நீங்காத நினைவுகள் – 17 -ஜோதிர்லதா கிரிஜா

.

C.N.Annathurai - Murasu
செப்டம்பர் மாதத்தில் நிறைய எண்ணிக்கையில் பல பெரிய மனிதர்களும் புகழ் பெற்றோரும் பிறந்துள்ளனர். ‘அதென்ன, பெரிய மனிதர்கள், புகழ் பெற்றோர் என்று இரண்டு வகைகள்?’ என்கிறீர்களா? அது அப்படித்தான்! ‘புகழ் பெற்றோர் எல்லாருமே உண்மையில் பெரியமனிர்கள் அல்லர்; பெரியமனிதர் யாவருமே புகழ் பெற்றோர் அல்லர்’ – ‘All the popular men are not really great and all the great men do not become popular’ எனும் பொன்மொழியைப் படித்ததன் விளைவு!
செப்டம்பரில் பிறந்தவர்களில் அறிஞர் அண்ணா என்றழைக்கப்பட்ட சி.என். அண்ணாதுரை அவர்கள், பேராசிரியர் கல்கி அவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் பற்றி மட்டுமே இக்கட்டுரை பேசப் போகிறது.
பதவியில் இருக்க முடிந்த வரையில், வாயையும் எழுதுகோலையும் மூடிக் கொண்டிருந்து விட்டு, இனித் தமது பதவிக்காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், போகிற போக்கில், இந்திய அரசு இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருந்த விதத்தை – திறமையற்ற நிர்வாகம், முறையற்ற செயலாட்சி (Mismanagement and maladministration) என்று – விமர்சித்துவிட்டுப் போனார். தாம் பதவியில் இருந்த நாள் வரையில் இதை ஏன் அவர் சொல்லவில்லை என்பது வெள்ளிடை மலை. பெரிய தத்துவ ஞானி என்றும், பேராசிரியர் என்றும் புகழப்பெற்ற இவருக்கு சோவியத் ஒன்றியத் தலைவர் ஜோசஃப் ஸ்டாலின் அவர்களின் பேட்டி அவர் தேடாமலே கிடைத்தது என்று சொல்லுவார்கள்.



Kalki Krinamoorthy- Murasu

 வேறு எந்த நாட்டுத் தூதுவரையும் ஸ்டாலின் சந்தித்தே இல்லையாம். அந்த அளவுக்கு அனைத்துலகப் புகழும், மரியாதையும் அவருக்கு இருந்தது. இருவரும் சந்தித்த போது கடவுள் பற்றிய விவாதம் அவர்களிடையே எழுந்ததாம்.  விவாதத்தின் முடிவில், உலகத்தைப் படைத்தவன் என்று யாரும இல்லை, அது சூனியத்திலிருது உண்டாயிற்று என்று ஜோசப் ஸ்டாலின் கூற, ‘ அப்படியானால் அந்தச் சூனியத்தைப் படைத்தது யார்?’ என்று ராதாகிருஷ்ணன் வினவ, ஸ்டாலின் மவுனமாக இருந்ததாக எதிலோ படித்த நினைவு. தவறான தகவலோ சரியானதோ, தெரியாது.
இந்தத் தத்துவ ஞானி பற்றி அவர் மகன் ஆர். கோபால் எனும் பேராசிரியர் அவர் தம் தந்தை என்று கூடத் தயவு தாட்சண்ணியம் காட்டாமல் அவர் தன் அம்மாவுக்குத் துரோகம் செய்த கணவன் என்று வெளிப்படையாய்ச் சாடியுள்ளார்.  பெரிய மனிதர்களில் சிலர் உள்ளும் புறமும் வேறு வேறாக இருப்பார்கள் போலும்!
மற்றொரு குடியரசுத் தலைவர்.  ஊழலே செய்யாதவர், கைசுத்தம் நிறைந்தவர் என்றெல்லாம் புகழப்பெற்றவர். மாநில அளவில் அமைச்சராக இருந்தவர்.  பதவிக்காலம் முடிந்ததும், சொந்த வீடு இருப்பவர்க்கு அரசு வீடு கிடைக்காது என்பது சட்டம். எனவே, பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்குச் சில நாள்களே இருந்த போதோ, அல்லது விலகிய உடனேயோ, அவர் தமது வீட்டை மகனுக்கோ மகளுக்கோ கொடுத்துவிட்டுத் தமக்குச் சொந்தமாய் வீடு கிடையாது என்று சொல்லி அரசு வீட்டைக் குடியிருக்கப் பெற்றுக்கொண்டவர். அரசு அவருக்கு வீட்டை வழங்கிய போது சட்டப்படி அவருக்குச் சொந்தமாய் ஒரு வீடு இல்லைதான்.  ஆனால், அரசு வீட்டை இலவசமாய்ப் பெறுவதன் பொருட்டுக் கைவசம் இருந்த வீட்டை விற்றுவிட்டோ அல்லது யாருக்கோ வெகுமதியாய்க் கொடுத்துவிட்டோஓ தனக்கு வீடு இல்லை என்று சொல்லுவது பொய் சொல்லுவதற்கு இணைதானே? அது நியாயமான செயல்தானா?
Dr.Radhakrishnan -Murasu

வேறொரு குடியரசுத்தலைவர் தம் குடும்பப்பட்டாளம் முழுவதையும் குடியரசு மாளிகையில் குடியமர்த்தியது நமக்குத் தெரியும். பேரன் பேத்தியர் குடும்பங்கள் கூட இந்தக் கும்பலில் அடக்கம் என்று சொல்லப்பட்டது! அயல் நாடுகளுக்கும் ஒரு கும்பலையே தம்மோடு அரசுச் செலவில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தவர். சட்ட விரோதமாய்ப் பரிசுப் பொருள்களை யெல்லாம் அள்ளிச் சென்றவர்.
இன்னும் ஒருவர் ஆண்டுதோறும் அரசின் செலவில் திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தவர். மனிதர்களைதான் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால், கடவுளையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. சொந்தக் காசில் திருப்பதிக்கு வராதவர்க்கும் ஏழுமலையானின் அருள் கிடைக்கும் என்று நினைக்கும் இவர்களின் அறியாமையை என்னென்பது! இவ்வாறு ஏழுமலையானை ஏமாற்றுவதாக எண்ணித் தம்மைத் தாமேயும் ஏமாற்றிகொண்டிருந்த இந்தக் குடியரசுத் தலைவர் போகிற போக்கில் தம் வீட்டை ஒக்கிடுவதற்கென்று சட்ட விரோதமாக நாற்பது லட்சம் ரூபாய் அரசிடமிருந்து பெற்றவர். குடியரசுத் தலைவர் என்பதற்காகப் பாராளுமன்றம் இந்தச் சலுகையை இவருக்கு அளித்தது! இது, அதிகாரப் பிச்சை என்பார்களே, அதுவா, இன்றேல் பகல் கொள்ளையா!
இவர்களிடையே நம் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களைப் பற்றி நினைக்கும் போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது! அவர் நினைத்திருந்தால் தம் சகோதரரின் குடும்பத்தைத் உடனழைத்து வந்து துணைக்கு வைத்துக் கொண்டிருந் திருக்கலாம். ஆனால், தாம் மணம் செய்து கொள்ளாதவர் என்பதால் தமக்குக் குடும்பம் இல்லை என்று கூறி அந்த மாளிகையில் ஒரே ஓர் உதவியாளரோடு தனியாக வாழ்ந்துவிட்டவர். இந்தக் காலத்திலும், இப்படியும் சிலர் இருப்பது  பெருமைக்குரிய விஷயந்தான். எத்தகைய நேரெதிர்த் துருவங்கள்!
அறிஞர் அண்ணாதுரை அவர்களும் செப்டம்பர் மாதம் தான் பிறந்தார். நாள்கள் செல்லச் செல்லத் தம் பழைய கொள்கைகளைத் துறந்து புது மனிதராய்த் தம்மை மாற்றிக்கொண்டார்.
அந்நாளைய தபால்தந்தி இலாகா மைய அரசு அமைச்சர் எஸ்.கே. பாட்டீல், சென்னையில் தபால் இலாகாத் தலைமையாளரின் அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைக்க வந்த போது அறிஞர் அண்ணாதான் தமிழகத்தின் முதலமைச்சர். அந்த அலுவலகப் பணியாள் என்னும் முறையில் அத்திறப்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆங்கிலத்தைக் கூடிய விரைவில் புறக்கணித்து ஹிந்தியை இந்தியாவின் அரசு மொழியாக ஆக்க வேண்டியதன் அவசியம் பற்றி எஸ்.கே. பாட்டீல் அவர்கள் தம் உரை நடுவே குறிப்பிட்டார்.
அண்ணா அமைதியான குரலில், ஆனால் அழுத்தந்திருத்தமாய், ஆணித்தரமான முறையில், ஆங்கிலத்துக்கு ஆதரவாய் முழங்கினார். அவர் வெளியிட்ட கருத்தின்போது மக்கள் அடிக்கடி கைதட்டினாலும், அவர் சொன்ன ஒரு வாக்கியத்துக்கு மிகவும் பலத்த கையொலி எழுந்தது.                     
“நாம் எந்த மொழியில் நம் எண்ணங்களை நாவினால் பரிமாறிக் கொள்ளுகிறோம் என்பதை விடவும், அந்தப் பரிமாற்றத்தின் போது நம் இதயங்கள் எந்த அளவுக்கு நெருங்கி உறவாடுகின்றன என்பது அதிக முக்கியமானது” எனும் பொருளில் அமைந்த வாக்கியத்ததின் ஒரு பகுதிக்குத்தான் அவ்வளவு பலத்த கையொலி. – “It is the language of the hearts that matters” என்று அவர் குறிப்பிட்டது இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது. அந்தப் பெரிய முழு வாக்கியம் ஞாபகமில்லை. உதடுகள் வெற்றுத்தனமாய்ப் பேசி உறவாடுவதை விடவும் இதயங்களின் நெருக்கம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எவ்வளவு உன்னதக் கருத்து! அப்போது, எஸ். கே. பாட்டீல் அவர்களின் முகத்தில் அசட்டுப் புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது.
அண்ணா அவர்களை முதன் முதலாய் நெருக்கத்தில் பார்த்தது அன்றுதான். ஒலிப்பதிவான அவர் தமிழ்ப் பேச்சுகளைக் கேட்டதுண்டு என்றாலும், ஆங்கிலத்திலும் அதே சரளத்தோடு ஆற்றொழுக்கு நடையில் பேசக்கூடியவர் என்பது அன்று தெரிந்தது. மக்களவையில் அவரது கன்னிப் பேச்சைக் கேட்டு அன்றைய பிரதமர் ‘அசந்து’ போய்ப் பாராட்டியதில் வியப்பதற்கு இல்லைதானே?
எங்கள் அலுவலகத் தலைமை அலுவலரைக் காண ஒரு நாள் ஓர் அன்பர் வந்திருந்தார்.  அவர் பேச்சு வாக்கில் ஒரு தகவலைச் சொன்னார். அண்ணா முதலமைச்சராக இருந்த போது, தி.மு.க. தொண்டர் ஒருவர் அப்போதைய மாநகரத் தந்தையை நேரில் பார்த்துத் தம் மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தரும்படி கேட்டாராம். அவர் முந்நூறு ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். அந்த ஏழைத் தொண்டரிடம் அவ்வளவு பணம் இல்லை. அவர் பிறகு வந்து பார்ப்பதாய்ச் சொல்லிவிட்டு அப்போதைய முதலமைச்சர் அண்ணாவைச் சந்தித்து முறையிட்டிருக்கிறார். ஆத்திரமடைந்த அண்ணா உடனே ரூ. 300-க்குத் தம் சொந்த வங்கிக் கணக்குக் காசோலை ஒன்றை எழுதி அவரிடம் கொடுத்துக் கொண்டு போய்க் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அவர் மேயரைச் சந்திக்க அஞ்சியிருக்கிறார்.  ஆனால் அண்ணா அவருக்குத் தைரியம், சொல்லி மேயரிடம் போகச் சொல்லியிருக்கிறார். அப்புறம் என்ன நடந்தது என்கிற விவரத்தை யெல்லாம் அவர் கூறவில்லை.  ஆனால் சிரித்துவிட்டு, வேலை அந்தத் தொண்டரின் மகனுக்குக் கிடைத்துவிட்டது என்று மட்டும் சொன்னார். மேயருக்கு அண்ணாவிடமிருந்த நல்ல ‘டோசு’ம் கிடைத்தது என்று தெரிவித்தார்.
தமக்குக் கீழே பணி புரிந்துகொண்டிருந்த பிற அமைச்சர்களின் தன்மை, தரம் ஆகியவை பற்றி நன்கு அறிந்திருந்ததால் அவர்களை வைக்க வேண்டிய இடங்களில் வைத்திருந்ததாய்ச் சொல்லுவார்கள்.
பாம்பையும் பார்ப்பானையும் ஒருசேரக் கண்டால் பாம்பை விட்டு விட்டுப் பார்ப்பானை அடி என்று தொடக்க நாளில் சொல்லிக்கொண்டிருந்த அண்ணாதான் பின்னாளில் எப்படி மாறிப் போனார்!  இதில் மட்டுமல்லாது திராவிடநாடு தொடர்பான கொள்கையையும் கோரிக்கையையும் அடியோடு கைவிட்டுவிட்டார். அதன் பின்னணி 1962 அக்டோபரில் சீனா  நம் நாட்டின் பல சதுர மைல்களையும் கபளீகரம் செய்ததே ஆகும். அதன் பின் அவரது கண்ணோட்டம் அடியோடு மாறியது. பகைவர்களைத் தவிர்க்க இந்திய ஒருமைப்பாடு இன்றியமையாதது என்பதைப் புரிந்துகொண்டார். அப்போதுதான், இந்திய மாநிலங்களையும் காக்க முடியும் என்பது அவருக்குத் தெளிவாயிற்று. அவரது மனமாற்றத்தைப் பாராட்டுவதற்குப் பதில் சிலர் அவரைக் கிண்டல் செய்தார்கள்.  தவற்றைத் திருத்திக்கொள்ளும் பெரும்போக்கை மதிக்கத் தெரியாதவர்களாகவே நம்மில் பலரும் இருக்கிறோம்.
இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டிருந்த ராஜாஜி பின்னாளில் அதைக் கைவிட்டபோது அவரையும் பலர் கிண்டல் செய்ததுண்டு. அதற்கு அவர் சொன்னார்: “ஒருவன் எப்போதோ கொண்டிருந்த கருத்தைக் கால மாறுதலை ஆராயாமல் பிடித்துக்கொண்டு எப்போதுமே தொங்குவது அறிவுகெட்ட செயலாகும். கொள்கை மாறாமை – அதாவது மாற மறுத்தல் – கழுதையின் தன்மையாகும்! (Consistency  is the quality of an ass)” என்றார். விவரங்கெட்ட மக்கள் தம்மைச் சந்தர்ப்பவாதி என்று தூற்றுவார்கள் என்பது தெரிந்தும் தம்மை அவர் மாற்றிக்கொண்டார். அதே நிலைப்பாட்டைத்தான் அண்ணாவும் மேற்கொண்டார்.
அவர் மிகவும் நாணய மானவராகவும் எளிமையானவராகவும் திகழ்ந்தார். கீழ்க்காணும் தகவலே இவற்றை மெய்ப்பிக்கக் போதுமானவை.  அவர் தமிழகத்தின்  முதலமைச்சராக இருந்த போது ஒரு நாள் அன்றைய இல்லஸ்ட்ரேடெட் வீக்லி அவ் இண்டியா எனும் ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்த கே. ஸ்ரீநிவாசன் அவரைப் பேட்டி கண்டார். பேட்டி அண்ணாவின் வீட்டிலேயே நடந்தது. ஸ்ரீநிவாசன் வந்ததும் அவரை வரவேற்ற அண்ணா, “உக்காருங்க்… ஆனா பாத்து கவனமா உக்காருங்க. ஏன்னா, அந்த நாற்கலிக்குக் கால் சரியில்லே. அது ஆடும்…” என்று எச்சரித்தாராம்.
ஸ்ரீநிவாசனுக்கு ஒரே வியப்பு: “ஏன் சார்? நீங்க சீஃப் மினிஸ்டரா யிருக்கிறதால உங்க வீட்டுக்குக் கவர்ன்மென்ட்லயே புது சோஃபா செட், மேஜை, நாற்காலின்னெல்லாம் குடுப்பாங்களே! அதுகளை வாங்கிப் போட்டுக்கலையா?” என்று அவர் அண்ணாவை வினவியுள்ளார்.
“அதெல்லாம் நமக்கெதுக்குங்க? என் சொந்த ஃபர்னிச்சரே போதும். அதை யெல்லாம் இப்ப அனுபவிச்சா, நாளைக்கு இந்தப் பதவி இல்லாம போச்சுன்னா அதை யெல்லாம் திருப்பிக் குடுக்கிறப்ப வீட்டில உள்ளவங்களுக்குக் கஷ்டமாயிருக்கும். சீஃப் மினிஸ்டர் பதவி நிலையானது இல்லே, பாருங்க!” என்றராம் புன்னகையுடன்.
‘அவற்றையெல்லாம் திருப்பிக் கொடுக்காமல் தாமே வைத்துக் கொண்டுவிடும் அமைச்சர்கள் இருக்கும் காலத்தில் இப்படியும் ஒருவரா!’ என்று ஸ்ரீநிவாசன் வியந்து போனாராம்.
நாணயமும் விவேகமும் நிறைந்த இந்தப் பதில் நம்மையும் சிலிர்க்க வைக்கிறதல்லவா! பதவி நாற்காலி ஆசையில் எதையும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகளிடையே, வெறும் மர நாற்காலிக்குக் கூட ஆசைப் படாத அண்ணா எவ்வளவு உயர்ந்தவர்!
‘வெண்ணெய் திரண்டு வரும்போது  தாழி உடைவது போல்’ என்று சொல்லுவார்களே, அது போல் இக்கட்டான அல்லது தேவைப்படும் தருணங்களில் நல்ல / கெட்டிக்கார அரசியல்வாதிகளையும் தலைவர்களையும் இழப்பதே இந்தியாவின் தலையெழுத்தாக இருந்து வருகிறது. காந்தி, இந்திரா காந்தி (தம் தவற்றை உணர்ந்து திருத்திக்கொண்ட பின்னர் மக்கள் தேர்ந்தெடுத்த இந்திரா காந்தியைச் சொல்லுகிறோம்), ராஜீவ் காந்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டது நம் போதாத காலமே. அண்ணாவின் மரணம் இயல்பாக நேர்ந்தாலும், அதுவும் பேரிழப்பே. தமிழ் நாட்டின் தலையெழுத்தும் அதுதான் போலும். அவர் காலமான போது அவருக்கு அப்படி யொன்றும் வயது ஆகியிருக்கவில்லை.
காமராஜ், அண்ணாதுரை போன்றோர்க்காக நாம் காத்திருக்க வேண்டியதுதான் போலும்!
அடுத்து, எழுத்தாளர்களில் கல்கி அவர்களை எடுத்துக்கொண்டால், ஆபாசமான முறையில் பெண்களை வர்ணித்தல் வாயிலாகவும், விகார உணர்ச்சிகளைத் தூண்டுவதன் வாயிலாகவும்தான் ஒருவர் எழுதிப் புகழ் பெற முடியும் என்பதைப் பொய்யாக்கிய கண்ணியமான எழுத்துச் சிற்பி அவர். அவர் எழுதியுள்ள காதல் கதைகளைப் பதின்மர்களிடம் தயக்கமின்றிக் கொடுத்துப் படிக்கச் சொல்லலாம். இன்றைய எழுத்தாளர்கள் பலரின் கதைகளை அப்படிக் கொடுக்கப் பெற்றோர் விரும்புவார்களா!
என் தங்கை மகன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது தமிழில் அவன் நிறைய மதிப்பெண் பெற்றதற்காகத் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத் தொகுப்பைப் பரிசாகக் கொடுத்தார்கள். ஆங்காங்கு பாலியல் ஜோக்குகளையும், விரசமான உரையாடல்களையும், பெண்ணின் உடம்பை மலினமாய் வர்ணிக்கும் சொற்களையும் அள்ளித் தெளிப்பவர் அந்தத் தொகுப்பின் ஆசிரியர் என்பது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்க்குத் தெரிந்திருக்கவில்லை போலும்; தெரிந்திருந்தால், அப்போதுதான் பதின்மர் பருவத்தில் அடி எடுத்து வைத்திருந்தவன் கையில் அதைப் பரிசாய் அவர் கொடுத்திருந்திருக்க மாட்டார். அதை அவன் புரட்டும் முன் பிடுங்கி வைத்துக்கொண்டது ஞாபகம் வருகிறது!
என் மீது ஆத்திரம் கொண்ட. அவனுக்குக் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனின் அனைத்துப் பகுதிகளையும் கொடுத்துச் சமாதானப் படுத்தினேன். அப்போது அவனுக்குப் பள்ளி விடுமுறை தொடங்கி யிருந்ததால், அதை இராப்பகலாய்த் தொடர்ந்து படித்து, ரசித்து, எனக்கு நன்றி சொன்னதும், கல்கி அவர்களின் திறமையைப் புகழ்ந்ததும் கூட ஞாபகம் வருகின்றன.
Nantri: puthu.thinnai

No comments: