமல்ல. நியாயமான நீதியான கோரிக்கையாகும்.
உலகில் பலநாடுகளில் பல்வேறு இனம், மதம், மொழி சார்ந்த மக்களுக்கு அரச சாசன ரீதியாக, சிறந்த ஒழுங்குகள் செய்யப்பட்டதன் நிமித்தம் ஆட்சி பகிர்ந்தளிக்கப்பட்டு, இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு, அந்த மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கக்கூடிய வகையில் ஆட்சி ஒழுங்குகள் உண்டு. நாட்டைப் பிரிக்கும்படியாக நாங்கள் கோரவில்லை. பிளவுபடுத்தக் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களும் சமபிரஜைகளாக வாழக்கூடிய விதத்தில் போதிய சுயாட்சியைப்பெற்று வாழவேண்டு மென்று விரும்புகின்றோம். சமாதானத் தீர்வொன்றே நல்லாட்சிக்கான அத்திவாரமாக இருக்கமுடியும்.
அந்த அத்திவாரமில்லாமல் இந்த நாட்டில் நல்லாட்சியை உருவாக்க முடியாது. எனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சிப்பதவியை ஏற்றிருக்கும் இவ்வேளையில் என்னமாதிரி நாம் செயற்படவேண்டும், திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மாற்றங்கள் நாம் எதிர்பாராத மாற்றங்களாகும்.
மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். இது ஒரு துணிச்சலான செயலாகும். ரணிலுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. பெரும்பான்மைபலம் இல்லாத ஒரு எதிர்க்கட்சித் தலைவரை பிரதமராக நியமித்தமை பாரிய சாதனையாகும். அவ்வாறு அவர் செய்தமைக்குரிய காரணம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது மக்களுக்கு ஒரு வாக்குறுதி வழங்கியிருந்தார். நான் வெற்றிபெற்றால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவே என்று கூறியிருந்தார்.
தேர்தலின் பின்னர் மக்கள் ஆணையின் அடிப்படையில் ரணிலை பிரதமராக்கினார். மஹிந்த ராஜபக் ஷ அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் மஹிந்தவை நான் பிரதமராக நியமிக்க மாட்டேன் என தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் மைத்திரிபால சிறிசேன கூறினார். பகிரங்கமாகக் கூறினார். மக்கள் தனக்குத் தந்த ஆணையைத் தொடரவே விரும்புகின்றேன் என அடித்துக் கூறினார். இதனால் தான் கடும் முயற்சி செய்தும் மஹிந்தவினால் 100 ஆசனங்களைக் கூட இத்தேர்தலில் பெறமுடியவில்லை.
இம்மாற்றங்களை நாம் அவதானிக்க வேண்டும். இம்மாற்றங்களை சாதாரணமாக எடைபோடமுடியாது. சாதாரணமாக நடைபெறக் கூடியதுமல்ல. இது எமக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பங்கள் ஆகும். இம்மாற்றங்கள் நடந்ததன் காரணமாகவே நாம் நியாயத்தின் அடிப்படையில் நீதியின் பிரகாரம், சத்தியத்தின் பின்னணியில் தீர்வைப் பெறலாமென்று நம்புகின்றோம். மஹிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் எதிர்பார்க்கும் எந்தவிடயமும் நடைபெறமுடியாது. ஆகையினால் இதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது நமது கடமையாகும்.
எனவேதான் நாம் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டியகாலக்கட்டத்திலிருக்கின்றோம். பக்குவமாக செயற்படவேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் ஆதரவை தக்கவைக்க வேண்டிய அவசியம் எமக்குண்டு. எங்களைப் பொறுத்தவரை நியாயமாக நடப்போம். எமது இலக்கில் மிகவும் தெளிவாக இருக்கின்றோம்.
நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டுக்குள் சமபிரஜைகளாக வாழ விரும்புகின்றோம் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இந்தச் செய்தியை சர்வதேச சமூகத்துக்கு தொடர்ந்து சொல்ல விரும்புகின்றோம். இதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டைச் சேர்ந்த பல தரப்பு சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமென்று இப்பொழுது விரும்புகின்றார்கள். அவர்களின் ஆதரவை நாம் பெறவேண்டும். வடகிழக்கைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்தின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும். நாங்கள் எத்தகைய பிரச்சினைகளை அனுபவிக்கின்றோமோ அதே பிரச்சினைகளை அவர்களும் அனுபவிக்கின்றார்கள் எதிர்நோக்குகின்றார்கள் ஆகையால் அவர்களையும் நாம் அரவணைத்துச்செல்ல வேண்டும். ஒழிவு மறைவின்றி நாம் செயற்படவேண்டியுள்ளது.
எம்மை நம்பியிருக்கும் மக்களை நாம் கைவிடமுடியாது. மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பொருத்தமற்ற எந்தத் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. தீர்வு சம்பந்தமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுமாக இருந்தால் தீர்வு பற்றிய முடிவை எடுப்பதற்குமுன் மக்களுடன் ஆதரவாளர்களுடன் புத்திஜீவிகளுடன் பேசி தீர்மானத்துக்கு வருவோம். அதைவிடுத்து தன்னிச்சையாக செயற்படப்போவதில்லை. எனவே எந்த முடிவாக இருந்தாலும் ஜனநாயக ரீதியாகவே முடிவுகள் மேற்கொள்ளப்படும். எவ்வாறு இருந்தாலும் இன்றைய சூழலில் யதார்த்தமாகச் செயற்படவேண்டியது அவசியமாகிறது.
எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கு கிடைத்ததால் எல்லாம் முடிந்து விடவுமில்லை தீர்ந்து விடவுமில்லை. அண்ணன் அமிர்தலிங்கம் 1977 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அப்பொழுது எமக்கு பாராளுமன்றத்தில் 18 ஆசனங்கள் இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எட்டு ஆசனங்கள் மாத்திரமேயிருந்தன. நாம் இரண்டாம் பெரும்பான்மைக் கட்சியாக இருந்தோம். அப்பொழுது நான் பாராளுமன்றத்துக்கு முதல்முறையாகச் சென்றிருந்தேன் அண்ணன் அமிர்தலிங்கத்துக்குப்பின்னால் எனது ஆசனம் அமைந்திருந்தது. நாங்கள் அவருக்கு பூரணமான ஆதரவை நல்கினோம் ஒற்றுமையாக இருந்தோம். இன்று நாம் பாதுகாக்கவேண்டிய விடயம் எமது ஒற்றுமையாகும்.
எவ்வாறு இருந்த போதிலும் இன்று நாம் பலமாக இருக்கின்றோம். ஏன் நாம் பலமாக இருக்கின்றோம் எமது மக்கள் எம்மை அதிகப்படியாக ஆதரித்து 16 உறுப்பினர்களை வெற்றிபெற வைத்ததன் நிமித்தம் மக்களின் ஒற்றுமையான ஆணையின் அடிப்படையில் நாம் பலம் பெற்று நிற்கின்றோம். நாம் இன்னும் அதிகப்படியான ஆசனங்களை வென்றிருக்க முடியும். திருகோணமலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கேட்டதன் காரணமாக இரு ஆசனங்களை எம்மால் பெறமுடியாமல் போய்விட்டது.
இன்னுமொரு ஆசனம் கிடைத்திருக்கலாம். எவ்வாறு இருந்த போதிலும் இதுவொரு நல்ல வெற்றியாகும். எல்லோரும் எமது வெற்றியை மதிக்கின்றார்கள். நாட்டின் ஆட்சியாளர்கள் மதிக்கின்றார்கள். சிங்கள மக்கள் மதிக்கின்றார்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது தமிழ் மக்களின் விசுவாசமான கட்சியென ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களும் புத்திஜீவிகளும் ஏற்றுக்கொள்கின்றார்கள். சர்வதேச சமூகம் ஏற்றுகொள்கிறது. இது இன்னும் பலமடையும் எதிர்க்கட்சியின் தலைமைப்பதவி கிடைத்திருப்பது எமக்கு இன்னும் பலம்சேர்க்கும். எனவே நாம் தெளிவாக சிந்தித்து பிரிவு பட்டு நிற்காமல் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். திருகோணமலை தமிழரசுக் கட்சிக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பாராட்டு வைபவத்திற்கு கோ.சத்திய சீவராஜா தலைமை தாங்கினார். நன்றி வீரகேசரி
நான் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்க போவதில்லை : அமைச்சர் மனோ கணேசன்
08/09/2015 தேசிய கலந்துரையாடல் என்பது தேசிய நல்லிணக்கத்துக்கு வழிகாட்டவேண்டும். இந்நாட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள, மலே, பறங்கி இனத்தவர் மத்தியில், பெளத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மதத்தவர் மத்தியில் மெய்யான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.
நல்லிணக்கத்துக்கு தடை இன, மத சமத்துவம் இன்மைகளாகும். சமத்துவம் இல்லாவிட்டால் எப்படி நல்லிணக்கம் ஏற்படமுடியும்? இது நான் எப்போதும் கேட்கும் கேள்வியாகும். இந்த இனவாத தடைகளை நான் அறிவேன். ஏனென்றால் இன்று நான் பொறுப்பு ஏற்றுள்ள இந்த அமைச்சரவை அமைச்சின் நோக்கங்கள் எனக்கு புதியவை அல்ல. இந்த நோக்கங்களுக்காக நான் தெருக்களின் இருந்து பத்து வருடங்களுக்கு அதிகமாக போராடியவன்.
எனவே இந்த தடைகளை நான் அடி மட்டத்தில் இருந்து நீக்குவேன். மேல் மட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை நமது அரசு தமிழ், முஸ்லிம் தலைமைகளிடம் பேசி தீர்க்கும். அங்கேயும் நான் கட்சி தலைவர் என்ற முறையில் இருப்பேன். ஆனால், அமைச்சர் என்ற முறையில் நான் உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து நீக்குவேன். அதை விடுத்து வெறுமனே அமைச்சரவை வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டுஇ இந்த நாட்டில் நல்லிணக்கத்துக்கும் ஒரு அமைச்சர் இருகின்றார் என்று காட்டும் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்க போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணிஇ தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தனது அமைச்சு அலுவலக பொறுப்புகளை இன்று முற்பகல் ஏற்றுக்கொண்ட வைபவத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
1999ல் ஆரம்பித்த என அரசியல் வாழ்வில் இன்றுதான் நான் முதன்முதலில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். இதையிட்டு எவரும் மனக்கிலேசம் அடைய தேவையில்லை. இதற்கு முன்னர் இரண்டு ஜனாதிபதிகளிடமிருந்து, அமைச்சு பதவியை ஏற்றுகொள்ளும்படி நான்கு முறை எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், நான் வரப்பிரசாதங்களுக்காக கொள்கைகளை விற்று அணிமாற தயாராகவில்லை. ஆகவேதான் அமைச்சராக இருக்கவில்லை.
இந்த ஆட்சி, எங்கள் ஆட்சி. தம்மை அரசர் என நினைத்துக்கொண்டு நாட்டை ஆண்ட அரச குடும்பம் ஒன்றை தோற்கடித்து எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கையை நிலைநாட்டி நாம் உருவாக்கியுள்ள ஆட்சி இதுவாகும். இதற்காக நான் பெரும் பாடுபட்டுள்ளேன். நண்பர்கள் ரவிராஜ், லசந்த விக்கிரமதுங்க ஆகியோரை இழந்து நாங்கள், இந்த இடத்தை வந்து அடைந்துள்ளோம். மக்கள் கண்காணிப்பு குழு, சுதந்திரத்துக்கான மேடை, எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம், காணாமல் போனோரின் குடும்பத்தவர் இயக்கங்கள் ஆகியவற்றை கடந்து இந்த இடத்தை அடைந்துள்ளோம்.
ஆகவே எனக்கு இந்த அனுபவங்கள் புதியன அல்ல. கடந்த காலத்தில் செய்து வந்தவைகளை இனி நான் அதிகாரப்பூர்வமாக செய்வேன். இந்த நாட்டில் இனி இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதம், அரச மற்றும் அரசற்ற பயங்கரவாதம் என்று எதுவும் இருக்க முடியாது. ஆயுத போராட்டத்துக்கு அடித்தளமிடும் காரணிகளை நான் படிப்படியாக தேடி அழிப்பேன். இது எங்கள் அரசின் கொள்கை. இந்த அமைச்சில் இந்த கொள்கையின் அடைப்படையில்தான் காரியங்கள் நடைபெற வேண்டும். அதிகாரிகள் எவராவது இதற்கு இடையூறு செய்தால் அதை நான் சகித்துக்கொள்ள போவதில்லை.
உள்நாட்டில் நமது முன்னுரிமைகள் எதுவாக இருந்தாலும்இ உலகத்தின் பார்வையில் இலங்கையை பொறுத்தவரையில், தேசிய நல்லிணக்கம் என்பதுதான் முதலிடம் வகிக்கும் விஷயமாகும். நல்லிணக்கம் இல்லாவிட்டால், உலக ஒத்துழைப்பு, ஆதாரங்கள் கிடைக்காது. இதனால் ஏனைய அனைத்து பொருளாதார அபிவிருத்திகளும் சரிந்துவிடும். எனவே இந்த அமைச்சு மிகவும் முக்கியமான அமைச்சு. இதை என்னிடம் ஜனாதிபதியும், பிரதமரும் நம்பிக்கையுடன் ஒப்படைத்துள்ளார்கள். அந்த பொறுப்பை நான் ஆளுமையுடன் நிறைவேற்றுவேன். எனது அமைச்சு நோக்கங்களை நிறைவேற்ற இலங்கையின் நலனை நாடும் வெளிநாட்டு அரசுகளின் ஒத்துழைப்புகளை தேடி பெறுவேன்.
அரசுசாரா தொண்டர் அமைப்புகளை கடந்த காலத்தில் தேச விரோத சக்திகளாக மகிந்த தரப்பினர் காட்டினார்கள். அப்படி காட்டியவர்கள்தான் உண்மையான தேச விரோதிகள் என்று நாங்கள் இன்று எடுத்து காட்டி விட்டோம். எனது அமைச்சின் பொறுப்பில்தான் அரசு சாரா தொண்டர் நிறுவன செயலகம் செயற்படும். சர்வமத சபையும் செயற்படும். அது தவிர அரசுகரும மொழிகள் திணைக்களம்இ அரசுகரும மொழிகள் ஆணைக்குழுஇ மொழிகள் பயிலகம் ஆகியவையும் எனது அமைச்சின் கீழ் செயற்படும். அரச நிறுவனங்களுக்கு தொழில்ரீதியான தமிழ் மொழி பணியாளர்களை நாம் நியமனம் செய்வோம். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற அவசியமான மேலதிக நிறுவனங்களை அமைப்பதற்கான அமைச்சரவை ஆவணத்தை தயாரித்து சமர்பிக்கும்படி பிரதமர் கோரியுள்ளார். அத்துடன் எனது அமைச்சின் கீழ் செயற்படும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை ஆவணம் ஒன்றையும் சமர்பிக்கும்படி பிரதமர் மேலும் என்னிடம் கூறியுள்ளார். நன்றி வீரகேசரி
அவுஸ்திரேலியா சுற்றுலா பெண் மீது பாலியல் சேஷ்டை
08/09/2015 இலங்கைக்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பாலியல் சேஷ்டை புரிந்த சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவிடம் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர் (46 வயது) முதலில் தங்கல்லயில் உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
இதன்போது அங்கு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் இவரைச் சந்தித்துள்ளார். வழிகாட்டியிடம் இப் பெண் கண்டிக்குச் செல்வதற்கு ஒழுங்கு செய்யுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழகாட்டி கறுப்புநிற கண்ணாடிகளைக் கொண்ட சொகுசு வேன் ஒன்றினை ஏற்பாடு செய்து அவ்வேனில் அப்பெண்ணை கண்டிக்கு அழைத்து வந்துள்ளார்.
சாரதியுடன் வேனில் இவர்கள் வந்து கொண்டிருந்த போது வழிகாட்டி அப்பெண்மீது பாலியல் துன்புறுத்தல்களைப் புரிந்துள்ளார். கண்டிக்கு வந்து சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள அப்பெண் இச்சம்பவம் குறித்து கண்டி சுற்றுலாப் பிரிவு பொலிஸாரிடம் இன்றுக்காலை முறைப்பாடு செய்துள்ளார்.
வழிகாட்டி தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபரான வழிகாட்டியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். நன்றி வீரகேசரி
யாழ். நீதிமன்ற தாக்குதல் : மூவருக்குப் பிணை
09/09/2015 யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபா்கள் 24 பேர் இன்று புதன் கிழமை யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவா்கள் என்று கருதப்படும் 140 க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டு கட்டம் கட்டமாக சிலர் பிணையில் விடப்பட்டிருந்தனர்.
இதேவேளை, மீதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 பேர் இன்று யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியவேளை, அவர்களில் மூவரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து பேர்கள் கொண்ட ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் 17 வயதுக்குட்பட்டவர் என்ற வகையிலும் மற்றும் ஒருவர் வேலை செய்பவர் என்ற வகையிலும் மற்றும் ஒருவர் அவரது தந்தையாரின் சுகயீனம் காரணமாகவும் பிணையில் செல்வதற்கு யாழ் நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் ஏனைய 21பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். நன்றி வீரகேசரி
யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு
09/09/2015 யாழ். பல் கலைக்கழக வளாகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் நான்கிற்கு மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவத்தால் பல் கலைக்கழக வளாகம் பெரும் பதற்றமான நிலமைக்கு உள்ளாகியது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களை இடுப்புப்பட்டி அணிந்து வரக்கூடாது என்றும் பல்கலைக்கழக வளாகத்தில் நிற்கும் மரங்களின் கீழ் போடப்பட்டுள்ள வாங்குகளில் அமரக்கூடாதென்றும் கட்டளைகளை பிறப்பித்தமையினால் எழுந்த முரண்பாடு கைகலப்பாக மாறியது.
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கும் நிலைமைக்கு சென்றதையடுத்து சம்பவத்தில் நான்கிற்கு மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து பல் கலைக்கழக நிர்வாகம் தலையிட்டதையடுத்து தற்போது அங்கு அமைதியான நிலைமையேற்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். பல் கலைக்கழக வளாகத்தில் தமிழ்த் தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கைக்கு ஆதரவாக கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
09/09/2015 ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்று கொண்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் 45 பேர் இவ்வாறு இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்று கொண்டனர்.
பதவியேற்றுக் கொண்ட புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்களின் விபரம்
இராஜாங்க அமைச்ச ர்கள்
- லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன இராஜாங்க நிதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- டி.பி. ஏக்கநாயக்க காணி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- ஏ.எச்.எம். பௌசி ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- டிலான் பெரேரா நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- திலிப் வேதராச்சி கடற்றொழில மற்றும் நீரியல்வள இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- ரவிந்திர சமரவீர தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- நிரோசன் பெரேரா தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- வீ. இராதாகிருஷ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- சம்பிக்க பிரேமதாஸ தொழிற்துறை மற்றும் வணிக இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- பாலித ரங்கே பண்டார தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- ப்ரியங்கர ஜயரத்ன சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- மோகன் லால் பல்கலைக்கழக கல்வி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- ருவான் விஜயவர்தன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- விஜயகலா மகேஸ்வரன்- மகளீர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- சுஜீவ சேனசிங்க சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- எம். ஹிஸ்புல்லா மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- வசந்த சேனாநாயக நீர்பாசன இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- வசந்த அலுவிகார விவசாய இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
- சுதர்சினி பெர்ணன்மோபிள்ளை நீர்விநியோக இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
பிரதியமைச்ச ர்கள்
- சுமேதா ஜெயசேனா வனவிலங்கு தொடர்பான பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- அமீர் அலி கிராமப்புற பொருளாதார பிரதியமைச்சரா சத்தியப்பிரமாணம்
- லசந்த அழகியவண்ண மேல்மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- சுசந்த புஞ்சிநிலமே அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- இந்திக பண்டாரநாயக்க வீடமைப்பு பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- பைசல் காசிம் சுகாதார பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- லக்ஷ்மன் வசந்த பெரேரா பெருந்தோட்ட பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- துலிப் விஜசேகர தபால் மற்றும் முஸ்லிம் விவகார பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- நிசாந்த முத்துஹெட்டிகம துறைமுக பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- துனேஸ் கன்கந்த அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- அனோமா கமகே பெற்றோலிய பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- ஹர்ச டி சில்வா வெளிநாட்டு விவகார பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- அஜித் பி பெரேரா மின்வலு மற்றும் எரிசக்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- எரான் விக்கிரமரட்ன மாநில தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- ரஞ்சன் ராமநாயக்க சமூக சேவை பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- அசோக அபேயசிங்க போக்குவரத்து பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- அருந்திக்க பெர்னாண்டோ உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- தரணத் பஸ்நாயக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- எச்.எம்.எம். ஹரிஸ் விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- நிமல் லன்சா சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்த்தவ விவகார பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- கரு பரனவிதான மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
- சிறிபால கமலத் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment