ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு தாக்குதல் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி
நைஜீரிய பாடசாலையை இலக்குவைத்து தாக்குதல்: 47 பேர் பலி:79 பேர் காயம்
ஆசிய - பசுபிக் பிராந்திய சுதந்திர வர்த்தக திட்டத்திற்கு அபெக் நாடுகள் ஆதரவு
ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு தாக்குதல் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி
கிழக்கஆப்கானிஸ்தானில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இரு குண்டு தாக்குதல்களில் குறைந்தது 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர்.
லோகர் மாகாணத்தில் பொலிஸ் தலைமையகமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர்.
அதேசமயம் நன்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலா பாத்திற்கு அண்மையில் தூர இருந்து செயற்படுத்தும் முறைமை மூலம் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டதில் குறைந்தது 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர்.
மேற்படி இரு குண்டுத் தாக்குதல்களையும் தாமே நடத்தியதாக தலிபான் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்.
அதே சமயம் ஆப்கான் தலைநகர் காபூலில் பல்கலைக்கழகமொன்றிற்கு அண்மையிலுள்ள பூஞ்சாடியில் மறைத்து வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்ட மூன்றாவது குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என கண்டறியப்படவில்லை. நன்றி வீரகேசரி
நைஜீரிய பாடசாலையை இலக்குவைத்து தாக்குதல்: 47 பேர் பலி:79 பேர் காயம்
11/11/2014 வடகிழக்கு நைஜீரியாவில் பாடசாலை கூட்டமொன்றை இலக்கு வைத்து திங்கட்கிழமை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 47 பேர் பலியானதுடன் 79 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
யொப் மாநிலத்தில் பொரிஸ்கம் நகரிலுள்ள பாடசாலையில் அதிபரின் தினசரி உரையை செவிமடுக்க மாணவர்கள் கூடியிருந்த போதே குண்டு வெடித்துள்ளது.
மேற்படி குண்டு வெடிப்பில் பல மாணவர்கள் உடல் சிதறி பலியாகியுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் குறிப்பிட்ட பாடசாலையிலிருந்து 100 மீற்றர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோராத போதும் போகோ ஹராம் போராளிகளே காரணம் என நம்பப்படுகிறது.
மேற்படி தாக்குதலானது போகோ ஹராம் போராளி குழுத் தலைவர் அபூபக்கர் ஷிகயு தோன்றும் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டதையடுத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி வீடியோ காட்சியில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையொன்றுக்கு அபூபக்கர் ஷிகயு நிராகரிப்பை தெரிவித்திருந்தார். நன்றி வீரகேசரி
ஆசிய - பசுபிக் பிராந்திய சுதந்திர வர்த்தக திட்டத்திற்கு அபெக் நாடுகள் ஆதரவு
12/11/2014 ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திர வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காக சீனாவால் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு பிராந்திய தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஆதரவளித்துள்ளனர்.
சீனாவின் பீஜிங் நகரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆசிய – பசுபிக் பொருளாதார கூட்டுறவு (அபெக்) உச்சி மாநாட்டின் போதே மேற்படி திட்டம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பொட், மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹஸியன் லூங், தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் – ஒ –- சான் உள்ளடங்கலான அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆசிய – பசுபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பில் 21 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் 3 தடவைகள் சந்திப்பை மேற்கொண்டு உரையாடலில் ஈடுபட்டனர். அவர்களது உரையாடலின் போது சிரியா, உக்ரேன் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment