வெல்லம்பிட்டிய பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதல்: ஸ்ரீ.ல.சு.கட்சி அலுவலகம் தீயில்


.
wellampitiyaகொலன்னாவை இம்புட்டான வீதி சிறிமாவோ பண்டாரநாயக்க வாசிகசாலைக்கு முன்பாக இன்று சனிக்கிழமை பிற்பகல் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 15 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவரின்; நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

படுகாயமடைந்தவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிக்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்று சற்றுநேரத்தின் பின்னர் அவ்விடத்துக்கு நாம் விரைந்தபோது

கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபைக்கான வாக்களிப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இன்று மாலை 3.40 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வாக்கெடுப்பு நிலையத்துக்கு முன்பாக இருதரப்பினரும் நேருக்குநேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் அங்கொடை மொரகஸ் சந்தியில் பொலிஸாரின் வாகனத்துடன் அரசியல் பிரமுகர் ஒருவரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. அவ்விடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினர். இளைஞர்கள் சிலர் அங்கிருந்த பொலிஸாரைத் தாக்குவதற்கு முயற்சித்தவேளை பொலிஸார் பின்வாங்கினர்.

செய்தி சேகரிப்பதற்காக அவ்விடத்திலிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி வந்த சிலர் “எங்களுடைய அரசாங்கம், நாங்கள் நினைத்ததைச் செய்வோம். யார் எங்களைப் படம் எடுக்கச் சொன்னது” எனக் கேட்டுக்கொண்டே ஊடகவியலாளர்களைத் தாக்குவதற்கு முயற்சித்தனர்.

எமது வாகனத்துக்கு அருகில் செல்வதற்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை.

ஏனைய ஊடகவியலாளர்கள் வருகைதந்திருந்த வாகனத்தில் அங்கொடை பகுதியூடாக பயணித்தபோது அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் வீடும், அலுவலகமும் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.

உடனடியாக அவ்விடத்துக்கு வந்த அதிரடிப்படையினர் பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அவ்வழியாகச் செல்ல முடியாததால் நாம் வேறு வழியாக வந்தோம். அப்பகுதியெங்கும் பதற்றமாகக் காணப்படுவதுடன் மீண்டும் கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டப்படுத்தும் வகையில் முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் உட்பட விசேட இராணுவ படைப்பிரிவினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments: