போலி துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் மீது அமெரிக்க பொலிஸார் சூடு
ஈராக்கிய சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி
அமெரிக்க பெர்குஷன் நகரில் தொடர்ந்து இரண்டாவது இரவாக கலவரம்; பலர் கைது
போலி துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் மீது அமெரிக்க பொலிஸார் சூடு
25/11/2014 அமெரிக்காவில் கிளேவ்லாண்ட் நகரிலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் போலி துப்பாக்கியுடன் விளையாடிய 12 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.தாமிர் ரைஸ் என்ற மேற்படி சிறுவன் விளையாட்டு மைதானத்தில் விளையாடிய வேளை, தனது கையில் இருந்த விளையாட்டுத்துப்பாக்கியை ஏனையவர்களை குறிபார்ப்பது போன்று தூக்கிப்பிடித்துள்ளான்.
இந்நிலையில் தாமிர் ரைஸ்ஸின் கரத்தில் நிஜ துப்பாக்கி இருப்பதாக தவறதாக கருதிய ஒருவர் பொலிஸாருக்கு அது தொடர்பில் அறிவிக்கவும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தாமிர் மீது இரு தடவைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதன் போது ஒரு துப்பாக்கி ரவை தாமிரின் வயிற்றை துளைத்துச் சென்றுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட தாமிர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளான்.
மேற்படி, துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் உள்ளூர் பொலிஸ் படையில் ஒரு வருடத்திற்கு முன்பே இணைந்துள்ளார். ஏனையவர்கள் பொலிஸ் துறையில் 10 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டவர்களாவர். நன்றி வீரகேசரி
ஈராக்கிய சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி
26/11/2014 ஐ.எஸ். போராளிகள் சின்னஞ்சிறார்கள் இராணுவப் பயிற்சிகளுக்கு உட்படுத்தப்படுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர்.
'த பிளட் ஒப் ஜிஹாத் 2' என்ற தலைப்பிலான இந்த வீடியோ காட்சி ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள நினெவெஹ் மாகாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இளம் சிறார்கள் வரிசையில் நின்று துப்பாக்கிச் சூட்டை நடத்துவது, சண்டைப் பயிற்சிகளில் ஈடுபடுவது ஆகிய காட்சிகளை இந்த வீடியோ காட்சி உள்ளடக்கியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில் தோன்றும் சிறுவர்கள் 12 வயது அல்லது 13 வயதுக்கு கீழ்ப்பட்ட வயதுடையவர்கள என நம்பப்படுகிறது. நன்றி வீரகேசரி
அமெரிக்க பெர்குஷன் நகரில் தொடர்ந்து இரண்டாவது இரவாக கலவரம்; பலர் கைது
அமெரிக்க பெர்குஷன் நகரின் புறநகரப் பகுதியான சென். லூயிஸில் இரண்டாவது இரவாக செவ்வாய்க்கிழமை இரவு உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
பெர்குஷன் நகரில் நிராயுதபாணியாக வந்த கறுப்பின இளைஞரான மைக்கேல் பிறவுணை சுட்டுக் கொன்ற வெள்ளை இன பொலிஸ் உத்தியோகத்தரான தரென் வில்ஸனுக்கு எதிராக குற்றச்சாட்டு எதனையும் சுமத்துவதில்லை என நீதிமன்றம் தீர்மானித்ததையடுத்து மேற்படி பிராந்தியத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுந்துள்ளன.
ஆரம்பத்தில் பெர்குஷன் நகரிலும் அதை அண்டியுள்ள பிரதேசங்களிலும் கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது நாடளாவிய ரீதியில் விரிவாக்கம் அடைந்துள்ளன.
நியூயோர்க்கிலிருந்து சியட்டில் வரை எதிர்ப்பு ஊர்வலங்கள் பெருமளவிற்கு அமைதியாக இடம்பெற்றன.ஆனால், கலிபோர்னிய ஒக்லாண்டில் கலவரம் கிளர்ந்தெழுந்துள்ளது.
சென் லூயிஸின் புறநகரப் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பிரதான கலவரத்தையடுத்து, அங்கு மேலும் பதற்ற நிலை ஏற்படுவதைத் தடுக்க 2200 தேசிய காவற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 18 வயதான மைக்கேல் பிறவுண் கொல்லப்பட்டமை பிராந்தியத்தில் இன ரீதியான கடும் பதற்றநிலையை தோற்றுவித்துள்ளது.மைக்கேல் பிறவுணை சுட்டுக் கொன்ற தரென் வில்ஸன் விபரிக்கையில், "நான் எனது பணியை செய்துள்ளேன்" என்று கூறினார்.
அந்த நகரைச் சேர்ந்த ஆபிரிக்க– அமெரிக்க சமூகத்தினர் தரென் வில்ஸன் மீது படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதை எதிர்பார்த்துள்ளனர்.பெர்குஷன் நகரில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டதையடுத்து அங்கு செவ்வாய்க்கிழமை பகல் பொழுதில் பெருமளவு அமைதி நிலவியது.எனினும் அன்றைய தினம் மாலை மீண்டும் பதற்றநிலை அதிகரித்தது.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் பொலிஸ் வாகனம் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.மத்திய சென் லூயிஸிலுள்ள பிரதான வீதியொன்றை சிறிது நேரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்தனர்.அத்துடன் நீதிமன்றக் கட்டடத்துக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
பொலிஸார் புகைக் குண்டுகளையும் கண்ணீர் புகையையும் பிரயோகித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.அத்துடன் பெருமளவானோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
ஒக்லான்டில் சான்பிரான்ஸிஸ்கோ பிரதேசத்தில் கலகத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் கார்களுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் தீ வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அங்கு கார் விற்பனை நிலையம், கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் உள்ளடங்கலாக பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா செவ்வாய்க்கிழமை சிக்காகோ நகரில் உரையாற்றுகையில், நாச வேலைகளிலும் குற்றச்செயல்களிலும் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு கிடையாது எனவும் அவர்கள் விசாரணைக் குட்படுத்தப்படுவார்கள் எனவும் கூறினார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment