சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக 4 அம்சத் திட்டம்: அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் பொப் கார் அறிவிப்பு


Bob Carஅவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மனிதக் கடத்தல்களை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் நான்கு அம்சத் திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தலை ஒழித்துக்கட்டுவதற்கும், நீர்ப்பரப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்பு, உளவறியும் தகவல்கள் பகிர்வு, சட்டவிரோத ஆட்கடத்தலில் கிடைக்கும் வருமானக் குறைப்பிற்குமான நான்கு அம்சத் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இன்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த நான்கு அம்சத் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் கடற்படை அதிகாரிகளும் ஆராயவிருக்கின்றனர் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சட்டவிரோத ஆட்கடத்தல், தேசங்களுக்கு இடையிலான குற்றச்செயல்கள் என்பன சம்பந்தமான கூட்டு செயற்குழுவின் ஆரம்பக் கூட்டத்தில் பங்குபற்றவென செனட்டர் பொப் கார் கொழும்பில் தங்கியுள்ளார்.

'இந்தப் பேச்சுக்களின் அடிப்படையில் இலங்கை மக்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வழங்கப்படும். படகில் பயணம் செய்வதையடுத்து, உங்களுக்கு உயிராபத்து ஏற்படுவதோடு, உங்களது பணத்தையும் இழந்து இலங்கைக்கு நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள்' என்பதே அந்தச் செய்தியாகும் என்று செனட்டர் பொப் கார் கூறினார்.

'உளவறியும் தகவல்கள் பகிர்வு, கடற்படைகளுக்கிடையில் ஒத்துழைப்பு, இலங்கையை புனரமைப்பதில் உதவி என்பன சம்பந்தமாக தெளிவான நிகழ்ச்சித் திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம். இவை அனைத்தும் சட்டவிரோத ஆட்கடத்தலைக் குறைப்பதற்கு பெரிதும் உதவும்.

'சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிரான இலங்கையின் பலமான ஆதரவை நான் வரவேற்கின்றேன். ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முற்றாக ஒழிப்பதில் இலங்கையின் அதிகரித்த ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கின்றேன்' என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், கீழ்க்காணும் விடயங்கள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்படும் என்றும் செனட்டர் பொப் கார் கூறினார்.

தகவல் மற்றும் உளவறியும் தகவல்கள் பகிர்வு

• சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், படகுகள் புறப்படும் நேரம் மற்றும் இடம் என்பனவற்றைக் கண்காணிக்கவும், இலங்கை கொண்டுள்ள சக்தி வளத்தை விஸ்தரிக்கவென மேலதிக உளவறியும் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை அவுஸ்திரேலியா வழங்கும்.

• இலங்கையின் உளவறியும் நிபுணத்துவத் தன்மையை மேம்படச் செய்யவென, 2013ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய - இலங்கை, கூட்டுப் பயிற்சித் திட்டம் அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்படும்.

சமுத்திர நீர்ப்பரப்பு நடவடிக்கைகள்

• இலங்கை எதிர்நோக்கும் உபகரணப் பற்றாக்குறையை இனங்கண்டு, சமுத்திர நீர்ப்பரப்பில் இலங்கை கடற்படை மேற்கொள்ளும் சீர்குலைப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்த உதவுதல்.

• கரையோரப் பிரதேச மற்றும் வான் பிரதேச கண்காணிப்பு உட்பட இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு அவுஸ்திரேலியாவில் பயிற்சி.

• இடைமறிக்கப்பட்ட மற்றும் கடற்பயணத்திற்கு தகுதிபெறாத படகுகளில் இருந்து பயணிகளை காப்பாற்றுவதில், தேடுதல் மற்றும் ஆபத்து உதவி உபகரணங்களை வழங்குதல்.

பிரசார நடவடிக்கைகள்

• சட்டவிரோத ஆட்கடத்தலின் கேந்திர ஸ்தானங்கள் எனக் கருதப்படும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் நேரடியாகவும், வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட விளம்பரங்கள் மூலமும் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு 700,000 டொலர் நிதியுதவி.

ஆட்கடத்தலுக்கான கோரிக்கைகள் குறைப்பு

• வறிய மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் வறுமையை ஒழித்து, பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் மூலம், பணம் சம்பாதிப்பதற்கான இடம்பெயர்வைக் குறைப்பதற்கென AusAID(அவுஸ் எயிட்) எனும் அமைப்பு ஐந்து வருட காலத்தில் 45 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கும். அவுஸ்திரேலியா 5,000 வீடுகளையும், 23 பாடசாலைகளையும் ஏற்கனவே நிர்மாணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் 65 படகுகளில் 2,900பேர் மேற்கொண்ட சட்டவிரோத இடம்பெயர் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது உட்பட, தற்போது இலங்கை அளித்து வரும் ஒத்துழைப்புக்கு செனட்டர் பொப் கார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

2012 ஓகஸ்ட் மாதத்தில் இருந்து சட்டவிரோதமாக இடம்பெயர்ந்த 700 இலங்கையர்கள் கட்டாயத்தின் அடிப்படையில் தாயகம் திரும்பியமை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி தேனீ 

No comments: