இலங்கைச் செய்திகள்



டிக்கோயாவில் அன்னதானம் உட்கொண்ட பலர் வைத்தியசாலையில் அனுமதி

முஸ்லிம்-சிங்கள ஒற்றுமையை சீர்குலைக்க சில தீயசக்திகள் செயற்படுகின்றன : ஜனாதிபதி

யாழ்தேவி சேவையை ஆரம்பித்தது

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம்: 3 பேர் கைது


---------------------------------------------------------------------------------------------------

டிக்கோயாவில் அன்னதானம் உட்கொண்ட பலர் வைத்தியசாலையில் அனுமதி

10/09/2013  ஹட்டன் - டிக்கோயா பிரதேசத்தில் ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட 100 இற்கும் மேற்பட்டோர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நண்பகல் டிக்கோயா வழிப்பிள்ளையார் ஆலயத்தில் வழங்கப்பட்ட மதிய உணவை உண்டவர்களே வாந்தி, மயக்கம், வயிற்றோட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து பலர் வைத்தியசாலைக்கு லொறிகளில் கொண்டுவரப்படுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.











நன்றி வீரகேசரி   




முஸ்லிம்-சிங்கள ஒற்றுமையை சீர்குலைக்க சில தீயசக்திகள் செயற்படுகின்றன : ஜனாதிபதி

10/09/2013   முஸ்லிம்-சிங்கள ஒற்றுமையை சீர் குலைத்து நாட்டில் குழப்ப நிலை ஒன்றைத் தோற்றுவிக்க சில தீய சக்திகள் முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதி நிதிகளைச் சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
இன்று நாங்கள் பள்ளிகளை உடைப்பதாக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். நாங்கள் எந்த ஒரு பள்ளியையும் உடைக்க வில்லை.
அப்படியான நோக்கமும் எமக்கு இல்லை. நான் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருக்கின்றேன். முஸ்லிம்களுக்கு ஏதேனும் பிரச்சினை வருமேயானால் நாங்கள் ஒரு போது அதற்கு இடமளிக்க மாட்டோம்.
நாங்கள் நாட்டில் பள்ளிகளை கட்டிக் கொடுத்துள்ளோம். இவ் உண்மையை மறைப்பதற்கு சில தீய சக்திகள் எம் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
யுத்தம் நடைபெற்ற போது முஸ்;லிம்கள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டனர். அச் சமயத்தில் எவரும் முஸ்லிம்களை பற்றிப் பேச வில்லை என்றார்.

நன்றி வீரகேசரி 




யாழ்தேவி சேவையை ஆரம்பித்தது

14/09/2013 யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் தனது சேவையை இன்று ஆரம்பித்தது.
இன்று காலை ஓமந்தை ரயில் நிலையத்திலிந்து புறப்பட்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது.
இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்துள்ளார்.
யாழ்தேவி ரயில் சேவைகள் நாளை 15 ஆம் திகதி முதல் கிளிநொச்சிவரை நடைபெறும்.
மேலும் 15ஆம் திகதி முதல் தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கிளிநொச்சி வரை யாழ் தேவி உட்பட 3 ரயில்கள் பயணிக்கவுள்ளன.
அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் வடக்கு ரயில் போக்குவரத்து காங்கேசன்துறை வரை நடத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நன்றி வீரகேசரி  



கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம்: 3 பேர் கைது

14/09/2013 கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரே குறித்த மூவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
 கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நன்றி வீரகேசரி



No comments: