இலங்கைச் செய்திகள்

 முல்லைத்தீவில் தமிழர்களின் வளங்கள் தொடர்ந்தும் படையினராலும், அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிப்பு மீட்க ஒன்றுபடுமாறு மக்கள் கோரிக்கை

 இறுதிப் போரில் கைவிடப்பட்ட வாகனங்கள் தென்னிலங்கை மக்களின் பாவனையில்  யாழ்நகர் நிருபர்

வடமராட்சியில் கைதான கடற்றொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் நாலாம் மாடியில்

 சம்பந்தன் அவர்களின் தலையாய கடமை

 கடந்த காலத்தை  மீளக் கொணரலாமா?

 முல்லைத்தீவில் தமிழர்களின் வளங்கள் தொடர்ந்தும் படையினராலும், அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிப்பு மீட்க ஒன்றுபடுமாறு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான கரையோர வளங்கள் இராணுவத்தினரதும், அரசியல்வாதிகளினதும் செல்வவாக்குடன் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வளங்களை நம்பியுள்ள கரையோர மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

இதனைத் தடுத்து நிறுத்த தமிழ் அரசியல் தலைமைகள், மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றுபட வேண்டுமென மாவட்ட மக்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.
மாவட்டத்தின் முக்கியமான கரையோரப் பகுதிகள் சிங்கள மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினரின் செல்வாக்குடன், இலங்கையில் தடை செய்யப்பட்ட தொழில்களும் நடைபெறுகின்றன.
இது குறித்து அரசாங்க அதிபர், கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம், கூட்டுறவு ஆணையாளர், பிரதேச செயலாளர் என பொறுப்புவாய்ந்த தரப்புகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தப்பட்ட போதும் இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை.
மேலும் நாளுக்கு நாள் கடற்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, கடல்வளம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால் கடற்றொழிலை நம்பியுள்ள தமிழர்களின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இந் நிலையில் இவ்வாறான ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி நேற்று செவ்வாய்க்கிழமை சுனாமி நினைவாலயத்தில் பொதுமக்கள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினருடனான சந்திப்பொன்று நடத்தப்பட்டது.
இதன்போது அரசாங்க அதிபருக்கு மாவட்ட மக்கள் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். இதில் நான்கு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர். அவையாவன,
கற்றொழிலாளர் சங்கங்களினதும், மக்களினதும் அனுமதியின்றி நாயாறு, கொக்கிளாய் போன்ற பகுதிகளில் வந்து தங்கியிருக்கும் சிங்கள மீனவர்கள் சுருக்குவலை மற்றும் அதிசக்திவாய்ந்த மின்னொளி பாய்ச்சி மீன்பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இவற்றைத்  தடுத்து நிறுத்த வேண்டும்.
நந்திக்கடல் முகத்துவாரம் பகுதியில் வந்து தங்கியிருக்கும் சிங்கள மீனவர்கள் சிலிண்டர்களை பயன்படுத்தி கடலட்டை பிடித்தல், சங்குபிடித்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கடல்வளம் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்தத் தொழில்கள் தடைசெய்யப்பட வேண்டும்.
நந்திக்கடல் சார்ந்த பகுதியில் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில், இறால் வளர்ப்பு, மீன்குஞ்சு வளர்ப்பு போன்றவற்றுக்காக இடங்களை வழங்கக் கூடாது. இதனால் நந்திக் கடலில் தொழிலை நம்பியுள்ள சிறுகடல் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில்  பலரின் வாழ்வாதாரம் ஏற்கனவே கேள்விக்குள்ளாகியுள்ளது. மேற்படி நடவடிக்கைகள் மூலம் இவை மேலும் தீவிரமடையும் .
மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள இடங்களை பொதுமக்களினது அனுமதியின்றி யாரும், யாருக்கும் பகிர்ந்தளிக்கவோ, அங்கு தங்கியிருக்க அனுமதியளிக்கவோ கூடாது என்பன உட்பட நான்கு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தன.
இதை விட தடை செய்யப்பட்ட சில தொழில்களில் சிங்கள மீனவர்கள் ஈடுபடுகின்றமை குறித்து மக்கள் சுட்டிக்காட்டியதுடன், நாயாற்றுப் பகுதியில் அனுமதி பெற்ற தொகைக்கும் மேலாக சிங்கள மீனவர்கள் தங்கியிருப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டினர்.
இதனை மறுத்த படை அதிகாரிகள், அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என பொதுமக்களை அதட்டியுள்ளனர். எனினும் பின்னர் தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இந்த வாக்குறுதியில் நம்பிக்கை இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுடன் பேசிய பொதுமக்கள் மற்றும் சங்கங்கள் சிலவற்றின் முக்கியஸ்தர்கள், மாவட்டத்தில் அதிகரித்துவரும் சிங்கள ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த தமிழ் அரசியல் தலைமைகள் முன்வரவேண்டுமென்ற அவசர அழைப்பை விடுத்தனர்.
நன்றி தினக்குரல்
 

இறுதிப் போரில் கைவிடப்பட்ட வாகனங்கள் தென்னிலங்கை மக்களின் பாவனையில்

Wednesday, 06 June 2012
யாழ்நகர் நிருபர்


வன்னி இறுதி யுத்தத்தின்போது பொது மக்கள் மற்றும் பொது நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்ட பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான வாகனங்கள் பல கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதன் மூலம் முற்று முழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து வாகனங்கள் எவ்வாறு வெளியே கொண்டு செல்லப்பட்டன என்ற கேள்வி வாகன உரிமையாளர்களிடையே வலுவாக எழுந்துள்ளது.

இறுதி யுத்தத்தின் போது கிளிநொச்சி கன்னியாஸ்திரி மடத்திற்கு சொந்தமான வாகனமொன்று ஊனமுற்றவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த வாகனம் இறுதியாக முள்ளிவாய்க்கால் தேவாலயத்தில் கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில் யுத்தத்தின் பின்னரும் அதை மீட்க முடியவில்லை.

இந்நிலையில் அந்த வாகனத்தை கொழும்பில் சிலர் பயன்படுத்துவது தொடர்பாக கன்னியாஸ்திரி மடத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இம் முறைப்பாட்டையடுத்து கொழும்பில் அந்த வாகனத்தைக் கைப்பற்றிய பொலிஸார் கடந்த 31 ஆம் திகதி மாவட்ட நீதிமன்றம் ஊடாக வாகனத்தை உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்கள் பல முற்றுமுழுதாக காணாமல் போயுள்ளன. உள்ள பல வாகனங்களிலும் முக்கியமான உதிரிப்பாகங்கள் காணாமல் போயுள்ளன. இவையும் தென்னிலங்கைக்கே கடத்தப்பட்டிருக்கின்றன என பொது மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து பெறுமதியான சொத்துகள் எவ்வாறு, யாரால் எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறித்தும் பொறுப்புள்ள தரப்புகள் விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்துவதுடன், அவற்றுக்கான இழப்பீடுகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுள்ளனர்.
நன்றி தினக்குரல்



வடமராட்சியில் கைதான கடற்றொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் நாலாம் மாடியில்

Wednesday, 06 June 2012

 வடமராட்சி இன்பர்சிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவர் வேலும்மயிலும் விஸ்வலிங்கம் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பில் 4 ஆம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலும் சிலருக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் அழைப்பாøணை விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 28 ஆம் திகதி வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட இவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் கொழும்பில் 4 ஆம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பாக எந்தவிதமான தகவல்களும் குடும்பத்தினருக்கு வழங்கப்படாததால் 2 நாட்களாக இவர் கடத்தப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்று எந்தவிதமான தகவல்களும் தெரியாமல் உறவினர்கள் தேடியுள்ளனர்.

பின்னர் உறவினர்கள் இவரைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு கொடுக்கச் சென்ற சமயமே இவர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இவரிடம் 4 ஆம் மாடியில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வடமராட்சி வடக்கு கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அருள்தாஸ் மற்றும் வடமாகாண கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் தலைவர் செபஸ்ரியான் பிள்ளை எமிலியாஸ் பிள்ளை ஆகியோரும் 4 ஆம் மாடிக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
நன்றி தினக்குரல்


சம்பந்தன் அவர்களின் தலையாய கடமை

Saturday, 02 June 2012

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்றைக் கொண்டிருக்கவில்லை. தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பயனுறுதியுடைய முறையில் குரல்கொடுக்கவல்ல அரசியல் பிரதிநிதிகள் தங்கள் மத்தியில் இல்லையென்ற கவலை தமிழ் மக்களுக்கு இருந்தது. எஞ்சியிருக்கக் கூடிய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூட இதை ஏற்றுக்கொண்டவர்களாகவே காணப்பட்டனர். மீண்டும் ஜனநாயக ரீதியான செயன்முறைகளில் தமிழ் மக்களை ஈடுபட வைப்பதற்கு நம்பிக்கையூட்டக்கூடிய தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய சவாலை தமிழ்க் கட்சிகள் எதிர்நோக்கி நின்றன. இந்தச் சவாலுக்கு தனித்தனியாக நின்று கட்சி அரசியல் குரோதங்களை வெளிக்காட்டுவதன் மூலமாக ஒருபோதுமே முகம் கொடுக்க முடியாது. அதனால் கடந்த கால உரிமைப் போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் கசப்பானதும் கனதியானதுமான பாடங்களை அடிப்படையாகக் கொண்டு சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கேற்ற முறையில் எதிர்காலத்திற்கான அரசியல் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் ஐக்கியப்பட்ட முறையில் வகுக்கத் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்றே தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயற்படக்கூடிய அரசியல் விவேகமும் தொலை நோக்கும் அத் தலைவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை.


போரின் முடிவுக்குப் பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தல்களில் படிப்படியாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பங்கேற்கின்ற வீதம் அதிகரித்து வந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் அவலங்களிலிருந்து மீள முடியாமல் தவித்த தமிழ் மக்கள் தேர்தல்கள் போன்ற ஜனநாயக ரீதியான செயன்முறைகளில் மாத்திரம் ஈடுபடக்கூடியதாக இருக்கின்ற சூழ்நிலையை கூடுதல் பட்சம் பயன்படுத்த வேண்டுமென்று சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்ததன் விளைவாகவே அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. என்றாலும் கூட திருப்தி தரக்கூடிய எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்புகளில் பங்கேற்கவில்லை என்பது உண்மையே. ஆனால், அதை அடிப்படையாகக்கொண்டு நம்பிக்கையிழக்காமல் செயற்படுவது தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு நடைமுறைச் சாத்தியமான மார்க்கமாகும். அந்த வகையில் நோக்குகையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் கூடுதல் எண்ணிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கே வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கும் பொறுப்புடைமை குறித்து சர்வதேச சமூகம் அக்கறைகாட்டத் தொடங்கியதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் உள்நாட்டிலும் சர்வதேச அரங்குகளிலும் முன்னரைக் காட்டிலும் துடிப்புடன் செயற்படக்கூடிய சூழ்நிலை தோன்றியது. இதையடுத்து தமிழ்மக்கள் மத்தியில் இருந்த அரசியல் வெற்றிடம் படிப்படியாக இல்லாமல் போகக் கூடிய சூழ்நிலை நாளடைவில் தோன்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், அந்த நம்பிக்கைக்கு மேலும் வலுச்சேர்க்கக்கூடியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பகத்தன்மையான ஒரு அரசியல் சக்தியாக மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கான தலைமைச் சக்தியாகவும் தலையெடுத்திருக்கிறது என்று சர்வதேச சமூகம் கருதியது. அதன் காரணத்தினாலேயே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளிலும் தேசிய நல்லிணக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான செயன்முறைகளிலும் அந்தக் கூட்டமைப்பை சம்பந்தப்படுத்தி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூகத்தின் முக்கிய பங்கீடுபாடு கொண்ட தரப்புகள் வலியுறுத்திவந்தன. சர்வதேச சமூகத்தின் மத்தியில் கிடைத்திருக்கக்கூடிய இந்த இராஜதந்திர அங்கீகாரத்தை பயனுறுதியுடைய முறையில் பாவித்து தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உருப்படியான நடவடிக்கைகளில் இறங்குவதைவிடுத்து அந்த அங்கீகாரத்திற்கு ஏகபோக உரிமை கோரும் தோரணையில் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய சில தலைவர்கள் நடந்துகொள்ள முனைவதனால் தற்பொழுது தகராறுகள் மூளுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்த வாரம் மட்டுநகரில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மகாநாட்டில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையில் தமிழரசுக் கட்சி இதுவரையில் கடைப்பிடித்து வந்திருக்கக்கூடிய அணுகுமுறைகளின் காரணமாக அதிகூடிய சர்வதேச இராஜதந்திர அங்கீகாரம் அக்கட்சிக்கே வழங்கப்படுகிறது என்றும் அதன் வழியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அந்த இராஜதந்திர அங்கீகாரம் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கைவரப்பெற்றிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் சகலருக்குமான தலைமைத்துவ சக்தியென்றும் அந்தத் தலைமைத்துவ சக்திக்கு தலைமைதாங்குவது தமிழரசுக் கட்சியே என்றும் சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார். இத்தகைய கருத்துகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஒரு கட்சி தன்னை கூடுதலாக முனைப்புறுத்திச் செயற்பட முன்வந்திருப்பதன் வெளிப்பாடாக நோக்க வேண்டியிருக்கிறது. கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய வெவ்வேறு கட்சிகள் தங்களது அணிகளை அமைப்பு ரீதியாக, அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கூட்டமைப்பின் ஐக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடியதாக செயற்படுவதும் கருத்துகளை முன்வைப்பதும் எந்த வகையிலும் விவேகமானதல்ல என்பதே எமது அபிப்பிராயமாகும்.

தமிழரசுக் கட்சியின் “வீடு’ சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதியாக நடைபெற்ற இரு பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டியேற்பட்ட சூழ்நிலைகளைத் திரிபுபடுத்தக்கூடியதாக நிலைவரங்களைப் பற்றிய வியாக்கியானங்களை செய்வது கூட்டமைப்பின் ஐக்கியத்தைப் பேணுவதற்கு உகந்த செயலாக அமையாது. அத்துடன் தமிழ் மக்கள் இன்று இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் மத்தியில் பழைய பாணி குரோதத்தனமான கட்சி அரசியல் முன்னெடுப்புக்கள் ஆரம்பமாவதற்கு வழிவகுக்கக் கூடிய துரதிர்ஷ்டவசமான போக்குகளில் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய சில சக்திகள் செயற்படுவதை பல தசாப்த கால அரசியல் அனுபவமும் சமகால நிலைவரத்திற்கு ஏற்ப இராஜதந்திர விவேகத்துடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய பக்குவமும் கொண்டவராகக் காணப்படும் சம்பந்தன் அவர்கள் தொடர்ந்தும் அனுமதிக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுவது வக்கிரத்தனமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்சி அரசியலேயல்ல. இயன்றவரை தமிழ்க் கட்சிகள் தங்கள் மத்தியில் ஐக்கியத்தை இறுக வளர்த்து தமிழ் மக்களினுடைய நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பயனுறுதியுடைய அரசியல் தீர்வைக் காண்பதற்கு தங்களை அர்ப்பணிப்பதே இன்றைய தேவையாகும். சம்பந்தன் அவர்கள் எப்பொழுதுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று உரிமை கோருபவர் அல்ல. கூட்டமைப்பு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் அணி என்றே அவர் கூறி வந்திருக்கிறார். அந்த வகையில் அந்தக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஏனையவற்றைவிட ஒன்று மீதே தமிழ் மக்கள் கூடுதலான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்று உரிமைகோர முயற்சிக்கக்கூடிய அளவுக்கு சம்பந்தன் அவர்கள் அரசியல் முதிர்ச்சி இல்லாதவரல்ல. அவரின் அனுபவமும் அறிவும் பக்குவமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தை குலைய விடாமல் பாதுகாக்கும் என்று நம்புகிறோம். இந்தப் பணியை நிறைவேற்ற வேண்டியது அவரின் தலையாய கடமை என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.
நன்றி தினக்குரல்


கடந்த காலத்தை  மீளக் கொணரலாமா?

ஜெஹான் பெரேரா

இலங்கையின் ஐக்கியம், இறைமை என்பவற்றின் மீது கூடிய அக்கறை காட்டுவோருக்கு இலங்கையின் கிழக்கு பகுதியிலுள்ள மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளிடையே மிகப் பெரியதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (த.தே.கூ) தலைவர் ஆர். சம்பந்தன் ஆற்றிய உரை சிவப்புக் கொடியைக் காட்டுவதாக இருந்தது. இது தொடர்பான விபரங்களை ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் மற்றும் விளக்கவுரைகளிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. இதனிலிருந்து மாறுபட்ட வகையில் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (த.தே.கூ) தலைவர் தேசியக் கொடியை யாழ்ப்பாணத்தில் உயர்த்தி தூக்கிப் பிடித்திருந்தார்.  வட பகுதி தலைநகரில் மே தின ஊர்வலத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் இணைந்தே தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்திருந்தார். இன முரண்பாடுகளுக்கான அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் மிகச் சிறியளவிலேயே தீர்வுக்காக ஆவன செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை தேசியக் கொடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தூக்கிப் பிடித்தமை சிங்கள பெரும்பான்மையினரது ஆதிக்கத்திற்கு ஏதோ ஒப்பந்தத்தின் கீழ் (அவர்) சரணடைந்து விட்டதாகவே தமிழ்த் தேசியத்துவ அபிப்பிராயங்கள் வெளியாகியிருந்தன.
சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்துவ சிந்தனைகள் நீண்ட காலமாகவே தேசியக் கொடியைப் பொறுத்து போட்டிக்குரியதாகவே இருந்து வந்துள்ளன. இக் கொடி இன்றைக்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் தான் வடிவமைக்கப்பட்டது. அக் கொடியின் நடு மத்தியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தமை இலங்கையில் சிங்கள இனமே மைய நிலை அந்தஸ்தினைக் கொண்டதாக இனங்காட்டப்படுவதனை உறுதி செய்வதாக சிறுபான்மை இன பிரதிநிதிகள் கொடியை வடிவமைத்த குழுனருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கணிசமான அளவிலான வாதாட்டங்களின் பேரில் நாட்டில் தமிழர்களும்  முஸ்லிம்களும் இருப்பதனை அங்கீகரிக்கும் வகையில் கொடியின் ஒரு அந்தத்தில் (சிறுபான்மையினரையும் அங்கீகரிப்பதாக) இரண்டு செங்குத்து கோடுகளை சேர்த்து வரைய இணக்கம் காணப்பட்டது.
மே தின பேரணியின் போதும் சம்பந்தன் ஐக்கிய இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு மாகாண மட்டத்தில் அதிகாரங்கள் தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக கூறியிருந்தார்கள். இது தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் நெடுங்கால கோரிக்கையாகும்.  இருந்தபோதிலும் சிங்கக் கொடியை உயர்த்தி ஏந்தியமை தொடர்பில் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் விவாதமும் விமர்சனங்களும் இடம்பெற்றன. சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதிகள் இச் சம்பவம் தொடர்பில் தமது அதிருப்தியினை தெரிவித்திருந்தனர். இவ்வாறு  தமிழ்ச் சமூகம் இச் சம்பவம் தொடர்பில் கோபமுற்றதாக கூறப்பட்ட ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த போது அவர் தமது கட்சி இலங்கைத்  தொழிலாளர்களுடன் கொண்டுள்ள கூட்டொருமையினை எடுத்துக் காட்டாவும் நாட்டில் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காகவுமே  அவ்வாறு செயற்பட்டதாகவும் விளக்கியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மே தின பேரணியின் போது தான் நடந்து கொண்டமை பற்றியும் தனது நிலைப்பாடு பற்றியும் விளக்குகையில் தன்னை அவ்வாறு செயற்படுமாறு எவரும் வற்புறுத்தவில்லை என்பதனையும் எடுத்துக் கூறியிருந்தார்.
அச்சமூட்டல்:
நாட்டின் ஐக்கியத்தினை பலப்படுத்த உறுதி செய்யும் வகையில் தமது அர்ப்பணிப்பினை காட்டிய தமிழ்த் தேசியக்  கூட்டமைப்புத் தலைவரது எதிர்மறையற்ற நடவடிக்கையின் அடிப்படையில் பொருத்தமான ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கம் இதுவரையிலும் எதுவித நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை துரதிர்ஷ்டவசமானதாகும். அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் அவருடைய நல்லெண்ணம் தொடர்பான சைகையினைப் பாராட்டி அவருடைய சைகை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையை கைவிட்டுவிட்டதாகக் கூறி தமது அரசியல் சாதனைக்கு வலுவேற்றுவதில் ஆர்வங்காட்டியதுடன், அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அவர் ஒத்துப் போவதனை எடுத்துக் காட்டும் முதல் சைகை என்றும் விளக்கிக் கொண்டனர். ஆனால் மறுபுறத்தில் ஐக்கிய தேசியக்  கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின பேரணியை நிகழ்த்தியமை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு சவால் என்றும் எண்ணுவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அன்றைய நிகழ்ச்சிகளை தம்மால் இயன்றளவுக்கு மதிப்புக் குறைவான முறையில் விமர்சித்து யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தொகையில் மிகச் சிறிய அளவினரே அதில் கலந்து கொண்டதாகவும் அவர்கள் விமர்சித்திருந்தனர். இதுமாத்திரமன்றி அரசாங்கம் மேற்கொண்ட எதுவித பயனுமற்ற காரியம் இன்னொன்றும் உண்டு. சில அநாமதேயப் பேர்வழிகளைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினது கொடியை அந்த பேரணியின் போது அசைக்கச் செய்து அதனை தொலைக்காட்சியில் காட்டச் செய்ததாகும். இக் காட்சி அரச தொலைக்காட்சிகளில் மாத்திரமே காட்டப்பட்டதால் இது அரச பிரசார குழுவினரால் செய்யப்பட்ட சதியென  சந்தேகப்படவும் இடமுண்டு. அரசாங்கம்  பயன்படுத்தும் பெருமளவினதான பாதுகாப்பும் படை பிரிவினர் இருக்கத்தக்கதாக தமிழீழ விடுதலைப் புலிக் கொடியை அசைத்தவர்களை இவ்வாறான  சட்ட விரோத செயலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யாமையும் கூட இத்தகைய புலிக் கொடி நாடகம் உ ண்மையானது அல்ல என சந்தேகிக்க இடமளிக்கின்றது இவற்றிலிருந்து அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய அச்சத்தை நாட்டில் தொடர்ந்து தனது அரசியல் நோக்கங்களுக்காக பேணி வருகின்றது எனக் கூறுவது நியாயமானதாகவே தோன்றுகின்றது. தேசிய ஒற்றுமை மற்றும் இறைமையினை பாதுகாப்பது என்பனவே யாவற்றிற்கும் மேலாக  மதிக்க வேண்டியவை என்ற தேசியத்துவ உணர்வு மட்டுமே அரசாங்கம்  பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ள  அரசியல் ஆதரவுக்கு உறுதியான  ஆதாரமாக தென்படுகின்றது.
பெரும்பான்மையினமான சிங்கள மக்கள் மத்தியில் நாடு பிரிக்கப்படலாம் என்ற  அச்ச உணர்வு நிலைத்திருக்கும்  வகையில் அதுவும் குறிப்பாக நாட்டுப் பிரிவினை தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இப்போதைய அரசாங்கம் வெற்றியினை ஈட்டியுள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் மிகப் பெரியளவிலான பெரும்பான்மை மக்களது ஆதரவினை வைத்திருக்கப் போவது உறுதியாகவே காணப்படுகின்றது. இத்தகைய பின்னணியிலிருந்து பார்க்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  சம்பந்தன் தமது கட்சியின் வருடாந்த கூட்டத்தில் ஆற்றிய உரையானது பெரும்பான்மை சிங்கள வாக்காளர் மத்தியில்  நிலவும் அச்சத்தினை அதிகரிக்கச் செய்யக் கூடும் என்பதனால் அரசாங்கம் தனது தேர்தல் தொகுதிகளில் கொண்டிருக்கும் பலமானது மேலும் அதிகரிக்கவே அது உதவுவதாக இருக்கும். அவர் தனது உரையில் ஐக்கியப்படுத்தப்பட்ட இலங்கையில் தமிழ் மக்கள்  சுய நிர்ணய உரிமைகளுக்கு அருகதையானவர்கள் என்றும்  அரசியல் அமைப்பு ஐக்கியப்படுத்தப்படாததாக (சுயநிர்ணய உரிமைகளுக்காக) உள்ள இலங்கையிலேயே அது சாத்தியமாகும் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர் இவ்வுரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருமேயானால் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிவாரியான சுய நிர்ணய உரிமைகளை கோரி நிற்க வேண்டி வரலாம் என்றும் கூறியுள்ளார்.
சிறிய விடயங்கள்
எதிர்க் கட்சித் தலைவருடன் இணைந்து இலங்கையின் தேசியக் கொடியை யாழ்ப்பாணத்தில் ஏந்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மட்டக்களப்பில் இடம்பெற்ற அவரது கட்சிக் கூட்டத்தில் தனது கட்சி மாற்று  உபாயமாக பிரிவினையை ஆதரிக்கப்போவதான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டிய வரலாம் என ஏன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதே கேள்வியாக நிற்கின்றது. அரசாங்கத்தில் உள்ள ஏனைய பாராளுமன்ற பிரதிநிதிகளைப் போன்றே தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் தலைவரும் தனது தேர்தல் தொகுதியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவே தோன்றுகின்றது. வடக்கு, கிழக்கு பகுதி மக்களுக்கு இதுவரை காலமும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தலைமைத்துவத்தின் மிதவாதப் போக்கினைக் கொண்ட அணுகு முறையினால் எதுவித நன்மையினையும் பெற்றுக் கொடுக்க முடியாது போயுள்ளது. இதனால்  அவருடைய கட்சியிலுள்ள கூடிய தேசியத்துவ (தமிழ்) உணர்வுடன்  செயற்படும் அங்கத்தவர்கள் அவரை ஒதுக்கித் தள்ளி கட்சியில் தமது முக்கியத்துவத்தினை அதிகரித்துக் கொள்வதுடன் மாத்திரமன்றி  தலைவரை கட்சியை விட்டே வெளியேற்றி விடலாம் என்ற நிலைமையும் காணப்படுகிறது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கூடியளவு (தமிழ்) தேசியத்துவம் மற்றும் பிரிவினை வாதத்துவ எண்ணம் கொண்ட தலைமைத்துவம் அரசாங்கத்தில் இடம்பெற இயன்றளவிலும் மென்மேலும் கடுமையாக முயற்சிக்கலாம். இனத்துவ ரீதியான (துவேஷ) முனைவாக்கம், தீவிரவாத போக்கினைக் கொண்ட அரசாங்கத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நன்மையை தருவதாக இருக்கலாம். ஆனால் அது நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மையைத் தரக் கூடிய வகையில்  பிரச்சினைகளைத் தீர்ப்பதாக இருக்காது.
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் உணர்வு பூர்வமானதும் அடையாளம் சார்ந்ததுமான முக்கியத்துவம் வாய்ந்த சில பிரச்சினைகள் நிலவுகின்றன. அவற்றை அரசாங்கம் விரைவில் தீர்த்து வைப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போன்ற மித வாதிகளைப் பலப்படுத்த முடியும். அவற்றில் காணாமல் போனவர்கள் பற்றியதும் அவர்கள் அரசாங்கத்தின் காவலில் உள்ளனரா என்பது பற்றியதுமாகும். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் அல்லது அவர்களுக்காக பணியாற்றினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு  விசாரணை ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய  பிரச்சினையும் அவ்வாறானதேயாகும்.  இவையாவும் ஒரு வகையான பிரச்சினையாகும்.  அடுத்து வடக்கிலும் கிழக்கிலும் பெருமளவு இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதுடன் தொடர்பான பிரச்சினையாகும். அவர்கள் அவ்வாறு நிலை கொண்டிருப்பதால் மக்களுடைய சமூக நிகழ்ச்சிகளில் தலையிடுவதுடன்  வியாபாரம் மீன் பிடித்தல் தொடர்பாக அனுமதி வழங்கும் போது சிங்கள வியாபாரிகளுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் முன்னுரிமை (சலுகைகள்) வழங்கும் பிரச்சினைகள் பற்றிய முறைப்பாடுகள்  நிலவுகின்றன. பல தரப்பட்ட பெரும் பிரச்சினைகள் நிலவும்  இக் கால கட்டத்தில் ஒப்பளவில் இவையாவும் சிறிய விடயங்கள் மட்டுமே ஆகும். ஆனால் அவை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபட்டுள்ளதுடன் தமக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்பட வில்லை என்ற மனக்குறையினை ஏற்படுத்துவதுமாக உள்ளன.
மேற்கூறிய ஒரு சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் சீர்திருத்தம் தொடர்பான அங்கீகாரங்கள் எதுவும் தேவையில்லை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதிர்க் கட்சிகளது ஒத்துழைப்பு ஏதுமின்றியும் கூட தனது  தீர்மானத்தின் அடிப்படையில் தீர்வுகளை வழங்கும் தகுதி இவ்வரசாங்கத்திற்கு உண்டு. இருந்த போதிலும் கூட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க இனமுரண்பாடுகளைத் தீர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தனது ஆதரவினை வழங்க தான் தயாராக இருப்பதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார். எனவே மக்களது அன்றாட பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வைத்து அவர்களது மனக்குறைகளை போக்குவதன் மூலமாக மேலதிகமான சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்குத் தேவையான விவாதங்களை மேற்கொள்ள முடியும். இவற்றின் மூலம் எந்த ஒரு கட்டத்திலும் பிரிவினை வாதத்தினை பின்பற்றி  அதற்காக பெருமளவு  உயிர்களை பலி கொடுப்பது பற்றிய அரசியல் வன்முறைகள் பற்றி சிந்திக்காத சம்பந்தன்  போன்ற தமிழ்த் தவைர்களை பலத்துடன் செயற்படச் செய்ய முடியும். யுத்தம் முடிந்து மூன்று வருடங்களின் பின்னர் தற்போது கிடைக்கக் கூடியதாயுள்ள சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி இன முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தேவையான வற்றில் முன்னேற்றம் அடையாதிருக்கும் இப்போதைய நிலையை நீக்கி ஆவன செய்ய வேண்டியது அவசியமாகும்.
நன்றி தினக்குரல்




No comments: