இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. - முருகபூபதி

.
இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ. 
ஆறுதசாப்த  காலத்தையும்  கடந்து  எழுத்தூழியத்தில்  தவமிருந்த  எஸ்.பொ.
  
                                                                              
இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த  26-11-2014 இல் மறைந்தார்.
கடந்த  காலங்களில்  எனக்குத்தெரிந்த -  நான்  நட்புறவுடன்  பழகிய பல  படைப்பாளிகள்  சமூகப்பணியாளர்கள்  குறித்து எழுதிவந்திருக்கின்றேன்.  வாழும்  காலத்திலும்  அதில்  ஆழமான கணங்களிலும்   அவர்களுடனான  நினைவுப்பகிர்வாகவே  அவற்றை இன்றும்   தொடர்ந்து  எழுதிவருகின்றேன்.
காலமும்  கணங்களும்  ஒவ்வொருவர்   வாழ்விலும்  தவிர்க்க முடியாதது.
எஸ்.பொ.  அவர்களை  1972  ஆம்  ஆண்டு  முதல்  முதலில்  கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில்  ரெயின்போ  அச்சகத்தில்  சந்தித்தேன். அதன்பிறகு  கொழும்பில்  பல  இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன்.   எஸ்.பொ  இரசிகமணி   கனக செந்திநாதன் கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை  உட்பட  பல  இலக்கியவாதிகள்   எமது நீர்கொழும்பு   இந்து  இளைஞர்  மன்றம்  தொடர்ச்சியாக  மூன்று நாட்கள்  நடத்திய  தமிழ்  விழாவிற்கு  வருகை தந்துள்ளனர்.
எஸ்.பொ.  1980  களில்  நைஜீரியாவுக்கு  தொழில்  நிமித்தம்  புறப்பட்ட வேளையில்   கொழும்பு -  ஜம்பட்டா  வீதியில்  மலையக  நாடகக் கலைஞரும்   அவள்  ஒரு  ஜீவநதி  திரைப்படத்தின்   தயாரிப்பாளரும் அதன்  வசனகர்த்தாவுமான   மாத்தளை   கார்த்திகேசுவின்  இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக    நடந்த   பிரிவுபசார  நிகழ்வில்   சந்தித்தேன்.




மீண்டும்   அவரை  சில  வருடங்களின்   பின்னர்   1985   இல்   ஒரு விஜயதசமி   நாளில்  வீரகேசரியில்  நடந்த  வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க  வந்த   எஸ்.பொ.வின்   ஆபிரிக்க   அனுபவங்கள் பற்றிய    நேர்காணலை  எழுதி   வெளியிட்டேன்.  1987  இல்  நான் அவுஸ்திரேலியாவுக்கு   வந்த    பின்னர்  -  1989  இல்  எனது  இரண்டாவது  சிறுகதைத்தொகுதி  சமாந்தரங்கள்  நூலின்  வெளியீட்டு  விழாவை  மெல்பனில்  நடத்தியபொழுது  சிட்னியில் மூத்த   புதல்வர்  டொக்டர்   அநுராவிடம்  அவர்   வந்திருப்பது   அறிந்து அவரை    பிரதம   பேச்சாளராக   அழைத்தேன்.   அன்றைய   நிகழ்வே அவர்   அவுஸ்திரேலியாவில்   முதல்  முதலில்  தோன்றிய   இலக்கிய பொது நிகழ்வு.
1972 முதல் 2010 வரையில்   சுமார்  38  ஆண்டுகள்  மாத்திரமே  அவருக்கும்  எனக்குமிடையிலான  இலக்கிய  உறவு   நீடித்தது.   கலை  இலக்கிய  ஊடகத்துறையில்   ஈடுபடும்  எவரும்  அன்றாடம் சந்திக்கக்கூடிய   அனுபவங்களே    அவர்தம்  வாழ்வின் புத்திக்கொள்முதலாகும்.    எஸ்.பொ.  குறித்து  நானும்  என்னைப்பற்றி அவரும்   ஏற்கனவே   நிறைய   எழுதிவிட்டோம்.    ஒரு கட்டத்திற்குப்பிறகு    எழுதுவதற்கு   எதுவும்   இல்லை என்றாகிப்போனாலும் -  அவர்தம்   எழுத்தூழிய   ஆளுமை   தமிழ்    சமூகப்பரப்பில்   தவிர்க்க  முடியாதது.
மூத்த    இலக்கிய  சகா  எஸ்.பொ. வின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என பிரார்த்தித்து   அன்னாரின்   மனைவி  மக்கள்  மருமக்கள் பேரப்பிள்ளைகள்   மற்றும்  அவரது கலை- இலக்கிய ஊடகத்துறை நண்பர்களின்    துயரத்தில்   பங்கேற்று   இந்த   ஆக்கத்தை  தொடருகின்றேன்.
-------------


இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  என  பரவலாக அறியப்பட்ட  எஸ்.பொன்னுத்துரை   யாழ்ப்பாணத்தில்  நல்லூரில் சண்முகம்  தம்பதியரின்  மகனாக   04-06-1932   ஆம்    ஆண்டு  பிறந்தார். அவருக்கு  இந்த   ஆண்டு  82  வயது.
யாழ்ப்பாணத்தில்  தமது  ஆரம்பக்கல்வியையும்  உயர்கல்வியையும் தொடர்ந்து  - மேற்கல்விக்காக  தமிழ்நாட்டிற்குச்சென்றார்.  அங்கு தாம்பரம்  கிறிஸ்தவக்கல்லூரியில்  பட்டப்படிப்பை நிறைவுசெய்துகொண்ட   எஸ்.பொ. அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும்  பயின்றார்.
பாடசாலைப்பருவம்  முதல்  தீவிர  வாசிப்பில்  ஈடுபட்டிருந்த பொன்னுத்துரை -  இளம் வயதிலேயே  சிறுகதை,  கட்டுரை, விமர்சனங்கள்  எழுதி   கலை    இலக்கியத்  தேடலை  தவமாகவே தொடர்ந்தவர்.     ஆங்கில  இலக்கியங்களின்  மீதும் ஈடுபாடு காண்பித்தார்.
தமது  13  வயதில்   எழுத   ஆரம்பித்திருப்பவர்.  1940  ஆம்  ஆண்டில் அவரது  மூத்த  சகோதரர்  தம்பையா    ( இவரும் தமிழ்ப்புலமையுள்ளவர்)   மாணவர்   தேர்ச்சிக்கழகத்தின்   சார்பில் ஞானோதயம்   என்ற  கையெழுத்து   சஞ்சிகையை  நடத்தியபொழுது அதன்  பக்கங்களை   நிரப்புவதற்காகவும்   இலக்கியப்படைப்புகளை அதில்    எழுதியிருக்கிறார்.
பெரும்பாலான  இலக்கியவாதிகளை   பாரதியும்  பாரதிதாசனும் ஆரம்பகாலத்தில்   பெரிதும்   பாதித்திருப்பதுபோன்று பொன்னுத்துரைக்கும்  இந்த   இரண்டு   ஆளுமைகளும்  தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.    அவர்களின்    கவியாற்றலின்  பாதிப்பினால் பொன்னுத்துரை    எழுதிய   முதலாவது    கவிதை   வீரகேசரியில்   வெளியானது.   அதுவே  அச்சில்  வெளிவந்த  அவரது  கன்னிப்படைப்பு.

1947  இன்  பின்னர்  த.ராஜகோபால்  என்ற  ஒரு  பெரியவரின் தொடர்பினால்  இந்திய   எழுத்தாளர்களின்  படைப்புகள் பொன்னுத்துரைக்கு    படிக்கக்கிடைத்திருக்கிறது.    தமது   பதினைந்து  வயதிலேயே  இந்தியாவின்  புகழ்பூத்த படைப்பாளிகளின்   தீவிர  வாசகராகிவிட்டதனால்  பொன்னுத்துரையும்  இலக்கியப்பிரதிகளை   எழுதத்தொடங்கினார்.
தம்மை    இந்தத்துறையில்  வளர்த்துவிட்ட    த. ராஜகோபால் என்பவருக்கே   தமது   தீ   நாவலையும்    சமர்ப்பணம்   செய்தார்.

பொன்னுத்துரையின்   முதலாவது  சிறுகதை  1948  இல்  தந்தை செல்வநாயம்   கொழும்பிலிருந்து  வெளியிட்ட  சுதந்திரன் பத்திரிகையில்   வெளியானது.   இலங்கை  இதழ்களில்  மட்டுமன்றி தமது  17   வயதில்    தமிழக   இதழ்களான   காதல்,  பிரசண்ட  விகடன், ஆனந்த போதினி   முதலானவற்றிலும்  எழுதியிருக்கிறார்.
இலங்கையில்  பல  மூத்த  எழுத்தாளர்கள்  ஆரம்பத்தில் - தமிழகத்தின்   சென்னைப் பாதிப்பினால்  தமது  கதைகளின் பின்புலமாக   மெரீனா  பீச்சையும்  மவுண்ட்  ரோட்டையும் சித்திரித்துக்கொண்டிருந்தபொழுது  தாமும்  அவ்வாறு அந்தப்பகைப்புலத்தை   உள்வாங்காமல்    ஈழத்து    மண்வாசனையுடன் படைப்பிலக்கியத்தில்    ஈடுபட்டவர்களின்   வரிசையில்   இணைந்துகொண்டவர்   பொன்னுத்துரை.
முழுமையான  கற்பனாவாதத்தை   தவிர்த்து    யதார்த்த   இலக்கிய மரபினைத்தோற்றுவித்து  -  சிறுகதையில் - உருவம் -  உள்ளடக்கம் உத்திகளில்   மாற்றங்களை   இலங்கையில்   ஏற்படுத்திய   மூலவர்களில்   ஒருவராக    விளங்கியவர்    பொன்னுத்துரை. இலங்கையின்    இலக்கிய    மறுமலர்ச்சிக்காலத்திலிருந்து பொன்னுத்துரையின்   ஆக்க   இலக்கியங்களை    இனம்காணமுடியும். அதனால்   ஏறக்குறைய   ஏழு தசாப்தகாலம்   ( அண்ணளவில் 68 ஆண்டுகள்)   அயராமல்  எழுதிக்கொண்டிருந்தவர்.


அவரது  முதலாவது  நாவல்  தீ   தமிழகத்தில்  சரஸ்வதி  இதழை நடத்திய  விஜயபாஸ்கரனின்   முயற்சியால்    வெளியானது.  இந்நாவல்    ஈழத்து   இலக்கிய    வளர்ச்சியில்  திருப்புமுனையை தோற்றுவித்ததுடன்   சர்ச்சைகளையும்   உருவாக்கியது.
தீயை    தீயிட்டுக்கொளுத்துங்கள்    முதலான   குரல்களும்   எழுந்தன. இவ்வாறு   அவரது    முதல்   நாவல்    தீவிர  வாசிப்புக்கும் கவனிப்புக்கும்    சர்ச்சைக்கும்    இலக்கானது   முதல், பொன்னுத்துரையும்    இலக்கிய   உலகில்   சர்ச்சைக்குரிய   மனிதராகவே    தென்படலானார்.
தொடர்ச்சியாக    அவர்   பல   தளங்களில்    அவ்வாறே  விளங்கினார். அதனால்  - அவரை  ஒரு  இலக்கிய  கலகக்காரன்  என்றும்  பரீட்சார்த்த  முயற்சிகளில்  ஈடுபடும்  இலக்கியவாதி  என்றும் அழைக்கப்படலானார்.
சூழலில்  அவரது    கருத்துக்களுக்கு   நிகழ்ந்த  எதிர்வினைகளினால் அவர்   தன்னை   தொடர்ந்தும்  பல  நிலைகளிலும்  எதிர்வினைகளை எதிர்நோக்கும்   எழுத்தாளராகவே    இனம்காட்டி    வரலானார். 
அவர்   அடிக்கடி  புனைபெயர்களில்  எழுதுவதை வழக்கமாகக்கொண்டிருந்தாலும்   இலக்கிய    உலகில்   நிலைத்த பெயர்   எஸ்.பொ.   என்ற   இரண்டு    எழுத்துக்கள்தான்.
1956  இல்  ஆசிரியத்தொழில் சார்ந்து   அவரது  வாழ்வு  கிழக்கு மாகாணம்    நோக்கி   திசை   திரும்பியது.    கருத்து  ரீதியாக முற்போக்கு  எழுத்தாளர்களுடன்  முரண்பட்டு, 1960  களில்  கொழும்பு சாகிராக்கல்லூரியில்  நடந்த  மாநாட்டிலிருந்து  வெளிநடப்புச்செய்தார்.
பொன்னுத்துரையின்    இலக்கியச்செயற்பாடுகளுக்கு  தொடர்ந்தும் உறுதுணையாக   விளங்கியவர்  ரஹ்மான்.   பொன்னுத்துரையின் இலக்கிய  வாழ்வில்  இரண்டறக்கலந்த  இவரின்  தொடர்ச்சியான நட்பினால்தான்   பிற்காலத்தில்   சென்னையில்   மித்ர   பதிப்பகம் உருவானது.  


எஸ்.பொ.   சென்னையில்  மித்ர  பதிப்பகத்தை   உருவாக்குவதற்கு பக்கபலமாக   இருந்தவர்    அவரது   மூத்த   புதல்வன்  டொக்டர் அநுரா.
முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்திலிருந்து  வெளியேறிய பொன்னுத்துரை  அடுத்த  கட்டமாக  அதற்கு  எதிராக  நற்போக்கு இலக்கிய முகாமை  தோற்றுவிக்க  முனைந்தார்.
முற்போக்குக்கு   எதிராக  பிற்போக்கு  என்று  எதனையும்  தொடங்க முடியாது.   அதனால்    நற்போக்கு    என்பது - முற்போக்கு - (சய) கம்யூனிஸ்ட்    கட்சி.   பிற்போக்கு  முகாம்  அமைக்க முடியாது. அதனால்   நற்போக்கு  எனச்சூட்டிக்கொண்டோம்  என்று  தமது வாக்கு மூலத்தை   பதிவுசெய்துகொண்ட  பொன்னுத்துரை - காலம் கடந்து   மேலும்   விரிவாக    தேடல்  என்ற    நேர்காணல் ( டென்மார்க் தர்மகுலசிங்கம்    எழுதியது)    நூலிலும்   நற்போக்கு   என்ற  நூலிலும்   முற்போக்கு  இலக்கிய   முகாமிலிருந்து   தான் வெளியேறியதற்கான    நியாயங்களை   விரிவாக    பதிவு   செய்துள்ளார்.
 பொன்னுத்துரையிடமிருந்த   ஆழமான   தமிழ்  இலக்கிய   ஆற்றலும் கல்வியினால்   அவர்  பெற்றுக்கொண்ட  ஆங்கில  அறிவுமே பிற்காலத்தில் -   புகழ்பெற்ற  சில  பிறமொழி   இலக்கியப்படைப்புகளை ஆங்கிலமொழி  மூலம்  படித்து  தமிழுக்கு மொழிபெயர்க்கச்செய்திருக்கிறது.

பொன்னுத்துரையின்   மூத்த  சகோதரி  திருமணம்  முடித்த  எம்.ஸி சுப்பிரமணியம்   வடமாகாண   சிறுபான்மை  வெகுஜன  அமைப்பின் ஸ்தாபகராகவும்  சமூகப்பணியாளராகவும்  விளங்கியவர்.  இலங்கை கம்யூனிஸ்ட்   கட்சியின்   (மாஸ்கோ)   உறுப்பினர்.    பின்னாளில் இலங்கை    பாராளுமன்றத்தில்    நியமன   எம்.பி.   ஆகவும் பதவியேற்றவர்.
  பொன்னுத்துரை - மட்டக்களப்பில்  பணியாற்றிய   காலத்தில்  தம்முடன்  பணியாற்றிய   ஆசிரியையை  காதல்   திருமணம்   செய்துகொண்டார்.
பொதுவாக    எழுத்தாளர்களின்  மனைவிமார்  தமது   கணவரின் கலை  - இலக்கிய   பொதுவாழ்வில்   அந்நியப்பட்டிருப்பவர்கள்.  ஆனால்,  பொன்னுத்துரையின்  மனைவி  -  மகாகவி   பாரதியின்  கூற்றுப்போன்று  - காதலொருவனைக்   கைப்பிடித்தே   அவன்   காரியம்   யாவிலும்   கைகொடுத்து   வாழ்ந்தவர். 
அவரது  பக்கபலம்  பொன்னுத்துரையின்  படைப்பு  இலக்கிய முயற்சியில்   எதுவித  அயற்சிக்கும்  இடம்கொடுக்கவில்லை. அதனால்தான்    பொன்னுத்துரை   சிறுகதை,    நாவல்,    நாடகம், கட்டுரை,    வாழ்க்கை   வரலாறு,   விமர்சனம்,    ஆய்வு,   மொழிபெயர்ப்பு முதலான  பல்துறைகளில்   தடம்   பதித்து  பல   நூல்களை  படைக்க முடிந்திருக்கிறது   என்றும்  கருத  இடமுண்டு.  அத்துடன்  சில நூல்களின்   தொகுப்பாசிரியராகவும்   தமது   பணி  தொடர்ந்திருப்பவர்.
பின்வரும்   அவரது   நூல்களே  அதற்கு   ஆதாரம்:
வீ - ஆண்மை -  எஸ்.பொ   கதைகள்  - அவா  (சிறுகதைத் தொகுதி) 
தீ -  சடங்கு  - மாயினி  (நாவல்)
அப்பையா -  கீதை  நிழலில் - அப்பாவும்  மகனும் - வலை -
 முள் - பூ -  தேடல் - முறுவல் - இஸ்லாமும்  தமிழும்
பெருங்காப்பியம்  பத்து (தொகுப்பாசிரியர்)    மத்தாப்பு + சதுரங்கம்
     ? -  (கேள்விக்குறியில்  ஒரு  நூல்)    நனவிடை   தோய்தல்
நீலாவணன்   நினைவுகள் -   இனி   ஒரு  விதி  செய்வோம்
வரலாற்றில்  வாழ்தல் (சுயசரிதை)
ஈடு  (நாடகம்)  (அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
மணி மகுடம்  - தீதும்  நன்றும்  - காந்தீயக் கதைகள்  - காந்தி தரிசனம்
மகாவம்ச ( மொழிபெயர்ப்பு )
பொன்னுத்துரை   கிறிஸ்தவ  கல்லூரியில்  கற்றதனாலும்  கிறிஸ்தவ பாடசாலையில்  தொடக்கத்தில்  பணியாற்றியதனாலும்தானோ  என்னவோ  கிறிஸ்தவர்கள்  தமது  மதரீதியான  சிந்தனையில் அடிக்கடி  பயன்படுத்தும்    ஊழியக்காரர்  என்ற  சொற்பதத்தை   தமது வாழ்வில்  அடிக்கடி  பயன்படுத்திவந்திருக்கிறார்.
ஆனால்,   இவர்   மதம்  சார்ந்து  அல்ல  இலக்கியம்  சார்ந்து  தன்னை இலக்கிய  எழுத்தூழியக்காரன்  என்றே   குறிப்பிட்டு வந்தவர்.

பொன்னுத்துரைக்கு   இலக்கியத்தில்  பல்வேறு  இஸங்களிலும் ஆபிரிக்க   கறுப்பின  மக்களின்  இலக்கியத்திலும்  ஈடுபாடு  நீடித்த அதேசமயம்  ஆன்மீக   ரீதியான   சிந்தனைகளும்   அவரது  வாழ்வில் தொடர்ந்திருக்கிறது.
தமிழ் நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
தனித்தும் எழுதினார் சிலருடன் இணைந்தும் எழுதினார். உதாரணமாக  அவர் இணைந்து எழுதியவை:- மத்தாப்பு - நாவல். எஸ்.பொ.வுடன் இணைந்தவர்கள்: இ.நாகராஜன், இரசிகமணி கனக செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை, குறமகள்.
ஈழத்து   இலக்கியத்தில்  முதல்  முதலில்   வெளியான  பரீட்சார்த்த நாவல் மத்தாப்பு.
சதுரங்கம் - கட்டுரை இணைந்தவர்கள்: ஆர். பாலகிருஷ்ணன், வ.அ. இராசரத்தினம்,  எம்.ஏ. ரஹ்மான்,  சாலை  இளந்திரையன்.

பொன்னுத்துரை  ஆக்க  இலக்கியத்துறைக்கு  அப்பால்  சிற்றிதழ்களை நடத்தும்  பெருவிருப்பும்  கொண்டிருந்தவர்.  கொழும்பில் பிரபல்யமான விவேகானந்தா  கல்லூரியில்  அவர்  ஆசிரியராக பணியாற்றிய காலத்தில்  ரஹ்மான  நடத்திய  இளம்பிறையில்  பொன்னுத்துரை உத்தியோகப்பற்றில்லாத   ஆசிரியராகவே  விளங்கினார்.   
எஸ்.பொ.  பின்னாளில்  மெல்பனில் விமல்   அரவிந்தன்  வெளியிட்ட    கலை, இலக்கிய மாசிகையில்   எழுதுவதற்கும்  சம்மதித்து  மாசிகைக்கு  மரபு  என்று பெயரை   சூட்டுமாறும்   பரிந்துரைத்தார்.
" சுழலும்  சக்கரத்தின்  சுழலாத  புள்ளியே   மரபு"  என்று   அதற்குரிய  தாரக  மந்திரத்தையும்   எஸ்.பொ.  முன்மொழிந்தார்.  1990  ஆம்   ஆண்டு செப்டெம்பர்    மாதம்  மரபு  முதல்  இதழ்  வெளியானது.   அதில் எஸ்.பொ.    நனவிடை   தோய்தல்    தொடரை   எழுதினார்.

எஸ்.பொ.வை  பிரதம   ஆசிரியராகக்கொண்டு   அக்கினிக்குஞ்சுவின் முதல்     இதழை  1991 பெப்ரவரியில்   யாழ். பாஸ்கர்   வெளியிட்டார்.
சிட்னியில்  இலக்கியவாதிகள்  கோவிந்தராஜன்  கவிஞர்  பாஸ்கரன் -ஆசி. கந்தராஜா - சந்திரஹாசன்  - தம்பிராஜா பிரபாகரன் ஆகியோரின்  தொடர்புகளினால் அங்கே    இலக்கியப்பவர்  என்ற  அமைப்பையும்  உருவாக்கினார். இலக்கியப்பவர்   கனதியான   அமைப்பாக   விளங்கியது.
பொன்னுத்துரை   நாடக  இலக்கியத்திலும்  பரீட்சார்த்தமான முயற்சிகளை  மேற்கொண்டவர்.   அவருடை  பிரதிகள் இலங்கையிலும்    தமிழ்நாடு    சென்னையிலும்   மெல்பனிலும் நாடகமாக   அரங்கேறியிருக்கின்றன.
சென்னையில்   மேடையேற்றப்பட்ட  எஸ்.பொ.வின்  நாடகத்தில் அதன்    இயக்குநர்    யுகமாயினி    சித்தன் ,    தமிழச்சி   சுமதி தங்கபாண்டியன்    உட்பட  பலர்  நடித்தனர்.   மெல்பனில் பொன்னுத்துரையின்   வலை   நாடகத்தை   எழுத்தாளர்    பாடும்    மீன் சு. ஸ்ரீகந்தராசா   இயக்கி  மேடையேற்றினார்.  இதில்  அக்கினிக்குஞ்சு ஆசிரியர்  யாழ். பாஸ்கர் -  சாணக்கியன்  வேடத்தில்  திறம்பட நடித்திருந்தார்.   மேடை  அரங்கம் , ஒலி ,  ஒளி  அமைப்புகளில் இந்நாடகம்   குறிப்பிடத்தகுந்தது.

பொன்னுத்துரை   இலக்கியத்தில்  செம்மைப்படுத்தும்  மரபினையும் ஈழத்து   இலக்கிய வளர்ச்சியில்  உருவாக்கினார்.  பொதுவாக படைப்பாளிகள்   தமது  படைப்புகளை  தாமே  படைத்துவிட்டு  அவசர அவசரமாக   வெளியிடுவதில்  அவருக்கு  உடன்பாடு  இருந்ததில்லை. பொன்னுத்துரை    தனது  படைப்புகளையும்   மற்றவர்களிடம்  படிக்கக்கொடுத்து கருத்துக்கேட்டதன்   பின்னரே   மேலும்  செம்மைப்படுத்தி  அச்சுக்கு அனுப்புவார்.   இந்த  இயல்பு அவர் எழுதத்தொடங்கிய  காலத்திலிருந்து   தொடர்ந்தது.
1924 பக்கங்களில் எஸ்.பொ. எழுதிய அவரது சுயவரலாற்று ஆவணம் வரலாற்றில் வாழ்தல்  இரண்டு  பாகங்களாக  ஒரேவேளையில் வெளியானது.
புலம்பெயர்ந்தோர்  இலக்கியமே  எதிர்காலத்தில்  தலைமை   ஏற்கும் என்ற   கருத்தையும்  அவர்  சில  வருடங்களுக்கு  முன்னர் சொன்னதனால்   இலக்கிய உலகில்  குறிப்பாக  தமிழ்நாட்டில்  சர்ச்சை எழுந்தது.

குறிப்பிட்ட   புலம்பெயர்ந்தோர்  இலக்கியம்  என்ற  பதப்பிரயோகத்தை முதல்   முதலில்  அறிமுகப்படுத்தியவரும்  பொன்னுத்துரைதான். 1989 இல்  இந்தக்கனதியான   இரண்டு  சொற்களை   அவர்  மெல்பனில் நடந்த    இலக்கிய  விழாவில்  முன்மொழிந்தார்.
அவருக்கு   2010  இற்கான  கனேடிய  இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது  2011 ஆம்  ஆண்டு   கனடாவில்   வழங்கப்பட்டது. பொன்னுத்துரையின்   பல  நூல்களுக்கு  தமிழகத்தின்  மூத்த முன்னணி    படைப்பாளிகளும்  விமர்சகர்களும்  முன்னுரை வழங்கியுள்ளனர்.

ஜெயமோகன்   தமது  ஈழ  இலக்கியம்  என்ற  நூலில்  எஸ்.பொ.வை யாழ்ப்பாணத்துப்பாணன்  என்றே  விளித்து  தமது  விரிவான பார்வையை   பதிவுசெய்துள்ளார்.
பொன்னுத்துரையின்   இலக்கிய  வாழ்வையும்  பணிகளையும் மெல்பனில்  1997  இல் முருகபூபதியின்   இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவில்   பாரட்டி  கௌரவித்து  விருது  வழங்கிய  பின்னர் -  2007  ஆம்  ஆண்டு   மெல்பனில்  அவுஸ்திரேலியா    தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்  ஏழாவது  எழுத்தாளர்  விழாவிலும்  அவர்   விருது வழங்கி   பாராட்டி  கௌரவிக்கப்பட்டார்.  குறிப்பிட்ட  பாராட்டுரையை அன்றைய   விழாவில்  நிகழ்த்தியவர்  திருமதி  சந்திரலேகா வாமதேவன்.

அவர்   மறைவதற்கு  சில  வருடங்களுக்கு  முன்னர்  அவுஸ்திரேலியா   கம்பன்  கழகம்  அவருக்கு  சான்றோர்  விருது வழங்கி   கௌரவித்திருக்கிறது.   இலக்கியப்படைப்பாளிக்கு  இவ்வாறு விருது  வழங்கியிருப்பதனால்  அந்தப்பெருமை   கம்பன்  கழகத்திற்கும்  கிட்டியிருக்கிறது.
சென்னையில்  மித்ர  பதிப்பகத்தின்  சார்பில்  முழுநாள் இலக்கியக்கருத்தரங்கினை  நடத்தியிருக்கும்  எஸ்.பொ. அவரது இலக்கியப்பிரவேச   ஆரம்ப  காலத்  தோழர்  மல்லிகை  ஜீவாவை அதற்கு  அழைத்து   பாராட்டி  விருது வழங்கி   கௌரவித்தார். பொன்னுத்துரையின் வாழ்வும்  பணிகளும்  இலங்கை - தமிழ்நாடு - ஆபிரிக்கா - அவுஸ்திரேலியா   என்று    பரந்துபட்டிருந்தது முக்கியமானது.    அதனால்    அவர்    சர்வதேசப்பார்வையுள்ள  -  ஆளுமையுள்ள    படைப்பாளியாகவும்   விளங்கினார்.
---00---
letchumananm@gmail.com





No comments: