தமிழ் சினிமா

மூடர்கூடம்

தமிழ் சினிமாவின் அரைச்ச மாவை அரைக்காமல் புதுமுக இயக்குனரின் சுவாரஸ்யமான திரைக்கதையில் வெளிவந்திருக்கும் படம் மூடர்கூடம்.
சுயமாக சிந்திக்கத் தெரியாத ராஜாஜ், சென்றாயன், குபேரன் என்ற 3 பேரும், அரசு சீர்திருத்தப்பள்ளியில் படித்ததால் வேலை கிடைக்காமல் அலையும் நவீனும் ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் சந்திக்கிறார்கள்.
வயிற்று பிழைப்பிற்கு என்ன செய்வதென்றே தெரியாத இவர்கள், கூட்டணியில் ஒருவரான ராஜாஜின் உறவினர் ஜெயபிரகாஷ் வீட்டுக்கு கொள்ளை அடிக்க செல்கிறார்கள்.
அங்கு அவரோ சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் செல்ல தயாராக இருக்கிறார்.
அங்கு செல்லும் இந்த கூட்டணி ஜெயபிரகாஷ் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள்.
தங்களது திட்டத்தில் இவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா என்பது மீதிக்கதை.
படத்தை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருக்கும் நவீன் ரொம்பவே துணிச்சல்காரர்தான்.
தமிழ் ‌சினிமாவில் சொல்லப்படாத ஒரு புது மாதிரி கதையை தைரியமாக இயக்கி, தரமாக தந்திருப்பதற்கு அவருக்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு காட்சியிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குனர்.
இயக்குனரின் தேவையறிந்து ராஜாஜ், ஓவியா, குபேரன், சென்றாயன், சிந்துரெட்டி, ஜெயப்பிரகாஷ், அனுபமாகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்தமும் நடித்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது.
“தமிழ் தெரியாத வெள்ளைக்காரங்கிட்ட தமிழ்ல பேசக்கூடாதுன்னு தெரிஞ்ச உனக்கு இங்கிலிஷ் தெரியாத தமிழன்கிட்ட இங்கிலிஷ்ல பேசக்கூடாதுன்னு ஏன்டா தெரியல”.
இது போன்று படம் முழுக்க வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வசனங்களும் ரசிக்கும் படியாக உள்ளன.
ஆபத்தான சூழலில் ஜெயப்பிரகாஷ் போன்பண்ணும் போது குழந்தை போனை எடுத்து அம்மா, அப்பா 2 பேரும் பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்காங்க, தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லி இருக்காங்க என்பது வெடிச்சிரிப்பு.
இயக்குனர் நவீனும் நான்கு திருடர்களில் ஒருவராக மனம் கவர்கிறார்.
படத்தின் கதையைவிட படத்தின் பாத்திரங்களுக்கு அதிலும் அந்த விளையாட்டு பொம்மை உள்ளிட்ட பாத்திரங்களுக்கு ‌சொல்லப்படும் முன்கதைகளும் முழு கதைகளும்தான் ரசிக்கத்தக்கவை.
நடராஜன் சங்கரனின் மிரட்டலான பின்னணி இசையும், டோனிசேனின் பிரம்மாண்ட ஒளிப்பதிவும் நவீனின் ‘நச்-டச்’ வசனங்களும் படத்திற்கு பெரும் பலம்.
கண்ணோடு கண்கள் மோத பாடலும், நீயும் பொம்மை பாடலும் நம்மை முணுமுணுக்க வைக்கிறது.
மனிதர்கள் நாம் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் முட்டாள்களாக நடந்துகொள்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கும் ‘மூடர்கூடம்’ தமிழ் சினிமாவில் ‘புதிய பாடம்!’.
நடிகர்கள்: ராஜாஜ், நவீன், குபேரன், சென்றாயன், ஜெயபிரகாஷ், ஓவியா, சிந்து ரெட்டி
இயக்குனர்: நவீன்
இசை: நடராஜன் சங்கரன்
ஓளிப்பதிவு: டோனி சான்
தயாரிப்பு: பாண்டிராஜ்
நன்றி விடுப்பு




 
யா யா

தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கின்ற கொமடி படங்களின் வரிசையில் வெளிவந்துள்ள படம்தான் ‘யா யா’.
சொன்னா புரியாது படத்திற்கு பிறகு மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் யா யா.
நாயகன் சிவா எந்தவொரு வேலை வெட்டியும் இல்லாமல், அரசாங்க வேலை கிடைத்தால்தான் வேலைக்கு போக வேண்டும் என்ற நோக்குடன் ஊர் சுற்றி வருகிறார்.
இவருடைய நண்பனாக கூடவே சுற்றித் திரிகிறார் சந்தானம். ஒருநாள் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது தன்ஷிகாவைப் பார்க்கும் சிவா, அவர் மீது காதல் கொள்கிறார்.
அவரைத் தொடர்ந்து பலமுறை தன் காதலைச் சொல்ல பல்வேறு முயற்சிகள் செய்கிறார். ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
இந்நிலையில் தன் மீதான காதலைத் தெரிந்துகொள்வதற்காக மொடலான பவர் ஸ்டாரை கேடயமாக பயன்படுத்துகிறார் சிவா.
அதில் சிவாவுக்கு வெற்றி கிடைக்கிறது. மறுமுனையில் சந்தானமும், சந்தியாவும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.
இந்நிலையில் ஒருநாள் பெண் கவுன்சிலரான தேவதர்ஷினி மீது சிவா தவறுதலாக மோதி விடுகிறார். இந்த மோதல் தேவதர்ஷினிக்குள் சிவா மீது காதலை வரவழைக்கிறது.
சிவாவை எப்படியாவது அடையவேண்டும் என்று நினைக்கிறார் தேவதர்ஷினி. இதற்காக சிவாவின் நண்பனான சந்தானத்தை அணுகுகிறார்.
சந்தானம், சிவா ஏற்கெனவே தன்ஷிகாவை காதலிப்பதை அவரிடம் கூறுகிறார். எனவே தேவதர்ஷினி இவர்களின் காதலை முறிக்க முடிவெடுக்கிறார்.
இதற்காக சந்தானத்திடம் பணத்தைக் கொடுத்து அவர்களின் காதலை பிரிக்கச் சொல்கிறார்.
இறுதியில், சந்தானம் சிவாவுக்கு துரோகம் செய்தாரா? சிவா, தன்ஷிகா காதல் என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.
சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்படம், தில்லுமுல்லு ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்ததோ, அதே அளவுக்கு இந்த படத்திலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.
இவருடன் சந்தானமும் சேர்ந்தால் கொமடிக்கு சொல்லவா? வேண்டும். படம் முழுவதும் ஒரே சிரிப்பு மழைதான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்துக்கு இந்த படத்தில்தான் தனியாக ஒரு ஜோடி கொடுத்திருக்கிறார்கள்.
காதல் சந்தியா இவருடைய காதலியாக வருகிறார். சிறிது இடைவெளிக்கு பிறகு திரையில் பளிச்சிட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும்.
சிவாவுக்கு ஜோடியாய் தன்ஷிகா, பரதேசி படத்தில் பார்த்த தன்ஷிகாவை இப்படத்தில் மொடர்னாக பார்க்கும்போது வியக்க வைக்கிறார்.
சிவா தன்னைக் காதலிக்கிறார் என்று தெரிந்திருந்தும், அதை கண்டுகொள்ளாமல் அசால்டாக திரியும் இவருடைய நடிப்பு பாராட்ட வைக்கிறது.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் வெளிவந்த பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட படம் என்பதால், இப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் வருகிறார்.
இவர் ஒருசில காட்சிகளே என்றாலும், இவர் செய்யும் கொமடி ரசிக்க வைக்கிறது.
மேலும் சிவாவின் அப்பா-அம்மாவாக வரும் இளவரசு-ரேகா, கவுன்சிலராக வரும் தேவதர்ஷினி ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை நிறைவுபடுத்தியுள்ளார்கள்.
இயக்குனர் ராஜசேகரன் முழுக்க முழுக்க கொமடியை மட்டுமே பிரதானமாக வைத்து எடுத்திருப்பதால் படத்தை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார்.
விஜய் எபினேஷர் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், திரையில் பார்க்கும்போது காலை ஆட்ட வைத்திருக்கிறது.
பின்னணி இசையிலும் முன்னேற்றம் தேவை. வெற்றி ஒளிப்பதிவில் பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.
மொத்தத்தில் யா யா கொமடியின் உச்சகட்டம்.
நடிகர் : சிவா, சந்தானம்
நடிகை : தன்ஷிகா, சந்தியா,
இயக்குனர் : ஐ. ராஜசேகரன்
இசை : விஜய் எபினேசர
ஓளிப்பதிவு : வெற்றி
 நன்றி விடுப்பு

No comments: